தமிழக அரசியலைக் கலக்கிய ஜெ.வின் மரண மர்மத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன், கொடநாடு கொள்ளை வழக்கு போல, ராமஜெயம் கொலை வழக்கும் சூடு பிடித்துள்ளது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு திருச்சியில் மார்கழி மாதம் குளிர் நிறைந்த அதிகாலைப் பொழுதில் விடியும் முன்பே... திருச்சி அரசியலில் கோலோச்சி வந்த அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். அந்தச் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்த அதேநாளில்... முதல்வர் ஜெ.வின் இல்லமான போயஸ் கார்டனில் ஜெ.வால் துரத்தியடிக்கப்பட்ட சசிகலா மன்னிப்புக் கடிதம் கொடுத்து ஜெ.வுடன் இணைந்தார்.
ராமஜெயம் தி.மு.க.வின் பவர் சென்டராக இருந்தவர். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெ.வுக்கு கடுமையான சவாலாக இருந்தார். ராமஜெயத்தின் படுகொலைக்கும், அதுவரை ஜெ.வால் தண்டிக்கப்பட்ட சசிகலாவின் இணைப்புக்கும் தொடர்பு உண்டு என ஜெ. ஆட்சியில் காவல்துறை செய்திகள் பறந்தன.
ராமஜெயம் கொலை நடந்த பகுதியில் காவல்துறை அதிகாரி யாக பொறுப்பு வகித்தவர் சகிகலாவின் தம்பி திவாகரனின் சம்பந்தியான ஜெயச்சந்திரன். காவேரி ஆற்றங்கரையில் உள்ள ஒரு இடத்தில் பின் மண்டையில் தாக்கப் பட்டு ரத்தம் வழிய கைகள் பின்புறம் கட்டப்பட்டு இறந்து கிடந்த ராமஜெயத்தின் கொலைக்கும், அவரது குடும்பத்துக்கும் தொடர்பு என ஜெ. ஆட்சியின் காவல்துறை செய்திகளைப் பரப்பியது.
அதன்பிறகு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் சென்றது. ராமஜெயத்தின் சகலை மகனும், அவருக்கு பி.ஏ.வாக இருந்த வினோத், இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட் டார். ஒரு கட்டத்தில் "ஐயோ... இந்த விசாரணை மிக கொடுமையாக உள்ளது' என ராம ஜெயத்தின் குடும்பத்தினரே கதறும் அளவிற்கு அவரது குடும்பத்தை விசாரணை சுற்றிவந்தது.
அமைச்சர் நேரு, ஈரோடு சென்றபோது அவருக்கு துணி வியாபாரி ஒருவர், ஒரு போர்வைப் பண்டலை பரிசாக அளித்தார். அதை நேரு குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். அந்தப் போர்வையில் சுற்றப்பட்டுத்தான் ராமஜெயம் பிணமாகக் கிடந்தார். கொலை செய்யப்படுவதற்கு முன்பு 45 நாட்கள் ராமஜெயம் அதிகாலையில் வாக்கிங் போவதை நிறுத்தினார். குறிப்பிட்ட நாளில் அவர் மறுபடியும் வாக்கிங் போவார் என அவருக்கு நெருக்கமான 8 பேருக்குத்தான் தெரியும்.
அவர்களில் சிலர் கொலைக்குப் பிறகு பெரும் வசதி படைத்தவர்களாக மாறிவிட்டனர். கொலை செய்ய பயன்படுத்திய மாருதி வெர்சா காரில் கடத்தப்பட்ட ராமஜெயம் சென்ற கார், ஸ்ரீரங்கம் பகுதிக்குச் சென்று சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றிவந்து பிணம் கிடந்த இடத்திற்குச் சென்றது. ராம ஜெயத்தை பிணமாக எரிக்கத்தான் அங்கு கொண்டுசென்றார்கள். அதிகாலை இருள் விடிந்து விடவே... எரிக்காமல் விட்டு விட்டார்கள்.
ராமஜெயத்தை அந்தக் காரில் கொண்டு சென்றதையும் அந்த கார் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுற்றி வந்ததையும் சிலர் பார்த்திருக்கிறார்கள். கொலையாளிகள் 5 பேர் இருந்தார்கள். அவர்கள் வாட்டசாட்டமாக போலீஸ்காரர்களைப் போல இருந்தார்கள். அவர்கள் செல்போன் உபயோகிக்கவில்லை. அந்தப் பகுதியில் இருந்த ஒரு ரூபாய் தொலைபேசியில்தான் யாரிடமோ கொலை செய்த தகவலைப் பகிர்ந்தார்கள் என ஏகப்பட்ட தகவல்கள் பறந்தன. ராமஜெயத்தை யார் கடத்தி கொலை செய்தார்கள்... அவர்களுக்கு என்ன மோட்டிவ் என்பது மட்டும் வெளியே வரவில்லை.
