தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்குவதில் முன்னிலையில் உள்ள துறைகளில் பத்திரப்பதிவுத் துறை தொடர்ந்து முத்திரை பதித்துவருகிறது. சிவகாசியிலும் சார்பதிவாளர் முத்துச்சாமியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டம் நடந்துள்ளது. அந்த ஆர்ப் பாட்டத்தில், அரசு உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்களைப் புறக் கணித்து அவமதிக்கிறார் எனப் பத்திர எழுத்தர்கள் குமுறினர்.
பொதுமக்களால் கண்டுகொள்ளப்படாத இந்த ஆர்ப்பாட்டம், ‘ஊழலின் ஊற்றுக் கண்களே இவர்கள்தான்..’ எனப் பூமராங்காக பத்திர எழுத்தர்கள் பக்கம் பாய்ந்திருக்கிறது. ‘சார்பதிவாளர் லஞ்சம் பெறுவதைக் கண்டித் திருந்தால் வரவேற்கலாம். பொதுமக்களிடம் கறந்த லஞ்சத்தைப் பிரிப்பதில் சார்பதிவாள ருக்கும் பத்திர எழுத்தர்களுக்கும் உள்ள பிரச்சனை, புறக்கணிக்கப்படுவதாக அல்லவா வீதிக்கு வந்திருக்கிறது?’ என்பதே பொதுவான ஆதங்கமாக உள்ளது.
‘பத்திரப்பதிவுக்கு பெருந்தொகை கொடுத்து அவதியுற்றவர்கள், பத்திர எழுத்தர் களின் ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கவேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ”சிவகாசியில் பொது பயன்பாட்டு இடங்கள் மற்றும் பூங்காக்களை தனி நபர்கள் அனுபவிப்பதற்குத் தரகு வேலை செய்தவர் அல்லவா இந்த ஆர்ப் பாட்டத்தை முன்னின்று நடத்துகிறார்? கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, பத்திர எழுத்தர்களில் பெரும்பாலானோர் தரகர்கள். லஞ்சத்தை ஊக்குவிப்பவர்கள். மக்களிடம் பலாக்காய் அளவுக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு களாக்காய் அளவுக்கு பதிவாளருக்குக் கொடுத்திருப்பார்கள் போல. அதுதான் தகராறு. இதுபோன்ற புரோக்கர்களுக்கு போராடும் தகுதியே கிடையாது. ஆனாலும், சார்பதிவாளர் முத்துச்சாமி லஞ்ச அளவை உச்ச நிலைக்குக் கொண்டுபோய் விட்டார்’என இருதரப்பினர் குறித்தும் நிதர்சனத்தை முன்வைத்தனர் பொதுநலனில் அக்கறையுள்ளவர்கள்.
பெயர் குறிப்பிட விரும்பாத தொழிலதிபர் ஒருவர், "இரண்டு பத்திரப் பதிவுகளுக்கு சார்பதிவாளருக்கென்று ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்த நானே லஞ்சமா கொடுத்திருக்கேன். சம்பந்தப்பட்டவங்க கொடுத்த ரெண்டு சீட்டு என்கிட்ட இருக்கு. சார்பதிவாளருக்கான லஞ்சத்தை அவருடைய டிரைவர் மூலம் வாங்கிக்கிறாரு'' என்று அந்தச் சீட்டுகளைக் காண்பித்தார்.
பத்திர எழுத்தர் ஒருவரிடம் பேசி னோம். "எங்கள்ல மூணு பேரு ஏட்டிக்குப் போட்டியா பண்ணிட்டு இருந்தாங்க. சப்ரெஜிஸ்ட்ராருக்கும் அவங்களுக்கும் பிடிக்காமப் போயி, நாங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது, இப்ப எங்களுக்கே வினை யாயிருச்சு. டாகு மெண்ட் ரைட்டர் யாரும் பத்திரப்பதிவு ஆபீஸுக்குள்ள வரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல் லிட்டாரு. ஒண்ணு ரெண்டு சாட்சிங்க எங்ககிட்ட இருந்தத வச்சி போட்டுட்டு இருந்தோம். யாரும் சாட்சி போடக் கூடாது, பார்ட்டிட்ட பத்திரத்த கொடுத்துவிடணும்னு சப்ரெஜிஸ்ட்ரார் கண்டிஷனா சொல்லிட்டாரு. அவரு சொல்லுறது கரெக்ட்தான். எங்காளுங்க அவர எதிர்த்தாங்கன்னா, அவரும் அப்படித்தானே பண்ணுவாரு. ஒரு அதிகாரிய எதிர்க்க நினைச்சா, சரியா வருமா? லஞ்சம் எல்லாம் சர்வசாதாரணமா ஆயிருச்சு. அதப்போயி பெரிசா எடுத்துக்கிட்டு? லஞ்சம் இல்லாம எந்த வேலையும் நடக்காது. அன்னைக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுனதுக்கு சப்ரெஜிஸ்ட்ரார் ஒரு அறிக்கை விட்ருக்காரு. எல்லாத்துக்கும் காரணம் பத்திர எழுத்தர்கள்தான். பத்திர எழுத்தர்களால்தான் நெறய குடும்பங்கள் அழியுதுன்னு. அவரு என்னென்னமோ பேசிருக்காரு.
