ண மோசடி வழக்கில் தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசோடு மோதிப் பார்த்து விடுவது என்கிற ஆக்ரோசத்தில் இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 13-ந்தேதி காலையிலிருந்து 15-ந்தேதி வரை தமிழக அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பான, அதிர்ச்சியான பல காட்சிகள் அரங்கேறின.

13-ந்தேதி காலை 7:40 மணி : மத்திய அரசின் அமலாக்கத்துறை டெபுடி டைரக்டர் கார்த்திக் தாசரியின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் குழுவைச் சேர்ந்த துறையின் 5 அதிகாரிகள், சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்குச் சென்றனர். கேட்டில் இருந்த தமிழக போலீசிடம், தாங்கள் யார் என்பதை அதிகாரிகள் அறிமுகப்படுத்திக் கொள்ள, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை. வாக்கிங் சென்றிருப்பதாக போலீஸ் சொல்ல, அவரை உடனே வீட்டுக்கு வரச்சொல்லுங்கள் என உத்தரவிட்டனர் அமலாக்கத்துறையினர்.

senthilbalaji

Advertisment

காலை 7:45 மணி: முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்டும், "சில ஊடகங்களுக்கும் தகவல் சொன்னார் செந்தில்பாலாஜி. முதல்வரோ, "ரெய்டை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்... பார்த்துக் கொள்ளலாம்'’என பாலாஜிக்கு துணிச்சலைத் தந்தார்.

காலை 7:45: அமலாக்கத்துறையின் 3 அதிகாரிகள் கொண்ட டீம், பிஷப் கார்டனிலுள்ள செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் வீட்டுக்கு சென்றது. அவர் அங்கு இல்லை. இதனால் வீட்டின் இன்சார்ஜ் வரும்வரை காத்திருந்தனர்.

காலை 8:10: வாக்கிங் சென்றிருந்த செந்தில்பாலாஜி, தனது வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது ஊடகங்களும் வந்திருந்தன. அவர்களிடம், "சோதனை முடிந்ததும் முழுமையாக பேசுகிறேன்''’என சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அதிகாரிகள், பாலாஜியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். அவரிடமிருந்து போன் பறிக்கப்பட்டது.

காலை 8:40: அசோக் வீட்டின் பொறுப்பாளர் ஒருவர் வந்தார். அதனையடுத்து வீடு திறக்கப்பட்டதும் உள்ளே நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தியது அமலாக்கத்துறை.

காலை 9:00: செந்தில்பாலாஜி வீட்டுக்கு தமிழக போலீஸார் சிலர் அனுப்பி வைக்கப்பட்ட னர். உளவுத்துறை போலீசாரும் வந்திருந்தார்கள்.

காலை 9:15: ரெய்டு விபரமறிந்து அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, ஏ.வ.வேலு மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் சிலரும் முதல்வர் வீட்டுக்கு வந்தனர்.

காலை 9:45: தலைமைச் செயலகத்தில், சென்னையின் முதல் காலநிலை செயல்திட்ட கையேடு வெளியிடும் நிகழ்ச்சி இருந்ததால் கோட்டைக்கு கிளம்பிச் சென்றார் ஸ்டாலின். நிகழ்ச்சியை முடித்து விட்டு 10:40-க்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

senthilbalaji

Advertisment

காலை 11:10: அறிவாலயம் வந்தார் ஸ்டாலின். அமைச்சர்களும் சீனியர் வழக்கறிஞர் களும் வந்திருந்தனர். அவர்களுடன் மீண்டும் விவாதித்தார். சட்டரீதியாக என்ன செய்யலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

காலை 11:30: செந்தில் பாலாஜி வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் இருவர் சென்றனர். மத்திய பாதுகாப்பு படையும் விரைந்து வந்தது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காத நிலையில், மத்திய பாதுகாப்பு போலீஸ் படை எதற்கு வர வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. செந்தில்பாலாஜி வீட்டுக்குள் மத்திய போலீசார் வந்திருந்த அதேசமயம், மத்திய பாதுகாப்பு போலீசாருடன், அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர், வங்கி அலுவலர்கள் 2 பேர், பாலாஜியின் உதவியாளர் ஒருவர் என 5 பேர் தலைமைச் செயலகத்துக்கு விரைந்தனர்.