திருச்சியில் பிரபலமான பாத்திரக் கடையான ரத்தினமான ஸ்டோர்ஸ் உரிமையாளர் ரவி, ராமஜெயத்துக்கு நெருக்கமான 8 பேரில் ஒருவராக இருந்து தற்பொழுது கோடீஸ்வரராக மாறியிருக்கும் கேபிள் மோகன் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். கேபிள் மோகனுக்கு வாய்ஸ் டெஸ்ட், நார்கோ அனலிட்டிகல் டெஸ்ட் போன்றவை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் ராமஜெயத்தின் உறவினரான வினோத்தின் செல்போன் சிக்னல்கள் ஆராயப்பட்டன. சம்பவம் நடப்பதற்கு முன்புவரை வினோத்தும் நேரு குடும்பத்தினரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த விவரங்கள் வெளிவந்தது.
இந்தக் கொலையைச் செய் தது யார் என்கிற கோணத்தில் ஆராய்ந்தபோது, திருச்சி உட்பட தென்மாவட்ட பகுதிகளில் கொலைகளைச் செய்ய இலங்கையைச் சேர்ந்த கூலிப்படையை அமர்த்துவது வழக்கம். இலங்கையிலிருந்து படகில் வரும் அவர்கள், கொலை செய்துவிட்டு படகில் திரும்பிச் செல்வார்கள். அவர்கள் செல் போன்களைப் பயன்படுத்தமாட்டார்கள் என்கிற தகவலும் ஆராயப்பட்டது.
ஆனால் ராமஜெயத்தைக் கொன்றவர்கள் அவரது செல்போனில் மோட்டார் பம்பிலிருந்து தண்ணீர் வெளியேறும் சத்தம் நிறைந்த பகுதியிலிருந்து ராமஜெயத்தின் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார்கள். எனவே இந்தக் கொலையை ஒரு கும்பல்தான் செய்திருக்க வேண்டும் என யோசித்த போலீசார், திருச்சியில் துணிச்சலாக பணத்திற்காக இந்தச் செயலை யார் செய்திருக்க முடியும் என ஆராய்ந்தபோது சாமிரவி என்கிற ரவுடியின் பெயர் வெளியில் வந்தது.
சாமிரவியை போலீசார் விசாரணைக்குட்படுத்தியபோது, "சம்பவம் நடந்தபோது நான் திருப்பதியில் இருந்தேன்'' என அதற்கான ரெக்கார்டுகளைக் காட்டினான்.
இவையெல்லாம் சி.பி.சி.ஐ.டி. விசாரணையின்போது நடை பெற்ற சம்பவங்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப் பட்ட பின் வழக்கு கிணற்றில் போட்ட கல்லானது. வழக்கில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் போக.. நேரு குடும்பத்தினர் இந்த வழக்கில் என்ன நடந்தது, யார்தான் ராமஜெயத்தை கொன்றார்கள் என சி.பி.ஐ. விசாரணை பற்றி கேள்வி எழுப்பினார்கள்.
உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. மற்றும் தமிழக போலீசார் அடங்கிய ஒரு டீமை நியமித்து, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டது.
சென்னையில் ரவுடிகளை அடக்கி புகழ்பெற்ற எஸ்.பி. ஜெயக்குமாரை குழுவுக்கு தலைவராக நியமித்தது. ஒரு விசாரணைக் குழுவை அவர் தலைமையில் நியமிக்க ஜெயக்குமார் முன்வந்தபோது, ராமஜெயம் பவர்புல்லாக இருந்த காலகட்டத்தில் திருச்சியில் மனோகரன் என்கிற ஆய்வாளர் சென்னை மாமல்லபுரத்தில் ஆய்வாளராக இருந்தார். அவரை ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் டீமிற்கு வரவழைத்தார். அவர் முடியாது என மறுக்க, அவரை மதுரைக்குத் தூக்கியடித்திருக்கிறார்கள் போலீஸ் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள். மனோகரனைப் போலவே பலரும் ராமஜெயம் கொலை வழக்கிற்கு வரத் தயாராகாத சூழ்நிலையில்... எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பி.க்கள் ஜெயச்சந்திரன், செந்தில்குமார், ஐந்து ஆய்வாளர்கள் என 40 பேர் கொண்ட டீம் ராமஜெயம் கொலை வழக்கை கண்டுபிடிக்க களமிறங்கியுள்ளது.
