ட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 7 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டி ருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாகவும் நிராகரித்திருக்கிறார் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி.

மூன்றாவது முறையாகவும் ஜாமீன் மறுக்கப்பட்டதில் மிகவும் உடைந்து போய்விட்டார் செந்தில்பாலாஜி. பல்வேறு மன உளைச்சல்களில் மிகவும் கவலையுடன் இருக்கும் அவர், 12-ந் தேதி இரவு, மிக முக்கியமானவரிடம் பேசியிருக்கிறார்.

அப்போது, "பொங்கலுக்கு வீட்டில் இருப்பீர்கள் என நம்பிக்கை கொடுத்தீர்கள். நம்பிக்கை ஜெயிக்கவில்லை பார்த்தீர்களா? நம்முடைய வழக்கறிஞர்களின் முயற்சிகளில் திருப்தியில்லை' என ரொம்பநாளாகவே சொல்லிக்கொண்டிருக்கிறேன்'’என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி.

"இந்தமுறை அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும்' என்று முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க. வழக்கறிஞர்கள், செந்தில்பாலாஜியின் குடும்பம், அவரது ஆதரவாளர்கள் என பல தரப்பினரும் நம்பிக்கையுடன் இருந்தனர். கரூரில் இருந்து அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் அதிகமானோர் சென்னையை நோக்கி 12-ந் தேதி விரைந்து வந்திருக்கிறார்கள். "ஜாமீன் கிடைத்துவிடும்; அமைச்சரை வரவேற்க புழல் சிறை வளாகத்தில் தொண்டர்கள் குவிய வேண்டும்' என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

அதற்கேற்ப செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு அறிவிப்பு உடனடியாக சொல்லப்படா மல் மாலைவரை நீடித்தபடியே இருந்தது. பொதுவாக ஜாமீன் மனுக்கள் காலையிலேயே விசாரிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால், இவருக்கான அறிவிப்பு நீண்டுகொண்டே இருந்ததால் ஜாமீன் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் தி.மு.க. தலைமை இருந்தது. அதற்கு மாறாக, ஜாமீன் நிராகரிக்கப்பட்டதில் அவரது ஜாமீனை விரும்பும் அனைவரும் ஏகத்துக்கும் அப்-செட்டானார்கள்.

"மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ஜாமீன் கேட்டு மனு செய்ய முடியும். ஆனால், உடனடியாக மனு செய்ய செந்தில்பாலாஜி விருப்பப்படவில்லை' என்கிறார்கள் தி.மு.க. வழக்கறிஞர்கள்.

senthilbalaji

Advertisment

தி.மு.க. தலைமையும், செந்தில்பாலாஜி தரப்பும் இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை எந்த ளவுக்கு எதிர்பார்த்தார்களோ, அதே அளவுக்கு அமலாக்கத்துறையும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, "ஜாமீன் கிடைக்க வாய்ப்பில் லைங்கிறது எங்களுக்குத் தெரியும். அதேசமயம், ஜாமீனுக்காக பல முயற்சிகளை டெல்லிவரை தி.மு.க. தரப்பில் ஒரு டீம் எடுத்து வருவதால் ஒரு வேளை ஜாமீன் கிடைத்துவிட்டால் என்ன செய்வது என அதிகாரிகள் ஆலோசித்திருக்கிறார் கள். அப்போது, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால், அடுத்த 2 மணி நேரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்கிற திட்டத்தில், அதற்கான அப்பீல் மனுவையும் முன்கூட்டியே தயா ரித்து வைத்திருந்தனர் அதிகாரிகள். ஆனால், அமலாக்கத்துறை எதிர்பார்த்த மாதிரி ஜாமீன் நிராகரிக்கப்பட்டது''‘என்று நம்மிடம் சுட்டிக்காட்டுகிறார்கள்.

"இப்படிப்பட்ட சூழலில், செந்தில்பாலாஜிக்கு எப்போது தான் ஜாமீன் கிடைக்கும்? சட்டவிரோதப் பணப்பரிவர்த்த னைச் சட்டம் என்னதான் சொல்கிறது?' என்பது குறித்து ஆராய்ந்தோம்.

ஜாமீன் தொடர்பாக, தடா, பொடா சட்டங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத சில கடுமையான ஷரத்துகள் பி.எம்.எல்.ஏ. சட்டத்தில் இருக்கின்றன. இதனை எதிர்த்து பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பிலிருந்து 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், "ஜாமீனுக்காக இந்த சட்டத்திலுள்ள கடுமையான நிபந்தனைகள் சட்டப்பூர்வமானது; தன்னிச்சையானது அல்ல' என்று தெளிவுபடுத்திவிட்டது.

அந்த வகையில், சட்டவிரோத பணப் பரிவத்தனை தடுப்பு சட்டத்தின் பிரிவு 45-ன்படி, ஜாமீன் வழங்க இரண்டு நிபந்தனைகளை நீதிமன்றம் பூர்த்தி செய்யவேண்டும். அதாவது, ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் வழக்கறிஞர் எதிர்ப்புக் காட்டக்கூடாது; ஜாமீன் வழங்கலாம் என சொல்லப்பட வேண்டும். அடுத்து, குற்றம்சாட் டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தில் அவர் குற்றவாளி இல்லை என்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கிறது என நீதிமன்றம் திருப்திப்பட வேண்டும் அல்லது உடல்நிலை மிக மோசமாக இருக்கவேண்டும். இந்த இரண்டு விசயங்கள் நடந்தால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடும்.

