மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த தேவந்திரர் குல மக்கள் சபை கட்சியின் நிறுவனர் ராமர்பாண்டி கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் கொலைவழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு மதுரைக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, அரவக் குறிச்சி அருகே மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலைசெய்துள்ளது.
கரூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாங்க மறுத்தனர். இக்கொலை தொடர்பாக 5 பேர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இரண்டு நாட்களில் மேலும் இருவர் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த சமுதாயத்தைச் சேர்ந்த இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் தொடர்ச்சியாக கரூரிலும் மதுரையிலும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்த கொலையை செய்யச் சொன்ன முக்கிய தலைகளை கைதுசெய்யவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும். அதுவரை அவரது உடலை வாங்கமாட்டோம் என்று தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். வெங்கடேச பண்ணையார், முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ், திருமாறன்ஜி மற்றும் சில தேவர் அமைப்புகளின் தலைவர்களை இவர்கள் குறிப்பிடுவதால் தென்மாவட்டங்களில் மீண்டும் சாதிய மோதல் வருமோ என்ற அச்சம் மக்களிடத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
யார் இந்த ராமர் பாண்டி? போலீஸ் ரிக்கார்டு என்ன சொல்கிறது?
2010-ல் அனுப்பானடியில் தனது சொந்த சாதியைச் சேர்ந்த ரோக் பாண்டியை கொலைசெய்து விட்டு ஜெயிலுக்குப் போனவர் ராமர் பாண்டி. 2011-ல் தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவு நாளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு ஒரு பிரிவினர் "சாதி வெறியர்களைச் சுட்டுக் கொன்ற காவல்துறைக்கு நன்றி!'” என்று போஸ்டர் ஒட்ட, அதற்குப் பழிவாங்கும்விதமாக கொந்தகை முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த இருவரை வெட்டிக்கொன்று கைதானார். அடுத்து பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிதீர்க்க சுபாஷ் பண்ணையார்மீது திண்டுக்கல் அருகே தாக்குதல் நடத்தினார். அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் சுபாஷ் பண்ணையார். 2012-ல் தேவர் ஜெயந்தி அன்று வேன்மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டு 7 பேர் மரணமடைய, தென்மாவட்டத் தில் பெரும் கலவரமானது. அதுதொடர்பாக ஏ ஒன் குற்றவாளியாக இவரைக் கைது செய்தனர். 2016-ல் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ராமர் பாண்டி திரும்பும்போது அனுப்பானடியில் வைத்து பாம் வீசி தாக்குதல் நடத்தினர். அதில் அவர் உயிர்தப்பித்தாலும் அவரது கூட்டாளி விஜயன் கொலை செய்யப்பட்டார். பின் ரவுடி இமேஜை போக்க தேவேந்திரகுல மக்கள் சபைக் கட்சியின் தலைவராக வலம்வர ஆரம்பித்தார். இந்தக் கொலையின் பின்னணி என்ன என்று ராமர்பாண்டி தரப்பில் விசாரித்தோம். “"எங்கள் சமுதாயத் தலைவர்கள் அவரது குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். ராமர் பாண்டியின் மனைவியோ பின்னணியிலிருந்து தூண்டிவிட்ட முக்கிய தலைவர்களையும் காவல்துறை விசாரிக்கவேண்டும் என்கிறார்.
தேவர் ஜெயந்தி சம்பவத்திற்கு பழிக்குப் பழி என்ற கோணத்திலேயே பத்திரிகைகளும் காவல்துறையும் கொண்டு செல்கிறார்கள். அது நடந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. நாங்கள் விசாரித்தவகையில் வேறொரு காரணமும் இருக்கிறது. ஏற்கனவே சிறையில் முக்கிய ரவுடியான வெள்ளைக்காளிக்கும் ராமர் பாண்டிக்கும் தகராறு நடந்திருக்கிறது. இதனால் இருவரும் வேறு வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு வெளியே வந்த ராமர் பாண்டி கட்சி சம்பந்தமான வேலை, கட்டப்பஞ்சாயத்து என்று இருந்தார்.
இந்திய அளவில் கஞ்சா நெட்வொர்க்கில் மிக முக்கிய புள்ளியாக வலம்வரும் ரவுடி லோடு முருகன் சம்பந்தப்பட்ட சரக்கு ஆந்திராவிலிருந்து சமீபத்தில் வந்தது. 70 கோடி மதிப்புள்ள கஞ்சா கண்டெய்னர் லாரி வருவது தெரிந்து அதை வழிமறித்து கடத்தி, வேறு ஒருவருக்கு மடைமாற்றிவிட்டதில் கஞ்சா மாபியா கும்பலோடு ராமர் பாண்டிக்கு பகை ஏற்பட்டது. இதன் காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம்''’ என்கிறார்கள் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த கொலை குறித்து மூவேந்தர் புலிப்படையின் தலைவர் வையவன், “"தென்தமிழ் நாட்டில் சாதியப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த கொலைகளுக்குப் பின்னால் கூலிப்படைகள் இருக்கின்றன. இதனால் சாதிரீதியாக பலனடையக்கூடியவர்கள் அரசியல் வாதிகளும் கஞ்சா வியாபாரிகளும்தான்.
இந்த கொலை விஷயத்தில் காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. முதல்வர் இதுகுறித்து சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். ராமர் பாண்டி கொலை நடந்தவுடன் சம்பவம் நடந்த இடத்திற்கும் அவரது குடும்பத் திற்கு ஆறுதல் சொல்லச் சென்றோம். யாரோ ஐந்து பேர் சரணடைந்திருக்கிறார்கள், உடலை வாங்கிக்கொள்ளுங்கள் என்று காவல்துறை வற்புறுத்த... அங்கிருந்த குடும்பத்தாரோ, சமுதாய மக்களோ இதை ஏற்றுக்கொள்ளவில்லை. போராட்டம் நீடித்த நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட் டத்திலிருந்த எங்களைப் போன்ற முக்கிய தலைவர்களிடம் "போராட்டத்தை கைவிடவேண்டாம். இதுகுறித்து வேறு உதவி வேண்டுமென்றால் தொடர்புகொள்ளுங்கள். நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்' என்று பேசினார். தமிழகத்தில் சாதிய மோதல்களை விட்டுவிட்டு ஒவ்வொரு சமுதாயமும் அரசியல் அதிகாரத்தின் மூலம் சமுதாய முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் நோக்கி. செயல்பட வேண்டும். காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு பெரும் கலவரமாகாமல் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு''’என்று முடித்துகொண்டார்.