பதவி நியமன சர்ச்சையில் தொடங்கி போஸ்டிங் பேரம், நிர்மலாதேவி விவகாரம் என எல்லா விவகாரத்திலும் அடிபட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம். 2013-ல் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமனம் செய்யப்பட்டார். அவரது நியமனத்தில் முறைகேடு என புகார் கிளம்பியது. நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து செனட் உறுப்பினர் ராமசாமி பதவி விலகினார். பல்கலைக்கழக பாதுகாப்பு தலைவர் சீனிவாசன் குண்டர்களால் தாக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் வழக்கில் நாகமலை காவல்நிலையத்தில் 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்தான், பதவி நீக்க உத்தரவுக்குள்ளான செல்லத்துரை. பல்கலைக்கழக துணைவேந்தராகத் தேர்வு செய்யப்படுபவர் பத்தாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களின் மெஜாரிட்டி ஆதரவு பெற்றிருக்க வேண்டும். இவை எதுவுமின்றியே துணைவேந்தராகத் தேர்வானார் செல்லத்துரை.
பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பேராசிரியர்கள் சங்கமும், பல்கலைக்கழக ஊழியர்கள் அமைப்பும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கின. ஆனால் ஆளும் கட்சியின் கடைக்கண் பார்வையும் ஆளுநரின் தயவும் செல்லத்துரைக்கு இருந்தது. எனவே பிரச்சினைகளை சமாளித்ததோடு, பணம்கொடுப்பவர்களுக்கு இடமாறுதல், செலவுக் கணக்குகளில் முறைகேடு, கோப்புகள் நகர்வதற்கும் லஞ்சம் என குற்றம் சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் நிர்மலாதேவி விவகாரம் சூறாவளியாகக் கிளம்பியது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்புசாமி கைது, பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள், கவர்னர்கள் வந்து தங்கியது என பிரச்சினைகள் வரிசைகட்டின. எதற்கும் அசராமல் இருந்தவரை, மதுரை உரிமை பாதுகாப்பு மைய மதுரை மாவட்டச் செயலாளர் லயனல் அந்தோனிராஜ், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தொடுத்த வழக்கின் தீர்ப்பு ஆட்டம்காண வைத்திருக்கிறது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில் விதிமுறை மீறல்களைச் சுட்டிக்காட்டியிருப்பதோடு, ""துணைவேந்தர் என்பவர் வெறுமனே பல்கலைக்கழகத்தின் தலைமை அதிகாரி மட்டுமில்ல. ஒட்டுமொத்த பல்கலையின் தலைமைச் செயல் அதிகாரி. கற்பித்தலுக்கான இடமான பல்கலைக்கழகம் புனிதமான இடமாகத் திகழவேண்டும். எனவே புதிய தேடல் குழு அமைத்து துணைவேந்தரை நியமிக்கவேண்டும். பழைய தேடல் குழுவில் இடம்பெற்ற முருகதாஸ், ராமகிருஷ்ணன், ஹரிஷ் மேத்தா புதிய குழுவில் இடம்பெறக் கூடாது''’எனவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கைத் தொடுத்தவர்களில் ஒருவரான வழக்கறிஞர் வாஞ்சிநாதனைச் சந்தித்து தீர்ப்பைக் குறித்து கேட்டோம். “""குற்றச்சாட்டில் ஆதாரமுள்ளது எனக்கூறி, உயர்நீதிமன்றம் துணைவேந்தர் நியமனத்தை ரத்துசெய்துள்ளது. இதையுணர்ந்து செல்லத்துரை உடனே தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அவர் தொடர்ந்து இந்த பதவியிலிருந்தால் அவர் செய்த ஊழல்களின் ஆதாரத்தை அழிக்க முற்படுவார்''’என்கிறார்.
பல்கலைக்கழக பாதுகாப்பு தலைவர் சீனிவாசன், ""கல்யாணி மதிவாணனில் தொடங்கி செல்லத்துரை வரை முறைகேடு, ரவுடியிஸசம், அரசியல்வாதிகள் தலையீடு, பாலியல் வழக்குனு பல்கலைக்கழகத்தை சீரழிச்சுட்டாங்க. இனியாவது பல்கலைக்கழகம் ஆரோக்கியமான பாதைக்குத் திரும்பவேண்டும்'' என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே தீர்ப்பு வந்த அன்றே சென்னைக்கு வந்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை நேரில் பார்க்க செல்லத்துரை முயல, தனது உதவியாளரிடம் பேசச் சொல்லி நழுவியுள்ளார் அமைச்சர். ஆளுநர் புரோகித்தையும் சந்திக்க செல்லத்துரை நேரம் கேட்க, ராஜ்பவனில் பாஸிட்டிவான சிக்னல் கிடைத்துள்ளது.
சனிக்கிழமை மாலை பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கலந்துகொள்ள, புதிய துணைவேந்தர் தேர்வுக்குழு தலைவராக தங்கமுத்து தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், சட்டத்துறை இயக்குநர் சந்தோஷ்குமார், பல்கலையின் அறிவியல் பேராசிரியர் இராமகிருஷ்ணன் ஆகிய மூவர், புதிய துணைவேந்தர் வரும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பார்கள் என நிர்வாகக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை வாங்கிவிட கடும் முயற்சியும், மாநில- மத்திய அதிகாரத்தில் இருப்பவர்களின் மனம் குளிரும்படியான பேரமும் என செல்லத்துரை தன் பங்குக்குப் போராடிவருகிறார். பெரிய அளவிலான டெல்லி "லாபி' செல்லத்துரையை காப்பாற்றத் துணை நிற்கிறது.
-அண்ணல்