அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் மையம்கொண்டிருந்த நிர்மலா புயல் வலுவடைந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. ஏற்கனவே சாதி ரீதியாக அங்கு பிரிந்து நிற்கிறார்கள். இப்போது சங்கமும் இரண்டாக உடைந்து, துணைவேந்தர் செல்லத்துரைக்கு ஆதரவு நிலை எடுத்தும், எதிர்த்தும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணை வளையத்திலிருந்து வெளிவந்துவிட்ட மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கலைச்செல்வனின் ஏற்பாட்டில்தான், பல்கலைக்கழகத்துக்கு களங்கம் கற்பித்துவிட்டதாகப் பல்கலைக்கழக அலுவலர்களும், பேராசிரியர்களும் போராடி வருகின்றனர்.
நிர்மலா ஷூட் செய்த அந்த 3 நிமிட வீடியோ!
அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலாதேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 மணி நேரம் சோதனை நடத்தி, பென் டிரைவ், லேப்டாப், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், சி.டி.க்கள் என மூன்று பைகளில் ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். ஆனாலும், நிர்மலாதேவியின் செல்போனிலிருந்த அந்த 3 நிமிட வீடியோவில், முக்கிய தலைகள் தெரிவதால், ஷாக் ஆகியிருக்கின்றனர். அது நிர்மலாவே ஷூட் செய்ததாம். இதை என்ன செய்வது என மேலதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்களாம். நிர்மலாதேவி பேசிய கால்-லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டு, அவரோடு தொடர்பில் இருந்த பேராசிரியைகளிலிருந்து, அவருடைய கணவரின் ஒப்பந்தப் பணிகளுக்கு உதவிய காண்ட்ராக்டர்கள் வரை, விசாரணைக்கு அழைத்து, வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். நிர்மலாதேவி பேசிய ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேவாங்கர் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியர் நாகராஜன் மற்றும் கணிதத்துறை உதவிப் பேராசிரியை ஹேமலதா போன்றோரும் விசாரணைக்குத் தப்பவில்லை.
"எதுவும் எனக்குத் தெரியாது'’-விசாரணையில் இறுக்கம்!
அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த தேர்ட் டிகிரி டார்ச்சர் மிரட்டல் சி.பி.சி.ஐ.டியிடம் இல்லை. அதனால், ‘"அதான் முருகன், கருப்பசாமி பெயரைச் சொல்லிட்டேனே! யாருக்காக, மாணவிகளை ஏற்பாடு செய்வதற்கு என்னைப் பயன்படுத்தினார்கள் என்று அவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்' என இறுக்கம் காட்டி வருகிறார் நிர்மலாதேவி.
முருகனின் சேவை யார் யாருக்கோ தேவை!
நிர்மலாதேவி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் காமராஜர் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முருகனின் வீடு மதுரை-ஒத்தக்கடையில் உள்ளது. தனது உறுதிப்படி கணவனை இழந்த ஒரு பெண்ணை மதுரை தமிழ்நாடு ஓட்டலில் திருமணம் செய்து கொண்டபோது விழாவில் கலந்து கொண்டவர்கள் 15 பேர்தான். மதுரை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த சின்னையா, முருகனுக்கு பிஎச்.டி. கைடாக இருந்திருக்கிறார். அந்தப் பாசத்தை தொடர்வதற்காகவே, தான் பதிவாளர் ஆனபிறகு, காமராஜர் பல்கலைக்கழகத்தில் முருகனுக்கு உதவிப் பேராசிரியர் வேலை கிடைக்கச் செய்திருக்கிறார் சின்னையா.. உயர் கல்வித்துறையில் மேல்மட்டத்தில் உள்ளவர்களின் திருப்தி அறிந்து சேவையாற்றுவதில் முருகனுக்கு நிகர் முருகனே! இவர் அளித்துவந்த தைரியத்திலும், வழிகாட்டுதலிலும்தான் கவர்னர் தாத்தா; கவர்னர் லெவல்’ என்றெல்லாம் பேசி, ராணிபோல ராஜ்பவனை தன் முந்தானையில் முடிந்து வைத்திருப்பதாக, தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் கூறி வந்திருக்கிறார் நிர்மலாதேவி.
