dd

(49) ராதிகாவின் குறும்பு!

ன்னார்குடி அருகே மருங்கூரில் உள்ள எங்கள் பூர்வீக வீட்டில் எங்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

மனைவி என்பவள் கணவனில் பாதி என்பதால், அவளிடம் என்னைப் பற்றிய முழு உண்மைகளையும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி ஒரு திரைக்கதையை சுருக்கமாக விவரிப்பதுபோல விவரித்தேன். நான் பேசப் பேச வியப்பாக என்னைப் பார்த்துக் கொண்டிருந் தாள். அதனால் மிக ஆர்வமாக சொல்லி முடித்தேன்.

"இனி போகப் போக நீயே என்னைப் பார்த்து புரிஞ்சுக்குவ''”என்றேன். நான் பேசி முடித்துவிட் டேன் என்பதை உணர்ந்து கொண்டு சொன்னாள்...

"மேரா தமிழ் நஹி மாலும்''”

Advertisment

அவள் சொன்ன தைக் கேட்டு அப்படியே நான் உறைந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் தெரியாத மனைவியுடன் குடும்பம் நடத்துவதில் என்னென்ன சிக்கல் வருமோ? வந்தா லும் அதுவும் ஜாலியாத் தான் இருக்கும். ஆங்கி லத்தை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தான்’ என சமாதானப் படுத்திக்கொண்டேன்.

சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் என் கல்யாண ரிஷப்சன் ஏற்பாடு செய்திருந்தேன். அப்போது நான் ‘"பிள்ளை நிலா'’ என்கிற ஹிட் படம் கொடுத்த டைரக்டர் என்பதால், பெரும்பாலான திரையுலகினர் வந்திருந்தார்கள். ஒரு நெருங்கிய உறவினரின் கல்யாணத்தில் பங்கேற்பதுபோல வெகுநேரம் கமல்ஹாசன் என் கல்யாண வரவேற்பில் கலந்துகொண்டார். எனக்குத் துணையாக பக்கத்திலேயே நின்றார். வருகிற பிரபலங்களை தன் வீட்டு விசேஷத்திற்கு வருபவர்களைப் போல வரவேற்று உபசரித்தார் கமல்.

மிகச் சிறப்பாகவும், இனிமையாகவும் நடந்தது என் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி.

எத்தனை நாளைக்கு புது மாப்பிள்ளை ஜோரிலேயே இருந்துகொண்டிருக்க முடியும்?

பொழைப்பைப் பார்க்கணுமில்ல!

அந்தச் சமயம் ஒரு புதிய படத்தின் திரைப் பிரபலங்களுக்கான சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அந்த ஷோவுக்கு என் மனைவியை அழைத்துக்கொண்டு போனேன்.

ராதிகா அப்போது என்னுடன் மிக நட்பாக இருப்பார். ஏற்கனவே எங்க குருநாதர் பாரதிராஜாவிடம் நான் வொர்க் பண்ணிக் கொண்டிருந்தபோது அவரின் படத்தில், ராதிகா நடித்ததிலிருந்து அவருடன் எனக்கு நல்ல அறிமுகம். தெலுங்கில் பெரிய ஹீரோயினாக உயர்ந்துவிட்ட ராதிகாவை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ‘பிள்ளை நிலா’ படம் மூலம் அழைத்து வந்ததால் எங்கள் நட்பு வலுவானது. எப்போதும் என்னை கேலியும், கிண்டலும் செய்து கொண்டிருப்பார்.

முதன்முதலாக என் மனைவியை அழைத்துக்கொண்டு வந்து, படம் பார்க்க அமர்ந்திருக்கிறேன்.

என்னைக் கவனித்ததும் ராதிகா என் அருகே வந்தார்.

"ஏம்ப்பா பாலா... நான் உனக்கு வாங்கிக் கொடுத்தேனே ஜட்டி... அது அளவு சரியா இருந்துச்சா?!''”என கேட்டுவிட்டு, முன் வரிசையில் போய் உட்கார்ந்துகொண்டார்.

எனக்குன்னா பயங்கர ஷாக்!

சிரிப்பு ஒரு பக்கம், பதட்டம் ஒரு பக்கம்.

தலையில் கைவைத்து கீழே குனிந்து கொண்டேன்.

என்னை கலாய்ப்பதில் ராதிகாவுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

ஆனால்... புதுப் பொண்டாட்டி என்ன நினைப்பாளே? என ஓரக்கண்ணால் பார்த்தேன்.

அவளிடம் நோ ரியாக்ஷன்.

ff

அவளுக்குத்தான் தமிழ் தெரியாதே!

அவளுக்குத் தமிழ் தெரியாதுனு ராதிகாவுக்கு தெரிஞ்சா... இந்தி, இங்கிலீஷ்னு பல மொழிகள்ல என்னை கலாய்த்துவிட்டிருப்பார்.

