150 நாட்கள், 3500 கிலோமீட்டர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் வழியாக நடை பயணம் சென்று, இந்திய மக்களின் யதார்த்த நிலையை நேரடியாகக் காண்பதோடு, இந்திய ஒற்றுமையை வலியுறுத்துவதே ராகுலின் நடைபயணத்தின் நோக்கம். கூடவே, மாநிலங்கள்தோறும் காங்கிரஸை வலிமைப்படுத்துவதும்தான். இந்த நடைபயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக இந்தியாவின் தென்முனையான குமரியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ராகுல்.
இந்தியா ஒற்றுமைப் பயணத்தை 7-ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய ராகுல்காந்தி தன்னுடைய 2-ஆம் நாள் நடை பயணத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் தந்தை சண்மும், சண்முகத்தின் சகோதரரான மணிரத்தினம் ஆகியோரை கரூர் ஜோதிமணி எம்.பி. ஏற்பாட்டில் சந்தித்தார். சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அவர்களிடம் பேசியபடியே வந்த ராகுலிடம், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரி மனு ஒன்றைக் கொடுத்தனர் இருவரும். பின்னர் மந்தாரம்புதூர் அருகே வந்துகொண்டி ருக்கும்போது சாலை ஓரத்தில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தவர்கள் ராகுல்காந்தியை நோக்கி இளநீரை நீட்டினர். அந்த அன்பை ஏற்றுக்கொண்டு, இளநீர் வியாபாரியிடம் இளநீரை வாங்கிக் குடித்தார். பின்னர் அவர் 101 ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி வந்துசென்ற சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். பள்ளியில் சென்று மரக்கன்று ஒன்றை நட்டார். அப்போது காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், தியாகிகள் அடை பட்டுக்கிடந்த அந்தமான் சிறைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த மண் மற்றும் தண்ணீரை அதில் ஊற்றக் கொடுத்தார்.
பின், மாலை 4.30 மணிக்கு நடை பயணத்தைத் தொடங்கிய ராகுலுக்கு இடலாக்குடியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடு களின் வெளியே உற்சாகமாக கையசைத்து வரவேற்பளித்தனர். பின்னர் அவர் தங்கக்கூடிய ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்குச் சென்றார்.
தினமும் காலை 3 மணி நேரமும் மாலை 3 மணி நேரமும் நடை பயணம் மேற்கொள்வது தான் ராகுலின் திட்டம். ராகுலின் மிடுக்கான, சுறுசுறுப்பான நடையால் குறிப்பிட்ட இடத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னதாகவே சென்றுவிடு கிறார். உடன் நடக்கும் 118 பேர் சோர்ந்தாலும், ராகுல் துளியும் சோர்வில்லாமல் இருப்பதாக அவ ருடன் நடந்து செல்லும் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
3-ஆம் நாள் நடை பயணத்தில் குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தியாகிகளில் தற்போது உயிரோடு இருக்கும் ஒரே தியாகியான கொடிக்கால் ஷேக் அப்துல்லாவைச் சந்தித்துப் பேசிவிட்டு நடை பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் கொடுத்த தேசியக் கொடியை ஒருவரே பிடிக்காமல் மற்றவர்களும் மாறி, மாறி தூக்கிப் பிடிக்க அறிவுரை கூறினார்.
பார்வதிபுரம் கடந்து வரும்போது இங்கிருந்து குஜராத்வரை பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி உடன் நடந்துவரும் காங்கிரசாரிடம் கேட்டார். அவர்கள், பல இடங் களில் மலை பிளக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டி, இங்கிருந்துதான் கேரள மாநிலம் விழிஞ் ஞத்தில் அதானி கட்டும் துறைமுகத்துக்கு கற்கள் கொண்டு செல்லப்படுகிறது என கூறினார்கள்.
வழியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ராகுல் காந்தியுடன் இணைந்துகொண்டார். பாண்டியனிடம் டீ குடிப்போமா என கேட்டு பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் ஒருவர் நடத்தும் டீக்கடைக்குச் சென்று வெளியே இருந்த இருக் கையில் அமர்ந்தார். தேநீர் அருந்திவிட்டு வணக்கம் சொல்லிக் கிளம்பியபின், அந்தப் பெண், “"அவர் ராகுல்காந்தினு முதல்ல தெரியலை. அவரோட கூட்டத்துக்கு வந்த வடக் கத்தி ஆளுனு நினைச்சேன். இவ்வளவு எளிமையா இருக்காரே,…இவ்வளவு கிட்ட அவரைப் பார்ப் பேன்னு நான் நினைக்கவே இல்லை''’என்றார் வியப் பாய்.
குமரி மாவட்டத்தில் மட்டும் சமூக ஆர்வலர் கள், செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுத்தளத்தில் இயங்கும் அறிவுஜீவிகள் என 50-க்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறார். அவர்களிடம், காங்கிரஸ் இனி என்ன செய்ய வேண்டுமென பல ஆலோசனைகளைக் கேட்ட தோடு, முந்தைய காலத்தில் காங்கிரஸ் அரசின் தவறுகளுக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தார்.
ராகுல்காந்தி தனது நடை பயணத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களைத்தான் சந்திக்கிறார்… கிறிஸ்தவ ஆலயங்கள், கல்வி நிறுவனங்களில்தான் தங்குகிறார் என்ற பா.ஜ.க. தரப்பின் குற்றச் சாட்டுக்கு, தனது பயணத்தின் தொடக்கத்தையே, மேற்கத்திய மக்களை, தன் பேச்சால் வியப்பிலாழ்த் திய விவேகானந்தருக்கான மணிமண்டபத்தி லிருந்துதான் தொடங்கியதைச் சுட்டிக்காட்டுகிறது காங்கிரஸ்.
அடுத்தபடியாக கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் வழியாக 19 நாட்கள் நடை பயணத்தை தொடங்கியிருக்கிறார். தொடர்ச்சியாக இரு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றியைப் பறிகொடுத்திருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு, ராகுலின் இந்தப் பயணம் ஊக்கமருந்தாக அமையும்.