""வி.ஏ.ஓ., துப்புரவு உள்ளிட்ட குரூப்-4 பணிகளுக்குக்கூட விண்ணப்பிக்கும் அளவுக்கு பொறியியல் பட்டதாரிகளின் நிலைமை கவலைக்கிடமாக மாறிவிட்டது. காரணம், வேலையில்லா ‘பொறியியல்’ பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான். ஆனால், குரூப்-2 வருவாய் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கக்கூடாதுங்குற 1980-களில் தமிழக அரசு போட்ட ஆணையால் நாங்க வருவாய் உதவியாளர் பணிக்கு வரமுடியல. இதைப் பயன்படுத்தி, பட்டதாரி இளைஞர் முருகன்ங்கிறவர் வழக்குப்போட... "லட்சக்கணக்குல செலவாகும். பணம் அனுப்புங்க'ன்னு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் வசூல்வேட்டையை நடத்திக்கிட்டிருக்காரு. ஆனா, எங்களுக்கு எந்த விடிவும் பொறக்கல''’ என்ற குற்றச்சாட்டுகள் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்தே ஆடியோ, வாட்ஸ்-அப் ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார்களாக வர... விசாரணையில் இறங்கினோம்…
முருகன் ஆடியோ…
"மினிமம் ஒரு நூறு பேராவது கலெக்ட் பண்ணுங்க. தனி நபருக்கு ஒரு ரிட் பெட்டிஷனுக்கு 25,000 ரூபாய் செலவாகும். அதெல்லாம், இல்லாம ஒரு ஆளுக்கு 3,000 ரூபாய் கொடுத்தா... சீனியர் லாயர், 32 வருடம் அனுபவம் இருக்கு. 100 பேருன்னா 3 லட்ச ரூபா. சீனியர் கவுன்சில் வைப்பாங்க. ஜெயலலிதா அட்வகேட் குமார் இருக்காரில்லையா? அவரே ஆர்க்யூமெண்டுக்கு வருவாரு. 1 லட்ச ரூபாய்க்கு மேல ஃபீஸ் கொடுக்கணும். பணம் கொடுக்கிற 100 பேருலேயும் பெட்டிஷன் போடப்போறேன். என்னோட, பேரை மெயின்ல வெச்சுக்கிட்டு அவங்களோட பேரை சப்-லிஸ்டுல வரும். இதர செலவுகள்,…போறது வர்றது மற்றது உள்ள கொடுக்கிறதுன்னு மொத்தம் 3,100 ரூபாய் ரெடி பண்ணிக்கினு நீங்க என்னைக்கு வர்றீங்கன்னு சொல்லுங்க. அட்வகேட்டுக்கிட்ட உட்கார்ந்து டிஸ்கஷன் பண்ணுங்க. இலவச சட்ட மையம் அது இதுன்னா எவனும் எதுவும் புடுங்கமாட்டான்'
-இப்படி வாட்ஸ்-அப் குரூப்களில் முருகன் பேசும் ஆடியோக்கள் பல உள்ளன. "வழக்குச் செலவுக்காக முருகனுக்கு உதவி செய்யுங்கள்'’என்று சமூக வலைத்தளங்களின் மூலம் பிரச்சாரம் செய்த பிரபல ரேடியன் ஐ.ஏ.எஸ். அகடெமியின் நிறுவனர் ராஜபூபதி நம்மிடம், “""பொறியியல் பட்டதாரி என்பதாலும் மாணவர்களின் நலனுக்காக போராடுகிறார்னும் நம்பித்தான் அந்த முருகனுக்கு பண உதவி செய்யுங்கன்னு பரிந்துரை செய்தேன். மாணவர்கள் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்கள் வைத்திருப்பவர்களும் முருகனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து உதவினார்கள். எந்த முன்னேற்றமும் இல்ல. அந்தப் பையன்மேல இப்போ எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது''’என்று வருத்தப்பட்டார்.
முருகன் குறித்து நாம் மேலும் விசாரித்தபோது,“""திருவண்ணாமலை தனியார் பொறியியல் கல்லூரியில படிக்கும்போதே, கல்லூரி நிர்வாகத்தை ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டு ஃபீஸ் கட்டாததால சர்ச்சைக்குள்ளானவர். அதற்கப்புறம், சென்னை -அண்ணாநகரில் தங்கி டி.என்.பி.எஸ்.சிக்கு படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்லிக்கிட்டு… பல அரசியல் தலைவர்களைப் போயி சந்திச்சு சால்வை போர்த்தி போட்டோ எடுத்துக்கிட்டு, அதைவெச்சு வசூல் பண்றதுதான் முருகனின் வேலை. கமிஷனர் ஆபீஸில் பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டும் திரிகிறார். வருவாய் உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கு நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கப்போகிறேன் என்றுதான் வசூலிக்க ஆரம்பித்தார். ஆனால், 2018 ஜனவரி 22-ந் தேதி கலந்தாய்வு முடிந்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. இரண்டுமாத காலம் ஆனபிறகு மீண்டும் வசூல் வேட்டையை நடத்திவருகிறார். குரூப்-1 தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 35- ஆக உள்ளது. இது, அரசின் கொள்கை முடிவு. இதில், நீதிமன்றம் தலையிட முடியாது. இதை 40 வயதாக்கவேண்டும் என்றும் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடப்போவதாகவும் கூடுதலாக வசூலித்து வருகிறார்''’என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து, குற்றம்சாட்டப்பட்ட முருகனை தொடர்புகொண்டு கேட்டபோது, ""பொறியியல் மாணவர்களின் வேலை வாய்ப்புக்காகத்தான் அனைத்து தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறேன். நான் எந்த கட்சிக்கும் சார்பானவன் அல்ல. என்னிடம் பணம் இல்லாததால் மாணவர்களிடம் வசூலிக்கிறேன். கடந்தமுறை, வழக்குச் செலவுக்கு 20,000 ரூபாய் கூடுதலாக எனது கைக்காசைப் போட்டு நடத்தினேன்''’என்றார் விளக்கமாக.
அவரது, விளக்கங்களோடு நக்கீரன் இணையதளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டோம். இதற்கு, முருகன் தனது வழக்கறிஞர் மூலம், டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளை தட்டிக் கேட்பதோடு பொறியியல் பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. ரெவின்யூ அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்கவும், குரூப்-1 தேர்வு குளறுபடிக்காகவும் வழக்கு தொடுத்துப் போராடிக்கொண்டிருப்பதாகவும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதுபோல் உள்ளது நக்கீரன் இணையதள செய்தி'’’என்றும் விளக்கம் அனுப்பியுள்ளார்.
தமிழக அரசின் பழைய ஆணையை மாற்றினாலே லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும். இடைத்தரகர்களுக்கு வேலையில்லாமல் போகும்!
-மனோசௌந்தர்
-------------------------
அமைச்சர் பதில்!
குரூப்-2 வருவாய் உதவியாளர் பதவியில் பொறியியல் மாணவர்கள் சேரமுடியாமல் தடுக்கும் தமிழக அரசு ஆணையை மாற்றியமைப்பது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""பொறியியல் பட்டதாரிகள் தரப்பிலிருந்து இதுகுறித்து, இதுவரை எனக்கு எந்த கோரிக்கை மனுக்களும் வந்ததில்லை. உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் மூலம்தான் தெரிந்துகொள்கிறேன். விரைவில், இந்த அரசாணையை மாற்றுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும்''’என்றார் அவர்.