(54) ஒரு தீப்பெட்டி 2,500 ரூபாய்!
"சத்யா மூவிஸ் பண்றது ரஜினிகாந்த் படம்யா. எங்க பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பண்ணப்போறது ரீ-மேக் படம். நான், மணிவண்ணன் இல்லேன்னா வேற யாரோ ஒருத்தர வச்சு எடுத்துக்கலாம். நீ ரஜினிகாந்த் மாதிரி பெரிய ஹீரோ படம் பண்ணு... அப்பத்தான் வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்குப் போகமுடியும்'' என பெருந்தன்மையோடு என்னை ஆசிர்வதித்து அனுப்பினார் கலைஞர்.
"ரஜினிகாந்த் படத்தை டைரக்ஷன் பண்ணத்தான் உங்களை கூப்பிட்டிருக்கோம்னு கலைஞர் சொல்லிட்டாரா?! அவர் எல்லா விஷயமும் தெரிஞ்சு வச்சுக்குவார்'' எனச் சொன்ன ஆர்.எம்.வீரப்பன், சத்யா மூவிஸ் கதை இலாகாவினரையும் அறிமுகப்படுத்தினார்.
இருபதுநாள் விவாதத்துக்குப் பிறகே, எனக்கு கதை பிடிபட்டது. ஆர்.எம்.வீ.யின் மருமகனான நண்பர் "சத்யஜோதி' தியாகராஜன் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். நானும் அவரும்தான் ஷூட்டிங்கிற்கான லொகேஷன்களைப் பார்த்து செலக்ட் பண்ணினோம்.
"ஆனந்த விகடன்ல ஒரு சிறுகதை வந்தது. அதையே சினிமாவுக்கான கதையாக டெவலப் செய்யலாம்' என ஆர்.எம்.வீ. சொன்னார். அப்படியே முடிவானது.
நான் என்னோட ஸ்டைலில் திரைக்கதையை உருவாக்கி யிருந்தேன். ஆர்.எம்.வீ. முழுக்கப் படித்துப் பார்த்தார்.
ஆர்.எம்.வீ. மாதிரி ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. சினிமா திரைக்கதையை எப்படி அமைத்தால் வெற்றி கிடைக்கும்? என துல்லியமாக கணிக்கக்கூடியவர் ஆர்.எம்.வீ.
"ஒரு ஸீன்ல ஹீரோ வர்றார். அதுக்குப் பின்னாடி தொடர்ச்சியா நாலு ஸீன்ல ஹீரோ இல்ல. நீங்க அங்கதான் தப்பு பண்றீங்க மனோபாலா...''
"இதுல என்ன சார் இருக்கு? நாலு ஸீன்ல ஹீரோ இல்லாட்டி என்ன?''
"அதுதான் தப்புங்கிறேன். நான் எம்.ஜி.ஆருக்கு கதை பண்ணுனவன். எம்.ஜி.ஆருக்கு ஸ்கிரீன்-ப்ளே பண்ணும்போது... எல்லா ஸீன்லயும் எம்.ஜி.ஆர். இருக்கணும், இல்லேன்னா... எல்லா ஸீன்லயும் எம்.ஜி.ஆரைப் பத்தி மத்தவங்க பேசுற மாதிரி இருக்கணும். அதனால கண்டிப்பா இந்த ஸ்கிரிப்ட்ல ஸீனுக்கு ஸீன் ரஜினிகாந்த் இருக்கணும். இல்லேன்னா... ரஜினிகாந்த் பத்தி பேசுற மாதிரி இருக்கணும்'' என்றார்.
அப்போதுதான் ஆர்.எம்.வீ., திரைக்கதையில் எவ்ளோ பெரிய மன்னன்னு வியப்பா இருந்துச்சு.
"இன்னொரு முக்கியமான விஷயத்தையும் உங்ககிட்டே சொல்றேன் மனோபாலா, கவனத்துல வாங்கிக்கங்க.
