ருவழியாக பூனைக்கு மணி கட்டியாச்சு! ஆம், மணிப்பூர் மாநிலம் மூன்று மாதங்களுக்கு மேலாக பற்றியெரிந்தும், மணிப்பூர் மக்களைச் சந்திக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்லவும் பிரதமர் மோடிக்கு மனசே வரவில்லை. அதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்றாலும் விவாதத்துக்கு வரவில்லை. அவரை எப்படியாவது பாராளுமன்றத்துக்குள் வரவைத்து மணிப்பூர் விவகாரம் குறித்து அவரோடு விவாதிக்க நினைத்த "இ.ந்.தி.யா.' கூட்டணிக் கட்சியினர், பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்தனர். இறுதியாக, பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மோடி என்ட்ரி கொடுத்து மணிக்கணக்காக நீண்ட விளக்கம் கொடுத்தார்.

முன்னதாக, மீண்டும் தனது எம்.பி. பதவியைக் கைப்பற்றிய ராகுல் காந்தியின் பேச்சு ஆகஸ்ட் 9ஆம் தேதி புதனன்று, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உணர்ச்சிகரமாக அவர் மனதிலிருந்து பேசிய பேச்சில் அனல் தெறித்தது. தனது பாரத ஒற்றுமை நடைபயணத்தில் தான் கண்ட மனிதர்கள்... அவர்கள் காட்டிய பரிவு... கூறிய பிரச்சனைகள்.. என ஒவ்வொன்றும் தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தைப் பற்றி பேசினார். 'இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் இதயத்திற்கே செல்லும்.' என்ற கவிஞர் ரூமியின் வரிகளை எடுத்துக்காட்டிப் பேசினார். பிரதமரின் பெயரில் அறிவிக்கப்பட்ட பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களின் பலன் தங்களுக்கு கிடைக்காதது குறித்து மக்கள் வருந்தியதைக் கூறினார்.

அடுத்து மணிப்பூருக்கு சென்று, அங்கே நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களைச் சந்தித்தது குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசினார். ""நமது பிரதமர் இன்றுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவில் இல்லை. அவர்கள் மாநிலத்தை இரு துண்டாக உடைத்து இருக்கிறார்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள். முதலில் மணிப்பூர். தற்போது ஹரியானா. நீங்கள் நாடு முழுவதும் மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்கிறீர்கள். தற்போது அது தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது'' என்று அனல் தெறிக்கப் பேசினார்.

திடீர் திருப்பமாக, ராகுல் காந்தி ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததாகக் கூறி, பெண் எம்.பி.க்களை அவமரியாதை செய்துவிட்டாரென்று ஸ்மிர்தி இரானி குற்றம்சாட்டியதோடு சபாநாயகரிடமும் புகாரளிக்கப்பட்டதால், மீண்டும் ராகுல் காந்தியை கட்டம்கட்ட முயற்சிப்பது வெட்டவெளிச்சமானது. இந்நிலையில், ராகுலின் பேச்சில் மோடி குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கியிருப்பதாகத் தெரிகிறது.

Advertisment

ss

மூன்றாவது நாளில் மதியத்துக்குப் பின் ஒருவழியாக அவைக்குள் வந்த மோடி, மாலையில் பேச ஆரம்பித்ததிலிருந்தே வழக்கம்போல் காங்கிரஸ் ஆட்சி... நேரு, இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, தி.மு.க., கச்சத்தீவு விவகாரம், பாகிஸ்தான் எனப் பலவற்றையும் குற்றம் சொல்லிக்கொண்டே போனவர், மணிப்பூர் குறித்து பேசாமலேயே ஒன்றரை மணி நேரத்தைக் கடத்திவிட்டார். 'மணிப்பூர் மணிப்பூர்' என்று குரலெழுப்பிப் பார்த்தும் பேசாததால், எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்ய, இறுதியாகத்தான் மணிப்பூர் குறித்து பேசினார். ""மணிப்பூரில் விரைவில் அமைதி நிலைநாட்டப்படும். மணிப்பூரில் அமைதி திரும்ப அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார் என்று பொத்தாம்பொதுவாகக் கூறி, 3 மணி நேரத்துக்கும் மேலான தனது உரையை அவர் முடித்தபின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து குரல் வாக்கெடுப்பு நடந்து, எதிர்க் கட்சிகளே அவையில் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்தது. இந்தத் தீர்மானமே மோடியை அவைக்கு அழைத்துவரத்தான் என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெற்றியே!

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது அமித்ஷா பேசுகையில், 2008ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கலாவதி என்ற பெண்ணின் வீட்டில் ராகுல்காந்தி உணவு சாப்பிட்டதாகவும், அப்பெண்ணுக்கு காங்கிரஸ் வேறெந்த உதவியும் செய்யவில்லையென்றும், மோடிதான் வீடு, கழிவறை, மின்சாரமெல்லாம் வழங்கினார் என்றும் கூறியிருந்தார். ஆனால், அப்பெண்ணோ வீடு, மின்சாரம் என அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியிலேயே கிடைத்தது என்றும், ராகுல்காந்திதான் அதற்கு காரணமென்றும் பத்திரிகையாளர்களிடம் கூறி அமித்ஷாவின் பொய்யை அம்பலப்படுத்தினார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ""மகா பாரதத்தில் மன்னன் திருதராஷ்டிரன் பார்வையற்றவராக அமர்ந்திருந்தபோது, திரவுபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டது போல் தற்போது மோடி அமர்ந்திருக்கிறார்'' என்று குறிப்பிட்டார். இந்த பேச்சையடுத்து, அவர்மீது குற்றம்சாட்டி அவசர அவசரமாக சஸ்பெண்ட் செய்யப்பட, அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர்.

பிரதமர் மோடி தனது பேச்சில் தி.மு.க.வைக் குறிவைத்து கச்சத்தீவு விவகாரத்தையும், தமிழக அமைச்சர், பிரிவினையைத் தூண்டிப் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். அமைச்சர் ஸ்மிர்திரானி, தி.மு.க.வை ஊழல் கட்சி என்று குற்றம்சாட்டினார். அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அனைத்து செலவையும் ஒன்றிய அரசே செய்வதாகவும், தி.மு.க. நாடகமாடுவ தாகவும் குற்றம்சாட்டினார். நிர்மலா சீதாராமனுக்கு பதிலளித்த அமைச்சர் மா.சு., ""அனைத்து மாநில எய்ம்ஸ் மருத்துவ மனைக்கும் ஒன்றிய அரசு தான் செலவழிக் கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டும் ஜிகா அமைப்பிடம் கடன் கேட்டுள்ளது. ஏனிந்த பாரபட்சம்?'' என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பினார். இப்படி, பிரதமரிலிருந்து அனைவரும் தி.மு.க.வை டார்கெட் செய்வதன் மூலம், காங்கிரசுக்கு அடுத்த முக்கிய கட்சியாக தி.மு.க.வை பா.ஜ.க. பார்க்கத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது.

பாராளுமன்றத்துக்கு மோடியை வரவழைத்து வென்றது இந்தியா!

Advertisment