ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பார்கள். அதுபோல... தமிழக காவல்துறை இரண்டு பழைய வழக்குகளை தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கையிலெடுத்தது. கூடுதல் விசாரணை என நாமகரணம் சூட்டப்பட்ட அந்த இரு வழக்குகளிலும் விசாரணையை நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்தது அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை. அந்த வழக்கில் ஜெ. மற்றும் எடப்பாடி ஆகியோர் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. லோக்கல் போலீஸ், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. என மூன்று அமைப்புகள் முயன்றும் ராமஜெயத்தை கொலை செய்த குற்றவாளிகளை மட்டுமல்ல... அதற்கு உதவிய கூலிப் படையினரைக் கூட நெருங்க முடியவில்லை.
உயர்நீதிமன்றத்தின் தலையீட்டில் சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. மற்றும் லோக்கல் போலீசார் இணைந்த டீம் ஒன்று உருவாக்கப்பட்டு ஜெயக்குமார் எஸ்.பி. தலைமையில் இந்த வழக்கை கூடுதல் விசாரணை செய்து வருகிறது. ராமஜெயத்தைக் கொன்றது சசிகலா தரப்பின் தலைமையில் இருந்துவந்த உத்தரவினால்தான். அந்த கொலைக்கு முன்புவரை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, கொலைக்குப் பின்பு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். சசிகலாவின் தம்பி திவாகரனின் சம்பந்தியான ஜெயச்சந்திரன், திருச்சி பகுதியில் துணை கமிஷனராக இருந்தவர். ஜெயச்சந்திரனுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்த ரவுடி சாமிரவி மூலம் செய்த கொலைதான் ராமஜெயம் கொலை. ஜெ.வை திருப்திப்படுத்த நடந்த இந்தக் கொலைக்கு ராமஜெயத்துக்கு நெருக்கமானவர்கள் உடந்தையாக இருந்தார்கள் என்பதை தற்பொழுது அந்த கொலையை விசாரிக்கும் டீம் முடிவு செய்திருக்கிறது. ஆனால் அதை நிரூபிக்க என்ன செய்வது என்பதில் திணறுகிறது.
முன்னாள் ரவுடிகள், ராமஜெயத்துடன் முன்பு மோதியவர்கள் என அனைவரையும் விசாரித்து வருகிறது. ஜக்கி வாசுதேவுக்காக ராமஜெயம், உளவுத்துறை அதிகாரியாக இருந்த கணேசன் என்பவரோடு கோவையில் மோதினார். ஜக்கியின் ஆசிரமத்துக்கு பக்கத்தில் உள்ள அவரது கட்டிடத்தை இடித்தார். அந்த உளவுத்துறை அதிகாரியின் மகன்கள் சென்னை யில் ரவுடிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு விசாரித்திருக்கிறது புலனாய்வு செய்யும் டீம். ஆனால் அவர்களிடமிருந்து ஒன்றும் கிடைக்கவில்லை என்கிறார்கள் போலீசார்.
ராமஜெயம் கொலையைப் போலவே, எடப்பாடி ஆட்சியில் நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கு, கொடநாடு கொலை வழக்கு, தி.மு.க ஆட்சி வந்த பிறகு, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி பல கட்ட விசாரணையை நோக்கி நகர்ந்தது.
எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியவர் கள் நேரடியாக பங்கேற்ற இந்த வழக்கில் கூடுதல் விசாரணையை ஐ.ஜி. சுதாகர் தலைமை யிலான டீம் விசாரித்து வருகிறது. எடப்பாடி ஆட்சியில் அவசர அவசரமாக விசாரித்து முடிக்கப்பட்ட கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை என களமிறங்கிய டீம், ராமஜெயம் வழக்கில் போலீஸ் டீம் திணறுவது போலவே திணறி வருகிறது.
ராமஜெயம் படுகொலை என்பது ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு. கொடநாடு வழக்கில் ஐந்து மரணங்கள். ஒரு மரணத்தை மட்டுமே எடப்பாடி அரசு பதிவு செய்து வழக்கில் சேர்ந்திருந்தது. மற்ற நான்கு மரணங்களையும் கூடுதல் விசாரணைக்குழு கணக்கிலெடுத்து புலன்விசாரணை செய்து வருகிறது. அதில் கொடநாட்டில் கம்ப்யூட்டர் மற்றும் சி.சி.டி.வி. ஆபரேட்டராக இருந்த தினேஷின் மரணத்திற்கு கொடநாடு கொலை கொள்ளையில் தொடர்பு இல்லை. தினேஷின் மரணம் காதல் தோல்வி யால் நிகழ்ந்த ஒரு தற்கொலை என்கிற முடிவுக்கு விசாரணை டீம் வந்திருக்கிறது.
கொள்ளையில் முக்கிய பங்கு வகித்த கனகராஜின் மரணம் மற்றும் கனகராஜின் நெருங்கிய நண்பரான சயானுக்கு கனகராஜ் செத்த அதே நாளில் நடந்த சாலை விபத்து, அதில் சயானின் மனைவியும் மகளும் இறந்து போனது, இவற்றின் பின்னணியில் சசி தரப்பு இருக்கிறதா என்பது பற்றி எந்த முடிவுக்கும் விடை தெரியாமல் புலனாய்வு டீம் திணறி வருகிறது என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். கொள்ளை முடிந்தவுடன் கனகராஜை கொலை செய்தார்கள் என குற்றவாளிகள் தரப்பிலிருந்தே சாட்சியங்கள் கிடைத்துள்ளன. எடப் பாடிக்கு மிக நெருக்கமான இளங்கோவனின் சொந்த ஊருக்குப் பக்கத்தில் நடந்த கொலை என்றாலும், இதில் ஆதாரம் கிடைக்கும் என்று கனகராஜ் கொலை வழக்கு என, தனியாக ஒரு வழக்கை போட்டு விசாரிக்க விசாரணை டீம் முடிவெடுத்திருந்தது. கடைசியில் அந்த முயற்சியை கைவிட்டது.
