பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க செய்யப்பட்ட ஒன்றிய அரசின் சட்டத்திருத்தம் செல்லும் என தீர்ப்பளித்திருக்கிறது 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு. தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இந்த தீர்ப்பினை, சமூக நீதிக்கு எதிரானது என விமர்சித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை 12-ந்தேதி கூட்டியிருக்கிறார். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட விருப்பதால் பரபரப்பாகி வருகிறது 10 சதவீத இடஒதுக்கீடு!
கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் கட்சிகளின் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.
நம்மிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன், "கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர் வகுப்பு ஏழை களுக்கு, 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை 2019-ல் திருத்தியது மோடியின் ஒன்றிய அரசு. உடனே பல மாநிலங்களிலும் இந்த இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தினார்கள்.
இந்த சட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்கில்தான் சட்டம் செல்லும் என தற்போது தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்து வரும் சமூகநீதியை காலி செய்துவிடும். பலநூறு ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது.
மோடி அரசின் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் பொருத்திப் பார்த்தால், இதில் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாவது தமிழ்நாடுதான். தமிழகத்தில் 3 விழுக்காடு உள்ள பிராமணர்களும், 1 விழுக்காடு உள்ள இதர உயர்சாதி வகுப்பினர்களும்தான் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள். போட்டியே இல்லாமல் ஆதிக்க சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் 3 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டு விடும். அதுமட்டுமல்லாமல் பொதுப்போட்டியிலுள்ள 21 விழுக்காடு இடங்களிலும் அவர்கள் நுழைந்து விடுகிறார்கள்.
69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழகத்தில் நிலைபெற்றிருக்கும் சூழலிலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தின் சமூக நீதி கொள்கைக்கு பேராபத்தை விளைவிக்கிறது இந்த தீர்ப்பு! இந்த பேராபத்தை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது தவறு. இப்படிப்பட்ட ஆபத்துகள் இருப்பதால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டினை முடிவு செய்யுங்கள் எனத் தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம். கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பை அப்போதைய காங்கிரசு அரசும் வெளியிடவில்லை; இப்போதைய பா.ஜ.க. அரசும் வெளியிடவில்லை.
அதனை வெளியிட்டால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்துவிடும் என காங்கிரசும் பா.ஜ.க.வும் நினைக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு வளைக்கத்தக்கதுதான் என்கிற நிலையிலும், சமூக நீதியை நிலை நிறுத்தும் வகையிலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டினை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இதனை அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்துவோம்'' என்கிறார் மிகஅழுத்தமாக.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லாவிடம் பேசியபோது, "இந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தேன். எங்கள் கட்சி சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித், சமூகநீதிக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானது இந்த சட்டத்திருத்தம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய் திருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தை நிர்மாணித்த பிதாமகர்கள் அளித்துள்ள முறைமைகளையும், இந்திரா சஹானி இடஒதுக்கீடு வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு வழங்கிய முறைமைகளையும் முற்றிலுமாகப் புறந்தள்ளியிருக்கிறது 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு.
குறிப்பாக, முற்பட்ட மக்க ளின் மக்கள் தொகையின் அளவைவிட மிக அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிற அதேவேளையில், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுவரும் பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , பட்டியிலின மக்களுக்கான வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வஞ்சகம் இதில் இருக்கிறது. மொத்தத்தில், இந்த தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்ட அமைப் பின் மீது நிகழ்த்தப்பட்ட தெளி வான தாக்குதலாகும்''’என்கிறார்.
தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற அவையின் முன்னவருமான துரைமுருகன், ”"அரசியல் சட்டத்தின் அடையாளத்தை அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்டத் திருத்தம் அமையக்கூடாது. சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிராகவும் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்படக்கூடாது. பல தீர்ப்புகளில் இது மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்போது வந்துள்ள தீர்ப்பு, அதனை மீறுவதுடன், சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தை நொறுக்கியிருக்கிறது. ஆக, 82 விழுக்காடுள்ள இதர மக்களின் சமூகநீதியைப் பாதுகாத்திட மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்''’என்கிறார்.
சமூகநீதி இடஒதுக்கீடு கொள்கைகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் சதித்திட்டங்களை முறியடிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலிமையான ஒரு முடிவை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
______________
இறுதிச்சுற்று!
கோவை கோட்டை ஈஸ்வரன்கோவில் பகுதியில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷாமுபின் பலியானார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், என்.ஐ.ஏ. இந்த வழக்கை விசாரித்துவருகிறது. இந்நிலையில் தேசியப் புலனாய்வு முகமை சென்னையின் மண்ணடி, புதுப்பேட்டை, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்பட தமிழகத்தின் 45 இடங்களில் நவம்பர் 10-ஆம் தேதி சோதனை மேற்கொண்டது. தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்பாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.