(100) காஸ்ட்லி கார் கட்டுக்கதை!
எனது 100-வது படம் "தம்பி தங்கக்கம்பி'.’
காலையில் நடிகர்திலகம் சிவாஜி அவர்களை வைத்தும், மாலையில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்தும்... ஒரே நேரத்தில் படங்கள் இயக்கிய பெருமைக்குரியவர், சிறந்த எடிட்டர், எம்.ஜி.ஆரின் உறவினர்... இப்படி பல பெருமைகள் கொண்ட இயக்குநர் கே.சங்கர் அவர்கள்தான் இந்தப் படத்தை இயக்கினார். (நான் அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்)
விஜிமா ஹீரோ. ரூபிணி, அப்போது வளர்ந்துவரும் நடிகையாக இருந்த... சோ சாரின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளான ரம்யாகிருஷ்ணன் ஆகியோருடன் வில்லனாக நானும் இந்தப் படத்தில் நடித்தேன். மும்பையில் அந்தேரி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது. படக்குழுவினர் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்க... எனது கல்லூரி நண்பனான மும்பையில் வசிக்கும் நாராயணன் என்னை பாம்குரோவ் ஹோட்டலில் தங்கவைத்தார்.
அந்தேரி ஸ்டுடியோ பரந்து விரிந்த பள்ளத்தாக்கு, மலை, பெரிய ஏரி... என இயற்கை வளம்கொண்டது.
ஒருநாள்... படப்பிடிப்பு இடைவேளையின்போது... நானும், விஜிமாவும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது போலீஸ் காஸ்ட்யூமில் ஒரு நடிகை எங்களைத் தாண்டிப் போனார். இந்தி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் நானும், விஜிமாவும் தமிழில் பேசிக்கொண்டது... அந்த நடிகையை சுண்டி இழுக்க... கடந்துபோனவர் திரும்பி வந்து...’’""யாரு?''’’எனக் கேட்டார்.
பேச்சு சுவாரஸ்யத்தில் கவனிக்க மறந்த நாங்கள் திடீரென்று அவரைப் பார்த்ததும்... மகிழ்ச்சியடைந்தோம். பாலிவுட்டின் முன்னணி நாயகியான நம்ம ஊர் ஹேமமாலினி அவர்.
""நான் எம்.ஆர்.ராதாவோட மகன்''’என என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதுடன்... “""திருச்சி சங்கிலியாண்டபுரம்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர்''’என்றேன். திருச்சி ஸ்ரீரங்கம்தானே ஹேமமாலினி அவர்களின் ஊர். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
ஹெலிகாப்டர் சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது. நான் ஹெலிகாப்டருக்கு உள்ளே இருந்தேன். விஜிமா ஹெலி ஸ்டேண்ட்டை பிடித்து தொங்கிக்கொண்டு நடித்தார். மிக உயரத்தில் டூப் இல்லாமல் விஜிமா தொங்கியதைப் பார்த்த இந்திக்காரர்களான ஸ்டுடியோ தொழிலாளர்கள்... “"இவ்வளவு தைரியசாலிய நாங்க பார்த்ததில்ல...'’எனச்சொல்லி விஜிமாவை வியந்தார்கள்.
நான் இந்தப் படத்தில் மூக்கை உறிஞ்சுவதுபோல் ஒரு மேனரிஸத்தை செய்தேன் படம் முழுக்க.
""வில்லன் செய்ற மேனரிஸத்தை வில்லன், ஹீரோவிடம் சிக்கும் இடத்தில் ஹீரோ செய்தால் தியேட்டரில் அப்ளாஸ் கிடைக்கும்''’என விஜிமாவிடம் சொன்னேன். அவரும் அதுபோல செய்தார். அந்த காட்சியில் தியேட்டர்களில் கைதட்டல் பலமாக எதிரொலித்தது.
(இதையே நான் "அண்ணாமலை'’படப்பிடிப்பின்போது ரஜினி சாரிடம் சொன்னேன். அதுபற்றி பிறகு சொல்கிறேன்)
நூற்றாண்டு கடந்த நிலையிலும் என் அப்பா "நடிகவேள்' எம்.ஆர்.ராதா அவர்களைப் பற்றிய கட்டுக்கதைகள் பல உலவியபடிதான் இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கதை... காஸ்ட்லி கார் கதை.
