""மாவட்டங்களில் இருக்கும் பிரச்சினைகளை அந்தந்த மாவட்டத்துலேயே பேசித் தீர்த்துக்கங்க. தேவையில்லாம சென்னைக்கு வந்து பணத்தையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணாதீங்க''’ -இப்படி ஓர் அறிக்கை உத்தரவு, ரஜினி மக்கள் மன்றத் தலைமையிடமிருந்து கடந்த மாதம் சென்றது. மாவட்டச் செயலாளர் தலைமையில் ஒவ்வொரு அணியின் செயலாளர் அடங்கிய ஐந்துபேர் குழு மாதம் இருமுறை கூடி, புகார் மற்றும் குறைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமைக்கு வரும் புகார்களும் இந்தக் குழுவிற்குத்தான் அனுப்பப்படும். இப்படியெல்லாம் இருந்தது அந்த சுற்றறிக்கை.
ஆனால் இந்த மாதமோ அனைத்து மா.செ.க்கள், அணிகளின் மா.செ.க்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறது ர.ம.ம. தலைமை. காரணம்... ஷூட்டிங் இடைவேளையில் டார்ஜிலிங்கில் இருந்து சென்னை வந்த ரஜினி, பல உத்தரவுகளைப் போட்டுவிட்டு, சில நாட்களில் மீண்டும் ஷூட்டிங்கிற்காக கடந்த 16-ஆம் தேதி டேராடூன் புறப்பட்டுச் சென்றார். 18-ஆம் தேதியிலிருந்து மாவட்ட நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர் மூவர் அடங்கிய புதிய குழுவினர்.
ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராக ஒரு காலத்தில் கொடி நாட்டியவர் சத்தியநாராயணன். பிறகு, அந்தப் பொறுப்பில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும்போது பேட்ச்மேட்டான வி.எம்.சுதாகரை நியமித்தார் ரஜினி. அரசியல் என்ட்ரி அறிவிப்புக்குப் பின், ரசிகர் மன்றம், மக்கள் மன்றம் என பெயர் மாற்றமாக, லைக்காவின் மாஜி சி.இ.ஓ.வான ராஜு மகாலிங்கம் மாநிலச் செயலாளரானார்.
சுதாகரும் ராஜு மகாலிங்கமும் இணைந்து மன்றப் பணிகளைக் கவனித்து வந்தனர். சினிமா கம்பெனியின் சி.இ.ஓ.வாக இருந்த ராஜு மகாலிங்கத்தால், ரஜினி மக்கள் மன்றத்தினரை அணுகுவதிலும் நிர்வாகிகள் நியமனத்திலும் ஏகத்துக்கும் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்பட்டன. இந்த நிலையில்தான்... ரிடையர்டு ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜசேகர் என்னும் புதுமுகத்தை நுழைத்தார் ரஜினி. இதை 2018 ஏப்.29-மே.01 நக்கீரன் இதழிலிலேயே பதிவு செய்திருந்தோம். அடுத்ததாக கடலூர் மா.செ.வாக இருந்த விருத்தாசலம் டாக்டர் இளவரசனை மாநில அமைப்புச் செயலாளராகவும் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவராகவும் நியமித்தார் ரஜினி.
பொருளாதார ரீதியாக சவுண்ட் பார்ட்டியான இளவரசன் நியமனத்திற்கு பெரும்பாலான மா.செ.க்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், யாருக்குமே தெரியாத சாமுவேல் சர்ச்சில் என்பவரை மாநில இளைஞரணிச் செயலாளராகவும், காயத்ரி துரைசாமியை மாநில மகளிரணிச் செயலாளராகவும் நியமித்தார் ரஜினி. தலைவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என மனதளவில் அனைத்தையும் ஏற்றுக்கொண்டனர் மாவட்ட நிர்வாகிகள்.
