""ஹலோ தலைவரே, சென்னை வந்த அமித் ஷா, வரும் தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அமைத்து வெற்றிபெறும்னு பேசிய கூட்டத்தில் சக்தி கேந்திரா, மகாசக்தி கேந்திராங்கிற பேர்ல, 15 ஆயிரம் பேர் திரண்டதை கவனிச்சீங்களா?''’
""கவனிச்சேம்பா... பா.ஜ.க.வின் கூட்டணிக் கணக்கு என்னவாம்?''’
""ஏற்கெனவே பா.ஜ.க.வின் டார்கெட்டில் ரஜினி இருக்க, இப்ப பா.ம.க.வோடு அ.தி.மு.க.வின் எடப்பாடி அணியைத் தங்களோடு இழுத்துக்கறதா? இல்லை தினகரனின் அணியை இணைச்சிக்கிறதாங்கிற விவாதமெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு. அமித்ஷாவின் விசிட்டில், ஒரு சொந்தக் காரணமும் இருக்கு''
""என்ன காரணம்?''’
""அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிரபல அமெரிக்க நிறுவனமான அமேசானின் இந்திய ஏஜென்ஸியைக் கையில் வச்சிருக்காரு. ஆரம்பத்தில் 50, 60 கோடின்னு டேர்ன் ஓவர் செஞ்ச இந்த நிறுவனம், பா.ஜ.க. ஆட்சி வந்தபிறகு இப்ப 1000 கோடியைத் தாண்டி பிஸ்னஸில் கொடிகட்டிப் பறக்குது. இந்த நிறுவனத்துக்கு, இங்க மத்திய அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய குடோனை கொடுப்பதற்கான வேலைகள் ரகசியமா நடக்குது. இது தொடர்பான வேலைக்காகத்தான் அமித் ஷா தன் மகன் ஜெய்ஷா சகிதம் இங்கே வந்திருந்தாரு. அமித் ஷாவின் இந்த குடோன் விவகாரம் ஜெ.வின் டான்சி நில ஊழல்போல் விரைவில் பூதாகரமா இந்தியாவையே உலுக்கப் போகுதுன்னு இதை ஊன்றிக் கவனித்து வரும் காங்கிரஸ் தரப்பு சொல்லுது. இதையெல்லாம் மறைக்கத்தான் இங்கே ஊழல் தலைவிரிச்சி ஆடுதுன்னும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும்னும் பரபரப்பா பேசிட்டுப் போயிருக்கார் அமித் ஷா''’’
""காங்கிரஸ் தலைமையின் பார்வையும் தீவிரமா தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கே?''’
""ஆமாங்க தலைவரே... திருமா, கமலைத் தொடர்ந்து இப்ப இயக்குநர் பா.ரஞ்சித்தையும் ராகுல்காந்தி சந்திச்சிருக்கார். இந்திய அளவில். பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் பிரபலங்களை எல்லாம் சந்திச்சிட்டிருக்காரு ராகுல். ஏற்கெனவே குஜராத் இளம் தலித் எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானியை ராகுல் சந்திச்சார். அதேபோல் இஸ்லாமிய அறிஞர்களையும், பலதுறை வல்லுநர்களையும்கூட சந்திச்சிக்கிட்டு இருக்கார். இயக்குநர் ரஞ்சித்தைச் சந்தித்தபோது, ராஜீவ் வழக்கில் சிக்கியிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையாவதில் தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்பதை ராகுல், ரஞ்சித்திடம் அழுத்தமாகவே தெரிவித்தாராம். இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரமுகர்களை சந்திப்பதன் மூலம், அந்தந்த மாநிலத்திலும் காங்கிரசின் செல்வாக்கை உயர்த்த நினைக்கிறார் ராகுல்.''’
""தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸின் வியூகம் என்னவா இருக்கு?''
""தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசரோ, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் சீட் வாங்கி நிற்கவேண்டும்னு நினைக்கிறார். தற்போது தி.மு.க. கூட்டணியில் சீட் தொடர்பாக மாறுபட்ட கருத்து இருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் திருமா, மக்கள் நீதி மய்ய கமல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தினகரன் ஆகியோரோடு தனி அணியாய் நிற்பது சரியாக இருக்குமா... அதன்மூலம் தி.மு.க.வுக்கு சீட் நெருக்கடியைத் தரமுடியுமா என்றும் யோசிக்கிறாரு. அதோடு, ரஞ்சித்தை ராகுல் சந்திச்சதே ரஜினியை காங்கிரஸ் பக்கம் இழுக்கத்தான்னும் பேச்சு இருக்கு.'' ’
""அதெல்லாம் இருக்கட்டும்... ரஜினி-கமல் ரெண்டுபேரின் முகாமும் இப்ப எந்த நிலையில் இருக்கு?''’