என் அப்பா வெள்ளை நிற செவர்லெட் கார் வாங்கினார்.
"தாய்சொல்லை தட்டாதே'’ படத்தின் க்ளைமாக்ஸில் அப்பாவை போலீஸ் கைது செய்யும். அப்போது... போலீஸாரிடம் "என்னோட காஸ்ட்லி கார்லயே போலீஸ் ஸ்டேஷனுக்கு போலாமே'’என்பார். அந்தப் படத்தில் அப்பாவின் கார் இடம் பெற்றது.
என் தங்கை ரதிகலா மீது அப்பாவுக்கு ரொம்பப் பிரியம். அதனால் தங்கையை நாங்கள் தூண்டிவிட்டு... பத்திரிகை விளம்பரத்தில் வந்த ஒரு கார் மாடலைக் காண்பித்து... “"நைனாவ வாங்கச் சொல்லு'’எனச் சொன்னோம்.
அதேபோல... “"நைனா... இந்தக் கார் வேணும் நைனா'’என அப்பாவிடம் தங்கை கேட்க... உடனே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார் அப்பா.
சென்னை -நுங்கம்பாக்கம் ‘வித்யோதயா ஸ்கூல்’ எதிரில் கார்னர் வீட்டில் குடியிருந்தார் கார் பிசினஸ் செய்யும் குண்டுப்பிள்ளை அவர்கள். அவரை உடனடியாக வரச்சொல்லி... கார் வாங்க ஏற்பாடு செய்தார் அப்பா.
சிவப்புநிற இம்பாலா செவர்லெட் டூரர் கார் வாங்கினார் அப்பா. அந்தக் காரில் டாப் ஓபனாக இருக்கும். கார் வேகமாக செல்லச் செல்ல... தானாகவே டாப் மூடிக்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது அந்தக் கார்.
அந்தச் சமயம் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னைக்கு வந்தபோது... அவரின் பயன்பாட்டுக்கு என் அப்பாவின் இந்தக் காரைக் கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால்... “"இந்த ராதாகிருஷ்ணன் (அப்பாவின் முழுப்பெயர் ராதாகிருஷ்ணன்) பயன்படுத்தத்தான் இந்தக் கார். ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பயன்படுத்துறதுக்கு இல்ல...'’’ எனச்சொல்லி காரை இரவல்தர மறுத்துவிட்டார் அப்பா.
டைரக்டர் ஸ்ரீதர் சார் "காதலிக்க நேரமில்லை'’படத்தை எடுத்தபோது... “"உங்க கார் என் படத்துல நடிக்கட்டும்'’எனக் கேட்டதால்... அப்பா கொடுத்தார்.
அந்தப் படத்தில் முத்துராமன் சாரும், காஞ்சனா அம்மாவும் ‘"என்ன பார்வை உந்தன் பார்வை'’என்கிற டூயட் பாடலில் இந்தக் காரில் வருவார்கள்.
ராமாபுரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எதிரே எங்களுக்கு பெரிய தோட்டம் இருந்தது. (இப்போது அந்த இடத்தில் "ஃபெதர்ஸ் ஹோட்டல்' இருக்கிறது. இந்த ஹோட்டல் பெயரில் துணைப்பெயராக ’"ராதா இன்'’எனப் போட்டிருக்கும். அது அப்பாவின் நினைவாக வைத்தார்களா? இல்லை வேறு காரணமா? எனக்குத் தெரியாது)
அந்த தோட்டத்தில் மாட்டுப் பண்ணையும் வைத்திருந்தோம். அதை கவனித்துக்கொள்ள வேலையாட்கள் இருந்தாலும்கூட... என் அம்மா தனலட்சுமி அம்மாள் அங்கே போய் வேலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள்... அப்பா ஷூட்டிங்கிற்காக கிளம்பிக்கொண்டிருந்த நேரம்... அம்மா போன் செய்து... “"மாடுகளுக்கு தீவனம் வேணும். அவசரமா ஒரு பத்துப் பிரி (கட்டு) வைக்கோல் அனுப்ப ஏற்பாடு பண்ணுங்க'’என்றார்.
