(34) சேலை கட்டிய சிலுக்கு!
"அலைகள் ஓய்வதில்லை' படத்திற்காக ’"ஆயிரம் தாமரை மொட்டுக்களே'’ பாடலில் வாழை மட்டையில் சொருகப்பட்ட தண்டுடன் கூடிய தாமரைப் பூக்களை சேற்று நீருக்குள் மூழ்கியபடி நானும், மணிவண்ணனும் அப்படியும், இப்படியும் அசைத்துக் காட்டினோம். பிறகு தலையை வெளியே தூக்கிப் பார்த்தோம்.
டைரக்டர் பாரதிராஜா மிகவும் திருப்தியுடன், ஒளிப்பதிவாளர் பி.கண்ணனிடம் படம் பிடிக்கச் சொன்னார். காலை உணவு சாப்பிடுவதற்காக பத்தரை மணிக்கு பிரேக் சொல்லிவிட்டுப் போனார் டைரக்டர். மீண்டும் அவர் வரும்வரை, காட்சியின் தொடர்ச்சி கெட்டுவிடக்கூடாது என்பதால் நாங்கள் இருவரும் சேற்றிலேயே நின்றோம்.
மீண்டும் டைரக்டர் வந்ததும், படப்பிடிப்பு துவங்கியது. லஞ்ச் பிரேக்கில்தான் தாமரைப் பூக்கள் ஒட்டி, உரசும் காட்சிகள் படமாகி முடிந்தது.
அதன்பின் நானும், மணிவண்ணனும் உடம்பெல்லாம் சேறாக, அந்த வாழை மட்டை எடுத்த வீட்டிற்கே போனோம்.
"அத்தாச்சி... இங்க புறக்கடைல கிணறு இருக்காமே... நாங்க குளிச்சிக்கலாமா?''’எனக் கேட்டு, குளித்துவிட்டு, ஈரத்துணியுடன் வந்து, காஸ்ட்யூம் செக்ஷனில் லுங்கி வாங்கி கட்டிக் கொண்டு வந்தோம்.
அதற்குள் லொகேஷன் சேஞ்ச் ஆகியிருந்தது. ஒரு வீட்டில் காட்சிகளை எடுக்க வந்துவிட்டார். பொதுவாக டைரக்டருக்கு வெய்யில் நேரத்துல ஷூட்டிங் நடத்துறது பிடிக்காது.
படத்தின் கதைக்கு அழுத்தம் சேர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த ஒரு கேரக்டரில் விஜயலட்சுமி என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்தார் டைரக்டர். அப்ப சொர்ணானு ஒரு நடிகை சினிமாவில் இருந்தாங்க. அந்த நடிகைக்கு டச்-அப் கேர்ள் ஆக இருந்த விஜயலட்சுமியைத்தான் "அலைகள் ஓய்வதில்லை'’படத்தில் அறிமுகம் செய்தார் டைரக்டர்.
மணிவண்ணன் வசனத்தை எழுத, நான் விஜய லட்சுமிக்கு டயலாக் சொல்லிக் கொடுக்கப் போனேன்.
"நாக்கு தமிழு ராலேது'’என்றார் விஜயலட்சுமி.
"அய்யய்யோ... தமிழு... ராலேதுவா? அப்ப டயலாக்கை எப்படி இந்தப் பொண்ணுக்கு சொல்லிக் கொடுக்குறது? நமக்கு தெலுங்கு தெரியாதே...''’என யோசித்தேன். மணிவண்ணனும் ஒத்தாசைக்கு வந்தார்.
தமிழ் வார்த்தையை, தெலுங்கு வார்த்தையாக, ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தோம். என்ன குழப்பமா இருக்கா?
அதாவது... "தெரியாது'’என்கிற தமிழ் வார்த்தைக்கு "ராலேது'’என்பது தெலுங்கு வார்த்தை என்றால், அதை ஆங்கிலத்தில் ‘ழ்ஹப்ங்ற்ட்ன்' என எழுதுவது.
