ராகுல்காந்தி யின் இந்திய ஒற் றுமை நீதிப்பயணம் மும்பையில் நிறைவு பெற்றிருக்கிறது. இதனையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் 17-ந் தேதி நடந்த இந்தியா கூட்டணியின் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தைக் கண்டு மிரண்டுபோயிருக்கிறது பா.ஜ.க.
மோடி அரசாங் கத்தின் சர்வாதிகார முகத்திரையைக் கிழிக்க தனது நடைபயணத்தை இரண்டு கட்டமாகத் தொடங்கினார் ராகுல்காந்தி. முதல்கட்டமாக, பாரத் ஜோடோ யாத்திரை எனும் பெயரில் தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 136 நாட்கள் நடத்திய அவரது நடைபயணம், காங்கிரசுக்கு மிகப்பெரிய எழுச்சியைக் கொடுத்தது.
இதனையடுத்து, இந்திய ஒற்றுமை நீதிப்பயணம் எனும் பெயரில் இரண்டாம்கட்ட பயணத்தை மணிப்பூர் மாநிலத்திலிருந்து தொடங்கி 14 மாநிலங்கள் வழியாக கடந்து மகாராஷ்டிராவில் நிறைவு செய்திருக்கிறார் ராகுல். இந்த இரண்டு நடை பயணங் களும் காங்கிர சுக்கு மட்டுமல்ல; இந்தியா கூட் டணிக்கே புத் துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
ராகுலின் இந்த நடைபய ணத்தை முறி யடிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு எத்த னையோ இன்னல் களையும், சிக்கல் களையும் ஏற்படுத் தியது. அதையெல் லாம் உடைத்தெறிந்து நிறைவு செய்து இலக்கை அடைந் திருக்கிறார் ராகுல்காந்தி.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் முழுமையான ஆதரவு ராகுலுக்கு இருந்ததும் இந்த நடைபயணத்தின் எழுச்சிக்கு ஒரு காரணம் என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். வடகிழக்கில் தொடங்கிய இரண்டாம்கட்ட பயணத்துக்கு மோடி அரசு கொடுத்த பிரச்சனைகளின் போதெல்லாம், ராகுல்காந்தியை தொடர்பு கொண்டு உற்சாகப்படுத்தியவர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணியின் வலிமை என்பது ஸ்டாலினின் அரவணைப்பிலும் ஆதரவிலும் உயர்ந்து நிற்கிறது என்று ராகுல்காந்தி மகிழ்ந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், இந்திய ஒற்றுமை நீதிப்பயணத்தின் நிறைவுப் பொதுக்கூட்டம் பிரமாண்டமாக மும்பையில் 17-ந் தேதி நடந்தது. கூட்டத்தில் திரண்டிருந்த பல லட்சக்கணக்கான மக்களின் எழுச்சியும், ராகுல்... ராகுல் என அவர்கள் எழுப்பிய ஆவேச ஆர்ப்பரிப்பும் கூட்டத்தின் வலிமையை எதிரிகளுக்கு உணர்த்தி யிருக்கிறது.
மக்களின் தன்னெழுச்சியான இந்த ஆர்ப்பரிப்பும் ஆதரவும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருப்பதாகவே தகவல்கள் எதிரொலிக் கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சி, பா.ஜ.க.வை மிரளவைத்திருக்கிறது என்கிறார்கள்.
இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் தலைவர்களான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மல்லிகார்ஜுனகார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதல்வர் சம்பயி சோரன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, ம.தி.மு.க. தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எழுச்சியுடன் முழங்கிய மு.க.ஸ்டாலின், ‘’"ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கிவைத்த பெருமிதத்துடன் இங்கு நான் நிற்கிறேன். உங்களின் இந்த வெற்றிப் பயணம், இந்தியா கூட்டணியை ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க வைக்கும்.
ராகுல் எங்கு சென்றாலும் மக்களின் எழுச்சி திருவிழா போல் இருக்கிறது. அந்தளவுக்கு மக்கள் அவர் மீது அன்பைப் பொழிகிறார்கள். இந்த பயணத்தை தடுத்து நிறுத்த, தடை போட ராகுலுக்கு எத்தனையோ இடர்களை கொடுத்தது பா.ஜ.க. அரசு. அதற்கெல்லாம் அஞ்சவில்லை ராகுல். தடைகளை உடைத்தெறிந்து முன் னேறினார். அவரது நடைபயணத்துக்கு மக்கள் தந்த ஆதரவைக்கண்டு பா.ஜ.க.வினர் தூக்கம் இழந்தனர்.
