""ஹலோ தலைவரே, கொரோனாத் தொற்றும், அது ஏற்படுத்திருவரும் மரண எண்ணிக்கையும் பொதுமக்களை மிரளவைக்கிது. இந்த அதிமிதிக்கு நடுவிலும் முதல்வர் எடப்பாடி, பெரும்பாலான மாவட்டங்கள்ல ஆய்வுக்கூட்டம்ங்கிற பேருல டூரை முடிச்சிட்டார்.''

""ஆமாம்பா, துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சை தன் டூரில் முழுசா எடப்பாடி தவிர்த்துட்டாரே?''

""உண்மைதாங்க தலைவரே... எடப்பாடி, தான் தொடங்கிய தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தில், 90 சதத்தை முடிச்சிட்டார். இன்னும் 7 மாவட் டங்கள்தான் பாக்கி இருக்கு. அதையும் 10-ந் தேதிக்குள் முடிச்சிடனும்னு அவர் திட்டமிட்டிருக்கார். இதில் அவர் ஓ.பி.எஸ்.சின் தேனி மாவட்டத்துக்கும் போகவேண்டியிருக்கு. அங்க ஓ.பி.எஸ். இல்லாமல் போனால், தன் ஆதரவாளர்கள் மூலம் அவர், டூரைக்களை இழக்க வச்சிடுவாரோங்கிற குழப்பத்தில் அவரையும் அழைக்கிறார். ஆனால் ஓ.பி.எஸ்.சோ, இவ்வளவு நாள் கண்டுக்காத எடப்பாடிக்கு இப்ப மட்டும் நான் வேணுமான்னு கேட்கிறாராம். எனவே, தேனி பகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு தன்னை வரவேற்குமா வரவேற்காதாங்கிற குழப்பத்திலேயே இருக்காராம் எடப்பாடி.''

""ஓ.பி.எஸ். தரப்பு வரவேற்காவிட்டாலும், இ.பி.எஸ் சைடிலேயே ஆட்களை செட் பண்ணி, "அரியர் மாணவர்களின் அரசரே'ன்னு வாய்ஸ் கொடுக்கிறதை அவரோட டூர் புரோகிராமில் பார்க்க முடியுதே?''

Advertisment

""ஆமாங்க தலைவரே, இது எல்லாமே தேர்தல் வேலைகளுக்கான முன்னோட்டம்தான். அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மற்ற பணிகளைப் பார்வையிடுவதற்காக டூர் என்று சொன்னாலும், ஒவ்வொரு மாவட்ட டூரிலும் இரவு நேரத்தில் அவர் தங்குற இடத்தில் இருந்தே கட்சிப் பிரமுகர்களோடு எடப்பாடி கலந்து பேசுறார். தங்கள் கூட்டணியில் எந்தெந்த கட்சியைத் தக்க வச்சிக்கிறது? புதுசா எந்தெந்தக் கட்சியை இழுத்துக்குறதுன்னு அவங்களோட தீவிரமா ஆலோசிக்கிறார். வட மாவட்டங்களில் தி.மு.க.வை சமாளிக்கனும்னா, பா.ம.க. கூட்டணியில் தொடரனும்னு நினைக்கும் எடப்பாடிக்கு, தென் மாவட்டங்கள் தான் கவலை தருதாம். ஏற்கனவே நாடார் சமூகத்தின் அதிருப்தி யை சம்பாதித்திருக்கும் நிலையில், சாத்தான்குளப் படுகொலையால், அவர்கள் மத்தியில் தங்கள் இமேஜ் ரொம்பவும் டேமேஜ் ஆனதை எடப்பாடி புரிஞ்சிவச்சிருக்கார். அதனால் இழப்பை ஈடுகட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைத் தங்கள் பக்கம் அழைத்துவரும் பொறுப்பை, அமைச்சர் வேலுமணியிடம் எடப்பாடி ஒப்படைச்சிருக்காராம்.''

rr

""சட்டசபையைக் கூட்டும் பரபரப்பும் எடப்பாடியிடம் தெரியுதே? கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடக்கும்னு முதன்முதலில் நாமதானே பேசினோம்.''