இந்த வழக்கில் தேடப்பட்டுவரும் காமராஜர் பல்கலைக்கழக பிஎச்.டி. ஆய்வாளர் கருப்பசாமி திருச்சுழியை அடுத்துள்ள நாடாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தலைமறைவானதால், பள்ளி ஆசிரியையான அவரது மனைவி கனகமணி விசாரணைக்கு ஆளானார். கருப்பசாமி அந்த மாதிரி ஆளா என ஊர்மக்கள் அதிர்ச்சியடைகின்றனர். கருப்பசாமியின் நட்பு வட்டத்திலோ “"ரெண்டு போன் வச்சிருப்பார். எந்த நேரமும் ஹெட்-செட் போட்டு யார், யார்கிட்டயோ பேசிக்கிட்டே இருப்பார். இப்பத்தான் தெரியுது என்ன பேச்சு பேசிருப்பாருன்னு'’என்று நொந்துகொண்டார்கள்.
கல்லூரிக்கு அடிக்கடி வந்த கருப்பசாமி!
அருப்புக்கோட்டை வட்டாரத்திலோ, ""தேவாங்கர் காலேஜுக்கு அடிக்கடி கருப்பசாமி வருவாரு. நேரா மேத்ஸ் டிபார்ட்மென்டுக்குத்தான் போவாரு. நிர்மலாதேவிகூட பேசிட்டு கிளம்பிருவாரு. சப்ஜெக்ட்ல பெயில்னா, பணம் கொடுத்தால் போதும். நல்ல மார்க்ல பாஸ்பண்ணி விட்ருவாரு. அப்புறம், உயர்கல்வித் துறையில் லெக்சரர் வேலை, உறுப்புக் கல்லூரியில் போஸ்டிங்னு சொல்லி ரூ.5 லட்சம், ரூ.6 லட்சம்னு வாங்கிக்கிட்டு, சிலருக்கு செஞ்சும் கொடுத்திருக்காரு. அந்த நம்பிக்கைல, அருப்புக்கோட்டைல ஏழெட்டு பேர் கொடுத்திருக்காங்க. அதுல ஒருத்தர் ராமச்சந்திரன். அவரோட கொழுந்தியாக்கு வேலை வேணும்னு ரூ.6 லட்சத்தை, வெள்ளக்கோட்டையில இருக்கிற முத்து வாழவந்தான் மூலமா, கருப்பசாமிகிட்ட கொடுத்திருக்காரு. கருப்பசாமி அந்தப் பணத்தை முருகனிடம் கொடுக்கல. இதை முருகனை சந்திச்சப்ப ராமச்சந்திரன் தெரிஞ்சுக்கிட்டாரு. கருப்பசாமிகிட்ட ஏன் இப்படி பண்ணுனன்னு ராமச்சந்திரன் கேட்டிருக்காரு. அதுக்கு கருப்பசாமி அதெல்லாம் முருகன்கிட்ட கொடுத்தாச்சுன்னு சொல்ல, "ஆளாளுக்கு ஏமாத்துறீங்களே'ன்னு திட்டிக்கிட்டே வீட்டுக்குப்போன ராமச்சந்திரனுக்கு நெஞ்சுவலி வந்து, மூணாவது நாளே செத்துட்டாரு''’என்கிறார்கள்.
எந்தெந்த ஊர்களில் நிர்மலா விஜயம்!
"பயிற்சிக்காகச் செல்கிறேன்' என்று கூறிவிட்டு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியிலிருந்து கிளம்பிய நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் தங்கிக்கொண்டு, பயிற்சியில் கலந்துகொள்ளாமல், பல தடவை டிமிக்கி கொடுத்திருக்கிறார். அதனால், கடந்த 10 ஆண்டுகளில் அவர் எந்தெந்த ஊர்களுக்கு சென்றார்? என்ற விபரங்களை கல்லூரியிலிருந்து திரட்டியிருக்கின்றனர். 11-11-2012 லிருந்து 1-12-2012 வரை 21 நாட்கள் அவர் சென்னையில் தங்கியிருக்கிறார். ஆகஸ்ட் 2015, 7 & 8 தேதிகளிலும் அவர் சென்னையில் இருந்திருக்கிறார். 2006 ஜனவரி, 2-லிருந்து 5-ஆம் தேதி வரை 4 நாட்கள் பாண்டிச்சேரியில் தங்கியிருக்கிறார். மேலும், மதுரை பூவந்தி, சிவகாசி, விருதுநகர், பழனி என பல ஊர்களுக்கும் விசிட் அடித்திருக்கிறார். கல்லூரி ஆவணங்களின் அடிப்படையில் கிடைத்த விவரங்களே இவை. மற்றபடி, கல்லூரிக்காகவோ, சொந்த காரணங்களுக்காகவோ, அவர் எந்தெந்த ஊர்களுக்கு எதற்காகச் சென்றார் என்பது போன்ற விவரங்கள் நிர்மலாதேவி சொன்னால்தான் தெரியும்.
வக்கிரம் பிடித்தவர்கள்!
