(60) தரையெல்லாம் தாலி...!
என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாளாக ஆனது டிசம்பர் 24, 1987.
உலகத் தமிழர்களை பதறச் செய்த அந்த நாள், என் சொந்த வாழ்க்கையில் சில தாக்கங்களை உண்டாக்கியது. என் சினிமா வாழ்க்கையிலும் ஒரு திருப்பத்திற்கான அடித்தளத்தை உண்டாக்கியது.
அன்றுதான்... முதலமைச்சராக இருந்த "மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்த அதே நாளில்தான் அடையாறில் வசித்துவந்த என் அக்காவின் கணவரும் இறந்தார். அங்கே போவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எம்.ஜி.ஆரின் தொண்டர்களும், தீவிர ரசிகர்களும் மிகுந்த சோகத்திலும், ஆத்திரத்திலும் கண்ணில் தட்டுப்படுகிற வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்குகிறார்கள்.
என் அக்காவின் மகன்கள் இருவரும் ஊரிலிருந்து வரவேண்டும். அதிகாலையிலேயே தகவல் சொல்லியாகி விட்டது. ஆனால் அவன் கிளம்பிவிட்டானா... எங்கே வந்துகொண்டிருக்கிறான்? என எந்த தகவலும் தெரியவில்லை. "சாயங்காலம் வரைக்கும் பார்ப்போம். இல்லேன்னா சாயங்காலமா இறுதிச் சடங்குக்கு பாடிய எடுத்திடுவோம்...'' என நாங்கள் முடிவு செய்திருந்தோம்.
பாரதிராஜா சார் ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கார். ’"எம்.ஜி.ஆரண்ணனோட உடலை ராஜாஜி ஹால்ல வைக்கப் போறாங்க. நாம எல்லாரும் போகணும். நீதான் தகவல் கொடுத்து எல்லாரையும் அஸெம்பிள் பண்ணணும்'’எனச் சொன்னார் என்னிடம்.
எங்கே அஸெம்பிள் ஆகவேண்டும் என எல்லாருக்கும் தகவல் சொல்லிவிட்டேன். "எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்கு மறுநாள்தான் நடக்கப் போகுது. அதனால் இன்னைக்கி மாமாவோட இறுதிச் சடங்கு வேலைகளைச் செஞ்சிடலாம்' என மதியம் மூன்று மணி வாக்கில் அடையாறு கஸ்தூரிபா நகர் கிளம்பினேன்.
பஸ், ரிக்ஷா, ஆட்டோ, டாக்ஸி... ஏன், பைக் கூட சாலைகளில் செல்லவில்லை. எல்லாச் சாலைகளும் ராஜாஜி ஹாலை நோக்கி என்பதுபோல... எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்த எங்கு பார்த்தாலும் சாலைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
எதிர் திசையில் நான்... அடையாறை நோக்கி நடந்து போக ஆரம்பித்தேன்.
நான் அக்கா வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். எப்படியோ, கிடைத்த வாகனத்தில் தொத்திக்கொண்டு என் அக்காவின் மகன்கள் இருவரும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
மாலையில் மாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டுமே... பெசன்ட் நகர் சுடுகாட்டு ஊழியர்களிடம் பேசி னேன். 300 ரூபாய்தான் வழக்கமாக. ஆனால் 500 ரூபாய் கேட்டார். அதையும் தருவதாகச் சொல்லியிருந்தேன்.
சிறிது நேரத்தில் 1500 ரூபாய் கேட்டார்கள்.
"என்னப்பா இது அநியாயமா இருக்கு?''
"எங்க தலைவரே போயிட்டாரு... இந்த நேரத்துல உங்க மாமாவுக்கு காரியம் பண்ணுறது பெரிய விஷயம். 1500 ரூபாய் அதிகம்னு நெனைச்சா... நான் சொல்ற மாதிரி செய்ங்க. உங்க வீட்டு கொல்லப் பக்கத்துல புதைச்சிருங்க. ரெண்டு நாள் கழிச்சு தோண்டி எடுத்துட்டு வாங்க... எரிச்சிருவோம்''
சுடுகாட்டு ஊழியர் இப்படி அதிரடியாகச் சொன்னது எங்களை அதிர்ச்சியடைய வைத்தது.
1500 ரூபாய் தர ஒப்புக்கொண்டோம்.
