எட்டு மாதங்களாக சிறையிலிருந்தபடி ஜாமீனுக்காகப் போராடிவரும் செந்தில்பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடுமா? என்கிற கேள்விதான் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வட்டாரங்களில் கடந்த 2 நாட்களாக அதிகம் விவாதிக்கப்பட்டன. அதேசமயம் ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற பதட்டத்திலேயே தூங்காமல் இரவுகளைக் கழித்திருக்கிறார் செந்தில்பாலாஜி.
ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்ரவரி 14-ந் தேதி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இலாகா இல்லாத தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய, அவருக்கு எதிரான ஜாமீன் விவகாரம் பரபரப்பானது. ஜாமீனுக்காகத்தான் கேபினெட்டிலிருந்து விலகியிருக்கிறார் என்கிற தகவல்களும் தமிழக அரசியலில் சூடாக விவாதிக்கப்பட்டன!
இதுகுறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, "செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தநிலையில் அவரது அமைச்சர் பதவி பறிபோகும் என தி.மு.க.விலேயே சொல்லப்பட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை கட்சி கைவிட்டு விட்டது என்கிற விமர்சனம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை இலாகா இல்லாத மந்திரியாக தொடர்வதற்கு அனுமதிக்க கவர்னர் ரவிக்கு கடிதம் அனுப்பினார்.
இதனை முதலில் ஏற்க மறுத்து முதல்வருக்கு கடிதம் எழுதிய கவர்னர், 24 மணி நேரத்தில் தனது உத்தரவை நிறுத்திவைப்பதாகத் தெரிவித்தார். கவர்னர் பணிந்துவிட்டார் என்றே அன்றைக்கு விமர்சனங்கள் வந்தன. உண்மையில் அவர் பணியவில்லை. டெல்லியிலிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில்தான் தனது உத்தரவை உடனடியாக நிறுத்தி வைத்தார்.
செந்தில்பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர வேண்டும் என்பதுதான் அன்றைக்கு டெல்லியின் விருப்பம். அதனடிப்படை யில்தான் கவர்னருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதாவது, நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை செந்தில்பாலாஜி உள்ளே இருக்க வேண்டும் என திட்டமிட்ட பா.ஜ.க. மேலிடம், அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடரும்பட்சத்தில் தான் செந்தில்பாலாஜியின் ஜாமீனை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் மறுப்பு தெரிவிக்கத் தேவைப்படும் ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என்கிற திட்டத்தில்தான் இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதியுங்கள் என கவர்னருக்கு அறிவுறுத்தப்பட்டது.
டெல்லியின் திட்டத்தின்படியே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை வரும் போதெல்லாம் அதனை எதிர்க்கும் வகையில் பல காரணங்களை அமலாக்கத்துறை சொன்னாலும், இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டால் சாட்சி களைக் கலைப்பார் என்பதையும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொல்லியே வந்தது. அதனை நீதிமன்றமும் ஏற்று ஜாமீனை நிராகரித்தபடி வந்தது.
இது தொடர்கதையாகவே இருந்துவந்ததால், ஒரு கட்டத்தில், தலைவருக்கு (ஸ்டாலின்) என்னால் எந்த தர்மசங்கடமும் வரக்கூடாது; அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன் என ஏற்கனவே நான் கொடுத்திருக்கும் ராஜினாமா கடிதத் தை ஏற்றுக்கொண்டு என்னை விடுவித்து விடுங்கள் என முதல்வருக்கு தகவல் அனுப்பி யிருந்தார் செந்தில்பாலாஜி. ஆனாலும் அவரின் விருப்பத்தை நிராகரித்துவிட்டு, இலாகா இல்லாத மந்திரியாகவே வைத்திருந் தார் ஸ்டாலின்.
இந்த நிலையில்தான், கடந்த ஜனவரி 30-ந்தேதி செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ், 230 நாட்களாக ஒருவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது தமிழக அரசு? என்கிற கேள்வியை அரசு வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்டுவிட்டு, வழக்கை பிப்ரவரி 14-க்கு ஒத்தி வைத்தார். நீதிபதியின் அந்த கமெண்ட், ஸ்பெயினில் இருந்த முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை திரும்பியதும் தலைமை வழக்கறி ஞர் பி.எஸ்.ராமன் உட்பட அரசு வழக்கறிஞர்களி டம் இதுகுறித்து விவாதித்தார் ஸ்டாலின். அப்போது, செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு, ஆனந்த் வெங்கடேஷிடம் இருப்பதால் அவரது கமெண்ட்டை அலட்சியப்படுத்திட வேண்டாம். இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால்தானே அதையே ஒரு காரணமாக அமலாக்கத்துறை சொல்கிறது? நீதிபதியும் அதே ஆங்கிளில் கேள்வி எழுப்புகிறார். அதனால், கேபினெட்டிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கிவிடுங்கள். என்ன நடக்கிறதுன்னு பார்க்கலாம் என சீனியர் வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்'' என்று சுட்டிக் காட்டுகிறார்கள். வழக்கறிஞர்களின் வாதம் ஒருபுறம் இருந்தாலும் கொங்கு மண்டலம் பற்றி ஸ்டாலினுக்கு தொடர்ச்சியாகக் கிடைக்கும் தகவல்களும் ராஜினாமா பின்னணியில் இருந்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க.வின் சீனியர் மா.செ.க்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘’"நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரை செந்தில்பாலாஜியை சிறையிலேயே இருக்க வைக்கும் பா.