(46) மாப்பிள்ள வர்றாஅர்... மாப்பிள்ள வர்றார்... பெர்மிட் இல்லாத பஸ்ல!
நான் விரும்பிய என் நண்பனின் கடைசித் தங்கையை சந்தித்து, "நீ எனக்கு மனைவியா அமைஞ்சா என் வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு நினைக்கிறேன். நாம கல்யாணம் செய்து கொள்ளலாமா?''’என அவளிடம் நான் கேட்க... அவள் என் கையில் தனது கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க...
"அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நடக்குற அதே நாள்லயோ... இல்ல... அதுக்கு முன்னாடியோ நான் கல்யாணம் பண்ணியாகணும். அதுலயும் அந்தப் பொண்ணோட ஊரான மதுரையிலயே என்னோட கல்யாணத்த சிறப்பா நடத்தணும்''’ என வைராக்கியத்தோடு சென்னை வந்து போன் மூலம் ஊரிலுள்ள அப்பாவிற்கு தகவல் தெரிவித்தேன்.
"கல்யாணம் பத்து நாளுக்குள்ள நடக்கணும்கிற... சரி. ஆனா, நமக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத மதுரையில எதுக்கு கல்யாணத்த நடத்தணும்கிற? பொண்ணு வீட்டாருக்கும், நமக்கும் வந்துபோக சிரமமா இருக்காதா?''”
"என்னா சிரமமா இருந்தாலும் மதுரைலதான் நடக்கணும்''’எனச் சொல்லிவிட்டேன்.
"சரிடாப்பா... உன்னோட அவசரத்துக்குன்னா இப்ப ஒரு பொண்ணு இருக்கா. அவளை பேசி முடிச்சிடலாம். நீ எப்ப வந்து பொண்ண பார்க்குற?''”
"நான் பார்க்கணும்கிறதில்ல. நீங்களே பார்த்துப் பேசி முடிவு பண்ணிடுங்க'' என்றேன்.
"அதெப்படி? கட்டிக்கப் போற நீ பொண்ண பார்க்காம....''”
"சரி... வர்றேன்''”
"உடனே கிளம்பி ராஜமன்னார்குடிக்கு வா. பொண்ணோட அப்பா ஊரு அதான். அவரு மிலிட்டரில இருந்தவராம். பெரும்பாலும் அதர் ஸ்டேட்ல இருந்திருக்காங்க. பொண்ணு ஷார்ட் ஹேண்ட், டைப்ரைட்டிங்கெல்லாம் முடிச்சிருக்காளாம். பொண்ணு இந்தியெல் லாம் நல்லா பேசுவாளாம். நீ வந்து பாரு. பிடிச்சிருந்தா... பேசி முடிச்சிடலாம்''” என்றார் அப்பா.
என் அப்பா, பெரிய அக்கா, நான் மூவரும் பெண் பார்க்கச் சென்றோம்.
மூன்றுபேருமே பெண்ணைப் பார்த்தோம்.
"பொண்ணுகிட்ட ஏதாச்சும் பேசணும்னு விரும்புறீங்களா?''’என பெண் வீட்டார் கேட்டனர்.
"நான் என்னங்க பேசுறதுக்கு இருக்கு? எங்கப்பா ஒரு பொண்ண காட்டீருக்காரு... அவர் பேச்ச நான் மீறமாட்டேன். எங்கப்பா இந்தப் பொண்ண கை காட்டீருக்கார். நான் இந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்குறேன்.''”
"ஏதாவது... பேசுறதுன்னா...''”
"அதெல்லாம் வேணாங்க''’என்றேன்.
"பொண்ணுகிட்ட பேசுறீங்களா...''’என அவர்கள் அழுத்தம் கொடுத்ததற்குக் காரணம் எனக்கு அப்போது தெரியவில்லை.
பெண் அமைந்த திருப்தியோடு வீடு திரும்பினோம்.
"மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கல்யாணம் என்பதை மறந்துவிடாதீர்கள்'' என நினைவூட்டிவிட்டு சென்னை கிளம்பினேன்.
கல்யாணத்திற்கு மதுரை கிளம்பினேன்.
தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி அறையில்தான் தங்கியிருந்தேன் அப்போது. நான் பாரதிராஜா சாரிடம் உதவியாளராக இருந்த காலத்திலிருந்தே கும்பிடு போட்டு வரும் எல்லையம்மனுக்கு தேங்காய் உடைத்துவிட்டு கிளம்பலாம் என எண்ணி ஒரு தேங்காய் வாங்கி உடைத்தேன்.
தேங்காய் அழுகியிருந்தது.
"சரி... பரவால்ல... இதை எதோடும் முடிச்சுப் போடக்கூடாது'’என சமாதானமாகி, அறைக்குத் திரும்புவதற்குள்... பேய் மழை, பிசாசு மழை. இப்போது கடலில் பார்த்த சுனாமியை அப்போதே வானத்திலிருந்து மழையாக பார்த்த உணர்வு ஏற்பட்டது எனக்கு... காத்தும் சுழன்றடிக்குது.
