(98) ஹீரோ அந்தஸ்து தந்த பாட்டு!
"குரு சிஷ்யன்'’படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி... தாம்பரத்தை அடுத்த கல்குவாரி பகுதியில் எடுக்கப்பட்டபோது... படப்பிடிப்பின் இடைவேளையில்... ""நீங்க எப்படித்தான் இவ்வளவு அரசியல் பேசுறீங்களோ? நிறைய மீட்டிங் போறீங்கள்ல... நான் அரசியலுக்கு வந்து... என்னை நீங்க ஆதரிச்சுப் பேசுறதுன்னா... எப்படிப் பேசுவீங்க?'' எனக் கேட்டார் ரஜினி சார்.
""மராட்டியரான ரஜினி... கன்னட மண்ணில் பிறந்தவர். தமிழ் மண்ணில் சூப்பர் ஸ்டார் ஆனவர்...''
-இப்படி நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே...
""அடேங்கப்பா... சரி... என்னை எதிர்த்துப் பேசுறதா இருந்தா எப்படி பேசுவீங்க?'' எனக் கேட்டார்.
""பிழைப்புக்காக செக்போஸ்ட்ட தாண்டி வந்த ரஜினி... இங்க வந்து அரசியல் பண்றார்னு பேசுவேன்'' என்றேன்.
சிரிடானு சிரிச்சார் ரஜினி.
என்னிடம் கலைஞரைப் பற்றி... அவரின் அரசியலைப் பற்றி... பலமுறை விசாரித்ததுடன்... புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அம்மா... பற்றியும் அடிக்கடி ரஜினி சார் என்னிடம் விசாரித்துள்ளார்.
அப்போதே... ரஜினி சாருக்கு அரசியல் ஐடியா இருந்ததோ... என்னவோ?
நானும், நடிகர் சிவச்சந்திரனும் நண்பர்கள். நான் அவரை "மாப்ள'’என்றுதான் கூப்பிடுவேன். பிரபுமா, லட்சுமி, ராதா நடித்த ‘"என்னுயிர் கண்ணம்மா'’படத்தை மாப்ள’ சிவச்சந்திரன் டைரக்ஷன் செய்தார். இதில் நான் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தேன். குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்தது. ரொம்ப அற்புதமான படம். நன்றாகவும் ஓடியது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் சிவச்சந்திரனும், லட்சுமியும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். படம் வெளியான பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், நானும், ‘"பார்ட்னர்'’கார்த்திக்கும் நடித்த "ஒரே ரத்தம்'’படம் பற்றி ஏற்கனவே விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
படப்பிடிப்பிற்காக குற்றாலம் பகுதியில் தங்கியிருந்தபோது... பார்ட்னர் என்னிடம், “""எடிட்டர் பி.லெனின் எடுத்துக்கிட்டிருக்க... "சொல்லத் துடிக்குது மனசு'’படத்துக்காக ஒரு பிரமாதமான பாடல் ரெக்கார்ட் பண்ணீருக்காங்க. படத்துல இந்த பாடல் காட்சிய எனக்குத் தரணும்னு லெனின் சார்கிட்ட கேட்டிருக்கேன்'' எனச் சொல்லி... அந்தப் பாடலை போட்டுக் காண்பித்தார். அதன்பிறகு நான் அதை மறந்தேவிட்டேன்.
பார்ட்னர் தனக்கு அமையவேண்டும் என நினைத்த அந்தப் பாடல் எனக்கு அமைந்தது.
அண்ணன் இளையராஜா இசையில்... அண்ணன் ஜேசுதாஸ் பாடிய ‘"பூவே செம்பூவே'’ என்கிற காலத்தால் அழியாத அந்தப் பாடல் காட்சி சத்யா ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது.
நான் பாடி நடித்தேன். நாயகி பிரியா நடனம் ஆடினார். நண்பர் ஜப்பான் ரவியின் நடனக்குழுவும் ஆடியது. பார்ட்னரும் இந்த பாடல் காட்சியில் பார்வையாளர் பகுதியில் இடம்பெற்றிருப்பார்.
பார்ட்னர் கார்த்திக்கின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்தில் பார்ட்னரின் நடிப்பு எக்ஸ்ட்ராடினரியாக இருந்தது.
நாயகியாக நடித்த பிரியாவின் ஒரிஜினல் பெயர் கற்பகம். எங்கள் வீட்டருகேதான் பிரியாவின் வீடும் இருந்தது. அதனால் பிரியாவை சிறுவயதிலிருந்தே எனக்குத் தெரியும். என்னை ‘மாமா’ என்றுதான் அழைப்பார். நானும், பிரியாவும் ‘"சொல்லத் துடிக்குது மனசு'வில் கணவன்- மனைவியாக நடிக்க வேண்டும் என்றதும்... எனக்குச் சிரிப்புதான் வந்தது. (மலையாளத்திலும் அப்போது முன்னணி நடிகையாக இருந்தார் பிரியா)
நடிகர்சங்க நிதிக்காக சென்னை -மியூஸிக் அகாடமியில் அண்ணன் ஜேசுதாஸ் அவர்கள் இசை நிகழ்ச்சி நடத்தியபோது... ""நான் ராதாரவியின் பாட்டை பாடப்போறேன்'' எனச் சொல்லிவிட்டு... இந்தப் பாட்டைப் பாடினார்.