"பிள்ளை நிலா'’ சமயத்திலேயே, "நான் உங்கள் ரசிகன்'’ என்கிற படத்தை கதை-திரைக்கதை எழுதி இயக்கினேன். நண்பர் ஸ்டில்ஸ் ரவி தயாரித்தார். மோகன், ராதிகா, ராஜீவ், நளினி ஆகியோர் நடித்தனர். வசனத்தை நண்பர் எம்.எஸ்.மது எழுதினார். ராஜ்பரீத் ஒளிப்பதிவு செய்தார். கங்கை அமரன் இசையமைத்தார். ஆனால் இந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது... ராதிகா.

நாளை படம் வெளியாகிறது’ என்கிறபோது இன்று... ராதிகாவின் விவாகரத்து செய்தி வெளிவந்தது. ராதிகா விவாகரத்து செய்த செய்தி எங்கு பார்த்தாலும் பேசப்பட்டது. மீடியாக்களில் அந்தச் செய்தியே முக்கியத்துவம் பெற்றது. அதனால் படம் பற்றிய பேச்சே அமுங்கிப் போய்விட்டது.

கோயம்புத்தூரில் நானும், மோகனும் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மோகன் வருகிற ஸீனுக்கு ஸீன் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.

"ரொம்ப தேங்க்ஸ் சார்''’என மோகன் எமோஷனல் ஆகிறார்.

"இருப்பா... உன் நடிப்புக்கு கைதட்றாங்க. ராதிகா நடிப்புக்கும் கைதட்னாத்தான் படம் சக்ஸஸ் ஆகும். ஏன்னா... நீ ராதிகாவ கொல்ற ஸீனை ஆடியன்ஸ் ரசிக்கிறானே. இதுக்கு காரணம்... நேத்திக்கு வந்த ராதிகா டிவர்ஸ் செய்திதான். ராதிகா டிவர்ஸ் பண்ணினத ரசிகர்கள் விரும்பலங்கிறதுனாலதான் அவங்க கொல்லப்படுற ஸீனை ரசிக்கிறாங்க''’என உளவியல் ரீதியாக விளக்கம் சொன்னேன் மோகனுக்கு.

கடைசியில் நான் சொன்ன மாதிரியேதான் படத்தின் ரிசல்ட் அமைந்தது.

நான் கோயம்புத்தூரில் இருந்தபடியே தயாரிப்பாளர் ஸ்டில்ஸ் ரவிக்கு போன் செய்தேன்... “"ஸாரி ரவி... ஆடியன்ஸ் நம்ம கிட்ட எதிர்பார்த்தது ஒரு பேய்ப்படம். ஆனா நான் த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கேன். அதுதான் வரவேற்பு இல்ல...''’என்றேன்.

ரவியும் அதைப் புரிந்துகொண்டார்.

அரசியல்வாதிகளுக்கு அணிவிப்பார்களே அப்படி ஒரு பெரிய மாலையோடு... சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

என் பாடிவெயிட் அந்த மாலையைத் தாங்குமா? என்றெல்லாம் யோசிக்காமல் அந்த மாலையை எனக்கு அணிவித்து மரியாதை செய்தவர்கள், "“நாங்க சத்யா ஸ்டுடியோவுல இருந்து வற்றோம். கன்னடத்துல விஷ்ணுவர்த்தனை வச்சு ஒரு படம் பண்ணித் தரணும். அது சம்பந்தமா பேசணும். சத்யா ஸ்டுடியோவுக்கு வரச்சொன் னாங்க''’என சொன்னார்கள்.

சத்யா ஸ்டுடியோ என்றதும், சத்யா ஸ்டுடியோவுக்குள் முதன்முதலாக நுழைந்ததும், எம்.ஜி.ஆர். பற்றிய நினைவுகளும் மனக்கண் முன் ஓடியது.

சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மநாபனின் ‘மக்கள் திலகம் பிக்ஸர்ஸ்’ சார்பில் விஷ்ணுவர்தன், ஊர்வசியை வைத்து "டிசம்பர் 31'’ என்கிற படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். படம் திட்டமிட்டபடி தயாராகி வெளிவந்தது.

எனக்கோ... தமிழில் பெரிய அளவில் வரணும் என்கிற விருப்பம் மேலோங்கியிருந்தது.

"பிள்ளை நிலா'’ போல் அடுத்த ஒரு ஹிட்டுக்கு நான் சிந்தித்துக்கொண்டிருந்தபோது... ’"நான் உங்கள் ரசிகன்'’ ரிசல்ட்டுக்குப் பிறகு... மீண்டும் என்னைக் கூப்பிட்டுவிட்டார் கலைமணி.

நான் கீழே விழுகிற போதெல்லாம் கதாசிரியர் கலைமணி கை கொடுத்து தூக்கிவிடுவார். அதனால் நம்பிக்கையோடு போனேன்.

ஆக்ஷனில் தூள் கிளப்பிக்கொண்டிருந்த விஜய காந்த்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அமைந்தது....

(பறவை விரிக்கும் சிறகை)