அவ்வளவு பிரபலமாகாத ரவுடி ஆனந்தன் ‘என்கவுன்ட்டர்’செய்யப்பட்டது, தலைநகரத்தை மட்டுமல்ல... தமிழகத்திலுள்ள ரவுடிகளையும் கதிகலங்கவைத்துள்ளது. சிட்டி போலீசார் 5 வருடத்துக்குப் பிறகு தங்கள் துப்பாக்கித் தோட்டாவின் பசியைத் தணித்துள்ளனர்.. இனி, அடுத்தடுத்து பிரபலமான ரவுடிகள் மீதான என்கவுன்ட்டர்கள் தொடரும்’ என்று "ஹிட் லிஸ்ட்டை'ப் பற்றி ஷாக் கொடுக்கிறது ஆர்கனைஸ்டு கிரைம் விங்.
ஜூலை 3-ந் தேதி,…தரமணி ஓ.எம்.ஆர். சாலை சி.பி.டி. வளாகம் அருகே இடத் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு யாரும் வராத அளவுக்கு காவல்துறையின் தடுப்புவேலிகள் போடப்பட்டு, மஃப்டி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட ஆரம்பித்தார்கள். "இந்த இடத்துல எதுக்கு பேரிகார்டு வெச்சிருக்கு போலீஸ்?'’என்று யோசித்துக்கொண்டே சென்றவர்களை விரட்டியது மஃப்டி போலீஸ். ‘என்னமோ நடக்கப்போகுது’என்று நடுங்கியபடி அந்த இடத்தைவிட்டு வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள், அங்கு வழக்கமாக வந்து செல்பவர்கள். இந்தச் சம்பவங்களுக்கு முன்பே, போலீஸ் ஏட்டு ராஜவேலுவின் தலையில் ஆயுதத்தால் சரமாரியாக "மார்க்' போட்ட… ரவுடி ஆனந்தனை அவனது வீட்டில் வைத்து தூக்கிவிட்டது போலீஸ்.
கோட்டூர்புரம் ஏ.சி. சுதர்சன், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, 4 வருடங்களாக தலைமறைவாக இருந்த ரவுடி சி.டி.மணியின் கூட்டாளி டொக்கன்ராஜாவை டூவீலரில் சென்று மடக்கிப் பிடித்த எஸ்.ஐ. இளையராஜா உள்ளிட்ட காக்கி டீம் அந்த ஸ்பாட்டுக்கு வந்தது. ரவுடி ஆனந்தனை கீழே இறக்கி, "போலீஸ் தலையிலேயே மார்க் போடுறியா?'’என்று கோபம் கொப்பளிக்க… ஏற்கனவே போட்ட ஸ்கெட்ச்படி போட்டுத்தள்ளியது போலீஸ். ஏ.சி. சுதர்சனின் துப்பாக்கியிலிருந்த தோட்டாதான் ஆனந்தனின் உடலை துளைத்தது. ஏற்கனவே எஸ்.ஐ. இளையராஜாவை ஆனந்தன் "வெட்டியதால்' இரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அட்மிட் ஆன தகவலும் வெளியிடப்பட்டு,… ஆனந்தனின் உடல் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்காக அனுப்பப்பட்டது.
என்கவுன்ட்டர் என வழக்கமான பெயரை சூட்டினாலும் இது காவல்துறையின் ’பழிக்குப் பழி’என்கிறார்கள் நிலவரமறிந்தவர்கள். ஆனந்தன் பலி குறித்து அவரது மனைவி ரஷிதாவின் வாக்குமூலமே பின்னணியையும் விவரிக்கிறது. “""என்னோட கணவர் ஆனந்தன், அரவிந்த், ஸ்ரீதர், சீனு உள்ளிட்ட 10 பேர்… போலீஸ் ராஜவேலுவை கடுமையா தாக்கினாங்க. எல்லார்கிட்டேயுமே கத்தி இருந்தது. குறிப்பா, அஞ்சுபேரு கத்தியால போலீஸின் தலையில் கொடூரமா வெட்டினாங்க. நான், எவ்வளவோ தடுத்தேன். யாரும் என் பேச்சை கேட்கல. என் கணவர் மட்டுமில்ல, கூட இருந்தவங்களும் சேர்ந்துதான் அவரை வெட்டினாங்க. அவங்களை எல்லாம் விட்டுட்டு என் கணவரை மட்டும் சுட்டு கொன்னுடுச்சு போலீஸ்''’என்று கதறி அழுகிறார் 24 வயதே ஆன ரஷிதா.