இது இந்தியாவுக்கான ஒற்றுமை நீதிப்பயணம். இந்தியாவுக்குத் தேவை தற்போது ஒற்றுமைதான். மக்களைப் பிளவுப்படுத்தும் பா.ஜ.க.வை, இந்தியா கூட்டணி வீட்டுக்கு அனுப்பி வைக்கும். பா.ஜ.க.வைப் போல நாட்டுக்கு பேராபத்து வேறு எதுவும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டுப் பயணம், பொய்ப் பிரச்சாரம் ஆகிய 2 விசயங்களை மட்டும்தான் மோடி செய்திருக்கிறார்.
இதனை நாம் தடுத்தாக வேண்டும்; அதுதான் நம்முடைய இலக்கு! இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கியதையடுத்து இந்தியா என்ற பெயரை உச்சரிப்பதையே மோடி நிறுத்திக்கொண்டார். அந்தளவுக்கு அவருக்கு அச்சம் வந்துள்ளது.
இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்கிறார் மோடி. ஆனால் ஊழல்களில் ஊறிய கட்சி பா.ஜ.க.தான். தேர்தல் பத்திர ஊழல் அதனை அம்பலப்படுத்தியிருக்கிறது. தேர்தல் பத்திரம் மூலம் 8,000 கோடி ரூபாயை திரட்டியவர் யார்? மோடிதானே! இது பா.ஜ.க.வின் ஒயிட் காலர் ஊழல். அப்படிப்பட்ட மோடி, ஊழலைப் பற்றி பேசலாமா? இதை மூடி மறைக்கவும் திசை திருப்பவும்தான் இந்தியா கூட்டணி மீது பாய்கிறார்.
பா.ஜ.க.வால் சீரழிக்கப்பட்ட இந்தியாவை மீட்பதும், பா.ஜ.க.வை வீழ்த்துவதும்தான் நம்முடைய ஒரே இலக்கு. பா.ஜ.க.வை விட பெரிய ஆபத்து வேறு ஒன்றுமில்லை. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி மதச்சார்பற்ற, உண்மையான கூட்டணி அரசை ஒன்றியத்தில் அமைக்க, இந்தியாவை காப்பாற்ற உங்களை அழைக்கிறேன். ராகுலின் இந்த பயணத்தின் வெற்றி என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதில்தான் இருக்கிறது''‘என்று ஆவேசமாக முழங்கினார் ஸ்டாலின்.
பா.ஜ.க.வின் ஊழல் முகத்திரையையும் பா.ஜ.க.வால் இந்தியாவை சூழ்ந்துள்ள ஆபத்துகளையும் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களும் அம்பலப்படுத்தினர். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது,”"ஊரெல்லாம் சுற்றிவரும் மோடி நிறைய உத்தரவாதம் தருகிறார். அவர் தரும் உத்தரவாதம் பணக்காரர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்குமானது. இந்தியா கூட்டணியாகிய நாங்கள் தரும் உத்தரவாதம் மக்களுக்கானது''’என்றார்.
இறுதியில் பேசிய ராகுல்காந்தி, ‘"வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை இல்லாமல் தேர்தலில் மோடியால் வெற்றிபெறவே முடியாது. தேர்தலில் வி.வி.பேட் எனப்படும் வாக்கு ஒப்புகைச் சீட்டையும் எண்ணவேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை தேர்தல் ஆணையம் ஏற்கவேவில்லை.
ஊழலில் ஏகபோக ஆதிக்கத்தைக் கொண்டுள்ள ஒற்றை நபராக மோடி வளர்ந்து நிற்கிறார். அந்த மோடி என்கிற தனிநபருக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. ஏனெனில் அவர் வெறும் முகம்தான். அதனால், பா.ஜ.க. என்கிற சர்வாதிகாரத்துக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம். அந்த அதிகாரம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் பல்வேறு அமைப்புகளிலும் பரவிக்கிடக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். அதனைத்தான் வெற்றிகரமாக நடத்தினார் மோடி. உண்மையான பிரச்சனைகளை திசைதிருப்புவதுதான் அவரது ஆட்சியின் வழக்கம். எதிர்க்கட்சிகளைப் பிளவுப்படுத்துவதில் மோடி வல்லவர். சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்தி ரசித்தவர் மோடி.
மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தவும், மக்களிடம் நேரடி, தொடர்பை உருவாக்கவும்தான் இந்த பயணத்தைத் தொடங்கினேன். நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், ஊழல்கள், பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்களை பேசாமல் ஊடகங்கள் மௌனியாக இருந்து வருகின்றன. இந்த பயணத்தின் நிறைவு விழாவில் உங்களை காணும்போது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நடந்தே தீரும் என்ற நம்பிக்கை வருகிறது''’என்றார் ராகுல்காந்தி.
இந்த நிறைவு பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. வரஇயலாத சூழலை ராகுல்காந்திக்கும் மற்ற தலைவர்களுக்கும் அவர்கள் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து நடந்துள்ள இந்தியா கூட்டணிக்கான ராகுலின் நிறைவு பயணம், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் இந்திய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.