காலை 11:40: கோட்டையின் பிரதான கட்டிடத்தின் முதல் மாடியில் செந்தில்பாலாஜியின் அலுவலக அறைக்குள் செல்ல முயன்றனர். ஆனால், பாதுகாப்புக்கு இருந்த தமிழக போலீஸ், முறையான அனுமதி இல்லாமல் உங்களை அமைச்சரின் அறைக்குள் அனுமதிக்க முடியாது என தடுத்தனர். இதனால், முறையான அனுமதி யுடன் வருகிறோம் என்று அமலாக்கத்துறையினர் தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் பேசினர்.

மதியம் 12:00: பொதுத்துறை மூலமாகத்தான் அனுமதி பெறமுடியும் என்பதால் முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட் டது. தலைமைச் செயலகத்துக்குள்ளே வந்திருப் பதையறிந்து அதிர்ச்சியடைந்தார் ஸ்டாலின். அருகில் இருந்த அமைச்சர்களும் அதிர்ந்தனர். செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை போட அனுமதி தர முடியாது என அதிகாரிகள் மூலம் மறுத்திருக்க முடியும். ஆனால், தேவையற்ற சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு அனுமதியுங்கள் என சொல்லியிருக்கிறார்.

மதியம் 12.25: பொதுத்துறை மூலம் முறைப்படி அனுமதி தரப்பட்டது. அதனை யடுத்து செந்தில் பாலாஜியின் அலுவலக அறைக்குள் புகுந்தனர் அதிகாரிகள். கதவுகள் இழுத்து மூடப்பட்டன. ஒவ்வொரு கோப்புகளையும் ஆராய்ந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் சிக்கவில்லை.

senthilbalaji

மதியம் 1:15: தலைமைச் செயலகத்திற்குள்ளேயே ரெய்டு என்கிற தகவல் காட்டுத்தீயாய் பரவ, தேசிய அளவில் எதிரொலித்தது. மம்தா பானர்ஜி , மல்லிகார்ஜுன கார்கே, கெஜ்ரிவால் ஆகியோர் ரெய்டை கண்டித்து அறிக்கை வாசித்தனர்.

பிற்பகல் 2:30: கோட்டையில் அமலாக்கத்துறையினருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஆயுதம் தாங்கிய ரிசர்வ் போலீசார் கோட்டைக்குள் வர, ஆயுதம் ஏந்திய வெளி நபர்கள் யாரையும் அனுமதிப்ப தில்லை என தமிழக போலீஸ் கடுமையாக மறுத்ததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

பிற்பகல் 3:00: ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ரெய்டு விவகாரங்களை விசாரித்தபடியே இருந்தார் கவர்னர் ஆர்.என். ரவி.

மாலை 4:35: ஸ்டாலினிடமிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தன்வசமுள்ள விசாரணை அமைப்புகள் மூலம் தங்களுக்கு எதி ரான அரசியல் சக்திகளை பழிவாங்கும் பா.ஜ.க. வுக்கு தெரிந்த ஒரேவழி இதுதான். சோதனைக்கும் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என செந்தில்பாலாஜி சொல்லியதோடு முழு ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். இந்த நிலையில், தலைமைச்செயலகத்தில் அவரது அலு வலகத்திற்கு சென்று தேடுதல் நடத்தவேண்டிய தேவை என்ன? தலைமைச் செயலகத்திலே தாக்குதல் நடத்துவது கூட்டாட்சித் தத்துவத்திற்கே களங்கம். இதுதான் அரசியல் சட்டமாண்பை காப்பதா? பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியாக மிரட்டிப்பார்க்கும் அரசியல் செல்லாது என்று கண்டித்திருந்தார்.

senthilbalaji

மாலை 5:20: தலைமைச் செயலகத்தில் செந்தில்பாலாஜியின் அறையிலிருந்து ஒரே ஒரு அதிகாரி மட்டும் வெளியே வர, அவரை பாதிகாப்பாக அழைத்துச் சென்றது தமிழக போலீஸ். அடுத்த 40-வது நிமிடத்தில் மற்றவர் களும் வெளியே சென்றனர். எதுவும் கிடைக்காத வருத்தம் அவர்களிடம் இருந்தது.