மேலிடத்தைக் காப்பாற்றுவதற்காகவோ என்னவோ சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை, நிர்மலாவின் தனிப்பட்ட நடத்தையை மையப்படுத்தியே செல்கிறது. அருப்புக்கோட்டையில் பி.எஸ்சி. மூன்றாமாண்டு படிக்கும்போது, லவ் லெட்டர் கொடுத்த மாணவனை செருப்பால் அடித்திருக்கிறார் நிர்மலாதேவி. அவ்வளவு கறாரானவர் எப்படி மாறினார் என்பதைத் தோண்டித் துருவியுள்ளது சி.பி.சி.ஐ.டி. ‘நிர்மலாதேவி போன்றவர்கள் கோடியில் ஒருவராகத்தான் இருப்பார்கள். விசாரணை தரப்பின் பார்வையில், கணவர் சரவணபாண்டியன் துபாய் சென்றபிறகு, தன் இஷ்டத்துக்கு நடந்திருக்கிறார் நிர்மலாதேவி. பாலியல் வக்கிரம் (ள்ங்ஷ்ன்ஹப் ல்ங்ழ்ஸ்ங்ழ்ள்ண்ர்ய்) என்பது ஒரு நோய். ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. நிர்மலாவைப் புரிந்துகொண்ட முருகனும் கருப்பசாமியும், நிர்மலாவின் ரத்த சொந்தங்களுக்கும் குறிவைத்திருக்கின்றனர். நிர்மலாதேவி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகமும் கண்டிப்பதற்கு திராணியற்று இருந்திருக்கிறது. மாணவிகளுக்குத் தொடர்ந்து வலை வீசுவதை அறிந்தும் கல்லூரி நிர்வாகம் ஒரு மெமோகூட கொடுத்ததில்லை. பழைய கல்லூரி நிர்வாகி சவுண்டையாவும் மிக மோசமான ஆளாக இருந்திருக்கிறார். யாரையும் மாட்டிவிடக்கூடாது என்பதில் நிர்மலாதேவி உறுதியாக இருப்பதால் விசாரணையில் பலவற்றையும் மறைத்தே பேசுகிறார்.
ஒப்பந்தக்காரரின் அனுபவம்!
சி.பி.சி.ஐ.டியின் விசாரணைக்குள்ளான காண்ட்ராக்டர்கள் தரப்பில் ஒருவரிடமிருந்து கூச்சத்துடன் வெளிப்பட்ட ‘வாய்ஸ்’ இது. ""வெறும் பணத்துக்காக அப்படி நடந்துக்கிறவங்க லிஸ்ட்ல இவங்கள (நிர்மலா) சேர்க்க முடியாது. தன்னை நெருங்கிய யாரிடமும் பாரபட்சம் காட்டாமல், நம்மை சேர்த்து வச்சது தெய்வம்தான்னு சொல்லி அந்த நேரத்தில் என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அவங்களை தேவதைன்னு சொல்லலாம். என்ன காலக்கிரகமோ? வழக்குல சிக்கிட்டாங்க...''’என்று நிர்மலாவுக்காக உருகியிருக்கிறார்.
சந்தானத்தின் ‘சுருக்’ விசாரணை!
4 மாணவிகளையும் அழைத்து விசாரித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், "நான் உங்களை தொந்தரவுபடுத்த விரும்பல. நிர்மலாதேவி நல்லவங்களா? கெட்டவங்களா? இதுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்'’’என்றிருக்கிறார். மாணவிகளோ, "இவ்வளவு நடந்திருக்கு. நல்லவங்களா, கெட்டவங்களான்னு எங்களைக் கேள்வி கேட்டால் எப்படி? உங்க முடிவுக்கே விட்டுவிடுகிறோம்'’என்று சிம்பிளாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்கள். மாணவிகளுடனான விசாரணை 5 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லையாம்.
சவாலான வழக்கல்ல!
சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை குறித்து நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரி “""இங்கேயும் மதுரை, அருப்புக்கோட்டை, திருச்சுழி என்று சம்பந்தப்பட்ட ஊர்களிலும் இப்போது விசாரணை மேற்கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரை மானிட்டரிங் செய்வதற்கு மூன்று மேலதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில், அவர்களின் வழிகாட்டுதல் நிச்சயம் இருக்கும். அதற்கேற்றவாறு, இன்புட், அவுட்புட் இங்கிருந்து செல்லும். சி.பி.சி.ஐ.டி.யைப் பொறுத்தமட்டிலும், இது ஒன்றும் சவாலான வழக்கு அல்ல. வெறும் கையோடு, குளத்தில் இறங்கி மீன் பிடிக்கிற மாதிரி வழக்காக நிச்சயம் இது இல்லை. குளம் முழுவதும் மீன்கள் இருக்கின்றன. கையில் தூண்டில், வலை எல்லாமே இருக்கிறது. சரியாக வீசினால், நிறைய அள்ளிவிடலாம். மாணவிகளிடம் நிர்மலா பேசியது யார் யாருக்காக என்கிற முடிச்சை சந்தேகத்துக்கு இடமின்றி சரியாக அவிழ்த்துவிட்டால் போதும். இதைக்கூட செய்யாவிட்டால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்பது கண்துடைப்பாகவே நடந்திருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்''’என்றார்.
