""ஹலோ தலைவரே, கள ஆய்வு நடத்தி கட்சியினரிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கிய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஒருவழியாகக் கையில் சாட்டையை எடுத்திருக்கார்.''’
""ஆமாம்பா... தி.மு.க.வின் தோல்விகளுக்கு கட்சியில் இருக்கும் செயல்படா நிர்வாகிகள்தான் காரணம்ன்னு, கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் மனம் குமுறிக்கிட்டிருந்த நிலையில், அப்படி செயல்படாதவர்களைக் கண்டறிய மாவட்ட வாரியாகக் கள ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அதில் புகார்ப் பெட்டிகளையும் வைத்திருந்தார் ஸ்டாலின். உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்த தொண்டர்கள் பலரும், பெட்டியில் போடப்பட்ட அந்தப் புகார்கள் எல்லாம், கிணற்றில் போட்ட கல்லாகிவிடுமோங்கிற கவலையில் இருந்தாங்க. இதுபத்தி நாம், பலமுறை பேசியிருக்கோமே.''’
""ஆமாங்க தலைவரே, ஈரோடு தி.மு.க. மண்டல மாநாட்டுக்கு முன்னும் பின்னுமா நடத்தப்பட்ட கள ஆய்வுக் கூட்டங்களின் போது நிர்வாகிகள் மீது தெரிவிக்கப்பட்ட புகார்கள், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கைகளுக்குப் போகாதவாறு மிக கவனமாக ரகசியமாகத் தொகுக்கப்பட்டது. அந்தப் புகார்களில் எந்த அளவிற்கு உண்மை இருக்குதுன்னு ஆராய, வழக்கறிஞர்கள் டீமை தி.மு.க. தலைமை களமிறக்குச்சு. அவங்க அங்கங்கே களமிறங்கி விசாரணைகள் நடத்தியும், உண்மைத் தகவல்களை சேகரிச்சும், தலைமையிடம் ரிப்போர்ட்டைக் கொடுத்தாங்க. அந்த ரிப்போர்ட், சபரீசன் தலைமையிலான ஓ.எம்.ஜி. குழுவிற்குப் போய் பரிசீலிக்கப்பட்டு இப்ப அதிரடி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கு.''’
""இந்த நடவடிக்கைகள் பற்றி, தி.மு.க. தொண்டர்கள் என்ன நினைக்கிறாங்க?''’
""முதன்முதலா தி.மு.க., கொங்குமண்டல கோவை மாவட்டக் கள ஆய்வுக் கூட்டத்தைத்தான் நடத்துச்சு. இப்ப அதிரடி நடவடிக்கைகளும் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம்ன்னு கொங்குமண்டலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கு. மா.செ.க்கள் முதல் ஒ.செ.க்கள் வரை அதிரடி நடவடிக்கைகள் பாய்ஞ்சிருக்கு. கோவை கிழக்கு மாவட்டத்தில் தமிழ்மணி மீதான புகார்களால் அவரது பதவியைப் பறித்து, அதை தென்றல் செல்வராஜிடம் தி.மு.க. தலைமை கொடுத்திருக்கு. இதுக்கு தொண்டர்களிடம் ஆதரவு வெளிப்படுது. காரணம், செல்வராஜ், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, சிறைக்கு சென்றிருக்கிறார். அதேபோல் நிறைய இளைஞர்களையும் கட்சிக்குள் கொண்டுவந்த களப்பணியாளர் இவர் என்பதால் இந்த நியமனத்துக்கு உ.பி.க்கள் ஓ.கே. சொல்றாங்க.''’
""திருப்பூர் நிலவரம் எப்படி?''’
""திருப்பூர் மாநகர செயலாளர் பதவியை மேங்கோ பழனிச்சாமியிடமிருந்து பறித்து, மு.நாகராசனிடம் கொடுத்திருக்கிறது தலைமை. இந்த நாகராசன் ஏற்கனவே இதே பதவியில் இருந்து மாற்றப்பட்டவர். அவருக்கே மறுபடியும் பதவி கொடுத்ததில் பலரும் ஷாக்காகியிருக்காங்க. ஆனா பதவிப் பறிப்பு பற்றிய செய்தி வந்தபோது, மேங்கோ பழனிச்சாமி, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கான பட்டியலைத் தயார் பண்ணிக்கிட்டிருந்தாராம். செய்தி அவரிடம் சொல்லப்பட்டதும், அப்படியா?ன்னு கேட்டு அந்தப் பட்டியல் தயாரிக்கும் வேலைகளை முடிச்சிட்டு, நாளை எனக்கு என்ன பணின்னு சொல்லுங்க. செய்யறேன்னு மா.செ.யிடம் சொன்னாராம்.''
""ஸ்டாலின் வியூகம் என்ன?''
""முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு தொண்டர்களின் ரியாக்ஷன் எப்படின்னு பார்த்துட்டு, அதன் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கையை எடுக்கலாம்ன்னு ஸ்டாலின் நினைக்கிறார். வெளிப்புற எதிர்ப்புகளை விட, கட்சிக்குள்ளேயே இருக்கும் கசப்புகளை சரிபண்ணினால்தான், 2011, 2016-ல் ஏற்பட்ட நிலைமை இல்லாமல், வரும் தேர்தல் களத்தில் தோல்விகளைத் தவிர்க்கமுடியும் என்பது அவரது கணக்கு. அதே நேரம், புதிய புதிய கட்சிகள் களத்துக்கு வரும் நேரத்தில், நடவடிக்கைகளில் அதிக வேகம் காட்டினால், பதவி பறிக்கப்படுகிறவர்கள், கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்குப் போனால் என்ன செய்வது? என்ற தயக்கமும் ஸ்டாலினுக்கு இருக்குது. அதனால் சாட்டையை சுழற்றுவதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க நினைக்கிறார்.''’
""ஸ்டாலின் சாட்டை எடுத்த அதே நாளில் மு.க.அழகிரி, தன் அமைதியைக் கலைத்து வாய் திறந்திருக்காரே?''
""தலைவரே, மதுரையில் அவரது மனசாட்சியாக வர்ணிக்கப்படும் மன்னன் மகள் திருமணத்தை 10-ந் தேதி நடத்திவச்ச அழகிரி, கலைஞர் இப்போது சிரிக்கிறார். விரைவில் பழைய மாதிரி திரும்பி வருவார். உண்மையானவர்களுக்கு சோதனை வரத்தான் செய்யும். வருகிற தேர்தலில் நமது பலம் என்னவென்று காட்டுவோம். அதுவரை பொறுத்திருங்கள்ன்னு தன் ஆதரவாளர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பேசினார். அதோடு, பதவி கிடைக்காதவர்கள் தேர்தல் முடிந்ததும் தி.மு.க.வை விட்டுப் போயிடுவாங்கன்னும் சொன்னாரு. அழகிரி அருகில் அ.தி.மு.க. சோலைராஜா, பா.ஜ.க. பிரமுகர் அரசகுமார், ரஜினி ரசிகர்மன்றப் பிரமுகர்கள் போன்றோர் நிற்பதைப் பார்த்த கட்சியின் சீனியர்கள், சம்பந்தா சம்பந்தமில்லாத ஆட்கள் 'அ'னாவை சுத்தி சுத்தி வர்றதைப் பார்த்தா, அவரை ரஜினி பக்கம் தள்ளிக்கிட்டுப் போயிடுவாங்களோன்னு கவலையா இருக்குங்கிறாங்க தென் மாவட்ட உ.பி.க்கள்.''’
""ரஜினி பக்கம் டெல்லியின் பார்வையும் தீவிரமா திரும்பியிருக்கு போலிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, அண்மையில் கவர்னர்கள் மாநாட்டுக்காக டெல்லிக்குப் போன தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் அழைத்து விவாதித்தது பத்தியெல்லாம் போன நக்கீரன் இதழ், விரிவாவே எழுதியிருக்கு. கவர்னரை மேலும் 2 நாள் அங்கேயே தங்கியிருக்கச் சொன்ன மோடி, மறுபடியும் பன்வாரிலாலை அழைத்து, தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசிட்டு மக்களிடம் ரஜினியின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்குன்னு விசாரிச்சிருக்கார். பன்வாரிலாலோ, அதுபத்தி எனக்கு எதுவும் தெரியலைன்னு சொல்லியிருக்கார். மோடியோ, ரஜினியின் சினிமா இமேஜும், அவர் தொடங்கப்போகும் புதிய அரசியல் கட்சி பற்றிய செய்தியும், தமிழக மக்களிடம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குன்னு உடனடியா ஒரு சர்வே எடுக்கச்சொல்லுங்கன்னு உத்தரவிட்டிருக்கார். இதைத் தொடர்ந்து சென்னை திரும்பிய பன்வாரிலால், சர்வே குறித்த ஆலோசனைகளை நடத்திக்கிட்டிருக்கார்.''’
""இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சின் கட்சிப் பதவிகளைத் தேர்தல் கமிஷன் அங்கீகரிச்சிருக்கே? இது தினகரன்-சசிகலா தரப்புக்கு மேலும் சங்கடத்தைக் கொடுத்திருக்கே.''’
""ஆமாங்க தலைவரே, ஏற்கனவே சசிகலா-தினகரன் டீமிலிருந்து ஒதுங்கிய திவாகரன், அண்ணா திராவிடர் கழகம்ங்கிற புதுக்கட்சியை 10-ந்தேதி ஆரம்பிச்சதோட, கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தினாரு. புதுக் கட்சியின் பொதுச் செயலாளர்ன்னு தன்னை அறிவித்துக்கொண்ட திவாகரன், இதன் மாணவர் மற்றும் இளைஞரணி செயலாளரா தனது மகன் ஜெய் ஆனந்தை நியமிச்சிருக்கார். கட்சியில் திருநங்கைகளுக்கான அணியும் இருக்குதாம். திவாகரனின் இந்த புதுக்கட்சி அறிவிப்பு நிகழ்ச்சியில் அவர் மகன் ஜெய் ஆனந்த் தலைகாட்டலை. அதே நாளில் மன்னார்குடியில் இருந்த டி.டி.வி.தினகரன், எங்கள் முன்னாள் மாமா அவசரப்பட்டு கட்சியைத் தொடங்கிவிட்டார். இதனால் எங்களுக்கு எந்தவிதப் பாதிப்புமில்லைன்னு சொல்லியிருக்கார்.''’