ஜ.க. மேலிடத்தின் திட்டத்தை முதல்வருக்கு உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. அதுமட்டமல்ல; கொங்கு மண்டலம் என சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களில் இந்தத் தேர்தலிலும் தி.மு.க.வுக்கு சரிவுதான் என்றும், மாவட்ட பொறுப்பு அமைச்சரின் தேர்தல் பணிகள் வெற்றியைத் தேடித்தரும் வகையில் இல்லாமல் இருப்பதையும், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தின் ஆகப்பெரிய தொழிலதிபர்களாக இருக்கும் பலரும் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியைத்தான் ஆதரிக்க வேண்டும் என தமது சமூக மக்களிடம் ரகசியமாக வலியுறுத்தி வருவதும் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனால், செந்தில்பாலாஜியை வெளியே கொண்டுவர வேண்டும் என விரும்பினார் ஸ்டா லின். அதனால், அவருக்கு ஜாமீன் கிடைக்க தடையாக இருப்பது அமைச்சர் பதவிதான் எனில் அதிலிருந்து அவரை விடுவித்து விடலாம் என்கிற முடிவை எடுத்தார் ஸ்டாலின். இதனை சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு போலீஸ் அதிகாரிகள் மூலம் முதல்வர் தெரி விக்கவும் செய்தார். அதனையடுத்து, செந்தில்பாலாஜியை விடுவிக்கும் பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பி வைக்க, அவரும் இதனை டெல்லிக் குத் தெரியப்படுத்த, அங்கிருந்து வந்த ஆர்டர்படி மறுநாள் இதற்கு ஒப்புதலளித்தார் கவர்னர். கேபி னெட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார் செந்தில்பாலாஜி. ஆனால், அமைச்ச ரவையிலிருந்து அவரை நீக்கி விட்டால் மட்டுமே ஜாமீன் கிடைத்து விடும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது; ஜாமீனை எதிர்க்க பல அஸ்திரங்கள் அமலாக் கத்துறையிடம் இருக்கிறது. அதனை உடைக்க என்ன வியூகத்தை வழக்கறிஞர்கள் வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை''’என்று விவரிக்கிறார்கள் சீனியர் மா.செ.க்கள்.
இந்த பின்னணியில்தான் கடந்த 14-ந் தேதி செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோது, செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் அரியமாசுந்தரம், ” செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கு, அமலாக்கத் துறை கைப்பற்றிய ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இருக்கிறது. ஆனால், அதிலுள்ளவைகள் திருத்தப்பட்டுள்ளன.
அதேசமயம், கைப்பற்றப்பட்டதாக அமலாக் கத்துறை தரப்பில் சொல்லப்பட்ட எலெக்ட் ரானிக்ஸ் ஐட்டங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட ஐட்டங்களும் வெவ்வேறாக இருக்கிறது. குறிப்பாக, பென் ட்ரைவில் 284 கோப்புகள் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அதே பென் ட்ரைவில் 472 கோப்புகள் இருந்ததாக மற்றொரு அறிக்கையில் அமலாக்கத் துறை தெரிவிக்கிறது.
அவர்கள் ஆதாரங்களைத் திருத்தி, சேர்த் திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; சில கோப்புகள் அழிக்கப்பட்டு புதிய கோப்புகளை சேர்த்துள்ளனர். இதற்கெல்லாம் என்ன மதிப்பு இருக்க முடியும்? இப்போது இலாகா இல்லாத அமைச்சராகவும் செந்தில் பாலாஜி இல்லை. வழக்கின் புலன் விசாரணையும் முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆதாரங்களை எப்படி அவர் அழிப்பார்? பொருளாதார குற்ற வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் மறுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே சொல்லியிருக்கிறது. எனவே, திருத்தப்பட்ட, சேர்க்கப்பட்ட ஆதாரங்களை நீக்கிப் பார்த்தால், செந்தில்பாலாஜி உடனடியாக விடு தலை செய்யப்படவேண்டியவர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது சகோதரர் தலைமறைவாக இருப்பதைக் காரணம் காட்டி இவருக்கு ஜாமீன் மறுக்க முடியாது. அதனால் ஜாமீன் வழங்க வேண்டும்‘’ என்று அழுத்தமாக வாதிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்துதான் பெறப்பட்டது. ஆதாரங்கள் திருத்தப் படவில்லை; புதிதாக எதுவும் சேர்க்கப்பட வில்லை'‘என்று வாதிட்ட நிலையில், விரிவான வாதத்தை முன்வைக்க... விசாரணையை மறு நாளைக்கு (பிப்ரவரி 15) தள்ளிவைத்தார் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை கொடுக்கப்பட்டாலும், முடிவு தெரியும்வரை தூக்கமின்றி சிறையில் அவஸ்தைப்பட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி.
___________
இறுதிச் சுற்று!
கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். இத்திட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில சமூக நல அமைப்புகள் வழக்குத் தொடர்ந்ததில், பிப்ரவரி 15, வியாழனன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பாக இத்திட்டத்தை ரத்து செய்துள்ளது. தாமதமாக வந்துள்ள தீர்ப்பு இது, எனினும் வரவேற்புக்குரியது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இத்தீர்ப்பு வலு சேர்த்துள்ளது. இனி, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வசூலிக்க முடியாது. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களின் கறுப்புப் பணத்தை ஆளுங்கட்சிக்கு கொடுப்பதன்மூலம் தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்ற விபரங்களை வங்கிகள், மார்ச் மாதத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
-கீரன்