இரவு 7:00-10:00: தி.மு.க. வழக்கறிஞர்கள், டெல்லி வழக்கறிஞர்களை தொடர்புகொண்டு விவாதித்தனர். இவ்வளவு நேரம் ரெய்டு நடக்கிற தெனில் பாலாஜிக்கு ஏதோ நடக்கிறது என வழக்கறி ஞர்களிடம் சொல்லியபடி இருந்தார் ஸ்டாலின்.

இரவு 11:00: ரெய்டு நடந்துகொண்டிருக்கும் போதே பல கேள்விகளை செந்தில்பாலாஜியிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கு இயல்பாக பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். இரவு 11 மணிக்கு சில தகவல்கள் வெளியிலிருந்து உள்ளே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குச் செல்கிறது.

நள்ளிரவு 12:00: சில வங்கிப் பரிவர்த்தனை (பழைய) டாகுமெண்டுகளை காட்டி, உங்கள் பெயரிலும் உங்கள் மனைவி பெயரிலும் இவ்வளவு தொகை இருக்கிறதே. இதற்கான சோர்ஸ் என்ன? என பாலாஜியிடம் அதிகாரிகள் கேட்க, காலையிலிருந்து இதே மாதிரி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பலமுறை பதில் சொல்லிவிட்டேன் என பாலாஜி பதில் சொல்ல, எத்தனை முறைகேட்டாலும் சொல்லித்தான் ஆகவேண்டும் என நின்றிருந்த பாலாஜியை கையைப்பிடித்து சேரில் உட்கார வைத்தனர். அதிகாரிகள் அவரது கையை பிடித்த வேகத்தில் வலி தாங்கமுடியாமல் அலறியிருக்கிறார் பாலாஜி.

14-ந் தேதி நள்ளிரவு 12:40: விசாரணை என்கிற பேரில் ஒருவித மிரட்டலே நடந்து கொண்டிருந்தது. அதிகாரிகள், விசாரணை ஆவணங்கள் சிலவற்றை காட்டி கையெழுத்துப் போட வலியுறுத்தியுள்ளனர். வக்கீல்கள் இல்லாமல் கையெழுத்து போட முடியாது. எனது அட்வகேட்டுகளை வரவழையுங்கள் என பாலாஜி சொல்லியுள்ளார். ஓ.கே. சார். எந்த பிரச்சனையும் இல்லை சார். நாங்க சம்மன் கொடுக்கிறோம். அதை வாங்கிக்கொண்டு முறையா பதில் சொல்லுங்க சார் என நக்கலடித்துக்கொண்டே தயாராக இருந்த சம்மனை கொடுக்க, அதனை வாங்க மறுத்தார் பாலாஜி.

நள்ளிரவு 1:40: மிஸ்டர் பாலாஜி, எங்கள் விசாரணைக்கு நீங்கள் ஒத்துழைக்க மறுக்கிறீர்கள். அதனால் உங்களை கைது செய்கிறோம் என பாலாஜியின் கைகளை இரண்டு பேர் பிடித்து இழுக்க, அதன் வலி தாங்காமல் துடித்துள்ளார். உடனே தரையில் கால்களை உதைத்து கதறியிருக்கிறார். உடனே அவரது கால்களை இரண்டு பேர் பிடித்துக் கொண்டு தூக்க, பாலாஜி திமிற, அதனை கட்டுப்படுத்த மற்றொருவர் பாலாஜியின் தொடையை பிடித்துக்கொண்டே அவரது உயிர்நிலையை (விரைகள்) மிக மோசமாக அழுத்தியிருக்கிறார். அதனால் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் அலறிய பாலாஜி கத்தியிருக் கிறார். நெஞ்சு வலிப்பதாகவும் கதறியுள்ளார். இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து காரில் ஏற்றினர். அப்படியே சீட்டில் சரிந்தார். வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நெஞ்சையும் தலையையும் பிடித்துக்கொண்டு துடித்தார் பாலாஜி. ஒரே பரபரப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. மீடியாக்கள் எல்லாம் அதனை படம் பிடித்தன.

