ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற் றப் பணிக்காக நிலம் தானமாகப் பெறப்பட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. முதல் மாவட்ட ஆட்சியர் வரை அத்தனை பேரின் தலைகளும் உருளத் தொடங்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் உஷ்ணத்தைக் கிளப்பியிருக்கிறது.
போக்குவரத்து நெரிசல், நகரின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இப்போதுள்ள பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் என்ற ஊருக்குக் கொண்டுசெல்ல நகரமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நகரமன்றத்தின் முடிவுக்கு அ.தி.மு.க. மட்டுமின்றி, ஆளும் தி.மு.க. கூட்டணியிலுள்ள ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் வரை ஒரே அணியில் திரண்டுநின்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. கடந்த 4 மாதங்களாக நீடிக்கும் இந்தப் போராட்டத்தால் நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், ஆளுங்கட்சி பிரமுகர் களும் கடுகடுப்பில் இருக்கிறார்கள்.
இதுதொடர்பாக ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பின் தலைவர் பால சுப்ரமணியன் (அ.தி.மு.க.), ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாசு (ம.தி.மு.க.) ஆகியோர் நம்மிடம் பேசினர்.
"கடந்த ஜூலை 2-ஆம் தேதி ராசிபுரம் நகரமன்றத்தில், இடநெரிசலைக் கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க லாம் என்று, எந்த ஓர் இடத்தையும் குறிப்பிடாமல் தீர்மானம் கொண்டுவந்தனர். ஜூலை 5-ஆம் தேதி, அவசர அவசரமாக பெய ரளவுக்கு ஒரு கருத்துக்கேட்பு கூட்டம் நடத் தினர். இந்தக் கூட்டத்திற்கு கூட்டணிக் கட்சி கள், எதிர்க்கட்சிகள் அழைக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. எம்.பி., ராஜேஷ்குமார், நகரமன்ற தலைவர் கவிதா சங்கர் ஆகியோர், பேருந்து நிலையம் அமைப் பதற்குத் தேவையான அரசு புறம்போக்கு நிலம் இல்லாததால் யாராவது நிலத்தை தானமாக கொடுத்தால் பரவாயில்லை என்றனர். கூட்டம் நடந்துகொண்டிருந்த அதேவேளையில், அணைப்பாளையத்தில் ரியல் எஸ்டேட் நிலங் களை வாங்கிக் குவித்திருக்கும் "படையப்பா' பாஸ்கர், தனக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை நகராட்சி ஆணையருக்கு தானம் வழங்கியதாக கிரையம் செய்து கொடுத்துள்ளார்.
அதேநாளில், ஆர்.டி.ஓ. தரப்பில் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைத் திருந்தனர். ஆனால், தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமா ரின் அழுத்தத்தின்பேரில் திடீரென்று அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த இடத்தில் தான் எங்களுக்கு பஸ் நிலைய இடமாற்றம் தொடர்பாக சந்தேகங்கள் எழத்தொடங்கின. இங்கு தி.மு.க. மா.செ. ராஜேஷ்குமார் எம்.பி.யின் விரல் அசைவில்தான் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் செயல்படுகிறது.
இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே நகரமன்றத் தலைவர் கவிதா சங்கர், படையப்பா நகர் பாஸ்கரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பாஸ்கரிடமிருந்து நிலத்தை தானமாகப் பெறுவது தொடர்பாக ஜூன் மாதம் 26-ஆம் தேதி நகராட்சி ஆணையருக்கு கவிதா சங்கர் கடிதம் எழுதியுள்ளார். இதையெல்லாம் மறைத்துவிட்டு, ஜூலை 2-ஆம் தேதி நகரமன்றக் கூட்டத்தில் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று பொத்தாம்பொதுவாகக் கூறியதுதான் மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது.
இந்நிலையில், அக்டோபர் 3-ஆம் தேதி, நிலம் தானம் பெறப்பட்டதற்கு ஒப்புதல் தீர்மா னம் கொண்டுவந்தனர். மேலும், 10.50 கோடி ரூபாயில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர். இதற்கு நகரமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை.
ராசிபுரத்தின் நுழைவுவாயிலாக உள்ள குறுக்கபுரம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்காமல், இதற்கு சம்பந்தமே இல்லாத அணைப்பாளையம் ஊராட்சியை இத்துடன் இணைக்கும் வேலைகளும் முடுக்கிவிடப்பட் டுள்ளன. இவை எல்லாமே, அணைப்பாளையத் தில் வர உள்ள பேருந்து நிலையமும், அதன்மூலம் அங்கு உயரக்கூடிய ரியல் எஸ்டேட் நிலங்களின் மதிப்பையும் குறிவைத்துத்தான் மேற்கொள்ளப்படுகின்றன.
நிலம் தானம் பெறப்பட்ட இடத்தின் அருகிலேயே அணைப்பாளையம் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 290 ஏக்கர் விவசாய நிலங் கள் உள்ளன. ஏற்கனவே ஏரியை ஆக்கிரமித்து தான் ராசிபுரம் தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து நிலையமும் அங்கு கட்டப்பட்டால் எதிர் காலத்தில் பெருத்த இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
அதேநேரம், குறுக்கபுரம், ஏ.டி.சி. டிப்போ பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் பேருந்து நிலையத்தை அமைக்கலாம். அணைப் பாளையத்தில் பேருந்து நிலையம் கொண்டுவந் தால் ராசிபுரத்தை மையப்படுத்திய வணிகமும், வளர்ச்சியும் நிச்சயம் பாதிக்கப்படும். சுற்றுவட் டாரத்திலுள்ள 50 கிராம மக்களுக்கும் ராசி புரத்திற்கும் உள்ள தொடர்பும் அறுபட்டுவிடும்.