நிலைமை சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் டேராடூனுக்குப் புறப்படுவதற்கு முன்பாக டாக்டர் இளவரசன், ஐ.பி.எஸ். அதிகாரி ராஜசேகர், தூத்துக்குடி மா.செ. ஏ.ஜே.ஸ்டாலின் ஆகிய மூவர் அடங்கிய புதிய குழுவை நியமித்தார் ரஜினி. இதில் ஸ்டாலின் மட்டுமே 35 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தினரோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இந்தக் குழுவினர்தான் இப்போது மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு ஆறு மாவட்டங்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு மணி நேரம் என காலையிலிருந்து இரவுவரை ஆலோசனை நடக்கிறது.
பூத் கமிட்டி அமைப்பதில் ரொம்பவும் சுணக்கமாக இருக்கும் இருபத்தைந்து மாவட்டங்களின் நிலவரம் அறிந்து மிகவும் கவலைப்பட்டுள்ளது மூவர் குழு. டேராடூனிலிருந்து மூவர் குழுவிடம் போனிலும் வீடியோ கான்பரன்சிலும் ரஜினி பேசிய விவரங்கள் வெளியே கசியாதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்கள் கூறினாலும் ""அதையெல்லாம் பெருசுபடுத்தாதீங்க, பூத் கமிட்டி மேட்டருக்கு வாங்க'' என சமாதானப்படுத்துகிறது மூவர் குழு. “""நேர்மையான அரசியல் என்பதுதான் தலைவரின் லட்சியம். அந்த லட்சியத்திற்கு நல்லவர்கள் மட்டுமே சாத்தியப்படுவார்கள். அதனால்தான் மன்றத்திற்கு விரோதமானவர்களை களை எடுக்கிறோம். இப்போதுவரை ஆளும்கட்சியுடனும் எதிர்க்கட்சியுடனும் தொடர்பில் இருப்பவர்களைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும். ஏரியாவில் செல்வாக்காக இருப்பவர்களை நமது நிர்வாகிகள் தொடர்பு கொண்டு எம்.எல்.ஏ. சீட், எம்.பி. சீட் வாங்கித் தருகிறேன் என வாக்குறுதி கொடுப்பதும் பதிலுக்கு அவர்கள் விருந்து வைப்பதும் எங்களுக்குத் தெரியும்'' என்பதையும் பட்டவர்த்தனமாகவே போட்டுடைக்கிறது மூவர் குழு.
ஆகஸ்ட் முதல் வாரம் டேராடூனிலிருந்து சென்னை திரும்புகிறார் ரஜினி. அதற்குள் அனைத்தையும் சுமுக நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மூவர் குழு. ஆனாலும் சில மாவட்டங்களில் மனக்கசப்புகள் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன. உதாரணத்திற்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத பாலநமச்சிக்கு ஆதரவாகவும் மா.செ. பாபுவுக்கு எதிராகவும் கச்சை கட்டுகிறார், ஃபாரன்சிக் டிபார்ட்மென்ட்டில் டி.எஸ்.பி.யாக இருக்கும் முகமது யூசுப். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் யூசுப்பின் மகள் நிஷா யூசுப்பை மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளராக நியமித்து கிறுகிறுக்க வைத்தார் ராஜு மகாலிங்கம். இதே கர்புர்தான் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, சிவகங்கையிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும் சமாளித்து, அரசியல் கட்சியை ஆரம்பித்து, மக்களின் நம்பிக்கையை சம்பாரிப்பது ரஜினியின் கைகளில்தான் உள்ளது.
மக்கள் நீதி மய்யம் நிலவரம்!
கட்சியை ஆரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு பண்ணியபின், கடந்த 16-ஆம் தேதி, ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு மாநில நிர்வாகிகள், இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட நிர்வாகிகளை அறிவித்தார் கமல். இந்தப் பட்டியலைப் பார்த்து கமல் நற்பணி இயக்கத்தின் ஆரம்பகால நிர்வாகிகள் குமுறிக் கொந்தளித்துவிட்டனர். பல மாவட்டங்களிலும் இந்தக் கொந்தளிப்பு இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சற்று பலமாகவே இருக்கிறது. இந்த மாவட்டத்தின் தொகுதிகளான கன்னியாகுமரி -நாகர்கோவிலுக்கு சசி, குளச்சல் -கிள்ளியூருக்கு டாக்டர் ஜாக்சன், விளவங்கோடு, பத்மனாபபுரத்திற்கு டாக்டர் நிர்மல் ஜோசப் ஆகியோரை மாவட்ட பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் கமல். இதில் சசி மட்டும்தான் கமல் நற்பணி இயக்கத்தின் பழைய நிர்வாகி. மற்ற இருவரையும் மாவட்டத்தில் யாருக்குமே தெரியாதாம்.