ஸீன்ல ஒரு பாட்டில் இல்லேன்னா, ஒரு பிளாஸ்க்... இல்ல தீப்பெட்டின்னே வச்சுக்கங்களேன். அந்தப் பொருளை ஸீன்ல இன்சர்ட் பண்ற மாதிரி ஸ்கிரிப்ட்ல இருக்குனு வச்சுக்கங்க. இன்சர்ட்தானே... அப்புறமா பாத்துக்கலாம்னு விட்றாதீங்க. அது ஒரு பெரிய சிரமம் ஆயிடும். அன்னிக்கு எடுக்குற ஸீன்ல என்ன எடுக்கணுமோ... அதை நூறு சதவிகிதம் முழுமையா எடுத்துருங்க. அப்புறம் பாத்துக்கலாம்னு விட்றாதீக. நாங்க அப்படி கவனக்குறைவா இருந்ததால ஒரு தீப்பெட்டிக்கு ரெண்டாயிரம் ரூபாய் வரை செலவு பண்ணவேண்டியதாப் போச்சு'' என்றார் ஆர்.எம்.வீ.
"தீப்பெட்டிக்கு ரெண்டாயிரமா?' என வியப்பாக இருந்தது எனக்கு.
ஆர்.எம்.வீ.யே தொடர்ந்தார்...
"இதை நான் எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்னா... விஜயலிவாஹினி ஸ்டுடியோவுல செட் போட்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை வச்சு, "காவல்காரன்' படத்தோட ஒரு ஷெட்யூல் முடிச்சிட்டேன்.
அடுத்த ஷெட்யூல் ஆரம்பிக்கப்போற நேரத்துல எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டு... தலைவரை ராதாண்ணன் சுடப்போய்... அவர் காயத்தோட சிகிச்சையில இருந்தார்.
ஒரு வருஷம்... அந்த செட்டுக்கு வாடகை குடுத்து வச்சிருந்தேன். ஏன்னா... செட்ட பிரிச்சிட்டா மறுபடி அந்த செட்டைப் போடுறப்போ சில விஷயங்கள் மிஸ் ஆயிடும். அதனாலதான் செட்டை பிரிக்காம, வாடகை கட்டிட்டு இருந்தேன்.
மறுபடி எம்.ஜி.ஆர். நடிக்க வந்தப்போ, அவரோட குரல் மாறிப்போச்சு.
"வாய்ஸ் நல்லா இருக்க இடத்துல... அதை அப்படியே வச்சுக்கங்க. சில இடங்கள்ல என்னோட வாய்ஸ் நல்லா இருக்காது. அதையெல்லாம் மறுபடியும் பேசித் தர்றேன்'னு எம்.ஜி.ஆர். சொன்னார். அந்த செட்டுல ஒரு பகுதியில வில்லனோட வீடு செட் போட்டிருந்தோம். அந்த செட்டையும் வாடகை குடுத்து பிரிக்காம வச்சிருந்தோம்.
இதுல... வில்லன் அசோகன் சார், ஒரு தீப்பெட்டிய எடுத்து குச்சியை உரசுவார். அந்த தீப்பெட்டி அந்தக் காலத்துல ரொம்ப ஃபேமஸா இருந்த சீட்டா ஃபைட் தீப்பெட்டி. பாயும் சிறுத்தைப் புலி படம் தீப்பெட்டியின் மேல் ஒட்டப்பட்டிருக்கும். சிவகாசியிலிருந்துதான் தீப்பெட்டி வரும். அசோகன் கேரக்டரின் குணாதிசயத்தை, ஆக்ரோஷத்தை உணர்த்தும் விதமாக அந்த தீப்பெட்டியை அசோகன் பயன்படுத்துவதாகக் காட்டினோம்.
ஒரு வருஷம் கழிச்சு திரும்பவும் படப் பிடிப்பு துவங்கியது. தீப்பெட்டிதானே என்கிற அலட்சியத்தால் பிராப்பர்ட்டியில் தீப் பெட்டியை பாதுகாக்க வில்லை. அது காணா மல் போய்விட்டது.