எங்கள் தேனாம்பேட்டை வீட்டிலும் மாடுகள் இருக்கும். தீவனமும் ஸ்டாக் இருக்கும். (இப்போதும்கூட நான் குடியிருக்கும் வீட்டின் பின்பக்க சுவரில்... மாடு கட்டுவதற்காக வளையங்கள் பொருத்தப்பட்டிருந்ததில் ஞாபகார்த்தமாக ஓரிரு வளையங்களை அப்படியே விட்டு வைத்திருக்கிறோம்)
ரோட்டில் போனாலே எல்லோரும் வியந்து பார்க்கும் அந்த உயர்ரக காரின் டிக்கியைத் திறந்து... அதில் பத்துப் பிரி வைக்கோல் ஏற்றச்சொன்னார் அப்பா. வேலையாள் கன்னியப்பன் அண்ணன் வைக்கோல் பிரிகளை அடுக்கினார். டிக்கி கதவு தூங்கிக்கொண்டிருந்ததால் ஒரு கயிறைப் போட்டு டிக்கி கதவின் கொக்கியையும், பம்பரையும் இணைத்துக்கட்டினார். டிக்கி பாதி திறந்த நிலையில் வைக்கோல் பிரிகள் பிதுங்கிக்கொண்டு வெளியே தெரியும்படி இருந்தது.
டிரைவர் தமிழன் அண்ணன் காரை ஸ்டார்ட் செய்ய... அப்பா ஏறி உட்கார்ந்தார்.
"ஏய்யா... கன்னியப்பா... பண்ணைல வைக்கப் பிரிகள எறக்கணுமே... நீயும் கூடவா...'’’ என அப்பா சொல்ல... மேல் சட்டை அணியாமல் இருந்த கன்னியப்பன் அண்ணன் காரில் ஏறி அமர்ந்தார்.
கோடம்பாக்கம் சாலை வழியாக... வடபழனி வாஹினி ஸ்டுடியோவுக்குள் கார் நுழையும் வரை எல்லோரும் வினோதமாக காரை பார்த்திருக்கிறார்கள்.
ஸ்டுடியோவில் இருந்தவர்களோ... ஏற இறங்கப் பார்த்திருக்கிறார்கள்.
அப்பா ஸ்டுடியோவில் இறங்கிக்கொண்டு... வைக்கோல் பிரிகளுடன் காரை தோட்டத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
"என்ன இப்படி? இந்தக் கார்ல வைக்கோல் பிரி ஏத்தியிருக்கீங்க?'’என அப்பாவிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அப்பா... "இரும்புல செஞ்சு, பெயிண்ட் அடிச்சதுதான் காரு. அத நம்ம வசதிக்காகத்தான் வாங்குறோம். நம்ம அவசரத்துக்கு பயன்படலேன்னா... அப்பறம் எதுக்கு காரு?'’என அப்பா சொல்லியுள்ளார். ஆனாலும்... ஒரு கட்டுக்கதை உருவாகிவிட்டது.
என்ன கதை?
"நடிகர்திலகம் சிவாஜி இதேபோல் ஒரு கார் வாங்கியிருந்தார். ஒரு முறை அவசரத்திற்கு எம்.ஆர்.ராதா அந்தக் காரை இரவல் கேட்டபோது... ஏதேதோ காரணம் சொல்லி, சிவாஜி தர மறுத்துவிட்டார். அதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா அதேபோல ஒரு காரை வாங்கி... அதில் வைக்கோல் பிரியை ஏற்றியிருக்கார்'’’
இதுதான் அந்த கட்டுக்கதை.
ரொம்ப ஸ்ட்ராங்காக கட்டியதால் அந்த கட்டுக்கதை காலங்கள் பல கடந்தும் பேசப்படுகிறது. அது கட்டுக்கதை என்கிற உண்மையை நான் சொல்லியிருக்கிறேன்.
(பெண் அமைச்சராக இருந்த ஒருவருக்கு அந்த காரை கொடுத்தார் என் அப்பா...)