இந்த மெத்தர்டில் சின்னச் சின்ன டயலாக்குகளை எழுதிக் கொடுத்தோம்.
"எனக்கு இங்கிலீஷும் ராலேது'’எனச் சொல்லிவிட்டார்.
டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்டில் தெலுங்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ‘"இதென்ன இம்சையா போச்சு'’என நொந்துபோனோம் நானும், மணிவண்ணனும். லைட்ஸ்மேன்கள் பல்வேறு மொழித் திரைப்படங்களில் வேலை செய்பவர்கள். அதனால் அவர்களுக்கு பெரும்பாலும் பலவித பாஷை தெரிந்திருக்கும். அவர்களில் ரெண்டு பேர்களைப் பிடித்து, நாங்கள் தமிழில் சொல்லும் காட்சியின் தன்மையை, வசனங்களை விஜயலட்சுமிக்கு தெலுங்கில் சொல்ல வைத்தோம். அதை நன்கு புரிந்துகொண்டு பிரமாதம் பண்ணிவிட்டார் விஜயலட்சுமி.
சினிமாவுக்கு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக கிடைத்திருக்கிற வேண்டிய மிக அருமையான நடிகையான விஜயலட்சுமி, ‘"அலைகள் ஓய்வ தில்லை'’படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, சென்னை திரும்பிய நேரத்தில் நடிகரும், கதாசிரியருமான வினுசக்கரவர்த்தியின் கண்களில் பட்டு, அவர் கதை எழுதிய ‘"வண்டிச் சக்கரம்'’ படத்தில் "ஸ்மிதா' எனபெயர் மாற்றம் செய்யப்பட்டு, கவர்ச்சி ஆட்டக்காரி, சாராயக் கடை லேடி "சிலுக்கு'வாக நடித்தார். அப்புறம்தான் மிகப்பெரும் ஆட்ட நட்சத்திரமாக உருவெடுத்து, பின்னாளில் தென்னிந்திய சினிமாவையே கலக்கு கலக்குன்னு கலக்கினாரே.
சிலுக்கு ஸ்மிதாவுக்கு ரசிகர்களிடம் கிக் அதிகமாக காரணம், திரைப்படங்களில் அவர் டயலாக் பேசிய விதம்தான்.
அன்றைய பிரபல டப்பிங் குரல் கலைஞரான ஹேமமாலினி, ‘"புதிய வார்ப்புகள்'’ படத்தில் ரதிக்குப் பேசினார். "அலைகள் ஓய்வதில்லை' படத்திற்கு, ஒரு மாறுதலுக்காக சிலுக்குவுக்கு ஹேமமாலினியை பேச வைத்தார் டைரக்டர். காலப்போக்கில் ஹேமமாலினியின் குரலே சிலுக்குவின் குரலாக மாறிப்போனது. சிலுக்குவின் வளர்ச்சி எங்களை பிரமிக்க வச்சாலும், இன்னொருபுறம் பயம் வந்துருச்சு. காரணம்... "அலை கள் ஓய்வதில்லை'’படத்தில் எப்பவும் சேலை கட்டி வர்ற குடும்பப்பாங்கான கேரக்டர், காதலுக்கு உதவுற கேரக்டர், பொம்பளப் பொறுக்கியா இருக்கிற கணவனை நினைச்சு உள்ளுக்குள் குமுறுற கேரக்டர்.
இப்படி முக்கியத்துவமுள்ள கேரக்டரில் விஜயலட்சுமியை நடிக்க வச்சா, எங்க படம் வெளியாவதற்குள்ளாகவே ‘"வண்டிச் சக்கரம்'’ வெளியாகி... சிலுக்குனு கவர்ச்சிப் புயலா ஆகிட்டாரே.
