""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் தர்மயுத்தத்தை நடத்துவார்ன்னு எதிர்பார்க்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., திடீர்ன்னு பவ்யம் காட்ட ஆரம்பிச்சிட்டாரு.''’

ops-eps""ஆமாம்பா, தனக்கு கட்சியிலும் ஆட்சியிலும் உரிய மரியாதை கிடைக்கலைன்னும், போதுமான அதிகாரம் தரப்படலைன்னும் டெல்லிவரை முட்டி மோதிக்கிட்டிருந்தவர் தானே ஓ.பி.எஸ்.''’

""உண்மைதாங்க தலைவரே, அதோட அண்மையில் டெல்லி சென்ற ஓ.பி.எஸ்.சை., மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்து, காத்திருக்க வச்சி அனுப்பிட்டார். அதனால் டெல்லியில் இருந்து கோபமா சென்னைக்குத் திரும்பிய ஓ.பி.எஸ்., விமான நிலையத்திலேயே, எதையும் தாங்கும் இதயம் வேண்டும்னு பேட்டி கொடுத்துட்டு அதே கோபத்தோட வீட்டுக்குப் போனார். இதனால் அவர் பற்றிய ’தர்மயுத்த எதிர்பார்ப்பு’ எல்லோர் மத்தியிலும் மளமளன்னு கிளம்புச்சு. ஆனால் அடுத்த நாளே, சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், வழக்கத்துக்கு மாறா, தன்னை விட இளையவரான முதல்வரை அன்பு அண்ணன் எடப்பாடி அவர்களேன்னு மேடையில் பேசியதோட, காவேரி மருத்துவமனையில் இருக்கும் கலைஞரைப் பார்க்க, முதல்வர் எடப்பாடியோட வந்தப்பவும், அவரோட கார் கதவைத் திறந்தும் ஓ.பி.எஸ். பவ்யம் காட்டினாரு. காரணம், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை எடப்பாடி தீவிரமா முடுக்கிவிட்டிருக்காராம். நெருக்கடி தன்னை நெருங்கி வருவதைக் கண்டதால்தான் இந்த சரணாகதியாம்.''’

""சரிப்பா, இப்ப எடப்பாடியையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் மத்திய உளவுத்துறை தீவிரமா கண்காணிக்கிதாமே?''’

Advertisment

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, அண்மையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பலரையும் எடப்பாடி அரசு இஷ்டத்துக்கும் டிரான்ஸ்பர் பண்ணியிருக்கு. அதோடு ஜூன் 30-ந்தேதி 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுத்து டிரான்ஸ்பர் போட்டது. கடந்த 27-ந் தேதி 19 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அங்கே இங்கேன்னு தூக்கியடிச்சிருக்காங்க. இது தொடர்பாக ஐ.பி.எஸ்.அதிகாரிகளிடமிருந்து டெல்லிக்கு எரிச்சலான புகார்கள் போயிருக்குதாம். அதனால் டெல்லி உத்தரவுப்படி தமிழக அரசின் செயல்பாடுகளை விசாரிக்கத் தொடங்கிய மத்திய உளவுத்துறை, தமிழகத்தில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு வீச்சுன்னு சட்டம்- ஒழுங்கு மோசமாக இருக்குன்னும் ரிப்போர்ட் அனுப்பியிருக்கு. அதேபோல் மத்திய உளவுத்துறை முதல்வர் எடப்பாடியையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் தீவிரமாகக் கண்காணிச்சிக்கிட்டும் இருக்குதாம். ஊழல் புகார்கள் அதிகரிச்சிக்கிட்டிருக்கும் நிலையில், எம்.பி. தேர்தலும் நெருங்கி வருவதால் அ.தி.மு.க. ஆட்சிக்கு கவுண்ட் டவுன் ஆரம்பிச்சிடிச்சின்னு உளவுத்துறை வட்டாரத்தில் சொல்றாங்க.''’

""மத்திய உளவுத்துறையின் கைங்கர்யம், தி.மு.க.வையும் விட்டுவைக்கலை போலிருக்கே?''’

