டப்பாடி பழனிச்சாமிக்கான பெரிய லாபி ஒன்று டெல்லியில் இருக்கிறது. அந்த லாபியைப் பயன்படுத்தி, சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் செக் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதை எதிர்த்து ஓ.பி.எஸ்.ஸும் சசிகலாவும் கோர்ட் படியேறப்போகிறார்கள் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

அந்நிய தினகரன்

செத்துப்போனதாக நினைத்தவர் உயிரோடு வந்து சொத்தில் பங்கு தா என கேட்பது போல, 2017-ஆம் ஆண்டு டெல்லி போலீசின் ஊழல் தடுப்புத் துறை சார்பில் பதியப்பட்ட வழக்குதான் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு. அதில் டி.டி.வி.தினகரன், அவரது நிழல் நண்பர் மல்லி, சுரேஷ் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். அந்த வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பி.குமார் என்கிற வழக்கறிஞர், தேர்தல் கமிஷன் சார்பாக டி.டி.வி. தினகரனிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி பெயர் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றார். டி.டி.வி. தினகரன் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அது மறுபடியும் 2022-ஆம் ஆண்டு துளிர்த்திருக்கிறது.

Advertisment

sasi

சுரேஷ் சந்திரசேகர் என்கிற தரகரிடம் மறுபடியும் விசாரணை செய்ததாகவும், இரட்டை இலை சின்னத்தைப் பெற டி.டி.வி. 2 கோடி ரூபாய் பணம் தந்ததாகவும் கூறினார் என இந்த முறை மத்திய அமலாக்கத்துறை புதிய வழக்கை பழைய விவகாரத்தில் உருவாக்கி டி.டி.வி. தினகரன் மற்றும் இரண்டு வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பி ஆஜராகும்படி உத்தரவிட்டிருக்கிறது.

தொடர்ந்து டெல்லி பா.ஜ.க.விலிருந்து டி.டி.வி.யிடம் அ.ம.மு.க.வை கலைத்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்துவிடுங்கள் என பேசினார்கள். அ.தி.மு.க. சார்பில் காலியாகும் ராஜ்யசபா சீட் ஒன்றைத் தருகிறோம் என பேசப்பட்டதற்கு டி.டி.வி. உடன்படவில்லை. அதனால்தான் செத்துப்போன வழக்கிற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் என சசிகலா வட்டாரங்களே சொல்கிறது. இதில் எதுவும் சிக்கல் வரக்கூடாது என அலறிய தினகரன் தரப்பு, சுரேஷ்சந்திரசேகருக்கு 2 கோடி ரூபாய் பணத்தை அவரது நிழல் நண்பரான மல்லியிடமிருந்து கொண்டுபோய் கொடுத்த வழக்கறிஞர் கோபிநாத்தை எச்சரித்தது. தினகரனோடு தன்னையும் கைது செய்வார்கள், என பயந்த கோபிநாத் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனோடு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதைக் கேள்விப்பட்ட தினகரன் அலறினார். அந்த டென்ஷனிலேயே அமலாக்கத்துறை கொடுத்த சம்மனுக்கு அவர் ஆஜராகவில்லை. இப்படி மூன்று முறை சம்மன் வந்தும் ஆஜராகவில்லையெனில், நான்காவது முறை கைது செய்வார்கள். ஆஜரானாலும் அமலாக்கத்துறை கைது செய்யும், என்ன செய்வது என முழித்துக்கொண்டிருக்கும் தினகரனை டெல்லியில் கொதிக்கும் வெயில் மிரட்டிக்கொண்டிருக்கிறது.

