சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேல் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டதால், பணியிடைநீக்கம் செய்யும்படி துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள விவகாரம் உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்பு பதிவாளர் தங்கவேல், பணியில் நியமிக்கப்பட்டது முதல் தற்போது பணியிடை நீக்க உத்தரவு வந்தது வரை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதுபற்றி பெரியார் பல்கலை. வட்டாரத்தில் விசாரித்தோம். "கணிதத்தில் இளங்கலை, முதுநிலை, பி.ஹெச்டி., முடித்துள்ள தங்கவேல், பெரியார் பல்கலையில் 10.2.2006ம் தேதி கணினி அறிவியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையனும், இவரும் நெருங்கிய உறவினர்கள். அப்போது அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததால், கணிதம் படித்த தங்கவேலை, விதிகளுக்குப் புறம்பாக கணினி அறிவியல் துறை பேராசிரியராக நியமித்தனர்.
2015-16ஆம் ஆண்டுக்கான உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையில், தங்கவேலின் பணி நியமனம், யு.ஜி.சி. விதிகளுக்கு எதிரானது என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டுதான் தங்கவேல் விளக்கம் அளித்தார். அதில், 2015ம் ஆண்டு யு.ஜி.சி. வழங்கிய குறிப்புரைகளின்படி, கல்வித் தகுதியை அந்தந்தப் பல்கலையே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என கூறினார். 2006ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவருக்கு அவ்விதி பொருந்தாது.
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு, அவரை பதிவாளராக நியமித்தார் அப்போதைய துணைவேந்தர் குழந்தைவேல். தற்போதைய துணைவேந்தர் ஜெகநாதனும், பதிவாளருக்கான முழு கூடுதல் பொறுப்பை வழங்கி, பணப்பலன்கள் கிடைக்கவும் வழிவகை செய்தார். முழுநேர பதிவாளரின் பணிக்காலமே 3 ஆண்டுகள்தான். ஆனால் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்ட தங்கவேல், 5 ஆண்டுக்கும் மேலாக அந்தப் பணியில் தொடர்கிறார். குழந்தைவேல், ஜெகநாதன், தங்கவேல் ஆகிய மூவரும் உறவுக்காரர்கள் என்பதும் இதற்குக் காரணம்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்கலை வேந்தரான ஆளுநரைக் கைக்குள் போட்டுக்கொண்டு, துணைவேந்தரும், தங்கவேலும் முறைகேடுகளைச் செய்துவந்தனர். பியூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில், அதே வளாகத்தில் தனியார் நிறுவனத் தைத் தொடங்கினர். வேதியியல் துறை பேராசிரியர் விஸ்வநாதமூர்த்தி என்பவரை, கையூட்டுப் பெற்றுக்கொண்டு புதிய பதிவாளராக நியமிக்கத் திட்டம் போட்டிருந்தனர். தமிழ்த்துறைத் தலைவராக உள்ள பெரியசாமி, போலி பணி அனுபவச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தார். போதிய ஆதாரங்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரைக் காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் 37 குற்றச் சாட்டுகளை வைத்து பெரியார் பல்கலை. தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், பெரியார் பல்கலை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் வைத்தியநாதன், அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் அண்ணாதுரை, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் என அனைவரும் தமிழக அரசுக்கு புகாரளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், தங்கவேல் மீதான 8 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அறைகலன்களை வாங்கியதில் ஒரே ரசீதுக்கு இரண்டு முறை பல்கலை நிதியைப் பெற்று மோசடி செய்தது; பல்கலை. வளாகத்தில் வைஃபை நிறுவி யது, ஹார்டுவேர், சாஃப்ட்வேர் கொள்முதல் செய்தது, கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட 8 புகார்கள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதோடு, மிகக்கடுமை யானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 29ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறவிருந்த தங்கவேலை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யும்படி துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, பிப்ரவரி 7ஆம் தேதி, தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
பெரியார் பல்கலை. தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் கூறுகையில், "தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்ட பிறகும், துணைவேந்தர் ஜெகநாதன் அலட்சியமாக இருக்கிறார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வெளியான உத்தரவைப் பார்த்து அதிர்ந்து போனவர்கள், அன்றிரவு 9 மணிவரை பல்கலையிலிருந்து முக்கிய ஆவணங்களை 2000 பக்கங்களுக்கு மேல் நகலெடுத்துள்ளனர். பிப்ரவரி 10ஆம் தேதியும் தொடர்ந்ததில், தங்களுக்கு எதிரான ஆதாரங்களை அழித்திருக்கவும் வாய்ப்புள்ளது. விரைவில், துணைவேந்தர் ஜெகநாதனும் பணியிடைநீக்கம் செய்யப்படுவார். அவர், அரசு விதிகளுக்கு முரணாக, இரண்டு பதவிகளுக்கான டியர்னஸ் அலவன்ஸை பெறுவதன்மூலம் 30 லட்ச ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளார்'' என்றார்.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், "பதிவாளர் தங்கவேலை உடனடியாக பணியிடைநீக்கம் செய்ய வேண்டும். போலிச் சான்றிதழால் பணியில் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி மீதும் நடவடிக்கை வேண்டும். அதேநேரம், உதவிப் பேராசிரியர் பிரேம்குமாரை பணியிடைநீக்கம் செய்தது வியப்பாக இருக்கிறது'' என்றார். இது தொடர்பாக விளக்கம் பெற துணைவேந்தர் ஜெகநாதனை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. ஊழல் பெருச்சாளிகள் சிக்கக்கூடும் எனும் பேராசிரியர்கள், தங்கவேலை நீக்காததற்கு எதிராக தர்ணா போராட் டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.