நள்ளிரவு 2:20: நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி கார் விரைந்தது. போகும் வழியில், நெஞ்சு வலி அதிகமாக இருக்கு; ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போங்க என பாலாஜி கதற..., ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு திரும்பியது அமலாக்கத்துறை வாகனம். இதற்கிடையே, முதல்வரின் கவனத்துக்கு சம்பவங்களை எடுத்துச் சென்றது உளவுத்துறை.

நள்ளிரவு 2:35: அமைச்சர் மா.சுப்பிர மணியனை தொடர்புகொண்டு விசயத்தை கூறிய முதல்வர், உடனே ஹாஸ்பிட்டலுக்குப் போங்க என உத்தரவிட்டார்.

நள்ளிரவு 2:45: மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட செந்தில்பாலாஜியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச்சென்றனர். அவரை மருத்துவர்கள் சோதித்துவிட்டு, பதட்டத்தாலும் பயத்தாலும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. கொஞ்சம் ஓய்வு எடுத்தால் சரியாகும் என சொல்லியிருக்கிறார்கள்.

மறுநாள் விடியற்காலை 3:00: மருத்துவ மனைக்கு மா.சுப்பிரமணியன், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலரும் வந்தனர். செந்தில் பாலாஜியை சந்தித்த மா.சுப்பிரமணியன் பேச, "நெஞ்சு வலி நிற்கவில்லை. வலி கூடுதலாக இருக்கிறது. காது பக்கமும் வலி தாங்க முடிய வில்லை'' என்று பாலாஜி சொல்ல, மருத்துவர் களிடம் ஆலோசித்தார்.

விடியற்காலை 4:10: அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, ரகுபதி என ஒவ்வொரு வருவராக மருத்துவமனைக்கு படையெடுத்தனர். அமைச்சர் உதயநிதி பறந்து வந்தார். செந்தில் பாலாஜியை பார்த்து விசாரித்தார்கள். விசாரணையில் அதிகாரிகளால் தாக்கப்பட்டேன் என்றும், எங்கெல்லாம் வலி இருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார் பாலாஜி. அதன்பிறகு நிலைமை மாறுகிறது. மீண்டும் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், ரத்தம் அழுத்தம் குறையாததை கண்டு, அமைச்சரின் வலியை பார்த்தால் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. உடனே அவருக்கு அனைத்து டெஸ்டுகளும் எடுக்க வேண்டும் என முடிவு செய்து ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்கிறார்கள்.

அதிகாலை 4:35: ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்ய அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. மருத்துவர்களுடன் வாக்குவாதமும் நடக்கிறது. இதனை தங்களின் மேலதிகாரியான கார்த்திக் தாசரிக்கு அதிகாரிகள் தெரிவிக்க, பிரச்சனையோ வாக்குவாதமோ செய்ய வேண்டாம். நடப்பதை மட்டும் கண்காணியுங்கள் என உத்தரவிட்டார். இவைகளை டெல்லிக்கும் பாஸ் செய்தார் கார்த்திக் தாசரி.

அதிகாலை 5:00: முதல்வரின் இல்லம் பரபரப்பாக இருந்தது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. ஆனால், முறையான எந்த சட்டநடைமுறைகளையும் பின்பற்றியதாக தெரியவில்லை என முதல்வருக்கு தகவல் தெரிவிக்கிறார் என்.ஆர்.இளங்கோ. அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் கோபமாகிறார் ஸ்டாலின். அவரை சமாதானப் படுத்துகிறார்கள்.