எடப்பாடியின் தில்லாலங்கடி மூவ்

கோவை பகுதி கவுண்டர்களும், கர்நாடக கவுடாக்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் எடப்பாடி, எங்கள் மாமா என்றும் சொல்கிறார்கள் கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள். அண்ணாமலை, பி.எஸ்.சந்தோஷ் ஆகியோர் துணையுடன் கர்நாடக பா.ஜ.க.வை வளைத்து மேலிட ஆதரவைப் பெறும் முயற்சியில் எடப்பாடி ஈடுபட்டிருக்கிறார். தனக்குத் தொல்லையாக உள்ள சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோரை ஒரே அடியில் வீழ்த்துவதுதான் எடப்பாடியின் டெல்லி முயற்சியின் பின்னணி. அதன் ஒருகட்டமாகத்தான் தினகரன் மேல் அமலாக்கத்துறை கை வைத்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க. கட்சி விஷயத்தில், நான்தான் ஹீரோ. ஓ.பி.எஸ்.ஸுக்கு நீங்கள் வாய்ப்பளித்தீர்கள், அவர் தோற்றுப் போய்விட்டார். இன்று சசிகலாவின் அடிமையாகிவிட்டார். எனது கண்ட்ரோலில் அ.தி.மு.க. இருக்கிறது பாருங்கள் என எடப்பாடி சொல்வதில் உண்மை இருக்கிறது எனச் சொல்லும் பா.ஜ.க.வினர் இருக்கிறார்கள்.

ஓ.பி.எஸ்.ஸின் வாயை அடைத்த எடப்பாடி

கட்சித் தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., "கட்சியில் இரண்டுபேர் மா.செ.க்களாக இருக்கும் மாவட்டங்களை மூன்றாகப் பிரிக்க வேண்டும்'' என்றார். மூன்றாகப் பிரித்தால் அதில் ஒரு மா.செ.வை கூட்டிக்கொண்டு சசி பக்கம் தாவிவிடுவார் ஓ.பி.எஸ். என நினைத்த, எடப்பாடி அது முடியாது என மறுத்தார். பழைய ஆட்கள் தொடரட்டும் என்றார். உடனே ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக களமிறங்கிய வைத்தி லிங்கம், "அ.தி.மு.க.வில் பலபேர் தி.மு.க. தொடர்பில் இருக்கிறார்கள்'' என்றார். பொத்தாம்பொதுவாகச் சொல்லாதே. யார் என பெயரைச் சொல்லு என கேட்க... டென்ஷனான வைத்தி, வழக்குகளுக்குப் பயந்து முன்னாள் அமைச்சர்கள் கூட தி.மு.க.வுடன் கொஞ்சிக் குலாவுகிறார்கள் எனச் சொல்ல... சி.வி.சண்முகமும் வைத்தியும் மோதிக்கொண் டார்கள்.

எடப்பாடியின் கைத்தடியாக சி.வி. சண்முகமும் வேலுமணியும் தஞ்சை பெல்ட்டில் தங்கள் ஆட்களை நிற்க வைத்து ஜெயிக்க வைத்தார்கள் என்கிற கோபத்தில் கூட்டத்தில் வெடித்த வைத்தியை, ஓ.பி.எஸ். பக்கம் போய் விட்டார் எனப் புரிந்துகொண்டு சமாதானப் படுத்தியுள்ளார்கள் மற்றவர்கள். அதன்பிறகு ஓ.பி.எஸ்.ஸை நோக்கி, "நீங்கள் ஏன் கட்சித் தேர்தல் முடிவுகளுக்கு கையெழுத்துப் போடமாட்டேன் என்கிறீர்கள். உங்களால் கட்சியை ஒழுங்காக நடத்த முடியவில்லை'' என வேலுமணி தலைமையில் ஒரு கும்பல் கத்த... டென்ஷனான ஓ.பி.எஸ்., கொடுங்கள் நான் கையெழுத்து போடுகிறேன், என மே மாதம் முதல் வாரம் நடத்த திட்டமிட்டுள்ள பொதுக்குழுவிற்கான அறிவிப்பிற்கும் சேர்த்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போனார்.

Advertisment

eps-ops

இ.பி.எஸ்.ஸுக்கு செக் வைக்கும் ஓ.பி.எஸ்.!

அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமானவர் வடசென்னை மா.செ.வான ராஜேஷ். மறைந்த அவைத்தலைவர் மதுசூதனனின் கார் டிரைவரான ராஜேஷ், ஓ.பி.எஸ். சொல்படி களமிறங்கியுள்ளார். அ.தி.மு.க. தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பழைய பதவிகள் எதுவும் மாற்றப்படாது என்கிற அடிப்படையிலேயே நடந்து முடிந்துள்ளன. ஆனால் ராஜேஷின் வடசென்னை யில் மட்டும் பழைய ஆட்கள் யாருக்கும் பதவி தரவில்லை என்பதோடு, கட்சி நிர்வாகத்தைப் பிரித்து பதவிகளை வழங்கியுள்ளார். இதில் ஏகப்பட்ட பணம் பாôத்துவிட்டார் எனப் புகார் எழுந்தாலும் ராஜேஷ் அதைப்பற்றி கவலைப்பட வில்லை.

