புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணியில், யார் காலை யார் வாருவதென சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
2025 புத்தாண்டுப் பரிசாக புதுச்சேரி மக்களுக்கு பேருந்து கட்டணம், மின் கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அதிர்ச்சியளித்துள்ளது. தொடர்ந்து, வாகனப்பதிவு கட்டணம், மதுபானக் கடைகள் லைசன்ஸ் கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. இம்முடிவுகள், புதுச்சேரி பா.ஜ.க. மற்றும் டெல்லி பா.ஜ.க.வினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் பேசியபோது, "எங்களுடன் பா.ஜ.க.வை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், சபாநாயகர் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைப்பதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். முதலமைச்சர் ரங்கசாமி மீது மக்கள் அதிருப்தியடைவதற்காக இப்படி கூடயிருந்தே குழிபறிக்கிறார்கள். பெஞ்சல் புயலின்போது அதிகம் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு நிதி தராமல் நெருக்கடியைக் கொடுத்தனர். எனினும், 3.45 லட்சம் குடும்ப அட்டைதாரர் களுக்கு தலா 5 ஆயிரம் தருவதாக அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. இதனைக்கண்டு பா.ஜ.க. அதிர்ச்சி யடைந்துவிட்டது. வேறு வழியில் லாமல் லெப்டினன்ட் கவர்னர் ஒப்புதல் தந்தார். நிவாரண நிதியை நாங்கள்தான் தந்தோம் என்பதுபோல் கவர்னரும், பா.ஜ.க.வும் விளம்பரம் செய்தார்கள். இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் சொன்னபோது, '"பெஞ்சல் புயல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக 645 கோடி நிவாரண நிதியாக ஒன்றிய அரசிடம் கேட்டோம், ஆனால் தரவில்லை. மற்ற துறைகளின் நிதிகளை எடுத்து நிவாரணம் தந்தோம். இதனால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட் டுள்ளது. அதனால் கட்டணங்களை உயர்த்தவேண்டியுள்ளது' என்றார். புயல் நிவாரண நிதி தந்தபோது தாங்கள் தான் தந்ததாக தம்பட்டம் அடித்தவர்கள், இப்போது கட்ட ணங்கள் ஏற்றியதும் அதிர்ச்சியாகி அமைதியாகிவிட்டனர். அதே நேரத்தில், பொங்கல் பரிசாக 750 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என ரங்கசாமி அறி வித்ததும் என்ன சொல்வதெனத் தெரியாமல் பா.ஜ.க.வினர் முழிக்கின்றனர்.
எங்களுடன் கூட்டணியில் இருந்துகொண்டே 2026 சட்டமன்றத் தேர்தல் மூலம் பா.ஜ.க.வை சேர்ந்தவரை முதலமைச்சர் நாற் காலியில் அமர்த்து வதற்கான முயற்சி யில் ஈடுபட் டுள்ளது. நேரடி யாக பா.ஜ.க. களத்தில் நின்றால் புதுச் சேரியில் வெற்றி பெறமுடி யாது என்பதால் கோவையிலிருந்து லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸை களமிறக்கியுள்ளது பா.ஜ.க. தலைமை. மார்டின் மகனை வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். அப்போது, "முதலமைச்சர் ரங்கசாமிக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. மூடப்பட்ட தொழிற்சாலைகளை இயக்குகிறேன், தொழிலாளர்களுக்கு நானே நஷ்ட ஈடு வழங்குகிறேன்' எனப் பேசினார். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சபா நாயகர் செல்வம், ரங்கசாமி ஆட்சியை எதிர்க்கட்சியென சபையில் விமர்சித்தார். எல்லாமே பா.ஜ.க. மேலிடத்தின் உத்தரவு.
இதற்கெல்லாம் பதிலடி தரும்விதமாகவே தனது ஆதரவு எம்.எல்.ஏ. நேரு மூலமாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர கடிதம் தரச்செய்தார் ரங்கசாமி. அதனை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆதரித்தனர்.
அதேபோல் பா.ஜ.க.வில் அமைச்சர் பதவியோ, வாரியத்தலைவர் பதவியோ கிடைக்காத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் ஆதரிக்க முடிவெடுத்தனர். தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்தாலும் வெற்றி பெறாது. சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய என்.ஆர்.காங்கிரஸுக்கு விருப்பமில்லாவிட்டாலும், தங்கள் எதிர்ப்பு எப்படியிருக்குமென்று பா.ஜ.க. தலைமைக்கு உணர்த்தவே இப்படி செய்யப்படுகிறது'' என்றார்கள். இதுகுறித்து புதுச்சேரி பா.ஜ.க.வினரிடம் பேசியபோது, "ஆட்சி யமைத்து நான்காண்டுகள் ஆனபின்பும் வாரியத்தலைவர் பதவியைக்கூட பா.ஜ.க.வுக்கு தர மறுக்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி. நாங்கள் வளர்ந்துவிடுவோமென்று எங்களை அழிக் கப்பார்க்கிறார்'' என குற்றம்சாட்டுகின்றனர்.
என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளோ, "பா.ஜ.க.வில் இரண்டு அமைச்சர்கள் உள்ளார்கள் அவர்களது துறையிலுள்ள வாரியங்களுக்கே சேர்மனை நியமிக்கட்டுமே, யார் வேண்டாம் என்றது'' எனக் கேட்கின்றனர்.
புதுச்சேரி அரசியல் தெரிந்தவர்களோ, "காங்கிரஸ் மீது அதிருப்தியாகி 2011-ல் கட்சி தொடங்கினார் ரங்கசாமி. கட்சிக்கு பொதுச் செயலாளர், பொருளாளர் மட்டும் நியமிக்கப் பட்டு ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானார். 5 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவர், 2021-ல் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்து கிறார். இதுவரை தன் கட்சியில் ஒரு தொகுதித் தலைவரைக்கூட நியமிக்கவில்லை. பொதுச்செய லாளர் பதவி கூடக் காலியாக இருக்கிறது.
புதுச்சேரி என்பது வித்தியாசமான அரசியல் களம். இங்கு அரசியல் கட்சிகளை விட தனிநபர்களின் செல்வாக்கே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். அதனால் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் யார் வந்தாலும் தன் கட்சி சார்பில் சீட் தந்து களத்தில் நிறுத்துவார். மக்கள் மனநிலை தெரிந்து செயல்படுபவர் என்பதால் அவர் இமேஜை பா.ஜ.க.வால் சரிக்கமுடியவில்லை. அதனால் பணத்தை வைத்து புதுச்சேரியில் வெற்றி பெறலாம் என்றே பா.ஜ.க. திட்டமிடுகிறது'' என்கிறார்கள்.
ரங்கசாமியை கவிழ்க்க மார்டின் மகனை களமிறக்கியுள்ளது பா.ஜ.க. பா.ஜ.க.வின் திட்டத்துக்கு எதிராக மவுன அரசியல் செய் கிறார் ரங்கசாமி. யாருக்கு வெற்றி கிடைக்கும்?
-தமிழ்குரு