கேமராமேன் ராஜ்பரீத்தையும், நண்பர் கதாசிரியர் எம்.எஸ்.மதுவையும் மதுரை கூட்டிச் செல்வதற்காக அவர்களை பிக்-அப் செய்துகொண்டு வர என் காரை அனுப்பியிருந்தேன். ஆனால் எம்.எஸ்.மது எப்படியோ என் அறைக்கு வந்து விட்டார். எடிட்டர் கௌதம் உட்பட மத்தவங்கள் லாம் எப்படி இந்த மழையில வரப்போறாங்க. எப்படி மதுரை கிளம்பப் போறோம்னு எனக்கு புரியவே இல்லை. ராஜ்பரீத்தை அழைத்துவரப் போன கார் வரவே இல்லை.
பிறகு ஒரு ஆட்டோ பிடித்து எக்மோர் போய்ச் சேர்ந்தால்.... ரயில் போயிருச்சு.
தேங்கா அழுகீருச்சு
பேய் மழை ஊத்தீருச்சு
ரயில் போயிருச்சு
"என்னடா இது? எல்லாம் அபசகுனமா நடக்குதே'னு யோசிச்சுக்கிட்டே நின்னுட்டிருந்தேன் ரயில் போன திசையைப் பார்த்து.
எனக்குப் பின்னால் திடுதிடுனு சத்தம். திரும்பிப் பார்த்தேன். காரைவிட்டு இறங்கி ராஜ்பரீத் ரயிலைப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தார். அவரை நிறுத்த வேண்டும் என்றுகூட எனக்குத் தோன்றவில்லை.
திரும்பி வந்த ராஜ்பரீத், "பாஸ்... என்ன பாஸ்... ட்ரெயின் போயிருச்சு'’என்றார் பதட்டமாக.
"அதுக்கென்ன பண்ண முடியும்? பஸ் இருக்கே... பஸ்ஸப் பிடிச்சு போக வேண்டியதுதான்''’என்றேன்.
"சார் நம்ம அதிர்ஷ்டம்... இந்த இக்கட்டான நேரத்துலயும் புஷ்-பேக் ஸீட் வச்ச பஸ்ல டிக்கெட் கிடைச்சிருக்கு. வாங்க ஏத்தி விடுறேன்''”என அழைத்துச் சென்றார் புரொடக்ஷன் மேனேஜர்.
எட்டு மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ், ஒன்பது மணி ஆகியும் கிளம்பவில்லை.
எடிட்டர் கௌதம் சத்தம் போட்டதும்... “"இதோ சார்...'” என மேலும் பத்து நிமிஷம் தாமதப்படுத்தி கிளம்பியது.
ஒருமணி நேர பயணம் ஆகியிருக்கும். பல விஷயங்களை பேசிக்கொண்டு வந்த சுவாரஸ்யத்தில் எதையும் கவனிக்க வில்லை. திடீரென கௌதம், "என்னப்பா... என் வீட்டுப்பக்கம் வண்டி போகுது?!''’எனக் கேட்க... எல்லாருக்கும் குழப்பம். ஸீட்டை விட்டு எழுந்திருக்கலாமென்றால் முடியவில்லை. புஷ்ஷும் இல்லை பேக்கும் இல்லை. ஸீட்டை விட்டு எழுவதே சிரமமாக இருந்தது.
வளசரவாக்கத்துல ஒரு தெருவுக்குள் போய் பஸ்ஸை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார் டிரைவர்.
கோபத்தோடு நாங்களும் கீழே இறங்கினோம்.
டிரைவர் என்ன செய்தான் தெரியுமா?
பஸ் போகுமிடத்தைக் குறிக்கும் இடத்தில் இருந்த ‘மதுரை’ என்கிற போர்டை எடுத்துவிட்டு, "டூரிஸ்ட்' என்ற போர்டை மாற்றினான்.
அதாவது... ரூட் பெர்மிட் இல்லாத பஸ். நடுவழியில அதிகாரிங்க பிடிச்சாலும் அங்கயேதான் நிக்கணும். வண்டியில பிரச்சினைன்னாலும் அதே கதிதான்.
மன்னார்குடியிலிருந்து பெண் வீட்டார் ஒரு பஸ்ஸில் மொத்தமாகக் கிளம்பிவிட்டார்கள். மாப்பிள்ளை வீட்டாரும் ஒரு பஸ்சில் மொத்தமாக கிளம்பிவிட்டார்கள்.
மாப்பிள்ளை நானோ சென்னையில்...
மதுரை ஆரியபவன் ஹோட்டல் முதலாளி, விஜயகாந்த்துக்கு ரொம்ப நெருங்கிய நண்பர். அவர் மூலம் எனக்கும் நண்பரானார். அவர் மூலமா, எங்கள் வீட்டார் தங்குவதற்கு ஒரு வீடு மற்றும் உணவு, பெண் வீட்டார் தங்குவதற்கு ஒரு வீடு மற்றும் உணவுக்கு முன்கூட்டியே சொல்லி ஏற்பாடு செய்துவிட்டேன்.
அதனால் அவர்கள் மதுரை வந்துவிட்டாலும், நான் இருந்துதான் வரவேற்கணும் என்பதில்லை.
ஒருவழியாக டூரிஸ்ட் பஸ்ஸிலேயே மதுரை போய்ச் சேர்ந்தோம். நானும், என் உடன் வந்தவர்களும் தமிழ்நாடு கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம்.
தாலியும், மாலையும் வாங்கப் போன விநியோகஸ் தரைக் காணாமல் நான் பட்ட அவஸ்தை இருக்கே...
(பறவை விரிக்கும் சிறகை)