இந்த சிவகாசி ஊருக்கு சப் ரெஜிஸ்ட்ராரா வரணும்னா அம்பது, அறுபது லட்சம் கொடுத்துத்தான் வருவாங்க. அதனால, அவருக்கு லஞ்சம் கொடுக்கிறத பத்தி எங்களுக்கு ஆட்சேபனை கிடையாது. இங்க எல்லாருமே அவங்கவங்க வேலைய முடிச்சுக் கொடுக்க லஞ்சம் கொடுக் கிறோம். இது எல்லா டிபார்ட் மெண்ட்லயும் நடக்குது. ஆனாலும், சப்ரெஜிஸ்ட்ரார் இந்த அளவுக்கு எங்க மேல ஆத்திரப்படக்கூடாது. டாகுமெண்ட் எழுதுறவங்க எல்லாரும் வேற வேலைக்குப் போங்கன்னு சொல்லிட்டாரு. அவரு பேச்சே மிரட்டலாத்தான் இருக்கு. எழுதுற பத்திரத்துல ஒரு சின்ன சந்தேகம் வந்து கேட்டாலும், அதான் வேற வேலை பார்க்கச் சொன்னேன்ல, எதுக்கு பத்திரம் எழுதுறீங்கன்னு எரிஞ்சு விழறாரு. ஏற்கனவே இவர், சாத்தூர் பத்திரப்பதிவு ஆபீஸ்ல வேலை பார்க்கிறப்ப, இதேமாதிரி பிரச்சனை வந்திருக்கு. அவரு சிவகாசிக்கு வர்றதுக்கு முன்னால இருந்தே, இந்த விவகாரம் ஓடிட்டிருக்கு. பத்து நாளாச்சு. பத்திரம் எழுதுற வேலை பார்க்கமுடியாம ரொம்ப கஷ்டத்துல இருக்கோம்''’என்று வேதனைப்பட்டார்.
ஆவண எழுத்தர் மகபூப் ராஜா, போலி ஆவணத்தைத் தயார் செய்து பதிவு செய்ய என்னைக் கட்டாயப்படுத்தினார். நான் மறுத்துவிட்டேன். அவர் மீது குற்ற வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று சிவகாசி டி.எஸ்.பி. அலுவலகத்தில் எழுத்துமூலம் புகாரளித்திருக்கிறார் சார்பதிவாளர் முத்துச் சாமி.
"பத்திர எழுத்தர்களோடு பிரச்சனை; அதிகமாக லஞ்சம் வாங்குவதாகச் குற்றச்சாட்டு. இதுகுறித்த விளக்கம் வேண்டும்'’என சிவகாசி சார்பதிவாளர் முத்துச்சாமியைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
"இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொண்ணா வரும். இனி ஒவ்வொருத்தர பத்தியும் ஒவ்வொரு தகவலா வரும். அதாவது, யார் யாரு என்னென்ன பண்ணிருக்காங்க, டாகுமெண்ட போலியா யாரு பதிஞ்சிருக்காங்க, போலிப் பத்திரம் போட்டது யாரு, பத்திரப்பதிவுத்துறை தரப்பிலிருந்தே இது வெளிவரும்''’என்றவரிடம், "லஞ்சம் வாங்குவது உண்டா?''’என்று இடைமறித்தபோது... “"அரசு ஊழியர்கள், அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் பேட்டி எதுவும் கொடுக்கக்கூடாது. ஸாரி சார்... ப்ளீஸ் சார்...''’என்று லைனை துண்டித்தார்.
பத்திரப் பதிவுக்காக வரும் பொது மக்களிடம் லஞ்சப் பணத்தை வசூல் செய்து கொடுப்பதை ஒரு தொழிலாகச் செய்துவரும் பத்திர எழுத்தர்களைக் குற்றம் சொல்வதா? லஞ்சம் புரையோடிக்கிடக்கும் பத்திரப் பதிவுத் துறையைக் குற்றம் சொல்வதா? தவறு செய்யும் இருதரப்பினரும் சிவகாசியில் பகிரங்கமாக மோதிக்கொள்வது வெட்கக் கேடானது!
____________
சர்ச்சைக்கு ஆளான சாத்தூர் சார்பதிவாளர்!
சாத்தூர் சார்பதிவாளர் செந்தில்குமார் மது அருந்திவிட்டு பத்திரப்பதிவு அலுவலகம் வருகிறார். கேட்ட பணத்தைக் கொடுத்தால் போதும். ஆவணங்களைச் சரிபார்க்காமல் பதிவு செய்வார். இதனால் அப்பாவி மக்களின் சொத்துகள் பறிபோகின்றன. இவர் மாற்றலாகிச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் கேமரா ஆபரேட்டரான பெண் பணியாளரை உடன் அழைத்துச்செல்கிறார். இவருக்கு சகல ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கும் ஆவண எழுத்தர் ஒருவர், போலிப் பத்திரப் பதிவு மூலம் கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்’என கிசுகிசு வெளிவர, சாத்தூர் சார்பதிவாளர் செந்தில்குமாரைத் தொடர்புகொண்டோம்.
"நான் லஞ்சம் வாங்குறதில்ல. என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்ல. இதுபோன்ற கிசுகிசுக்களால் என் குடும்பம் மனஉளைச்சலுக்கு ஆளாகுது. கவர்மென்ட் ஆபீஸ்ல, ஒருத்தர் நினைச்சதும் பெண் பணியாளரை கூடவே கூட்டிட்டுப் போகமுடியுமா? இதெல்லாம் சினிமாவுலதான் நடக்கும். இந்த மாதிரி தகவல் கொடுத்து யாரோ எனக்கெதிரா தூண்டிவிடறாங்க''”என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.