(50) கறுப்பு விஜயகாந்த்துடன் நடிக்கத் தயங்கிய சிகப்பு கதாநாயகிகள்!
நான் கீழே விழுகிறபோதெல்லாம் கதாசிரியர் கலைமணி கை கொடுத்து தூக்கிவிடுவார். மோகன்-ராதிகா நடிப்பில் நான் இயக்கிய "நான் உங்கள் ரசிகன்'’ படத்தின் மோசமான ரிசல்ட்டுக்குப் பின்... கலைமணி அழைத்திருந்தார். அதனால் நம்பிக்கையோடு போனேன்.
"இந்த முறை என்ன மாதிரி கதை பண்ணலாம் டைரக்டரே?''” என கேட்டார் கலைமணி.
"சார் நீங்கதான் கைவசம் நிறைய கதைகள் வச்சிருப்பீங்களே, அதுல ஒண்ணு சொல்லுங்க'' என்றேன்.
அவர் ஒரு கதையை உடனே சொன்னார்.
"ஒருத்தி எப்போதும் எதையாவது திருடி விட்டு சந்தோஷமாக ஜெயிலுக்குப் போவாள். ஒருமுறை நீதிபதி அவளிடம், "உனக்கு நாலு வாரம் ஜெயில்'னு சொல்லுவார். "என்னங்க ஐயா... ஆறு மாசமாவது தண்டனை தரக்கூடாதா?'’என்று கேட்பாள். ஜெயிலுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பாள்.
மனைவியை இழந்து, கைக்குழந்தையோடு இருக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
இப்படி கதாநாயகன், கதாநாயகி போர்ஷனை வைத்து கதை சொன்னார் கலைமணி. அதில் இன்ஸ்பெக் டர் கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது.
"சார்... போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு விஜயகாந்த் திடம் பேசலாம். விஜயகாந்த்துக்கு இப்போ நல்ல மார்க்கெட் இருக்கு. அவருக்காகவே படங்கள் பிசினஸ் ஆகுது. அவருக்கு தகுந்த மாதிரி கேரக்டரை ஆக்ஷன் கலந்து டெவலப் பண்ணி, அவர்கிட்ட கதையைச் சொல்லு வோம். பிடிச்சிருந்தா நிச்சயம் நடிப்பாரு. எப்படியாவது நம்ம காம்பஸுக்குள்ள விஜயகாந்த்தை கொண்டு வந்துட்டா... தொடர்ந்து லாபகரமான படங்களை எடுக்கலாம்''’என்றேன். அதனால் இன்ஸ்பெக்டர் கேரக்டரை அதிரடியாக டெவலப் செய்தார் கலைமணி. "சிறைப் பறவை'’என டைட்டிலும் வைக்கப்பட்டது.
விஜயகாந்த்திற்கான படங்களின் கதையை முதலில் தயா ரிப்பாளரும், விஜயகாந்த்தின் நண்பருமான இப் ராஹிம் ராவுத்தர் கேட்பார். அவ ருக்கு பிடித் திருந்தால்தான், விஜயகாந்த்திடம் கதை சொல்ல அனுப்புவார். ராவுத்தரிடம் கதை சொன் னோம். அவ ருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனா லும், “"அண்ணே... மொத் தக் கதையா பார்த் தோம்னா... இது பொம்ப ளைக்கான (கதாநாயகிக் கான) கதையா இருக்கு. இருந்தாலும் விஜய காந்த்திடம் கேட்டுட்டுச் சொல்றேன்'' என்றார் ராவுத்தர்.
அன்று மாலையே விஜயகாந்த் வந்ததும், "ஏம்ப்பா... இது பொட்டச்சி கதையாத்தான் இருக்கு. ராதிகா நடிக்குதாம். பேரு ராதிகா வுக்குத்தான் வரும். ஆனாலும் உன்னோட கேரக்டரை கெத்தா பேலன்ஸ் பண்ணித் தர்றம்கிறார் கலைமணி அண்ணன். அவர்மேல நம்பிக்கை வச்சாத்தான்... நம்பிக்கை வச்சுத்தான் இந்தக் கதையை ஒப்புக்க முடியும். கலைமணி அண்ணன் மேல நம்பிக்கை வச்சா... இங்கிட்டு மனோ பாலா சார் இருக்காரு, மியூஸிக் இளையராஜா அண் ணன்... இவங்க மூணு பேரும் சேர்ந் தாலே படம் ஹிட்டுதான். நீ சம்மதம் சொன்னா, அவங்களை உடனே வரச் சொல்றேன். இல்லேன்னாலும் ‘வேணாம்னு சொல்லிடலாம்''’என விஜயகாந்த்திடம் ராவுத்தர் சொல்ல...
