கடந்த வியாழக்கிழமையை அவ்வளவு எளிதாகக் கடந்திருக்கமுடியாது ஜக்கி வாசுதேவால்! "என்னுடைய மகன் கோவை ஈஷா ஹோம் ஸ்கூலில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டான். பாதிக்கப்பட்டவரின் நேரடி சாட்சி நான்''” என யானினி என்பவர் தனது கணவருடன் இணைந்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதேவேளையில், வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் ஒரு பெண், "கோவையிலுள்ள ஈஷா ஹோம் ஸ்கூல் ஆசிரியர்களால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களில் நானும் ஒருத்தி'' என்றதும் இணைய செய்தியாளர் அரங்கமே அதிர்ந்தது.
கோடிக்கணக்கான பாலோயர்களைக் கொண்ட மதகுரு ஒருவனின் முகத்திரையைக் கிழிக்க, ஆசிரமம் எனும் பெயரில் அங்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் குறித்து, வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் சத்ய நரேந்திரா மற்றும் யானினி ஆகியோர். "யார் அந்த மதகுரு?' என்ற கேள்விகளுடன் செய்தியாளர்கள் செய்தி அரங்கத்தை நிரப்பிய வேளையில், சரியாக 12.15 மணியளவில் ஆஜராகினர் சத்ய நரேந்திராவும் யானினியும். "கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஈஷா மையத்தின் சாமியார் ஜக்கி வாசுதேவ் குறித்துதான் பேசவுள்ளோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நேரடி சாட்சி நான்'' என எடுத்த எடுப்பிலேயே யார் அந்த மதகுரு? என்பதற்கு விடை பகிர்ந்தார் யானினி.
"நானும் எனது குடும்பமும் ஜக்கியின் தீவிர பக்தர்கள். அவரை கடவுளாகவே பாவித்தோம். அந்த வகையில் எங்களது குழந்தைகளும் அவரை நோக்கியே இருக்கவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குண்டு. அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கவனம் நிலவும் சூழ்நிலையில், குழந்தையின் வாழ்க்கை முறையின் ஒவ்வொரு அம்சமும் அவர்களின் உள்ளார்ந்த இயல்பை நோக்கி. அவர்களை நோக்கி கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது என ஈஷா பள்ளி குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டி ருந்ததால், என்னுடைய மகனை கோவையி லுள்ள ஈஷா அறக்கட்டளைக்குச் சொந்தமான ஈஷா மையத்திலுள்ள ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமியில் சேர்த்து கல்வி பயில வைத்தோம்.
தொடக்கத்தில் அனைவருடனும் சகஜ மாகப் பழகும் அவன், நாளடைவில் எவரிடமும் பழகுவதைத் தவிர்த்தான். 6 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை என்ற பொழுதும், சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு வந்தவன் யாரிடமும் பேசவில்லை. அவனுடைய அறைக்குள்ளே அடைந்துகிடந்தான். என்னவென்று சொல்வ தில்லை. எங்களுக்கும் புரியவில்லை. ஒருகட்டத் தில் மீண்டும் ஈஷாவிற்கு அனுப்பவேண்டிய நாள் வந்தது. அந்த நேரத்தில் மட்டும் முரண்டு பிடித்தான். இருப்பினும் அவனை ஈஷாவிற்கு அனுப்பிவைத்தோம். இடையில் கொரோனா காலம் வந்தது. கொரோனா காலத்தின்பொழுது அவனுக்கு டைரி எழுதும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. ஒரு நாள் அவனது அறையை சுத்தம்செய்ய முற்படுகையில் அவன் எழுதிய குறிப்புகள் எங்களுக்குக் கிடைத்தது.
அதைப் படித்ததும் அப்படியே ஷாக்கில் உறைந்து போனோம். ஆம், அங்கிருக்கும் ஆசிரியர்களால் அவன் தினசரி பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான். வலியில் துடித்திருக்கின்றான். ஒத்துழைக் காததால் அடித்துத் துன்புறுத்தி யிருக்கின்றார்கள் அங்குள்ள ஆசிரியப் பெருமக்கள். இத்தனை சித்ரவதை யையும் அனுபவித்த அவனுக்கு அப்போதைய வயது 13. நாங்கள் அவனுடைய டைரியைப் படித்ததை அவனிடம் தெரிவிக்கவில்லை. இதை நான் கூறினால் வெளியுலகம் ஏற்றுக் கொள்ளுமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கான ஆவணமும் இல்லை.