அமைச்சர் நேருவுக்கு இந்த விஷயத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. அதனால்தான் அவரது சமூகத்தைச் சேர்ந்த எஸ்.பி. ஜெயக்குமார் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு தருகிறார்.
ஒட்டுமொத்தமாக தி.மு.க.வும் போலீசும் இந்த விவகாரத்தில் உண்மையை கண்டுபிடிக்க முனைப்பு காட்டுகிறது. நக்கீரன், கடந்த பத்து வருடங்களாக ராமஜெயம் கொலை வழக்கில் புலனாய்வு செய்து செய்திகளை வெளியிட்டது. அவை அனைத்தையும் புதிய போலீஸ் டீம் மறுபடியும் புலனாய்வு செய்து வருகிறது.
எஸ்.பி. ஜெயக்குமார் திருச்சியிலேயே தங்கிவிட்டார். சென்னைக்கு வருவது இல்லை. முதல்கட்டமாக சிறையிலிருக்கும் பழைய குற்றவாளிகளிடம், ராமஜெயம் கொலை தொடர்பாக ஒரு ரவுண்டு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சர் நேருவின் உறவினரான வினோத், ரவுடி சாமிரவி, சசிக்கு நெருக்கான காவல்துறை அதிகாரி ஜெயச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. நில விற்பனை விவகாரங்கள், பெண் தொடர்பு விவகாரங்கள் என ராமஜெயம் மேற்கொண்ட அனைத்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
போயஸ் கார்டனிலிருந்து வெளி யேற்றப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவை கூல் செய்ய அவருக்கு நெருக்கமான காவல் துறை அதிகாரி மூலமாக ராமஜெயத்தை தீர்த்துக் கட்டிவிட்டு ஜெ.விடம் சங்கம மானாரா? என எழுந்த செய்தியும் ஆராயப்படுகிறது என்கிறார்கள் வழக்கு விசாரணையில் ஈடுபடும் ஜெயக்குமார் டீமைச் சேர்ந்தவர்கள்.
தனது உத்தரவுக்கு கட்டுப்படாதவர்களை செருப்பால் அடிக்கும் பழக்கமும், தனக்கு நெருக்கமானவர்களின் ரகசிய உறவுகளை வெளிப்படையாகப் பேசும் பழக்கமும் ராம ஜெயத்துக்கு இருந்திருக் கிறது. "இதுபோன்ற தனிப்பட்ட நடவடிக் கைகளால் கொலை நடந்ததா? அல்லது அரசியல் காரணங் களுக்காக கொலை நடந்ததா?' என ஆராய்ந்து வருகிறோம் என்கிறார்கள் போலீசார்.
சி.பி.ஐ. ஏன் இந்த வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டது. அதற்கு யார் காரணம் என ஆராயப்படுகிறது என கூறும் போலீசார், இதற்குள் ராமஜெயத்துக்கு நெருக்கமானவர்கள், அவரது உறவினர்கள், ரவுடிகள் என ஒரு ரவுண்ட் விசாரித்துவிட்டனர். ரவுடி சாமிரவி மீது மட்டும் கை வைக்கவில்லை.
ராமஜெயம் கொல்லப்பட்டபோது அவன் என்ன செய்தான்?
ஒருவேளை அவன் சொல்வது போல திருப்பதியில் இருந்தாலும், கூலிப் படை மூலம் செய் திருக்கமாட்டானா? என ஆராய்ந்து வருகிறது என்கிறது போலீஸ் வட்டாரங்கள். போலீஸ் அதிகாரியான ஜெயச்சந்திரனும் சாமிரவியும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல... ரியல் எஸ்டேட் தொழிலிலும் பார்ட்னர்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய எஸ்.பி. ஜெயக்குமார், "ராமஜெயம் கொலை வழக்கை பழைய வழக்காக பார்க்கவில்லை, புதிய கொலை வழக்காக ஆராய்ந்து வருகிறோம். கொலை நடந்த சமயத்தில் போலீசார் நடத்திய புலனாய்வு, அவர்கள் கைப்பற்றிய எலக்ட் ரானிக் டேட்டாக்களை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் கொலைக்கான காரணத்தையும், அதை யார் செய்தார்கள் எனவும் கண்டுபிடிப் போம்'' என்கிறார்கள் உறுதியுடன்.