வீட்டிலிருந்து பாடியை எடுத்து வர, பாடை கட்டுவதற்கு தென்னை ஓலை கிடைக்கவில்லை. எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. ஏனென்றால்... எல்லா கடையும் அடைத் திருந்தது... எம்.ஜி.ஆர். மறைவுக்காக.
என் அக்கா வீட்டின் கொல் லைப்புறத்தில் ஒரு தென்னை மரம் இருந்தது. அதில் ஓலை வெட்டலாம் என்றால்... "வீட்டுல இருக்கிற மரத்துலருந்து சாவுக்கு ஓலை வெட்டக்கூடாது'' என என் அக்கா விடாப்பிடியாகச் சொல்லிவிட்டார்.
என் படங்களின் ஆர்ட் டைரக்டருக்கு போன்பண்ணிச் சொன்னேன். அவர் தன் அஸிஸ்டெண்ட் மூலம் ஒரு மண் பானையும், ரெண்டு ஓலையும் ஏற்பாடு செய்து அனுப்ப... அந்த உதவியாளர் அதைக் கொண்டுவந்து வாசலில் வைத்துவிட்டுப் போய்விட்டார்.
தென்ன ஓலையைப் பின்னவேண்டுமே? யாருக்குத் தெரியும்?
நல்லவேளையாக ஒரு ரிக்ஷாக்காரர் வந்து பின்னிக்கொடுத்தார். அடுப்புக்கரி ஒரு வீட்டிலிருந்து கொஞ்சம் கொடுத் தார்கள். அதில் சூடம் போட்டு நெருப்பு மூட்டி... சாங்கித்யம் முடிந்து சுடுகாட்டுக்கு உடலை சுமந்துகொண்டு கிளம்ப... என் அக்கா மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். சில பெண்கள் வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.
நான் வேகவேகமாக நடந்து ஜெமினி பார்ஸன் வந்தேன், எங்க டைரக்டர் பாரதிராஜாவைப் பார்க்க.
"எங்க போன நீ?''ன்னு கத்துறார் டைரக்டர்.
அவர்கிட்ட இந்தச் சூழல்ல... "எங்க மாமா இறந்துட் டாரு''னு சொல்லிக் கிட்டிருக்க முடியுமா? (நான்கு நாட்கள் கழித்து தான் சொன்னேன்)
சினிமா பிரபலங்கள் 42 கார்களில் கான்வாய் மாதிரி சென்று எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட் டோம். அதன்படியே கான்வாய் கிளம்பியது.
சிவகுமார் சார் கார் எடுத்து வந்தார். அதில் நான், மனோரமா ஆச்சி, கவிஞர் வைரமுத்து ஆக... நாங்கள் நான்கு பேர் வந்தோம்.
"ராஜாஜி ஹால் முன்புற வாசல் வழியாக போக முடியாது. லட்சக்கணக் கான மக்கள் எமோஷனலாக இருக்காங்க... பின்வாசல் வழியா போங்க'' என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் எங்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
பின்வாசல் வழியாக ஏறினால்... பெரிய அதிர்ச்சி! படிக்கட்டு முழுக்க விதவிதமான டிஸைன்களில் தாலிகள் நூற்றுக்கணக்கில் கிடந்தது.
எம்.ஜி.ஆரின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நூற்றுக் கணக்கான பெண்கள் தங்களின் தாலிகளை அறுத்து வீசியிருந் தனர்.
அவ்வளவு எமோஷனல்...!
"அக்கா கீழ பாத் தீங்களா?'' என நான் கேட்ட பிறகுதான், மனோரமா குனிந்து படிக்கட்டுகளைப் பார்த்தார்.
"அய்யோ... என்னப்பா இது?'' என படிக்கட்டில் கால் வைக்கத் தயங்கினார். மற்றவர்கள் எல்லாம் தாலிகளை மிதித்துக்கொண்டே நடந்தார்கள்.
பெண்ணுக்குத்தானே தாலியின் மகிமை தெரியும்.
மனோரமாவை தாலி கிடக்காத பகுதியாகப் பார்த் துப் பார்த்து அழைத்துச் சென்றேன்.
அசையாமல் கிடந்த தலைவரின் உடலைப் பார்த்ததும் என் கண்களெல்லாம் கலங்கிப் போச்சு.
"ஓ'ன்னு பெருங்குரலெடுத்து மனோரமா அழுதார் பாருங்க... இன்னமும் கூட அந்த அழுகைச் சத்தம் என் காதில் கேட்டபடியே இருக்கு.
(பறவை விரிக்கும் சிறகை)