ஆனந்தனை போட்டுத்தள்ளிய போலீஸ் டீமிடம் நாம் விசாரித்தபோது, ""ராஜவேலுவை கொடூரமாக தாக்குறதுக்கு காரணமா ஆனந்தன் இருந்தது விசாரணையில தெரியவந்தது. போலீஸ் மேல மார்க் போட்டா பெரிய ‘டான்’ ஆகிடலாம்னு பார்த்தான். ஆனா, மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த முதன்மைக் காவலர் ராஜவேலுவை பார்க்க வந்த உயரதிகாரிகள் ரொம்பவே டென்ஷன் ஆகிட்டாங்க. எமோஷனிலோ அல்லது அந்த சந்தர்ப்பத்திலோ ராஜவேலு கத்தியால் வெட்டப்படவில்லை. வேணும்னே கத்தியால தலையில ’"மார்க்'’போட்டு எக்ஸ்பிரியன்ஸ் டீம்னு நிரூபிக்க ட்ரை பண்ணியிருக்கானுங்க. ஏற்கனவே, சென்னை -ஓட்டேரியில ரவுடி சக்திவேல் தலைமையிலான ரவுடி கும்பல் மூதாட்டியை தாக்கியபோது விரைந்து சென்று பிடித்த போலீஸாரையும் தாக்கியிருக்காங்க. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாலையில் அ.தி.மு.க. பிரமுகரின் மணல் கடத்திய லாரியை மடக்கிப் பிடித்த தனிப்படை எஸ்.ஐ. சுரேஷை தாக்கியிருக்காங்க. கடந்த வாரம், மெரினா காவல்நிலைய முதன்மைக் காவலர் மாரிக்கண்ணனை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விக்னேஷ், மனோஜ்குமார் உள்ளிட்ட ரவுடிகள் அடித்து கையை உடைத்துவிட்டார்கள். காஞ்சிபுரத்தில் சுங்குவாச்சத்திரத்தில் கடந்த ஜூன் 25-ந் தேதி ரோந்துப்பணியிலிருந்த மோகன்ராஜ் என்ற காவலரை போதையில் இருந்த எல்லப்பன், வேல்முருகன் ஆகிய ரவுடிகள் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டார்கள். செங்கல்பட்டில் மணல் கடத்தலை மடக்கியதால் போலீசார் தாக்கப்பட்டது, திருவண்ணாமலை எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து, கோவை எஸ்.ஐ. ஆறுமுகத்துக்கு வெட்டு, நெல்லையில் மணல் கடத்தலை தடுக்கச்சென்ற தனிப்பிரிவு போலீஸ் படுகொலை, பூந்தமல்லியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீஸுக்கு அரிவாள் வெட்டு என… தொடர்ந்து காவல்துறையினர் கொடூரமாக தாக்கப்படும், கொலைசெய்யப்படும் சம்பவங்கள் அதிரிகரிச்சுக்கிட்டே இருக்கு. இனிமேலும் இப்படியே விட்டுக்கிட்டிருந்தா தொடர்ந்துக்கிட்டுத்தான் இருக்கும். அதனால, ஆனந்தன் ஒண்ணும் அப்பாவி இல்ல. ஏற்கனவே, அவன் மேல கொல கேஸ்கள் இருக்கு. அவனை முடிச்சுடுங்க... அப்போதான், பயம் வரும்''’ என்று உயரதிகாரிகள் போட்ட ஸ்கெட்சில்தான் ஆனந்தன் பலியாகியிருக்கிறான்.
ரவுடிகளைப் போலவே காவல்துறையிலும் எதிர் எதிர் டீம்கள் உள்ளன. தங்களின் கோபத்தை காட்டிக்கொள்ள எதிர் டீமுக்கு நெருக்கமாக உள்ள ரவுடிகளை போட்டுத்தள்ளுவதும் நடக்கிறது. அப்படித்தான் ஆனந்தன் என்கவுன்ட்டர் என்கிற தகவலும் காவல்துறை வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.
-அரவிந்த்