அந்த வகையில் செந்தில்பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் நடப்பது என்ன?

ss

இதுவரை தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரியிருந்தார் செந்தில்பாலாஜி. ஆனால், அவருக்கு ஏற்பட்டுள்ளதாக சொல்லப் படும் உடல்நிலை காரணங்கள் வெறும் மாத்திரை களிலேயே சரி செய்யக்கூடி யதுதான் என்று தெளிவு படுத்தியதுடன் ஜாமீன் மனுவையும் நிராகரித்துவிட்டது உச்சநீதிமன்றம்.

"ஆக, மருத்துவக்காரணங் கள், உடல்நிலை உபாதைகள் உள்ளிட்ட பிரச்சனைகளைச் சொல்லி ஜாமீன் கேட்டால் கிடைக்காது' என்கிற நிலை உருவாகிவிட்டது. அதனால், மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட செந்தில்பாலாஜி யின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அவருக்காக ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம், "இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆதரங்களை கொடுத்திருக்கிறோம். செந்தில்பாலாஜியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவ்வில் இருந்த தகவல்கள் திருத்தப்பட்டுள்ளது. அவரது வங்கிக் கணக்கிலிருந்த உண்மையான தொகையை திருத்தியிருக்கிறார்கள்''’என்று இப்படி பல குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை மீது சுமத்தி, அதனால் ஜாமீன் வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்ததுடன், "செந்தில்பாலாஜி மீதான வழக்கில் சட்டவிரோதமாக பணம் பெற்றார் என்பதற்கும், குற்றம் நடந்ததற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன' என்பதை விவரித்தார் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்.

இதற்கிடையே, இதுவரை நடந்த ஜாமீன் மனு விசாரணையின்போது, "செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். அவரை வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார். இந்த குற்றத்தில் தொடர்புடைய செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் தலைமறைவாக இருக்கிறார்' என்கிற சில முக்கிய விசயங்களைச் சொல்லியபடியே இருக்கிறது அமலாக்கத்துறை. ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிமன்றம் இத்தகைய காரணங்களைச் சொல்லி வருகிறது.

இந்த சூழல்கள் கடந்த 7 மாதங்களாக மாறவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜியை கேபினெட்டில் இருந்து நீக்கினாலோ அல்லது தலைமறைவாக இருக்கும் அசோக், அமலாக்கத்துறையிடம் ஆஜரானாலோ சூழல்கள் மாறும். அப்போது, ஜாமீனுக்கான காரணங்களாக அதனை நீதிமன்றத்தில் குறிப்பிடுவதற்கும், அமலாக்கத்துறை தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கும் காரணங்களை உடைப்பதற்கும் வழி பிறக்கும். ஆனால், இவைகளில் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

ஆக, எதார்த்தமான சூழல்களையும், சட்டப்பிரிவுகளில் சொல்லப்பட்ட நிபந்தனை களைப் பூர்த்தி செய்வதிலும் செந்தில்பாலாஜி தரப்பு கவனம் செலுத்தவேண்டும். இல்லையெனில் ஜாமீன் கிடைப்பது அவ்வளவு எளிதானது கிடையாது என்பதே உயர்நீதிமன்ற மூத்த கிரிமினல் வழக்கறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.

செந்தில்பாலாஜி குடும்பத்துக்கு நெருக்க மானவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "ஜாமீனுக்காக இதுவரை 80 சி முதல் 90 சி வரை வழக்கறிஞர்கள் பீஸ் உள்பட பல்வேறு விசயங்களுக்காக செலவாகியிருக்கிறது. இன்னும் எவ்வளவு செலவாகும் என தெரியவில்லை. அமைச்சரை (செந்தில்பாலாஜி) வெளியே கொண்டுவர தி.மு.க. வழக்கறிஞர்கள் டீமைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறது அவரது குடும்பம். சமீபத்தில்கூட வழக்கறிஞர் டீம் டெல்லிக்குச் சென்று ஒரு வாரமாக முகாமிட்டது. வழக்கம்போல ஜாமீனுக்காக மனு செய்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்''’என்கிறார்கள்.

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததில் அவரை விட அதிகம் கவலைப்படும் முதல்வர் ஸ்டாலினுக்கு, பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கவிருக்கும் தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிரான சூமோட்டோ வழக்குகள் மேலும் அதிர்ச்சிகளைக் கொடுக்கும் என்பதே வழக்குக ளின் நிலையாக இருக்கிறது.

_________

இறுதிச் சுற்று!

raghul

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தனது இரண்டாம்கட்ட இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (14-01-24) தொடங்கியிருக்கிறார். பேருந்து பயணம் மற்றும் நடைபயணமாக 6,713 கி.மீ. தொலைவை 66 நாட்களில் மார்ச் 20-ந் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்த நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள காங்கிரஸின் அகில இந்திய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், எம்.பி.க்கள் அனைவரும் மணிப்பூருக்கு வரவேண்டும் என்று ராகுல் கேட்டுக்கொண்டதால் முதல்நாளே மணிப்பூருக்கு அவர்கள் பயணப்பட்டனர். மணிப்பூரின் தௌபால் மாவட்டத்திலிருந்து தனது நடைபயணத்தை தொடங்கியுள்ளார் ராகுல்காந்தி. இவரது பயணம், 11 நாள்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் நடக்கிறது. ராகுலின் பயணம், வடகிழக்கில் அரசியல் ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் கதர்சட்டையினர்.

-இளையர்