"அவங்கள வரச்சொல்லு''’என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார்.
ராவுத்தர் எங்களுக்கு தகவல் தெரிவிக்க... நானும், கலைமணி சாரும் தி.நகர் பாண்டிபஜார் ஆபீஸிற்கு கிளம்பிப் போனோம். விஜயகாந்த்திடம் பேசினோம்.
அப்போது விஜயகாந்த் ஒரு கண்டிஷன் வைத்தார். "இது ஹீரோயின் சப்ஜெக்ட். ஆனா... உங்களுக்காக நான் இதில் நடிக்கிறேன். அப்படி நான் நடிக்கிறதா இருந்தா, எனக்குன்னு சில மாற்றங்களைச் செய்தா போதும். ஆனா... அடுத்த ஒரு கதையை நீங்க உருவாக்கணும். என்னோட வேல்யூவுக்கு தகுந்த மாதிரி அந்தக் கதையை உருவாக்கணும். அப்படி ஒரு கதையை உருவாக்குறதா நீங்க உத்தரவாதம் தந்தா இந்தக் கதையில் நான் நடிக்கிறேன். நீங்க டைம் எடுத்து யோசிச்சிட்டு பதில் சொன்னா போதும்''’என்றார்.
நானும், கலைமணியும் வெளியே வந்தோம்.
"இது சரியா வருமா டைரக்டரே? கதைக்குள்ளதான் ஆர்டிஸ்ட் இருக்கணும். ஆர்டிஸ்ட்டுக்காக கதையை மாத்தினா கதை கெட்டுடுமே...''’என்றார்.
"சார்... விஜயகாந்த் இப்போ ஆக்ஷன் ஹீரோவா மார்க்கெட்ல இருக்கார். அவருக்காக ஸ்டண்ட் ஸீன்களையும், ஒண்ணு ரெண்ணு ஹீரோயிஸ ஸீன்களையும் வைக்கிறது தப்பில்லையே''’என்றேன்.
இப்படி பேசிக்கொண்டே ஆழ்வார்பேட்டை வரை நடந்து வந்துவிட்டோம். கலைமணியுடன் உடன் இருந்த எல்லாருமே... "சார், விஜயகாந்த்திற்கு தகுந்த மாதிரி ஸீன்களை மாத்துறதில் தப்பில்ல. ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு கதை பண்ணீட்டிங்கன்னா, அடுத்து அந்த ஹீரோ உங்களுக்கு எப்ப வேணாலும் கால்ஷீட் கொடுப்பார். கை வசம் ஒரு ஹீரோ கிடைக்கிற வாய்ப்பை ஏன் விடுறீங்க?''’என கேட்டனர்.
நானும் அதையேதான் சொன்னேன்.
"ராதிகாவுக்கு கதை சொல்லும்போது, ராதிகாவோட அம்மாவுக்கு இந்தக் கதை ரொம்ப பிடிச்சுப் போச்சு. தெலுங்கு ரைட்ஸ் உட்பட சில ரைட்ஸ்களை, தானே வாங்கிக் கிறதா சொல்லியிருக்காங்க. இப்ப கதையில் நாயகியோட முக்கியத் துவத்தை குறைச்சா... அவங்க ஏத்துக்குவாங்களா?''’எனக் கேட்டார்.
ஆனால் நான் விடாமல் அவர் மனதைக் கரைக்கும் வேலையைச் செய்தேன்.
"நாளைக்கி வந்து ஃபைனல் பண்ணிக்கலாம் டைரக்டரே''’எனச் சொல்லிவிட்டு கலைமணி கிளம்பிவிட்டார்.