Advertisment

""ஆமாங்க தலைவரே, வரும் 14-ந் தேதி நடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குது. அங்கே இருக்கை வசதி, கேள்வி நேரம் மற்ற நிகழ்ச்சிகள் எல்லாத்துக்கும் டிராஃப்ட் தயாரிச்சிட்டாங்க. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்போல சட்டமன்றக் கூட்டத்தையும் நடத்த வேண்டியிருப்பதால், அதே நாளில், தமிழக சட்டசபையைக் கூட்டுகிறார் சபாநாயகர் தனபால். சமூக இடைவெளியுடன் எம்.எல்.ஏ.க்களை உட்கார வைக்க வசதியா, இந்தக் கூட்டம் கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடக்க இருக்குது. 5 நாட்கள் கூட்டத்தை நடத்தலாம்னு ஆலோசிக் கப்பட்டிருக்கு. இந்தக் கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சத இடஒதுக்கீடு, ஜெ.’ நினைவில்லத்துக்கான சிறப்பு சட்டம், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கிட்டை, கொரோனா தடுப்பு பணிகளுக்காகத் திருப்பிவிட்டது உள்ளிட்டவைகளுக்கு இதில் முறைப்படி ஒப்புதல் பெறப்பட இருக்கு.''

""இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு பற்றிய ஒரு அஜண்டாவும் தயாராகுது போலிருக்கே?''

""அதற்குள் ஸ்மெல் பண்ணிட்டீங்களா? உண்மைதாங்க தலைவரே, இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டுன்னு அருந்ததியருக்கான 3% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிச்சிருக்கு. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், வன்னியர் சமூகத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 15 சதத்தை ஒதுக்கனும்ங்கிற நீண்டகால கோரிக்கை வலுப்பெற்றிருக்கு. இது தொடர்பான கோப்புகள் எடப்பாடியின் மேஜையில் நீண்ட நாட்களாக தூங்குவதால், அதை அந்த சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம் உசுப்பிக்கிட்டு இருக்கார். அதனால் இந்த கூட்டத் தொடரிலேயே இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம்ங்கிற எதிர்பார்ப்பு பலமா இருக்குது.''

""சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியோட வியூகம் என்னவாம்?''

""தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளின் விற்பனை கனஜோரா நடக்குதுங்கிறதை காட்டும் வகையில் ஏற்கனவே சட்டமன்றத்திலேயே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் குட்கா பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து காட்டினாங்க. இதுதொடர்பான உரிமை மீறல் சிக்கல் வந்தது. அவங்க பதவிக்கு ஆபத்துன்னும் அரசியல் வட்டாரம் பரபரப் பானது. இது தொடர்பான வழக்கில் தி.முக.வுக்கு ஆதரவா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தெம்பைக் கொடுத்திருக்கு. அந்தத் தெம்போடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்துக்க இருக்கும் தி.மு.க. தரப்போ, கொரோன ஊழல்கள், நிர்வாக குளறுபடிகள், நீட் தேர்வு, ஓ.பி.சி இட ஒதுக்கீடு, பொது முடக்கத் தோல்வின்னு ஆளுங்கட்சிக்கு எதிரான விவகாரங் களைக் கிளப்ப ரெடியாகுது.''’’

rr

""சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக, தி.மு.க. பொதுக்குழு கூடுதே?''

""ஆமாங்க தலைவரே, தி.முக. பொதுக் குழுவை கொரோனா காரணமாக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டலாம்னு ஸ்டாலின் நினைச்சிருந்தார். பேராசிரியர் மறைவால் காலியான பொதுச்செயலாளர் பதவியையும் அப்ப நிரப்பலாம்னு நினைச்சாரு. ஆனால் இந்தப் பதவியை எதிர்பார்த்து தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகன், கால நீட்டிப்பால் அப்செட்டாயிட்டார். அதனால் அவர் அறிவாலயம் வருவதைத் தவிர்த்ததோடு, ஸ்டாலினிடம் பேசுவதையும் குறைச்சிட்டாராம். நிலைமையைப் புரிஞ்சிகிட்ட ஸ்டாலின், வரும் 9-ந் தேதி காணொலி மூலம் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தும் முடிவுக்கு வந்துட்டார்.''

""துரைமுருகனைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கும் தி.மு.க., அவர் மூலம் காலியாகும் கட்சியின் பொருளாளர் பதவியையும் நிரப்பியாகனுமே?''

""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வின் பொருளாளர் பதவி மீது, கட்சியின் சீனியர்களான டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் குறிவைத்திருக் கிறார்கள். இதற்கிடையே கனிமொழியை கட்சியின் பொருளாளர் ஆக்கனும்ங்கிற குரல் மகளிர் அணித் தரப்பில் இருந்து கேட்குது. ஆனால், கனிமொழி இது தொடர்பாக ஸ்டாலினுடன் பேசியதாத் தெரியலை. அதேபோல் பொருளாளருக்கு போட்டியிடுவார்ன்னு கருதப்பட்ட ஆ.ராசாவும், நமக்கு இன்னும் காலம் இருக்கு. எதுக்கு இப்ப முண்டி அடிக்கனும்ன்னு சைலண்டா இருக்கார். கலைஞர், எம்.ஜி.ஆர், மு.க.ஸ்டாலின்னு முக்கிய பிரமுகர்கள் வகித்த பொருளாளர் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு கொடுக்க தி.மு.க. தலைமை முடிவு செய்திருக்கு. இந்த நிலையில், பொதுச்செய லாளராக இருக்கும் துரைமுருகனுக்கு திடீர்னு சிலர் மெசேஜ் அனுப்புறாங்களாம். நீங்க விலகிகிட்டு, ஒரு புது முகத்துக்கு வழிவிடுங்கன்னு மெசேஜ் வருவதால் அவர் அப்செட்டாகியிருக்காராம்.''

rr

""இந்த கொரோனா காலத்திலும் தமிழக பா.ஜ.க. பரபரப்பா இருக்குதே?''

""கமலாலயம் பக்கம் தெரிவது பரபரப்பா, களேபரமான்னு கட்சி நிர்வாகிகளுக்கே புரிய மாட்டேங்குதாம். கொலை வழக்கு உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகளான நெடுங்குன்றம் சூர்யா, ஓட்டேரி கார்த்திக், மாத்யூ, ராஜேஷ் ஆகியோர், கடந்த வாரம் பா.ஜ.க மாநிலத் தலைவரான முருகன் தலைமையில் அந்தக் கட்சியில் இணைய ரெடியானாங்க. வண்டலூர் அருகே இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த ரவுடிகளை, பா.ஜ.க.வில் புதிய பொறுப்புகளைப் பெற்றிருக்கும் பிரபல வழக்கறிஞர்களான பால் கனகராஜும் அலெக்ஸும் அழைச்சிக்கிட்டு வந்தாங்க. இதை ஸ்மெல் செய்த போலீஸ் டீம் அந்த இடத்தைச் சுற்றி வளைச்சிது. உடனே, அந்த ரவுடிகள் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரான கே.டி.ராகவனின் காரில் ஏறி தப்பிச்சிட்டாங்க. இவர்களை மடக்கிய போலீஸ் டீம் அதிரடியாகக் கைது செய்தது. இருந்தும் மூலக்கடை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ஜக.வினர், அவர்களை தப்பவிட, வேறு சிலரைக் கைதுசெய்து நிலைமையை சமாளித்தது போலீஸ்.''

""நானும் இது தொடர்பான ஒரு தகவலைச் சொல்றேன். ரவுடிகளா இருந்தாலும் பரவாயில்லை. ஏரியாவில் அறிமுகமான ஆட்களா இருந்தா போதும்னு வக்கீல்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்திருப்பதே பா.ஜ.க. மேலிடம்தானாம். ரவுடிங்க மேலே இருக்கிற கேஸ்களின் அடிப்படையில் பேரம் பேசி, கட்சிக்கு கொண்டு வர்றாங்களாம். ஓட்டுப் போடுற நாளில் பூத்தை கவனிச்சிக்க வசதியா இருக்கும்னு கணக்குப் போட்டுதான், தாதாக் களே வருகன்னு தமிழக பா.ஜ.க. வரவேற்குதாம்.''