கனகராஜின் சகோதரர்களான தனபால், ரமேஷ் ஆகியோரை கொடநாடு கொள்ளை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்து கனகராஜின் செல்போன்களை அழித்து, தடயத்தை மறைத்தார்கள் என குற்றம்சாட்டியதோடு நிறுத்திக்கொண்டார்கள்.
சசிகலா, சஜீவன், சஜீவனின் தம்பிகள் சுனில் மற்றும் சிபி, ஆறுகுட்டி, அனுபவ் ரவி, பூங்குன்றன் என பலரை விசாரித்தது இந்த டீம். இறுதியாக, எடப்பாடியின் நேரடி பங்களிப்பு பற்றிய குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கை கூடுதல் விசாரணைக்கு கொண்டுபோன குற்றவாளி சயானையும் விசாரித்தது.
சயானிடம் இதுவரை "நீ சொன்னது உண்மையா?' என கேட்டது. அதற்கு சயான் அளித்த பதில் களை விசாரணை டீம் ஏற்றுக்கொள்ள வில்லை. "நீ எடப்பாடி பற்றி பொய் சொல் கிறாய்' என அவரையே எள்ளி நகையாடியது. மறுபடியும் இரண்டாவது முறையாக சயானை விசாரித்த விசாரணை டீம், இந்தமுறை அவரை கேலி செய்யவில்லை. "நீ ஏதாவது சொல்ல மறந்தாயா?' என்று மட்டும் கேட்டது. ஆனால் அந்த விசாரணை முடிவடையவில்லை. சயானுடைய விசாரணையை பாதியில் நிறுத்திவிட்டது.
சசி உட்பட இந்த வழக்கில் தொடர்புடை யவர்களிடம் விசாரணை நடத்திய டீம், அவர்களது சாட்சியங்களை வீடியோ எடுத்துக்கொண்டது. அவர்கள் சொல்வதை டைப் செய்துகொண்டது... அவ்வளவுதான்.
அனுபவ் ரவி , சஜீவன் மற்றும் அவரது சகோதரர்கள், கொள்ளையில் ஈடுபட்ட குற்ற வாளிகள், அப்பொழுது நீலகிரி எஸ்.பி.யாக இருந்த முரளிரம்பா மற்றும் கொடநாடு பகுதி டி.எஸ்.பி.யாக இருந்த சுரேஷ், நீலகிரி சிறப்பு உளவுப்பிரிவு ஆய்வாளர் சுகாசினி ஆகியோர், எடப்பாடி ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தியின் உத்தரவின் பேரில் இந்தக் கொள்ளை நிகழ்ந் ததை மறைக்க முயற்சி செய்தார்கள் எனச் சொன்ன சாட்சியங்களை என்ன செய்வது என்பது பற்றி ஒரு முடிவும் எடுக்கவில்லை.
இத்தனைக்கும் டி.எஸ்.பி. சுரேஷின் மனைவியும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மனைவியும் பள்ளித்தோழிகள் என தெரிந்தும் டி.ஐ.ஜி. யாக இருந்த முத்து சாமி அவரை காப்பாற்றி வந்தார். அத்துடன் கொடநாடு கூடுதல் விசாரணை யில் பங்கெடுக்க வைத்தார் என்கிறார் கள் போலீசார்.
முத்துசாமிக்கு காவல்துறையின் உயர்மட்டத்தில் இருக் கும் செல்வாக்கு இந்த வழக்கு விசாரணையின் வேகத்தைக் கட்டுப் படுத்துவதாக, விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். விசாரணையை மேலும் மேம்படுத்தினால் அது, எடப்பாடி பழனிசாமி, சேலம் இளங் கோவன் என விரிவடையும். இந்த வேகத்தை உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் விரும்பவில்லை. அதனால்தான் வேகம் தடைப் படுகிறது என்கிறார்கள்.
இன்றுள்ள நிலையில்.. சஜீவனிடம் ஒன்றும் பெரிதாகக் கிடைக்கவில்லை. அனுபவ் ரவி, பூங்குன்றன் மற்றும் குற்றவாளிகள் சொல்வதன் அடிப்படையில் கொடநாடு சம்பவம், அதில் அப்போதைய ஆளும்கட்சியின் தலைமையான எடப்பாடி, இளங்கோவன் என வழக்கை கொண்டுபோக முடியாது. இந்த வழக்கை முடக்க எடப்பாடி மிகக் கடுமையாக முயற்சி செய்தார். குற்றவாளிகளை முரளிரம்பா, வேலுமணியின் அண்ணன் அன்பரசனும் கையாண்டார்கள். அனுபவ் ரவியிடம் மணிக் கணக்கில் எடப்பாடி பேசினார்.
"இவையெல்லாம் கொட நாடு கொலைவழக்கில் இடம் பெற வேண்டுமென்றால் உயரதிகாரிகளின் தலையீடு இல்லாமல் விசாரணை நடைபெறவேண்டும். இல்லை யென்றால் கொடநாடு வழக்கு ஆறின கஞ்சியாக முடிக்கப்படும்' என்கிறார்கள் விபரம் அறிந்த போலீசார்.