அணைப்பாளையத்தில் "படையப்பா' பாஸ்கருக்கு 85 ஏக்கர் ரியல் எஸ்டேட் நிலம் இருக்கு. இன்னும் சிலருக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது. அவர்கள் பல ஆண்டுக்கு முன்பு ஏக்கர் 10 லட்சத்திற்கு வாங்கிப்போட்டுள்ளனர். இப்போது, பேருந்து நிலையம் குறித்த பேச்சுகள் எழுந்த நிலையில், அந்த நிலம் ஏக்கர் 6 கோடி ரூபாய் வரை மதிப்பு கூடியுள்ளது. இந்த லாபத்தைக் குறிவைத்தே பாஸ்கர் தனது நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார்.
'படையப்பா' பாஸ்கர், அமைச்சர் கே.என். நேருவுக்கு தூரத்து உறவினர். அவர் மூலமாக இந்த விவகாரத்தை காதும் காதும் வைத்தது போல் முடித்துவிட்டனர். இதில், தி.மு.க. மா.செ., ராஜேஷ்குமார் எம்.பி., நகரமன்ற தலை வர், மாவட்ட ஆட்சியர் வரை பெரிய அளவில் நிலமும், பணமும் கைமாறியுள்ளது'' என்கிறார் கள். ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் தினேஷின் சொந்த ஊராகும். ஆகையால், கொளுந்துவிட்டு எரியும் ராசிபுரம் பேருந்து நிலையம் விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு போகாமலா இருக்கும்? என்றும் சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் "படையப்பா' பாஸ்கரிடம் விசாரித்தோம். "அணைப்பாளையத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு ராசிபுரம் நகராட்சி தரப்பில் கேட்டதன் பேரிலேயே 7 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தோம். இதுமட்டுமின்றி, சாலை வசதிக்காக 20 ஏக்கர் நிலமும் தருகிறோம்.
அணைப்பாளையத்தில், 16 வருடங்களுக்கு முன்பே நிலங்களை வாங்கிப் போட்டிருந்தோம். அப்போது, இந்த இடத்தில் பேருந்து நிலையம் வரும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. எதற்காக இதை பிரச்னை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. அமைச்சர் கே.என். நேருவுக்கு இதில் துளியும் சம் பந்தமோ, நான் அவருக்கு உறவின ரோ கிடையாது'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார் பாஸ்கர்.
ராசிபுரம் நகரமன்றத் தலைவர் கவிதா சங்கரிடம் கேட்டபோது, "ராசிபுரம், மக்கள் அடர்த்தியுள்ள நகரம். சுற்றுவட்டாரத்திலுள்ள ஆத்தூர், சேலம், நாமக்கல் நகரங்கள் எல்லாம் வளர்கின்றன. ஆனால் ராசிபுரம் மட்டும் ஒரு தீவுபோல் வளர்ச்சியடையாமல் இருக்கிறது. குறுகலான சாலை, மக்கள் அடர்த்தி, வணிகத்திற்காக எல்லோரும் ஒரே இடத்தில் குவிவதால் மேலும் நெருக்கடி ஏற்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே அணைப்பாளையத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்ட முடிவுசெய்தோம். குறிப்பிட்ட நாலே நாலு பேர் உள்நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றனர்'' என்றார்.
இதுகுறித்து கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி.யிடம் விளக்கம் பெற்றோம். ''அணைப் பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை முழுக்க முழுக்க அரசியல் காரணத்தால் சிலர் எதிர்க்கின்றனர். ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் பேருந்து நிலையத்திற்கு ஏற்ற வகையில் 7 ஏக்கர் நிலம் ஒரே இடத்தில் இல்லை. இந்தநிலையில்தான் அணைப்பாளை யத்தில் ஒருவரிடம் நிலத்தை தானமாகப் பெற்று, பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவருகின்றன. இத்திட்டத்தை எதிர்க்கக்கூடிய சிலர், தற்போதுள்ள பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள கடைக்காரர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு போராட் டத்தைத் தூண்டிவிடுகின்றனர். பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தில் நீர்நிலைகள் இல்லை. பேருந்து நிலையம் அமையும் இடத்தில் என் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் எந்த சொத்தும் இல்லை. தற்குறியாக சிலர் பொய் பிரச்சாரம் செய் கின்றனர்'' என ஒரே போடாகப் போட்டார் கே.ஆர்.என். ராஜேஷ்குமார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் விளக்கம் பெற பலமுறை முயற்சித்தும் தொடர்புகொள்ள இயலவில்லை.
அணைப்பாளையம் பேருந்து நிலைய திட்டம் தொடர்பாக பல்வேறு அரசியல் அழுத்தங்கள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தின் அருகிலேயே ஏரி உள்ளது. இதை கவனத்தில்கொண்டு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதே சூழலியலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.