அதே பிராண்ட் தீப்பெட்டியைத் தேடினால் எங்கும் கிடைக்கவில்லை. அந்த தீப்பெட்டியை உற்பத்தி செய்த சிவகாசிக்குப் போனால் கம்பெனியே மாறிவிட்டது. வேறு, வேறு விதமாக தீப்பெட்டியில் படம் இருந்ததே தவிர... அந்தப் படம் போட்ட தீப்பெட்டி கிடைக்கவில்லை.
ஏற்கனவே அந்த தீப்பெட்டியை க்ளோஸ்- அப்பில் காட்டியதால், ஷாட் கன்ட்டினியுட்டிக் காக அந்த மாதிரி தீப்பெட்டிக்கு அலைந்தோம்.
ஒருவழியாக சிவகாசியில் ஒரு பெட்டிக்கடையில் அந்த தீப்பெட்டி இருந்தது. நாலு தீப்பெட்டிகள் வாங்கிவரச் சொன்னேன். அந்த தீப்பெட்டியைப் பாதுகாக்க ரெண்டு ஆட்களை நியமித்தேன். அவங்களோட வேலை என்னன்னா...? ஷூட்டிங் தொடங்கும்போது அசோகன்கிட்ட தீப்பெட்டியைக் கொடுக்கணும். ஷூட்டிங் முடிஞ்சதும் தீப்பெட்டியை வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்ளணும்.
இப்படியே... படம் ரிலீஸாகுற வரைக்கும் பாதுகாத்தோம் தீப்பெட்டியை.
அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டாயிரம் ரூபாய் செலவுல அந்தத் தீப்பெட்டியை கொண்டு வந்தோம். அதைப் பாதுகாக்கிற ஆட்களோட சம்பளமெல்லாம் சேர்த்து இந்தத் தொகை.
அதனால நீங்க எந்தப்பொருளை ஸீன்ல காட்றதா இருந்தாலும், அந்தப் பொருளை பாதுகாப்பா வச்சுக்கச் சொல்லி... கவனமா இருங்க'' என்றார் ஆர்.எம்.வீரப்பன் சார்.
அந்தப் பெரிய மனிதர் சொல்லித் தந்ததை, நான் டைரக்ஷன் பண்ணிய காலம்வரை கடைப்பிடிச்சு காப்பாத்திக்கிட்டே வந்தேன்.
சத்யா மூவிஸ் படங்கள்ல "சத்யா மூவிஸ்'ங்கிற போர்டுக்கு இரண்டு கைகள் பூ போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அது எம்.ஜி.ஆர். அவர்களின் கை. இதை சத்யா மூவிஸ் ஆபீஸ்லதான் ஷூட் பண்ணுனாங்க.
சத்யா மூவிஸில் பழனியப்பன்னு ஒருத்தர், படத் தயா ரிப்பு கணக்குகளை விரல்நுனியில் வைத் திருப்பார். புரொடக் ஷன் மேனேஜர் நாராயணன்னு ஒருத் தர், அவருக்குப் பேர் "ஆன் த வே நாராயணன்.'
"நாராயணன் சார்... விக் என்னாச்சு?''
"ஆன் த வே சார்''
"ட்ரெஸ் என்னாச்சு?''
"ஆன் த வே சார்...''
இப்படி எதைக் கேட்டாலும் "இதோ வந்துட்டிருக்கு...' என்பதைக் குறிக்கும் விதமாக "ஆன் த வே' என்று சொல்லுவார்.
வசனகர்த்தா நாராயணன் எனக்கு குருநாதர் போல இருந்தார். "சத்யஜோதி' தியாகராஜன் எனக்கு நண்பராக இருந்தார்.
இப்படி "சத்யா மூவிஸ்' எனக்கு சகஜமான கம்பெனி ஆகிவிட்டது.
ரஜினிக்கு கதை சொல்லப் போகும்போது நெர்வஸாக இருந்தது எனக்கு.
சோழா ஓட்டலில் ஒரு ஓரத்து டேபிளில் அமர்ந்து கதை கேட்டார் ரஜினி...
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்