இருப்பினும் சாதரணமாக நான் இதனை விடுவதாக இல்லை. எனது மகன் போல் எத்தனை பேர் அங்கு பாதிக்கப்பட்டி ருப்பார்கள் என்பதனைக் கண்டறிய ஈஷா மையத்தில் தானாக முன்வந்து தன்னார்வத் தொண்டு செய்தேன். இதேவேளையில் என் மகன்போல் துன்பப்படும், பாலியல் சித்ரவதைக்குள்ளாக்கப்படும் சிறார்கள் குறித்து ஆவணங்களைத் திரட்டினேன். ஆவணங் களுடன் உங்கள் முன் வந்துள்ளேன். ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தான் உணர்ந்த ஆத்மா என்றும், கருணை நிறைந்தவர் என்றும் கூறுகிறார். ஆனால், ஈஷா சமஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. லட்சக்கணக்கில் ரூபாய்களைக் கொட்டி கல்வி பயில அனுப்பிவைக்கின்றோம். எங்களுக்கு இது தேவையா..? தகுந்த ஆதாரங்களுடன் காவல்துறையை அணுகவுள்ளோம். அதற்கு முன் உங்களிடம் இதனைத் தெரிவிக்கின்றேன்'' என்றனர் இருவரும்.
கோவையிலுள்ள ஈஷா அறக்கட்டளை யால் நடத்தப்படும் ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமியில் கல்வி பயில அனுமதிக்கப்படும் குழந்தைகளின் வயது 7 முதல் 8 வயதிற்குள் தொடங்கி, 18 வயது வரை. இங்கு கல்வி பயிலும் குழந்தைகள் ஆற்றல் மிக்க, திறமையான மற்றும் அர்ப் பணிப்புள்ள மனிதர்களாக உருவாகிறார்கள் - மனிதர்களின் இருப்பு உலகிற்கு ஆசீர்வாதமாக இருக்கும் என ஜக்கி வார்த்தை ஜாலம் காட்டியதால் இங்கு குவிகின்றனர் வசதிபடைத்த பலர். பள்ளி பயிலும் மாணாக்கர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை விடுமுறை உண்டு. போன் பேச அனுமதி கிடையாது. ஆனால், வாராவாரம் தங்களுடைய பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் மட்டும் அனுப்பிக்கொள்ளலாம் என்கின்ற விதிமுறை உண்டு. அதாவது மின்னஞ்சலை அங்குள்ள கேர் டேக்கருக்கு அனுப்பி, பின் பரிசீலனை செய்து பெற்றோர்களுக்கு அதனை பார்வர்டு செய்வார்களாம்.
இது இப்படியிருக்க, செய்தியாளர் சந்திப்பின்போது வாட்ஸ் அப் வீடியோ அழைப்பினில் இணைந்த பெண் ஒருவரோ, "அவர்களது குழந்தையைப் போல் என்னுடைய குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் நாங்கள். ஜக்கியின் போதனைகளில் ஈர்க்கப்பட்டு அவரை கடவுளாக வணங்கியவர்களில் நானும் ஒருத்தி. எங்களது குழந்தையும் நல்வழிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய இளைய மகளை ஈஷாவில் கல்வி பயில கோவைக்கு அனுப்பினேன். 2013-14 காலகட்டங்களில் என்னுடைய எட்டு வயது மகளிடம் தினசரி பாலியல் வல்லுறவு செய்திருக்கின்றான் உடற்கல்வி ஆசிரியர் சக்தி என்பவன். இது குறித்து அங்குள்ள இன்னொரு ஆசிரியரிடம் கூறியபோது, அவரும் இதே கொடுமையைச் செய்திருக்கின்றார். ஒருமுறை என்னுடைய மகளைச் சந்திக்க கோவை ஈஷா பள்ளிக்கு வந்தேன். என்னைச் சந்தித்தவள், "நான் அனுப் பும் மின்னஞ்சலை நீ பார்த்தது இல்லையா.? ஒருமுறைகூட அதற்கு மதிப்பு தரவில்லை' என வாதிட்டாள். "நீ அனுப்பியிருந்தால் அது எனக்குக் கிடைத்திருக்கும். வரவில்லையே.. அதில் என்ன இருந்தது..?' என கேட்டேன். உடற்கல்வி ஆசிரியர் சக்தி என்பவன் தினசரி பாலியல் வல்லுறவு செய்ததைக் குறிப்பிட்டாள் அவள். கோபம் பொறுக்கவில்லை எனக்கு. கோபத்துடன் ஜக்கியைப் பார்த்து இதுகுறித்து கேட்டதற்கு, "இதனை நீ பெரிதுபடுத்தாதே.! அவனை வேலையைவிட்டு எடுத்துவிடுவோம். இந்த விஷயத்தை என்னுடைய காலடியில் விட்டுச் சென்றதாக நினைத்துக் கொள்' என சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தான் ஜக்கி. இப்பொழுது எனது இளைய மகளுக்கு 18 வயதாகின்றது. அவளுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. எங்களது நாட்டைப் பொறுத்தவரை 18 வயது வந்தாலே நண்பர் ஒருவர் இருக்க வேண்டும். இல்லையெனில் உடல்ரீதியாக, மனரீதியாக பிரச்சனை என்று மருத்துவ மனைக்கு அனுப்பிவைப்போம்.
