கலைமணி சார் கதை எழுதி தயாரிக்க, சத்யராஜ் ஹீரோவாகவும், சீதாவும், ஷோபனாவும் கதாநாயகிகளாகவும் நடிக்க, நான் இயக்கிய படம் "மல்லுவேட்டி மைனர்'. இந்தப் படத்தின் அனுபவங்களை கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சி இது....
டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவிடம் சத்யராஜ்-ஷோபனா போட்டி டான்ஸ் பற்றிச் சொல்லி, "ஒரே ஷாட்டில் இருவரும் ஆடுவது மாதிரியெல்லாம் வரவேண்டும்'' என்று சொன்னேன்.
"அடக்கடவுளே... என்னை நானே செருப்பால தான் அடிச்சிக்கணும்'' என்றவர்... "எம்.ஜி.ஆர் கொடுத்த சோதனைக்குப் பின்ன இந்த சோதனையா?'' எனக் கேட்டார் சிரித்துக்கொண்டே.
(மன்னாதி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆரும், பத்மினியும் போட்டி டான்ஸ் ஆடுவார்கள். அந்தப் போட்டியில் எம்.ஜி.ஆர் ஜெயிப்பார்.)
சத்யராஜும், ஷோபனாவும் ஆடும் பாடல் காட்சி படப்பிடிப்பு எடுக்க தயாரானோம். (பாடல் காட்சியின் கான்செப்ட் என்ன என்பதை ஏற்கனவே சத்யராஜ் சாரிடம் சொல்லியிருந்தோம். தயங்கிய அவரை, எம்.ஜி.ஆர் படத்தை உதாரணம் சொல்லி சரிக்கட்டியிருந்தோம்.)
"ஸாங்கோட சீக்வென்ஸ் என்ன சார்?'' என கேட்டார் ஷோபனா.
"சத்யராஜ் சார்கிட்ட நீங்க ஒரு சவால் போடுறீங்க. அதை அவரும் ஏத்துக்கிறார். அந்த சவால்படி உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி நடக்குது. கடைசியில....''
"கடைசியில....''
"கடைசியில சத்யராஜ் சார் ஜெயிச்சிடுறார்.''
"அவர் கூட நான் ஃபைட் பண்ணனுமாக்கும்?''
"இல்ல மேடம்...''
"பின்ன?''”
"நடக்குறது டான்ஸ் போட்டி. அதுல சத்யராஜ் ஜெயிச்சிடுறார்.''
நான் அப்படி சொன்னதுதான் தாமதம்... தன் காலில் கிடந்த காலணியைக் கழற்றி, "அய்யோ அய்யோ'' என தன் தலையில் தானே அடித்துக்கொண்டார் ஷோபனா.
"எப்படிப்பட்ட நாட்டிய பரம்பரையில வந்தவ நான். எனக்கு இப்படி ஒரு ஸீன் கிடைக்கணுமா?'' என நொந்து கொண்டார்.
முறைப்படி நாட்டியம் கற்று, இன்று பல நாட்டிய தாரகைகளுக்கு குருவாக திகழும் நடிகை ஷோபனாவுக்கு நாட்டியப் பேரொளி என புகழ்பெற்ற நடிகை பத்மினி அவர்கள் அத்தை முறை. இப்படி நாடி நரம்பெல்லாம் நாட்டி யத்துல ஊறின ஒரு பெண், நடனம் தெரியாத சத்யராஜிடம் தோற்கிற மாதிரி சும்மா ஒரு பேச்சுக்கு நடிக்கிறதா இருந்தாலும் கஷ்டமாத்தானே இருக்கும்?
"சரி... மேல சொல்லுங்க'' என்றார்.
பாடல் காட்சியில் இடம்பெறும் விஷயங்களைச் சொன்னேன்.
பாடல் காட்சி எடுக்கும்போது நடன அசைவுகளை சத்யராஜ் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக... பயிற்சியைக் கொடுத்துவிட்டு, நானும், புலியூர் சரோஜாவும் சில கோட் வேர்ட்களையும் சொன்னோம்.
கேமரா ஓடத் தொடங்கியதும் சத்ய ராஜுக்கு எதிர்புறம் நானும், புலியூர் சரோஜாவும் நின்றுகொண்டு "இப்ப வாத்து மாதிரி நடக்கணும், ‘இப்ப கோழி மாதிரி கூவணும்''’எனச் சொல்லிச் சொல்லி எடுத்தோம்.
அந்த பாடல் காட்சியை எடுப்பதற்குள் எங்களுக்கு நாக்கு தள்ளிப் போச்சு.
ஷோபனா மீது சத்யராஜுக்கு காதல் ஏற்படும் காட்சியில், வழக்கம்போல இளையராஜா வின் ரொமான்ஸ் இசையால் காதல் வயப்படுவதாக வைத்திருந்தேன்.
காட்சிப்படி பார்த்தோம்னா... பாவடை சட்டையில் தான் வருவார் ஷோபனா. தன் தோழி களோடு ஷோபனா வர... எதிரே சத்யராஜும், செந்திலும் போய்க் கொண்டிருப்பார்கள்.
"ஆமா... நீங்க எப்படிப்பட்ட பொண்ண எதிர்பார்க்குறீங்க?'' என செந்தில் கேட்க...
"குயில் மாதிரி கூவணும், மயில் மாதிரி நடக்கணும், டிக்கியும் நல்லா இருக்கணும், பேனட்டும் அசத்தலா இருக்கணும்'' என்பார்.