மறுநாள்....
கதையில் விஜயகாந்த்திற்காக சில ஆக்ஷன் போர்ஷன்களைச் சேர்த்து ஸீன் பண்ணிவிட்டு வந்து சொன்னார் கலைமணி.
ராதிகாவைச் சந்தித்து முழு ஆர்டரில் கதை சொல்லி யாகிவிட்டது. ராதிகாவும் ஓ.கே. சொல்லிவிட்டார். ஆனால் ஹீரோ விஜயகாந்த் என்பதில் ராதிகாவுக்கு தயக்கம்.
ராதிகாவுக்கு மட்டுமல்ல... அன்றைய முன்னணி கதாநாயகிகள் பலரும் விஜயகாந்த்துடன் நடிக்க தயக்கம் காட்டினார்கள். அதற்கு அவர்கள் சொன்ன ஒரே காரணம், "பார்க்க கறுப்பா... முரட்டுத்தனமா இருக்கார்'’என்பதுதான்.
பின்னாளில் விஜயகாந்த்துடன் சேர்ந்து நிறைய படங்களில் நடிக்கப்போகிறோம் என்று தெரியாமலே "சிறைப்பறவை'’படத்தில் விஜயகாந்த்துடன் நடிக்க முதலில் தயங்கிய ராதிகா, பிறகு சம்மதித்தார்.
விஜயகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டையே கலகலப்பாக மாற்றிவிட்டார். ஏதோ பிக்னிக் போல் இருந்தது படப்பிடிப்பு ஏரியா. தனக்கு தரப்படுவது போன்ற சாப்பாடே எல்லாருக்கும் தரப்பட வேண்டும் என்பதில் உறுதியா இருப்பார் விஜயகாந்த். (விஜயகாந்த் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். உணர்ச்சிகரமான இந்த விஷயத்தை அடுத்துச் சொல்கிறேன்)
ஷாட் பிரேக்கின்போது சீட்டு விளையாடுவது விஜயகாந்த் திற்கு ரொம்பப் பிடிக்கும். விஜயகாந்த், ராதிகா, விஜயகாந்த்தின் மகளாக பேபி ஷாலினி நடிக்க... முதுமலையில் 35 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தினேன். பின்பாதியில் விஜயகாந்த் வீட்டிற்குள் ராதிகா வருவதாக கதை மாறும்போது, வேறுவித மாக கதை மாறும். அதற்கேற்ப ஒரு நீண்ட நெடிய, ஆனால் மிக அருமையான டயலாக்கை எழுதியிருந்தார் கலைமணி.
நான் -கலைமணி -ராதிகா... மூன்றுபேரும் இந்த டயலாக் ஸீனைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். கதையில் நன்கு இன்வால்வ் ஆகியிருந்த ராதிகாவோ... "இந்த டயலாக்கை விஜயகாந்த் பேசினாத்தான் கதைக்கு சரியா இருக்கும்'’என சில விளக்கங்களைச் சொன்னார்.
கதைப்படி ராதிகா ஜெயிலுக்குப் போகவேண்டிய ஒரு விஷயத்திற்கு விஜயகாந்த் தண்டனை அடைவார். அதனால் ராதிகா சொன்னதிலிருந்த நியாயத்தை புரிந்துகொண்டோம்.
கலைமணி சென்னை கிளம்பிவிட்ட நிலையில், நான் விஜயகாந்த்திடம் இந்த டயலாக் ஸீனை சொன்னேன்.
"சார்... இது பொம்பளைக்கு முன்னுரிமை தர்ற கதை. இந்த டயலாக் எனக்கு எப்படி சரியா இருக்கும்? ராதிகாவையே பேசச் சொல்லுங்க''’என்றார்.
"இந்த டயலாக் கதையில் உங்களுக்கு ரொம்ப முக்கியம்''’என்றேன். அதை ஏற்றுக்கொண்டார். அந்தக் காட்சியை எடுப்பதற்குள் எனக்கு படாதபாடு. அதற்குக் காரணம் விஜயகாந்த்திடம் இருந்த ஒரு மேனரிஸம்தான்....
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்