அதிகாலை 5:45 மணி : அமைச்சர் உதயநிதி, என்.ஆர். இளங்கோ ஆகியோர் முதல்வரின் இல்லம் திரும்பினர். மருத்துவமனையில் நடந்ததையும் பாலாஜியிடம் பேசியதையும் ஸ்டாலினிடம் விவரித்தனர். இதனையடுத்து நடந்த ஆலோசனையில், பாலாஜியின் மனைவி மூலம் ஹைகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு போடலாம்; கைது செய்திருப்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக காட்டவில்லையெனினும் கோர்ட்டில் கைது செய்யப்பட்டதை சொல்வார் கள். கஸ்டடி கேட்பார்கள். கஸ்டடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜாமீன் கேட்டும் மனு தாக்கல் செய்ய முடியும் என என்.ஆர்.இளங்கோ சொல்ல, அதற்குரிய நடைமுறைகளை ஆரம்பியுங்கள் என ஸ்டாலின் கேட்டுக்கொள்ள, மனுவை தயாரிக்கத் தொடங்கினர் வழக்கறிஞர்கள்.

காலை 6:25-9:00: அமைச்சர்கள் துரைமுரு கன், பொன்முடி, சேகர்பாபு, நேரு, உதயநிதி மற்றும் டி.ஆர்.பாலு உட்பட பலரும் முதல்வரின் இல்லத்துக்கு வந்தனர். "நம்மிடம் விளையாடிப் பார்க்கிறார்கள். எந்த எல்லைவரை அவர்கள் போகிறார்கள் என நானும் பார்க்கிறேன்'' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.

காலை 9:20: அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று டெல்லியிலிருந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதையடுத்து மத்திய பாதுகாப்பு படை போலீஸார் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றனர்.

காலை 10:00: எய்ம்ஸ் டாக்டர்களை அனுப்பி செந்தில்பாலாஜியை சோதித்துப் பார்க்கலாம் என முடிவு எடுக்கப்பட்டி ருந்தது. கடைசியில், செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க நீதிமன்றத்தில் மனு செய்யுங்கள். அதன் உத்தரவை பொறுத்து முடிவு எடுக்கலாம். அதற்குள் தேவைப்பட்டால் சென்னையில் உள்ள மத்திய இ.எஸ்.ஐ. மருத்துவமனை டாக்டர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என சொல்லப் பட்டதால் எய்ம்ஸ் டாக்டர்களை உடனடியாக அனுப்புவது நிறுத்தப்பட்டது.

காலை 10:15: துரைமுருகன், சேகர்பாபு, டி.ஆர்.பாலு சகிதம் மருத்துவமனைக்கு வந்தார் ஸ்டாலின். 6-வது மாடியில் ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்யப்பட்டிருந்த செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார். "ஹாஸ்பிட்டலுக்கு வந்ததால் தப்பிச்சேன்; இல்லைன்னா எனக்கு எதுவேணாலும் நடந்திருக்கும்'' என்ற செந்தில்பாலாஜி, ரெய்டின் போது அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதை ஸ்டாலினிடம் விவரித்திருக்கிறார். குளிக்கவும் ட்ரஸ் மாத்திக்கொள்ளவும் கூட அனுமதிக்க வில்லை. கைது செய்வதாக கூறி காரில் இழுத்து வந்தபோது ஹார்ட் அட்டாக் வந்தது போல நெஞ்சு வலித்ததை கதறியபடி சொன்னபோதும் அதை கண்டுகொள்ளவில்லை அதிகாரிகள் என சொல்லியிருக்கிறார் பாலாஜி. அவருக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின், சிகிச்சை முறைகளை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

காலை 10:40: செந்தில்பாலாஜிக்கு மீண்டும் ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டது. ஆஞ்சியோ செய்யவேண் டிய சூழல் இருந்ததால் அந்த சிகிச்சையும் நடந்தது. ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்தனர் டாக்டர்கள். பைபாஸ் அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என செந்தில்பாலாஜி விரும்புகிறார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கு மறுப்புத்தெரிவித்த அமலாக்கத்துறையினர், தேவையான சிகிச்சைக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என தெரிவிக்க, அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை டாக்டர்கள்.