கலைமணி சார் இப்படித்தான் டயலாக் எழுதிக் கொடுத்திருந்தார்.
இந்த டயலாக்கை சத்யராஜ் சொல்லி முடித்ததும், எதிரே வரும் ஷோபனாவைப் பார்த்துவிட்டு, "நீங்க எதிர்பார்த்த மாதிரியே ஒரு பொண்ணு வருது'' என்பார் செந்தில்.
உடனே சத்யராஜ் ஷோபனாவைப் பார்ப்பார், ஷோபனா சத்யராஜைப் பார்ப்பார்... இந்த இடத்தில் மியூஸிக் மூலம் இருவருக்கும் இடையே ஒரு லவ் மூடு வருவதாக கதையில் திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் சத்யராஜோ... "சார்... இசையால மட்டும் காதல் வசப்படுற மாதிரியெல்லாம் நமக்கு சரிப்படாது. ஏதாவது லொள்ளுத்தனமான டயலாக் வைங்க. நான் பேசலேன்னாலும் என் கூட இருக்க செந்தில் பேசுற மாதிரியாவது வையுங்க'' என்றார்.
அதனால் ஷூட் டிங் ஸ்பாட்டில் உட் கார்ந்து, லொள்ளுத்தன மான டயலாக்குகளை உடனுக்குடன் தயார் செய்து சொன்னேன்.
ஷோபனாவைப் பார்த்ததும் "யார்ரா இது... ஜாடிக்கி மூடியே இல்லாத மாதிரி ஒரு பார்ட்டி வந்துக்கிட்டி ருக்கு?ன்னு நீங்க டய லாக் பேசுங்க சார்'' என்றேன். நான் சொன்ன அந்த டயலாக்கைக் கேட்டுவிட்டு, சிரிப்பு தாங்கமுடியாமல் தெறித்து ஓடினார் சத்யராஜ்.
(பறவை விரிக்கும் சிறகை)
______________
எம்.ஜி.ஆருக்கு ஆடத் தெரியாதா?
எம்.ஜி.ஆருக்கு மிகச் சிறப்பாகவெல்லாம் ஆடத் தெரியாது. அவர் புரொபஷனல் டான்ஸர் இல்லை. என்றாலும் ‘எம்.ஜி.ஆருக்கு சுத்தமாக டான்ஸே வராது’ என்பதாக ஒரு பேச்சு எப்போதுமே இருக்கிறது.
"மன்னாதி மன்னன்' படத்தில் நாட்டியமாடியபடியே பாதங்களில் வண்ணம் நனைத்து ஓவியம் வரையும் போட்டி நடனத்தில் எம்.ஜி.ஆரும், பத்மினியும் ஆடுவார்கள். இறுதியில் எம்.ஜி.ஆர். ஜெயிப்பார். சுழன்றாடுகையில் கிறுகிறுத்து விழுந்துவிடுவார் பத்மினி.
"மதுரை வீரன்' படத்தில் எம்.ஜி.ஆரும், பத்மினியும் ஆடும் "ஏய்ச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க' பாடலில் பத்மினிக்கு இணையாக உடல் அசைவுகளைச் செய்து ஆடியிருப்பார் எம்.ஜி.ஆர். இந்த நடனக் காட்சிக்காகவே "மதுரைவீரன்' படத்தை சிறுவனாக இருந்த கமல்ஹாசன் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்ததாக ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருந்தார்.
எம்.ஜி.ஆர். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் பெரும்பாலும் சிறுவர்களை வைத்துத்தான் நாடகம் நடத்துவார்கள்.
ஒரு கேரக்டரில் நடிப்பவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டால், அந்த கேரக்டரை இன்னொருவர் செய்தாக வேண்டும். அதனால் ஒரு நாடகத்தில் பிரதான பாத்திரங்களின் பாடங்களையும் குழுவின் எல்லா நடிகர்களும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
அதிலும் மகரக்கட்டு உடைவதற்கு முந்தைய காலத்தில் எல்லா நடிகர்களும் நன்கு பாடும் திறமையும், நடனம் ஆடும் திறமையும் பெற்றிருக்க வேண்டும். அந்தத் திறமை இல்லாதவர்களுக்கும் கடுமையான பயிற்சியின் மூலம் பாடுவதற்கும், நடனம் ஆடுவதற்கும் பயிற்சி தரப்படும். ஆடும் போது நாட்டிய ஆசிரியர் சொல்லியபடி ஆடாவிட்டால் காலிலேயே பிரம்பால் அடிப்பார் ஆசிரியர்.
ஆடவும், பாடவும் தெரியாதவர்கள் நாடகக் கம்பெனியில், குறிப்பாக மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இடம்பெற முடியாது.
ஆனால் பல ஆண்டுகள் பாய்ஸ் கம்பெனி குழுவில் நடிகராக இருந்த எம்.ஜி.ஆர்., பாடவும், ஆடவும் நன்கு பயிற்சி பெற்றிருந்தார்.
சினிமாவில் பின்னணி பாடும் தொழில்நுட்பம் வந்ததால் எம்.ஜி.ஆர். பாடவில்லை. அதேபோல ஆக்ஷன் ஹீரோவாக தன் இமேஜை உருவாக்கிக்கொண்ட எம்.ஜி.ஆருக்கு நடனம் ஆடுவதும் அப்படியொன்றும் முக்கியத் தேவையாக இல்லாமல் போய்விட்டது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டுமல்ல, நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நாடக காலங்களில் பாடவும், நாட்டியம் ஆடவும் கற்றிருந்தார்.