""ரஜினியைப் பொறுத்தவரை, ஜூன் மாதத்திற்குள் மாவட்டம்தோறும் இருக்கும் நிர்வாகிகள் தொகுதி வாரியாகக் களமிறங்கி, வார்டுகள்தோறும் பூத் கமிட்டிகளை அமைச்சாகணும்ன்னு உத்தரவு போட்டிருந்தார். அதேபோல் பல இடங்களிலும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கு. ஆனால் ஜூன் போய் ஜூலையே வந்தபிறகும் அவரிடமிருந்து கட்சி குறித்து எந்த அறிவிப்பும் வரலை. எந்திரனின் இரண்டாம் பாகமான ’2.0’ நவம்பரில் வெளியாகும்ங்கிற நியூஸ் மட்டும் வந்திருக்கு. இடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக டார்ஜிலிங்கில் நாட்களை செலவிட்ட ரஜினி, மறுபடியும் 15-ந் தேதிவாக்கில் டேராடூன் போகப்போறாராம். இதுக்கிடையில் சங்கிலி முருகன் தயாரிப்பில் ஒரு புதுப் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்குது. இந்த நிலையில் அவரது மக்கள் மன்ற செயலாளர் ராஜுமகாலிங்கத்தை ரஜினி நீக்கிட்டாருன்னு ஒரு தகவல் சமூக ஊடகங்கள்ல பரவி பரபரப்பாச்சு. கடைசியில் ரஜினி மன்ற நிர்வாகி சுதாகரோ, அந்த செய்தி உண்மைக்குப் புறம்பானதுன்னு மறுத்திருக்கார்''’
""அரசியல் கட்சி தொடங்கறதுக்கு முன்னாடியே இப்படிப்பட்ட உள் அரசியல் நடப்பதை புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்கும் கமலும் கவனிச்சிக்கிட்டுதானே இருப்பார்''’
""உண்மைதாங்க தலைவரே, தனது கட்சியான மக்கள் நீதி மய்யத்தைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில், 12-ந் தேதி தன் கட்சி அலுவலகத்தில் கொடியேத்தியதோடு, புதிய நிர்வாகிகளையும் அறிவிச்சிருக்கார். அதன்படி கட்சியின் தலைவராக கமலும் துணைத் தலைவராக பட்டிமன்றப் புகழ் கு.ஞானசம்பந்தனும் பொதுச்செயலாளராக நம்ம நக்கீரன் ஏற்கெனவே சொன்ன, தூத்துக்குடி துறைமுகக் காண்ட்ராக்டரான ’வெயிட் பார்ட்டி’ அருணாச்சலமும், பொருளாளராக சுகா என்கிற சுரேஷும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சியின் உயர்நிலைக் குழுவைக் கலைத்துவிட்டு, அதில் இருந்தவர்களை செயற்குழு உறுப்பினர்களாக அறிவித்திருக்கிறார் கமல். அரசியல் அனுபவமே இல்லாதவர்களால் தொடங்கப்பட்டிருக்கும் கட்சி என்பதால், அதை கீழ்மட்டம்வரை எப்படிக் கொண்டுசெல்வது என்ற திகைப்பு, அதன் நிர்வாகிகளுக்கே இருக்கிறதாம்''’
""பணம், பதவி, அதிகாரம்ன்னு எல்லாம் இருந்தும் தங்கள் செய்திச் சேனலுக்கு உரிமம் வாங்கமுடியாமல், முதல்வர் எடப்பாடி தரப்பு தவிக்குது போலிருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, எடப்பாடி தரப்பு ’நியூஸ் ஜெ.’ங்கிற செய்திச் சேனலைத் தொடங்க இருப்பது குறித்து நாம் ஏற்கெனவே பேசியிருக்கோம். அந்த சேனல் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரரான ராதாகிருஷ்ணன் பலரிடமும் பேசிக்கிட்டிருக்கார். சவுடு மணல் மூலம் கிடைக்கும் கமிஷனை இதுக்கு மூலதனமாக்க திட்டமிட்டிருக்கு எடப்பாடி தரப்பு. டெல்லிக்கு சலாம் போட்டும்கூட இன்னும் சேனலுக்கான உரிமத்தை வாங்க முடியாமல் டெல்லியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதாம் சேனல் தரப்பு.''’
""டெல்லிக்கும் எடப்பாடிக்கும் இருக்கும் உறவு நிலை இருக்கட்டும். எடப்பாடி அமைச்சரவையில் இருக்கும் மந்திரிகள், ஆட்சி உள்ளவரை அள்ளிச் சுருட்டுவதில் தீவிரமா இருக்காங்களே!''
""உண்மைதாங்க தலைவரே, மக்களின் விருப்பத்துக்கு மாறாக கார்ப்பரேட்காரர்களுக்காக அமைய இருக்கும் 8 வழிச்சாலை பகுதியில் 8 சுங்கச்சாவடிகள் அமையப்போகுது. அந்த 8 டோல்கேட்டையும் முதல்வர் எடப்பாடியும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும் ஆளுக்கு நாலுன்னு பிரிச்சிக்க பிளான் பண்ணிட்டாங்க. அந்த 8 டோல்கேட்டுகளின் காண்டராக்ட் மூலம் கிடைக்கும் பலன் முழுதும், அந்த இருவருக்கும் போகப் போறதைப் பார்த்த சீனியர் மந்திரிகள் கொதிப்பில் இருக்காங்க. எங்களுக்கும் பங்கு வேண்டும், ஆளுக்கு எத்தனை டோல்கேட்டுனு முடிவு பண்ணுங்கன்னு மந்திரிகள் முட்டி மோதுறாங்க.''’
""மக்களின் வாழ்வுரிமையைப் பற்றி கவலைப்படாமல் கல்லா கட்டுற அரசியலுக்கு இடையே, மொழி உரிமை பற்றிய முக்கியமான தகவலைச் சொல்றேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இருக்கும் 22 மொழிகளையும் ஆட்சி மொழி ஆக்கணும்னு "முரசொலி மாறன்' காலத்திலிருந்தே தி.மு.க. வலியுறுத்தி வந்தது. இந்த வகையில் அவருக்கு அடுத்து இது தொடர்பாக தி.மு.க. எம்.பி., திருச்சி சிவாவும் வலியுறுத்தி வந்தார். அதற்கு ஆறுதல் பரிசுபோல, துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு, 18-ந் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இருந்து, ராஜ்யசபாவில் 22 மொழிகளிலும் பேசவும், அது மொழிபெயர்க்கப்படும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிச்சிருக்காரு. இதனால் பல மாநிலங்களின் பாராட்டும் தி.மு.க.வுக்கும் திருச்சி சிவாவுக்கும் கிடைச்சிருக்கு.''