இதுகுறித்து எனது இளைய மகளிடம் மூத்த மகள் வினவியதற்கு, "ஈஷாவில் நடந்த சம்பவத்தைக் கூறி, "அதிலிருந்தே ஆண் என்றால் வெறுப்பாக இருக்கின்றது' என்றிருக் கின்றாள் அவள். கோபமான எனது மூத்த மகள், "இதுகுறித்து புகார் அளிக்கின்றாயா.? இல்லை உன்மீது சேர்த்து நான் புகாரளிக்கவா?' எனக் கேள்வி கேட்க, அப்பொழுதுதான் உறைத்தது. அதன் விளைவு இத னைப் புகாராக மாற்றியுள்ளேன்'' என்றார் பெயர் தெரிவிக்க விரும்பாத அவர்.
இதேவேளையில், அதே நாளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது. 2016-ஆம் ஆண்டு முதல், கோயம்புத்தூரிலுள்ள ஈஷா யோகா மைய வளாகத்திலிருந்து நாகர்கோவில் திரவிய ஐயா (ஈழ்.சர்:257/16), திருச்சி தனசேகர் (ஈழ்.சர்:337/16), ஈஷா டார்மெட்ரி பகுதியில் பணிபுரிந்த கார்த்திக் (ஈழ்.சர்:20/2017), பெங்களூரு கனகபுரம் ராமேஸ்வர் குமார் (ஈழ்.சர்:39/2019), உடுமலைப்பேட்டை அஸ்வின் ராம் (ஈழ்.சர்:127/2022) மற்றும் பாவூர்சத்திரம் கணேசன் என்ற பவதுத்தா (ஈழ்.சர்:26/2023) உள்ளிட்ட 6 நபர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் பலர் மீட்கப்பட்டு மறுபடியும் சொந்த வீட்டிற்கே சென்ற நிலையில் தற்பொழுது வரை பவதுத்தாவை தேடிப்பிடிக்கவில்லை. அது போல் ஈஷா ஹோம் ஸ்கூல் படிக்கும் மாணவி 17 வயது மோக்ஷக்னா யோகா மையத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து விசா ரணையும், கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் எஸ்.காமராஜ் என்பவர், தனது இரண்டு மகள்களை மூளைச்சலவை செய்து வலுக்கட்டாயமாக அடைத்து வைத் திருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகக் கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஈஷா யோகா மையத்தில் தகன மேடை உள்ளது. இதனை எதிர்த்து பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜக்கியால் பாதிக்கப்பட்ட ஹைதரா பாத் யானினி மற்றும் அமெரிக்க பெண்மணி உள்ளிட்டோர் இணைந்து ஜக்கிக்கு எதிராகத் தகவல்களைத் திரட்டி வருகின்றனர். இவ்வேளையில், "கல்வி பயிலும் பெண் குழந்தைகள், அதாவது பூப்பெய்த இளஞ்சிறுமிகளுக்கு நேரடியாக தீட்சை கொடுப்பது ஜக்கியின் ஈனத்தனமான செயல் களில் ஒன்று. அதிகாலை 3 மணிக்கு பெண் குழந்தைகளை எழுப்பி மேலாடையின்றி வரிசையாக நிற்க வைத்து தீட்சை எனும் பெயரில் சீண்டலில் ஈடுபடுவார் ஜக்கி. இதனை நேரடியாகப் பார்த்து வீடியோ, புகைப்படம் எடுத்த சாட்சியம் எங்களுடன் இணைந்துள் ளது. அது குறித்து மின்னஞ்சலும் அனுப்பியிருக் கின்றார் அவர். வெளிப்படையாகக் கூறவேண் டும் என்றால் ஜக்கி வாசுதேவிற்காக தனது குடும்பத்தையே தொலைத்தவர் அவர்'' என சில குறிப்புக்களையும் முன்வைத்துள்ளனர் அவர்கள்.
வெள்ளிக்கிழமையன்று பேராசிரியர் காமராஜ் மகள்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் வந்தது. இந்த நிலையில், "இரு பெண் துறவிகளும் தங்களது சொந்த விருப்பத்துடன் ஈஷாவில் தங்கியிருப்பதாக போலீஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஈஷா யோகா மையத்துக்கு எதிரான ஆட் கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், தங்களது இரு மகள்களையும் பெற்றோர் எப்போது வேண்டுமென்றாலும் சென்று பார்க்கலாம். அதுபோல், ஈஷா யோகா மையத்துக்கு எதிராக ஏற்கெனவே நிலுவை யிலுள்ள வழக்குகள் மீதான புலன் விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை. அந்த வழக்குகளை சட்டத்துக்குட்பட்டு விசாரிக்க லாம்'' என உத்தரவிட்டது நீதிமன்றம்.
ஆக.. ஈஷாவில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக தமிழக காவல்துறையின் பிடி விரைவில் இறுகலாம் என்கின்றது விவரமறிந்த வட்டாரங்கள்.
படங்கள்: விவேக்