காலை 11:00-மதியம் 2:15: செந்தில்பாலாஜி யின் மனைவி மேகலா சார்பில் ஹேபியஸ் மனு தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக எடுத்துக் கொள்ள தலைமை நீதிபதி கங்காபுர்லாவிடம் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டார். நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வு விசாரிக்க உத்தர விடப்பட்டது. மதியம் 2:15 மணிக்கு விசாரணை வந்தபோது இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என நீதிபதி சக்திவேல் விலகினார். இதனால் பரபரப்பு உருவானது. இந்த மனுவை விசாரிக்க வேறு நீதிபதிகளை நியமியுங்கள் என மேகலா தரப்பில் கோரிக்கை வைக்க, முறைப்படி மனுத்தாக்கல் செய்யுங்கள். புதிய அமர்வு விசாரிக்கும் என நீதிமன்றம் தெரிவித்தது.

மதியம் 2:30 : அமலாக்கத்துறையின் ஏற்பாட்டில் மத்திய அரசின் இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலிருந்து 4 டாக்டர்கள் வந்து செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையை கேட்டறிந்ததோடு அவரை சோதித்து பார்த்துவிட்டுச் சென்றனர்.

மதியம் 3:30-3:50: சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லியிடம், நிலைமைகளை சுட்டிக் காட்டிவிட்டு, மருத்துவமனைக்கு நீங்களே நேரில் வந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கேட்டுக்கொள்ள, அதன்படி மருத்துவமனைக்கு வந்து செந்தில்பாலாஜியிடமும் மருத்துவர்களிடமும் விசாரித்த நீதிபதி அல்லி, 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மாலை 4:00-6: செந்தில்பாலாஜியை விசாரிக்க 15 நாட்கள் கஸ்டடி கேட்டு நீதிபதி அல்லியிடம் மனுதாக்கல் செய்தார் அமலாக்கத்துறையின் மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன். இதனை எதிர்த்த செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, 13-ந்தேதி காலையிலிருந்து 17 மணி நேரம் அமைச்சரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவருக்கு பைபாஸ் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை மறுத்த சுந்தரேசன், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. 15 நாள் கஸ்டடி கொடுக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பின் வாதத்திற்கு பிறகு, தனது உத்தரவை வியாழக்கிழமை தெரிவிப்பதாக கூறினார் நீதிபதி அல்லி.

மாலை 6-இரவு 12: செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதை அமலாக்கத்துறை உறுதிசெய்த நிலையில், ரிசைன் கடிதத்தை ஸ்டாலினுக்கு அவர் அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், செந்தில்பாலாஜியிடமிருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறையை யாருக்கு ஒதுக்குவது? இரண்டு துறைகளையும் ஒருவரிடமே ஒப்படைப்பதா? அல்லது இரண்டு பேருக்கு ஒதுக்குவதா? புதிய அமைச்சரை நியமிக்கலாமா? என்கிற விவாதம் நடந்துகொண்டி ருந்தது. இதற்கிடையே, கொஞ்ச நாட்களுக்கு அந்த துறைகள் முதல்வர் வசம் இருக்கலாமே என ஒரு புதிய யோசனை ஸ்டாலினிடம் சொல்லப்பட்டுள்ளது. அதனால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடித்தது.

செந்தில்பாலாஜியை கைது செய்து திஹார் சிறையில் அடைப்பதும், ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதுதான் அமலாக்கத்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள அஜெண்டா. இதற்கெல்லாம் ஸ்டாலின் விட்டுவிடமாட்டார் என்கிறார்கள் தி.மு.க. வழக்கறிஞர்கள். அதேசமயம், செந்தில்பாலாஜி யிடமிருந்து ஸ்டாலினுக்கு எதிரான வாக்குமூலத்தை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுதான் மோடி-அமித்ஷாவின் திட்டம் என்கிறார்கள் பின்னணி அறிந்தவர்கள்.

இதனை உணர்ந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இனி தமிழகத்தில் மாநில அரசின் அனுமதியில்லாமல் சி.பி.ஐ. விசாரிக்கும் அனுமதியை ரத்து செய்து நேரடியான முதல் மோதலை தொடங்கியிருக்கிறார்.

படங்கள்: ஸ்டாலின், அசோக், குமரேஷ்