""அண்ணா.... ட்ரெய்ன் இப்ப வந்துருமல்லங்கண்ணா?... நக்கீரன் புத்தகம் இறக்கணும்... சீக்கிரமா சப்ளை பண்ணணுமுங்கண்ணா... அதுக்குதான் கேட்டேன்...'' என ட்ரெய்ன் வர ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே கோவை ரயில் நிலையத்தில் அதிகாலையில் நின்று ரயில்வே ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிக்கொண்டிருப்பவர்தான் நக்கீரன் முகவர் வெங்கடாசலம்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக நக்கீரன் இதழ் பார்சல் வரும் நாட்களில் இதைக்கேட்டு வந்த ரயில் நிலையத்தில்... இனி அந்தக் கேள்விக்கு இடமில்லை. ஆம்... வெங்கடாசலம் தன் உடலில் இருந்த உயிர் என்னும் ட்ரெயினை கடந்த 19-05-18 அன்று அதிகாலை 5 மணிக்கு தவற விட்டுவிட்டார்.
அவர் இ
""அண்ணா.... ட்ரெய்ன் இப்ப வந்துருமல்லங்கண்ணா?... நக்கீரன் புத்தகம் இறக்கணும்... சீக்கிரமா சப்ளை பண்ணணுமுங்கண்ணா... அதுக்குதான் கேட்டேன்...'' என ட்ரெய்ன் வர ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே கோவை ரயில் நிலையத்தில் அதிகாலையில் நின்று ரயில்வே ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிக்கொண்டிருப்பவர்தான் நக்கீரன் முகவர் வெங்கடாசலம்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக நக்கீரன் இதழ் பார்சல் வரும் நாட்களில் இதைக்கேட்டு வந்த ரயில் நிலையத்தில்... இனி அந்தக் கேள்விக்கு இடமில்லை. ஆம்... வெங்கடாசலம் தன் உடலில் இருந்த உயிர் என்னும் ட்ரெயினை கடந்த 19-05-18 அன்று அதிகாலை 5 மணிக்கு தவற விட்டுவிட்டார்.
அவர் இறப்பு ஒரு பேரிடியாக தங்கள்மேல் விழுந்ததை தாங்கிக்கொள்ளாது பலரும் அழுதிருக்க... அவரின் வார்ப்புகளான பாண்டியன், தண்டபாணி, நாகராஜ் உள்ளிட்ட லைன் பாய்கள் நக்கீரன் மீது அவர்கொண்டிருந்த பாசத்தை நம்மிடம் விளக்கினர். ""ஒரு தடவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் சுவத்துல நம்ம நக்கீரன் போஸ்டர் மேல வேறொரு போஸ்டரை ஒட்டிப்புட்டாங்க. கலெக்ஷனுக்கு வந்த வெங்கடாசலம் அண்ணன், அதைப் பார்த்துட்டாரு. ரொம்ப கோபமான அவரு... "நம்ம நக்கீரன் மேல அந்த போஸ்டரை ஒட்டுனவன் யாரு?'ன்னு கேட்டுட்டு அவரே கிழிச்சே வீசிட்டாரு.
உடனே அந்த போஸ்டரை ஒட்னவன்... போலீசுகிட்ட போவேன்னு சண்டை போட்டான். ""போலீசு கீலிசுன்னு பூச்சாண்டியெல்லாம் எங்ககிட்ட காட்டாதே... "அங்கே போயிட்டு என்னைய கூப்பிடு...’’லைன்லதான் நானிருப்பேன்'னு சொல்லிட்டு அசால்ட்டா போயிட்டாரு'' என்றனர். மேலும் அவர்களே... ""நமது நக்கீரன் ஆசிரியர் அண்ணன், ஜெயலலிதா ஆட்சியில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க வெங்கடாசலம் அண்ணன் உள்ளிட்ட நாங்கள் போயிருந்தோம். அப்போது ஆசிரியர் அண்ணன்... "புத்தகம் எப்படி போகுது..?' என வெங்கடாசலம் அண்ணனிடம் எதார்த்தமாய் கேட்டபோது.. "இப்ப ரொம்ப நல்லா போகுதுண்ணே..' என அவர் வெள்ளந்தியாய் சொல்ல... "அப்ப நான் ஜெயில்லயே இருந்துடட்டுமா..?' என ஆசிரியர் அண்ணன் அடித்த கமெண்ட்டை எப்போது நினைத்தாலும் சிரிப்பார். இப்ப வயசு 59-ன்னாலும் என்றைக்குமே அவர் இருபது வயசு இளைஞர் மாதிரிதான் துருதுருன்னு இருப்பார்...'' என்கிறார்கள் நினைவில் நீண்டுகொண்டே.
வெங்கடாசலம் அவர்களின் இறப்புச் செய்தியை அதிகாலையில் அறிந்து அதிர்ந்த நம் ஆசிரியர், சென்னையிலிருந்து கோவைக்கு விரைந்து வந்து வெங்கடாசலத்தின் மனைவி பிரேமாவையும், அவர்களின் மகன் அண்ணாமலையையும் ஆறுதல் கூறி தேற்றினார்.
""வெங்கடாசலம் மகன் அண்ணாமலைக்கு வரும் 25-ந் தேதி திருமணம். அதுக்காக அழைப்பிதழ் வைக்க அலைந்த அந்த ஜீவனுக்கு என்ன ஆனது?'' நம் ஆசிரியர் எல்லோரிடமும் கேட்டுக் கொண்டேயிருந்தார். கிரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், நக்கீரன் குடும்பத்தினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ரயில் பார்சலில் வரும் நக்கீரன் கட்டுகளைப் பார்த்து, "இந்தக் கட்டு கவுண்டம்பாளையம், இந்த கட்டு செல்வபுரம், இந்த கட்டு சரவணம்பட்டி, இந்த கட்டு பீளமேடு, இந்த கட்டு வடவள்ளிக்கு' என லைன்பாய்களை வேலை வாங்கிய வெங்கடாசலத்தின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை கட்டுக் கட்டாய் அவர் சொல்லாமலே ஏரியாக்களில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.
மாலை 5 மணிக்கு வெங்கடாசலத்தின் உடல் சொக்கம்புதூர் மின் மயானத்தில் கண்ணீர் மழைக்கிடையே எரிக்கப்பட்டது. நக்கீரனுக்காகவே வாழ்ந்த ஒரு ஜீவனை நக்கீரன் குடும்பம் பறிகொடுத்துள்ளது.
-அ.அருள்குமார்