""ஹலோ தலைவரே, கலைஞர்... கலைஞர்... கலைஞர்... இதுதான் தமிழ்நாடு முழுக்க ஒலிக்கிற குரல்...''’
""உண்மைதாம்பா. கலைஞர் உடல்நிலை பற்றிய அதிர்ச்சியூட்டும் வதந்திகள் குபீர் குபீர்ன்னு பரவிப் பதட்டத்தை உண்டாக்கறதும், அதுக்குப் பின்னாடியே காவேரி மருத்துவமனையின் அறிக்கை வந்து, கலைஞரின் உடல்நிலை சீராக இருக்குன்னு, ஆறுதல் சொல்றதும் மாறிமாறி நடந்ததே?''’
""ஆமாங்க தலைவரே, கலைஞரின் அரசியல் வாழ்க்கையைப் போலவே இப்ப அவரோட இதயத் துடிப்பும் போராட்டத்தை சந்திச்சிக்கிட்டு இருக்கு. அதேசமயம், அவர் குறித்த எந்தத் தகவலும் மறைக்கப்படாமல், மருத்துவமனை அறிக்கைகளாகப் புகைப் படங்களோட வெளியாகிக் கிட்டே இருக்கு. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். போன்ற பிரபலங்களும் அவரை நேர்ல போய்ப் பார்த்து, அவர் நிலவரத்தைத் தெரிஞ்சிக்கிட்டுத் திரும்பறாங்க. 75 நாள் அப்பல்லோவில் ஜெ. சிகிச்சையில் இருந்தப்ப இப்படிப்பட்ட வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படலை. அவருக்கு என்ன நடந்தது? என்னென்ன சிகிச்சைகள் தரப்பட்டதுன்னு யாருக்கும் சொல்லப்படாமல் எல்லாமே மூடு மந்திரமாவே வைக்கப்பட்டிருந்தது. அவர் இறந்த பிறகும் கூட அவர் பத்தின ரகசியங்கள், மர்மமாவே வைக்கப்பட்டிருக்கு.''’
""ஜெ.வின் மரணத்தை விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷனுக்கே, சசி தரப்பு எந்த உண்மையையும் வெளிப்படுத்தாமல் இன்னும் ’தண்ணி காட்டுது’ போலிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, ஜெ.’மர்ம மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை கொடுத்த டாக்டர்கள், அவருக்கு சேவைசெய்த நர்ஸுகள், மருத்துவமனை ஊழியர்கள், ஜெ.வின் உதவியாளர்கள், டிரைவர்கள்னு பலரும் விசாரணைக் கமிஷனில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. ஆளாளுக்கு ஒண்ணு சொல்வதால், கமிஷனின் வழக்கறிஞர்கள், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.’தொடர்புடைய அறைகளைப் பார்வையிட அனுமதி வாங்கினாங்க. இதன்படி 29-ந் தேதி இரவு கமிஷன் வழக்கறிஞர்களான பார்த்தசாரதி நிரஞ்சன், சசியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் போனாங்க. ஜெ.’இருந்த அறை எண்: 2008 உட்பட சசிகலா, அமைச்சர்கள் தங்கியிருந்த அறை, ஜெ.வுக்கு ஆபரேசன் நடந்த அறைன்னு எல்லாத்தையும் பார்வையிட்டாங்க. இதேபோல் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும் அனுமதி வாங்கிக்கிட்டு, தன் கணவர் மாதவனோட அப்பல்லோ போனார். தீபாவுக்கு மட்டுமே அப்பல்லோ அனுமதி கொடுத்தது. வழக்கின் போக்கை முழுமையாகத் தெரிஞ்சிக்க, இந்த விசிட் பயன்படும்னு தீபாவும் சொன்னார். விசாரணைப் பட்டியலில் இல்லாத சிலரும் கமிஷனில் வாக்குமூலம் கொடுக்கப்போறதா சொல்லியிருக்காங்க.''’
""தமிழக ஒற்றுமை மேடைங்கிற இயக்கம் சார்பில் காங்கிரஸ் ப.சி., சி.பி.எம். சீதாராம் யெச்சூரி, தி.மு.க. திருச்சி சிவான்னு, பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் சீனியர்கள் சென்னையில் ஒன்றுகூடி கருத்தரங்கம் நடத்தியிருக்காங்களே. இந்த ஒற்றுமை தேர்தல் கூட்டணியா வடிவெடுக்குமா?''’
""நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்தே பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணி வடிவெடுப்பதற்கான அறிகுறிகள் பலமாவே தெரியுதுங்க தலைவரே, இதுக்கிடையில், பா.ஜ.க.வுக்கு எதிரான இன்னொரு அஸ்திரத்தையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்திருக்கு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராணுவத்துக்கு போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ரஃபேல் என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இது நடைமுறைக்கு வருவதற்குள், ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது. மோடி பிரதமரானதும், பிரான்சுக்குப் போய் அதே ரஃபேல் நிறுவனத்திடம் போர் விமானம் வாங்க, புதுசா ஒரு ஒப்பந்தத்தைப் போட்டிருக்கார். காங்கிரஸ் ஒதுக்கிய விலையைவிட, மிக அதிகமான ரேட்டுக்கு மோடி ஒப்பந்தம் போட்டிருக்கார் என்பது ராகுலின் குற்றச்சாட்டு. அதனால் இது சம்பந்தமா நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஊழல் புகார்களை எழுப்பிவரும் ராகுல், இப்ப மோடிக்கு எதிரா ஊழல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடர இருக்காராம். அதற்காக முன்னாள் ராணுவ அமைச்சரான காங்கிரஸ் ஏ.கே. அந்தோணியுடன் ராகுல் இரண்டு முறை டிஸ்கஷன் நடத்தியிருக்காராம்.''’
""நானும் ஒரு முறைகேடு பத்தின விசயத்தைச் சொல்றேன். பன்வாரிலால் புரோகித் இங்க கவர்னரா வந்ததுமே, கவர்னர் மாளிகை குறித்த விவகாரங்களைத் துருவச் சொல்லியிருக்கார். இதைத் தொடர்ந்து கவர்னரின் ஆலோசகர் ராஜகோபால், பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் காலத்தில் வாங்கப்பட்ட பர்னிச்சர்களில் 60% பர்னிச்சரைக் காணவில்லைன்னு கண்டுபிடிச்சி, விசாரணையில் இறங்கி இருக்கார். அப்ப அந்த பர்னிச்சர்களை வித்யாசாகர், மும்பைக்கு கூடவே எடுத்துக்கிட்டுப் போயிட்டாராம். இதையறிந்து ஷாக்கான ராஜகோபால், இது தொடர்பாக வித்யாசாகருக்கே கடிதம் எழுதிக் கேட்கலாமான்னு கவர்னரிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறார்.''