""தினகரன், திவாகரன் மோதல் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தரப்பிற்கு அல்வா சாப்பிட்டமாதிரி இனிப்பா இருக்குமே?’''
""இருக்கணும். ஆனால் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு இடையிலேயே இணக்கம் இல்லை. ஓ.பி.எஸ், அண்மைக்காலமா தனது துறைகள் மூலம் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட தங்கள் கட்சிப் பிரமுகர்களுக்கு என்னென்ன சலுகைகளைக் காட்ட முடியுமோ அத்தனையையும் தாராளமா காட்டறார். எம்.எல்.ஏ.க்கள் கை நீட்டும் நபர்களுக்கெல்லாம் எந்த பிரதிபலனும் இல்லாமல் காண்ட்ராக்ட் கொடுக்கப்படுது. அதனால் இப்ப எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்களே, கேட்டதை எல்லாம் கொடுக்கும் காமதேனுவா ஓ.பி.எஸ்.சைப் பார்க்கறாங்களாம். இதனால் ஓ.பி.எஸ். பக்கம் இருந்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 11-ல் இருந்து இப்ப 40-ஐ நெருங்கி இருக்குதாம். இதையறிந்து ஷாக்கான எடப்பாடி, ஓ.பி.எஸ்.சுக்கு எதிரா காய்களை சீக்ரெட்டா நகர்த்திக்கிட்டு இருக்காராம்.''’
""ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், மின்சாரத்துறைக்குத் தேவையான காப்பருக்கு தட்டுப்பாடு வந்திடிச்சின்னு சொல்றாங்களே?''’
""இந்தியாவைப் பொறுத்தவரை குஜராத்தில் பிர்லா குரூப் நடத்தும் பிர்லா காப்பர் தொழிற்சாலையும் ஜார்கண்டில் அரசே நடத்தும் இந்துஸ்த்தான் காப்பர் தொழிற்சாலையும் இயங்கினாலும், இந்தியாவின் காப்பர் தேவையை முழுமையா ஈடுகட்ட முடியாதாம். தமிழகத்துக்கு காப்பர் வயர் சப்ளை செய்யும் புதுவைக் கம்பெனியான சீக்கம் நிறுவனம், தனக்குத் தேவையான காப்பரை ஜப்பான், அமெரிக்கா, தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் முயற்சியில் இருக்குதாம். இதேபோல் காப்பருக்கு எல்லா நிறுவனங்களும் இறக்குமதியை நம்புது.''
""எஸ்.வி.சேகர், 10-ந் தேதி, புரொடியூஸர் கில்டு தேர்தலில் ஓட்டுப் போட வந்திருக்காரே?''’’
""ஆமாங்க தலைவரே, சில அமைச்சர்களே கூட, முதல்வர் எடப்பாடியிடம் போய், சேகரை ஏன் இன்னும் கைது பண்ணலைன்னு கேட்டிருக்காங்க. ஒருவர் மீது எஃப்.ஐ.ஆர் போட்டபின், அவர் குறித்து விசாரித்துக் குற்றப்பத்திரிகையைத் தயாரிப்பார்கள். அப்போது சம்மந்தப்பட்ட நபர் வெளியே இருந்தால், அவர் சாட்சியைக் கலைச்சிருவாருன்னுதான் அவரைக் காவல்துறையினர் கைதுசெய்வார்கள். ஆனால் எஸ்.வி.சேகர் விசயத்தில் அவசர கதியில் குற்றப்பத்திரிகையும் தயாரித்துவிட்டது. அதனால் அவரைக் கைது செய்யவேண்டிய அவசியம் இல்லைங்கிறதுதான் காவல்துறையின் நிலைப்பாடு.''’
""என்கிட்ட உள்ள தகவலைச் சொல்றேன். சத்துணவுக்கான முட்டைக் கொள்முதலில் நடக்கும் ஊழல்கள் பத்தி நம்ம நக்கீரன் அவ்வப்போது எழுதிக்கிட்டிருக்கு. இந்த நிலையில் இப்போது சத்துணவுக்கான முட்டைகளை, அதில் குத்தப்படும் நீலநிற முத்திரையை அழித்துவிட்டு, கடைகளுக்கு அனுப்பி அதிகாரிகள் கல்லா கட்டுகிறார்களாம். இதில் துறைமந்திரி சரோஜாவரை பெரும் லாபமாம். இதையறிந்த முதல்வர் எடப்பாடி, கடுமையாக மந்திரியை கண்டித்ததோடு, பவர் இல்லாத் துறைக்கு மாத்திடுவேன்னும் எச்சரிச்சிருக்காராம்.''’