படு கவர்ச்சியான கேரக்டரில் பிரபலமாகிவிட்ட ஒரு நடிகை, உத்தம மனைவியாக இந்தப் படத்தில் நடிப்பதை ரசிகர்கள் எப்படி ஏற்பார்களோ? என நாங்கள் கவலைப்பட்டோம். ஆனால் ‘"அலைகள் ஓய்வதில்லை'’படம் சூப்பர் ஹிட்டடித்தது.
"அலைகள் ஓய்வதில்லை'’...இன்னொரு அருமையான அறிமுகம் தியாகராஜன். இந்தப் படத்தில் அறிமுகமாகி, "மலையூர் மம்பட்டியா'னாக கலக்கினவர். தியாகராஜனை டைரக்டருக்கு முன்பே தெரியும்னாலும், "அலைகள் ஓய்வதில்லை' படத் தில் அவர் நடிக்க காரணமாக இருந்தது ஒரு சம்பவம்.
எங்க டைரக்டரோட மகன் மனோஜ், டான்பாஸ்கோ ஸ்கூலில் படிச்சிட்டிருந்தார். பெல் அடிச்ச பிறகும் கிளாஸ் ரூமுக்கு போகாம வெளியில நிக்க... ஒரு வாத்தியார் வந்து "கிளாஸ் ரூமுக்கு போகாம இங்க என்ன பண்ணிக்கிட்டி ருக்க?'’என திட்ட... பதிலுக்கு வாத்தியாரை மனோஜ் திட்ட... ஒரே ரசாபாசமாகி விட்டதால், மனோஜை ஸ்கூலிலிருந்து சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். இதை எப்படி சரி பண்றது டைரக்டருக்கு டென்ஷன். அதனால் எங்களுக்கும் டென்ஷன்.
"டான் பாஸ்கோதானே. நான் பார்த்துக்கிறேன். பிரின்ஸிபல் தெரிஞ்சவர்தான்'” எனச் சொல்லிவிட்டுப் போய், சொன்னபடியே.... மனோஜை மறுபடி பிரச்சினை இல்லாமல் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார் தியாகராஜன்.
அதுக்கு நன்றியாகத்தான், "அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ராதாவின் அண்ணனாக, சிலுக்குவின் கணவனாக தியாகராஜனை நடிக்கவைத்தார் டைரக்டர்.
என்னோட நண்பர் மறைந்த காமேஷோட மனைவிதான் கமலா. அவங்களை கார்த்திக்கின் அம்மாவாக நடிக்க வைக்க டைரக்டரிடம் ரெகமெண்ட் செய்தேன். அந்தப் படத்தில் நடித்த கமலா காமேஷும், அடுத்து தமிழ் சினிமாவில் ஏழைத் தாய் வேஷங்களுக்காக புகழ் பெற்றார்.
"அலைகள் ஓய்வதில்லை' முழுமையாக படப்பிடிப்பு முடிந்து, பின்னணி இசைச் சேர்ப்பிற்காக இளையராஜா படம் பார்த்தார். அவர் முகத்தில் கடுமையான அதிருப்தி தெரிந்தது. ‘"இது என்ன படம்? எதுக்காக இந்தப் படம் எடுக்கணும்? மொத்தக் காசும் போச்சு'’ என ஒரு தயாரிப்பாளராகவும் அவரின் எண்ண ஓட்டம் இருந்தது.
விருட்டென எழுந்து போய்விட்டார் இளையாராஜா.
இளையராஜாவுக்கு பிடித்த படம் "நிழல்கள்'.
ஆனால் அது ஓடவில்லை.
இளையராஜாவுக்கு "அலைகள் ஓய்வதில்லை'’படம் பிடிக்கவில்லை. அதனால் ஓடும்!
இப்படி ஒரு சென்டிமெண்ட் பேசிக்கொண்டு நம்பிக்கையோடு இருந்தோம் நாங்கள்.
படம் பார்த்துவிட்டு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்ட கேள்வி.
மிரட்சியான பாரதிராஜா...
அது என்னன்னு....... அடுத்த அத்தியாயத்துல சொல்றேன்...
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்