என் பதவியை ஏன் எடுத்தீர்கள் எனக் கேட்கும் வட்டச் செயலாளர்களிடம் நீ வேணா கோர்ட்டுக்குப் போ என அவமரியாதையுடன் பேசுகிறார் எனப் புலம்பும் அ.தி.மு.க.வினர், இந்தத் தகவலை எடப்பாடியிடம் கொண்டு சென்றுள்ளனர். அவர்களிடம் தனக்கு நெருக்க மானவர்களை அனுப்பி எடப் பாடி பேசவைத்துள்ளார்.

ராஜேஷின் மாவட்டத்தில் உள்ளவர்களிடம் அ.ம.மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கு வந்த லட்சுமி நாராயணன் பேசி யிருக்கிறார். மே முதல்வாரம் பொதுக்குழு கூடவிருக்கிறது. அதற்குள் அ.தி.மு.க.வினர் கட்சித் தேர்தலை எதிர்த்து கோர்ட்டுக் குப் போனால், பொதுக்குழு நடைபெறுவது நின்றுவிடும், எனவே யாரும் கோர்ட்டுக்குப் போகாதீர்கள் என ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

வடசென்னை ராஜேஷ் மட்டுமல்ல, மற்ற சென்னை மா.செ.க்களான தி.நகர் சத்யா, விருகை ரவி, வெங்கடேஷ் பாபு எல்லோரும் ராஜேஷ் பாணியில் கோர்ட்டுக்குப் போ எனச் சொல்வதோடு, கோர்ட்டுக்குப் போவதற்கான ஏற்பாடுகளையும் மறைமுகமாக செய்துவருகிறார்கள் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

பைனல் ஓவர் வெற்றி

ஓ.பி.எஸ்.ஸை ஓரம்கட்டி, பொருளாளர் அல்லது அவைத்தலைவர் பதவியால் பொதுக் குழுவைக் கூட்டி கொண்டுவர இ.பி.எஸ். திட்டமிடுகிறார். அது முடியாது என தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். மல்லுக்கட்டுகிறார். இந்தச் சண்டையில் அ.தி.மு.க. இரண்டாக உடைவதை பா.ஜ.க. விரும்பவில்லை. தினகரனுக்கு அமலாக்கத்துறை, சசிகலாவிற்கு கர்நாடக சிறை வழக்கு என அஸ்திரங்களை ரெடியாக வைத்துக்கொண்டு, சொன்ன பேச்சைக் கேளுங்க என எடப்பாடியை விக்கெட் கீப்பராக்கிக்கொண்டு பௌலிங் போடுகிறது பா.ஜ.க. இந்த பைனல் ஓவரில் ஓ.பி.எஸ்.-சசிகலா அணி சிக்ஸர் அடிக்குமா? அல்லது க்ளீன் போல்டாகுமா? என்பது பொதுக்குழுவில் தெரியும் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சசிகலா தொடர்ந்த வழக்கில், "நீக்கியது செல்லும்' என உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிக்கு எதிராக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தொடர்ந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு, முதலில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உரிமையியல் நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக அப்செட்டான சசிகலா, அடுத்தகட்டமாக... இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்வார் என்கிறார்கள் அவர் தரப்பு வழக்கறிஞர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

படங்கள் : ஸ்டாலின், அசோக்

_____________________

இறுதிச் சுற்று!

"கியூட்'டுக்கு எதிராக தமிழகம்! -நிறைவேற்றிய தமிழக முதல்வர்

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு போல, நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. "கியூட்' எனப்படும் இந்தத் தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுமென பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. அறிவித்துள்ளது.

மத்திய அரசின் முடிவுக்கெதிராக மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் வகையில், மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில், தனித் தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், "ப்ளஸ் 2 தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல், நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை என்பது ஏற்புடையதல்ல. இம்முறை கல்வியை ஓரங்கட்டிவிட்டு பயிற்சி மையங்களை நாடவேண்டிய தேவையை ஏற்படுத்திவிடும். "கியூட்' தேர்வு முறையினால் தமிழக மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறையும்''’என தெரிவித்தார்.

தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், பா.ஜ.க. மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

-க.சுப்பிரமணியன்