""கலைஞர் உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், தி.மு.க.விலிருந்து விலகியும் விலக்கப்பட்டும் இருந்த மு.க.அழகிரி, சென்னைக்கு வந்து காவேரிக்கு விசிட் அடிக்கிறாரு. இது அடிமட்டத் தொண்டர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியிருக்கு. ஆனாலும், சகோதர யுத்தம் எப்ப ஆரம்பிக்கும்னு டெல்லி உளவுத்துறை தீவிரமா கண்காணிக்குது. அதுபற்றி நம்ம நக்கீரனில் தனிக் கட்டுரையே வந்திருக்கு.''’

Advertisment

sushma""உடல்நிலையால் எல்லோரையும் கடந்த ஞாயிறன்று பயமுறுத்திய கலைஞர், அதன்பிறகு தேறியது போட்டோவா வந்ததே... அவர் உடல்நிலையை விசாரிச்ச மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரை, இது மகிழ்ச்சியைத் தந்திருக்காமே?''’

""சிறந்த மருத்துவர்களின் அக்கறையான கவனிப்பில், கலைஞரின் உடல்நிலை நல்லாவே தேறியது. அவரது உடல் நலனைக் கனிமொழியிடம் விசாரிச்சாரு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். அவர்கிட்ட, கலைஞர் தேறிவரும் ஸ்வீட் நியூஸைச் சொல்லி மகிழ்ந்திருக்கார் கனிமொழி. அதுக்கு சுஷ்மா சுவராஜ், உங்களுக்கு நானும் ஒரு ஸ்வீட் நியூஸைத் தர்றேன். நீங்க கேட்டுக்கிட்டபடி ஈரானில் கொத்தடிமையா தவிச்சிக்கிட்டு இருந்த 21 மீனவர்களையும் மீட்கும் நடவடிக்கை தொடங்கிடிச்சி. விரைவில் அவங்க தமிழகம் திரும்புவாங்கன்னு சொல்லியிருக்கார். என்ன விசயம்னா, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள், ஈரானில் சிக்கியிருப்பது பற்றி, மாஜி மந்திரியும், சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன்தான், கனிமொழியின் கவனத்துக்குக் கொண்டுபோனார். அனிதா மூலமா, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், நிதி உதவி கொடுக்கச் செய்த கனிமொழி, இது தொடர்பான தகவலை வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜிடம் கொண்டு போனார். இதைத் தொடர்ந்தே அந்த 21 மீனவர்களும் வரிசையா மீட்கப்படுகிறார்கள்.''’

""மீனவர்கள் மீட்கப்படுவது மகிழ்ச்சியான தகவல்தான். ஆனால், உலக அளவில் சிறந்த பொறியாளர்களை உருவாக்கித் தரும் பெருமைவாய்ந்த அண்ணா பல்கலைக் கழகம் மீள முடியாத அவமானத்தில் சிக்கியிருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, சென்னையில் மத்திய அரசு நிறுவனமான ஐ.ஐ.டி.க்கு எதிரில் இருக்கும் அண்ணா பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி.க்கு சற்றும் குறையாத வகையில், உலகப் புகழ் பெற்ற பொறியாளர்களை உருவாக்கிய பெருமையோடு தலைநிமிர்ந்து நின்றது. அப்படிப்பட்ட பல்கலைக் கழகத்தில், மறு கூட்டலுக்கான தேர்வில், மாணவர்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கிக்கொண்டு, அதிக மார்க்கை அள்ளிக் கொடுத்து, திறமையற்ற மாணவர்களையும் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரியாக இருந்த உமா உட்பட 10 பேர் வளைக்கப்பட்டிருக்காங்க. இந்த மோசடி டீம், ஒரு செமஸ்டருக்கு இந்த வகையில் 45 கோடி ரூபாய்வரை கல்லா கட்டியதா தகவல் வருது. இது தொடர்பான விசாரணை தீவிரமாகப் போய்க்கிட்டு இருக்கு. இதில் இன்னும் யார் யார் சிக்கப் போறாங்கன்னு கல்வித்துறையே திகைச்சுப் போய் உன்னிப்பா கவனிச்சிக்கிட்டு இருக்கு''’

""ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பெரும்புள்ளிகளின் சப்போர்ட் இல்லாமல் இப்படி ஒரு மெகா ஊழல் நடக்க வாய்ப்பில்லையே?''’