24-ஆம் தேதி இரவு விசாரணைக்கு வந்த முருகனை கைது செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.
நிர்மலாவின் ரோல்மாடல்!
சி.பி.சி.ஐ.டி. தரப்பிலோ “""கோர்ஸ் டைரக்டர் கலைச்செல்வனை விசாரித்து விட்டுவிட்டோம். நிர்மலா சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசியிருக்கிறார் கலைச்செல்வன். கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறார். ஒருவித கிறக்கத்தில் செயல்பட்டிருக்கிறார். மாணவிகள் வேண்டுமென்று நிர்மலாவிடம் அவர் கேட்கவில்லை. அந்தக் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியர் நாகராஜனையும் அழைத்து விசாரித்தோம். காலேஜின் 47 டீச்சிங் ஸ்டாப்பில் கல்லூரி நிர்வாகத்தின் சமூகத்தைச் சேராத 5 பேரில் அவர் ஒருவர், பரிதாபம்தான்.
நிர்மலாவுக்கே ரோல்மாடலாம் அங்கு வேலைபார்க்கும் ஹேமலதா. அவரைப் பார்த்துத்தான் நிர்மலா இப்படி ஆனாராம். அதற்காக, ஹேமலதாவை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்திவிட முடியாது. இது நிர்மலாவின் சாகசம். உதவிப் பேராசிரியர் முருகன் முதலில் ஒத்துழைக்கவில்லை. பிறகு, "ஆமாம். நானும் கருப்பசாமியும் நண்பர்கள். மாணவிகள் தேவையென்று நிர்மலாவிடம் கூறியது நாங்கள்தான்'’என்று ஒப்புக்கொண்டார். அவரை வழக்கில் சேர்த்துவிட்டோம்''’என்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பு.
யாருக்காக இதெல்லாம் நடந்தது என்கிற உண்மைக்காக காத்திருக்கிறார்கள் மக்கள்.
-சி.என்.இராமகிருஷ்ணன்
----------------------------------
மூவர் கூட்டணி!
நம்மைத் தொடர்புகொண்டார் மதுரையில் வசிக்கும் ரெஜினா. ""நிர்மலாதேவிக்கும் கோகிலாவுக்கும் தொடர்பு உண்டு. கோகிலாவின் அண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் ரவிதான் என் கணவர். இவர்களுடைய வேலையே, அமைச்சர்களைக் கவனிப்பதுதான். என்னை ஏமாற்றிவிட்டு, என் கணவர் தலைமறைவாகி விட்டார். ரவிதான் நிர்மலாவை அமைச்சர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஒரே ஊர்; ஒரே ஜாதி என்பதால், கோகிலா, ரவி, நிர்மலா ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து, அந்த வேலையைப் பார்த்தார்கள். முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் என் கணவர் வேலை பார்த்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு போன்றவர்களிடமும் நெருக்கமாக இருந்தார். அவர்களோடு எடுத்த போட்டோக்களை என்னிடம் காட்டியிருக்கிறார். இது எதையும் வெளியில் சொல்லக்கூடாது என்று அருப்புக்கோட்டை போலீசார் மிரட்டுகிறார்கள்''’என்றார் பதற்றத்துடன்.
ரகசியமாக ஆஜரான பேராசிரியை!
தூத்துக்குடி செயிண்ட் மேரீஸ் கல்லூரி தாவரவியல் பேராசிரியை ஜெஸிந்தா தமிழ்மலர், நிர்மலாவுடன் கொடைக்கானல் டூரில் அறிமுகமானவர். அப்போது மாணவிகளும் உடன் சென்றுள்ளனர். டூருக்குப் பிறகு அடிக்கடி நிர்மலாவிடம் பேசிய ஜெஸிந்தாவை சி.பி.சி.ஐ.டி. விசாரித்துள்ளது. இவரது தாத்தா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 90 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய பின்புலம் கொண்டவர் என்பதால் இரவு நேரத்தில் ரகசியமாக ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார் தூத்துக்குடி பேராசிரியை.