நம்மைச் சந்தித்த ம.நீ.ம.வின் நிர்வாகிகள் சிலர், “""மதுரையில் கட்சி ஆரம்பிக்கும்போது, இந்த வீட்டின் (மக்கள் நீதி மய்யம்) உரிமையாளர்கள் நீங்கள்தான். இந்த வீட்டிற்கு விருந்தாளிகளாக நிறைய பேர் வருவார்கள், ஆனால் அவர்கள் உரிமையாளர்கள் அல்ல'' என்றார் நம்மவர் கமல். ஆனா இன்றைக்கு மாநில அளவுல இருந்து மாவட்டம் வரைக்கும் விருந்தாளிகளுக்குத்தான் பொறுப்பு கொடுத்திருக்காரு.
மே மாசம் 16-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கமல் வந்தப்ப கட்சியில் சேர்ந்தவரு டாக்டர் ஜாக்சன். அதுக்கப்புறம் எங்க இருக்காருன்னே தெரியல. அதே மாதிரி, மார்த்தாண்டத்தில் டாக்டர் நிர்மல் ஜோசப் வீட்டில்தான் கமலுக்கு மதிய சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதான் ரெண்டு டாக்டர்களுக்கும் போஸ்டிங் போட காரணம். இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை''’என விரக்தியாகப் பேசினர். தமிழகம் முழுக்க இந்த குளறுபடி இருக்கத்தான் செய்கிறது.
விஜய் அரசியல் டீசர்!
ரஜினி, கமல் ஆகிய இருவரின் அரசியல் நிலவரம் இப்படியிருக்க... விஜய்யும் ஒரு கணக்குடன் களத்தில் இறங்கியிருக்கிறார். இப்போது விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் அமெரிக்காவில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் "சன்' பிக்சர்ஸின் "சர்கார்'’ படம் பக்காவான அரசியல் கதை. அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு, தமிழகம் திரும்பும் விஜய்க்கு காந்தியக் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டு, புதிய அரசியல் மாற்றத்துக்கான பயணத்தை ஆரம்பிக்கிறார். அதற்கு வில்லனாக வருகிறார்கள் படத்தில் அரசியல்வாதிகளாக நடிக்கும் நிஜ அரசியல்வாதிகளான பழ.கருப்பையாவும் ராதாரவியும். மெயின் வில்லியாக வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.
அந்தக் கதை ஒருபக்கம் இருக்கட்டும், விஜய்யின் நிஜக்கதைக்கு வருவோம். அமெரிக்காவிற்கு புறப்படும் முன், ரசிகர்மன்ற மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்த விஜய்... கிராம, ஒன்றிய, நகரச் செயலாளர்களை நியமிப்பதற்கு புதுப்பட்டியலை ரெடி பண்ணி வைக்குமாறு கூறியுள்ளார். எல்லாம் தயாரான பின்பு, "சர்கார்'’ ரிலீசுக்கு முன்பு, தனது ரசிகர் மன்ற மாநாட்டை பெரிய அளவில் நடத்தும் திட்டமும் வைத்துள்ளாராம் விஜய்.
மூன்று மெகா ஹீரோக்களும் அரசியல் ஹீரோவாவதற்காக பாலிடிக்ஸ் கடலில் ஆழம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நிர்வாகிகள் மத்தியில் குமுறல்கள் இருந்தாலும் தேர்தல் களத்திற்கேற்ப பசை பார்ட்டிகளைக் கணக்கிட்டு செயல்படுவதால் பெரிய கட்சிகளும் பீதியுடன் உற்று நோக்குகின்றன.
-சி.என்.இராமகிருஷ்ணன், ஈ.பா.பரமேஷ்வரன், மணிகண்டன்