""உண்மைதாங்க தலைவரே, பெரும்புள்ளிகள் சப்போர்ட்டோடதான் இந்த மெஹா ஊழல் நடந்திருக்குன்னு அதிகாரிகள் தரப்பு அழுத்தமா சொல்லுது. அண்மையில் செய்யாத்துரையும், எடப்பாடியின் சம்பந்தியான சுப்பிரமணியும் வருமான வரித்துறையின் ரெய்டு வேட்டையில் பலமா சிக்கினாங்க. இதில் ஏகப்பட்ட கோடி ரூபாய் ரொக்கமும், நிறைய ஆவணங்களும் சிக்கின. இதில் இந்த தரப்புக்கு பலத்த அடின்னாலும் இதைவிடப் பெரிய அடி, என்னன்னா, இவங்க குறிவச்சிருந்த 8 வழிச் சாலை தொடர்பான மெஹா காண்ட்ராக்ட், இவங்களுக்குக் கிடைக்காது என்பதுதான். இது பல ஆயிரம் கோடி பட்ஜெட் என்பதால் இது இண்டர்நேஷனல் காண்ட்ராக்ட் ஆகுது. டெண்டர் விதிப்படி, ரெய்டில் சிக்கிய இவர்களின் எஸ்.பி.கே. நிறுவனத்தால், இந்தக் காண்ட்ராக்டை எடுக்கமுடியாதாம். இதுதான் எடப்பாடி தரப்பை பலத்த அப்செட்டில் ஆழ்த்தியிருக்கு''’’

""தமிழக பா.ஜ.க. தரப்புக்கும், அதன் டெல்லித் தலைமை பலத்த அப்செட்டைக் கொடுத்திருக்குதாமே?''’

uma

""அதைப்பற்றி விரிவா சொல்றேங்க தலைவரே... தமிழகத்தைச் சேர்ந்த ஊடகத்துறை அதிபர்கள், செய்தி ஆசிரியர்களை டெல்லியில் சீக்ரெட்டாக சந்திச்சிருக்கார் பிரதமர் மோடி. இதற்கான ஏற்பாட்டை இங்குள்ள பா.ஜ.க. பிரமுகரான கே.டி.ராகவன் மூலம் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் செய்திருக்காரு. தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற ஊடகத்துறையை ஒத்துழைக்க வைப்பதுதான் இந்த ரகசிய சந்திப்பின் முக்கிய நோக்கம்னு சொல்றாங்க. பிரதமர் அலுவலகத்திலேயே நடந்த இந்த சந்திப்பின் போது, பலவற்றை அழுத்தமா வலியுறுத்தியதாம் பிரதமர் தரப்பு. ஊடகத் தரப்பினரோ பத்திரிகை சுதந்திரம் தொடர்பாகவும் தமிழகத்தை பாதிக்கும் நீட் பிரச்சினை போன்றவை தொடர்பாகவும் பேசினோம்னு சொல்றாங்க.''

""இதில் தமிழக பா.ஜ.க. தரப்புக்கு என்ன சங்கடம்?''

""நான் சொல்றேன்... இந்த சந்திப்பு குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்குத் தெரியல. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்னாருக்கு கடைசி நேரத்தில்தான் தெரியும். டெல்லி மேலிடமோ தமிழகத்தில் நிர்மலா சீதாராமனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இருக்கிறதாம். இதை இங்குள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் விரும்பாததால், அவர்களை நிர்மலா அலட்சியப்படுத்தியிருக்கிறாராம். தமிழக ஊடகப்பிரிவு பொறுப்பில் வேறொருவர் இருக்கும்போது, கே.டி.ராகவனை, மோடியிடம் தமிழக பா.ஜ.க. ஊடகப்பிரிவு பொறுப்பாளர் என்று நிர்மலா அறிமுகப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். இதுவேதான் தமிழக பா.ஜ.க. பிரமுகர்களின் அப்செட்டுக்கான காரணம்.''