ஒருமுறை நான் அமெரிக்கா சென்றுவிட்டு விமானத்தில் வந்தபோது அதே விமானத்தில் வந்த ஜேசுதாஸ் அண்ணன்... “""ரவியேட்டா... (ரவியண்ணா)... என்னோட ஆல்பத்துல எல்லாம் உங்க பாட்டு தவறாமல் இடம்பிடிக்குது'' என்றார்.
""நீங்க பாடியது... உங்க பாட்டுண்ணா... நான் வாயசைச்சு நடிச்சேன்... அவ்வளவுதான்'' என்றேன்.
""இல்ல ரவியேட்டா... ஒரு பாட்ட ஒரு பாடகன் பாடுறதோட சரி... அது வெளிவந்த பின்னாடி அதுக்கு யாரு வாயசைச்சு நடிச்சாங்களோ அவங்க பாட்டாதான் அது மாறிடுது'' என்றார்.
இந்தப் பாடல் எனக்கு உள்ளூர்த் தமிழர்களிடத்திலும் உலகத் தமிழர்களிடையேயும் ஒரு கதாநாயக அந்தஸ்தை தந்துவிட்டது என்று சொன்னால் அது மிகையானது அல்ல. இப்போதும்கூட என்னைச் சந்திக்கிறவர்கள் "பூவே செம்பூவே'’பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டு பேசுகிறார்கள்.
இதற்காக எப்போதும்... டைரக்டர் எடிட்டர் பி.லெனின் அண்ணன் அவர்களுக்கு நன்றி சொல்லத் துடிக்குது என் மனசு.
ராஜசேகர் சார் டைரக்ஷனில் "கழுகுமலை கள்ளன்'’படத்தில் நடித்தேன். இதில் ஹீரோ சரண்ராஜ். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் சரண்ராஜ் எனக்கு மிகநல்ல நண்பரானார். சரண்ராஜ், மிக அருமையாக ஸ்டண்ட் செய்து நடிக்கக்கூடியவர்.
மணிவண்ணன் சாரும், நானும் பல படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும், அவருடைய டைரக்ஷனில் நான் நடித்த ஒரே படம் "உள்ளத்தில் நல்ல உள்ளம்.'
இதில் விஜிமா ஹீரோவாக நடித்தார்.
மணிவண்ணன் டீமுக்கு ‘மாப்ள’ சத்யராஜ் நன்றாக செட் ஆவார். ஆனால்... விஜிமா, நான் உட்பட எங்கள் செட்டால்... மணிவண்ணன் டீமில் ஃப்ரீனெஸ்ஸாக ஒர்க்பண்ண முடியவில்லை.
ஏவி.எம். கார்டனில் படப்பிடிப்பு நடந்தபோது... புறாக்களுக்கு நான் தீனி போட... அவை கூட்டமாக அமர்ந்து தின்னும்போது... டபுள் பேரிங் துப்பாக்கியால் சுடவேண்டும். இந்தக் காட்சியில் டம்மி குண்டுகள்தான் பயன்படுத்தப்பட்டன. அதற்கே... பல புறாக்கள் இறந்துவிட்டன.
இப்போதெல்லாம் அப்படி ஸீன் எடுக்க முடியாது. மிருகவதை தடுப்புச் சட்ட ஆட்கள் வந்துவிடுவார்கள்.
‘"உள்ளத்தில் நல்ல உள்ளம்'’ படம் சுமாராகத்தான் போனது.
மனோபாலா சார் டைரக்ஷனில் நான் நடித்த முதல் படம் ‘"தென்றல் சுடும்'.’ இந்தியில் ரேகா மேடம் நடித்த படத்தின் ரீ-மேக் இது. என்னைப் பொறுத்தவரை ரேகாவைவிட மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ராதிகா. நான் மேனேஜர் ரோலில், எங்க வாசு அண்ணனை இமிடேட் பண்ணி நடித்திருந்தேன்.
படத்தின் முன்பாதியில் அப்பாவிப் பெண்ணாக... முகத்தில் தழும்புடன் இருப்பார். பின்பாதியில்.... சர்ஜரி செய்து தழும்பு நீக்கி, ஸ்டைலாக வந்து... பழிவாங்கும் ஆவேசமான பெண்ணாக இருப்பார் ராதிகா. இப்படி இரண்டு மாறுபட்ட வேடங்களில் அசத்தியிருந்தார்.
பழிவாங்கும் ஆவேசமும், அடுத்த கணமே... குழந்தைகள் மீது கரிசனம் காட்டியும்... ஒரே நேரத்தில் இரண்டு பெர்ஸனாலிடிகளை வெளிப்படுத்தும் அற்புத நடிப்பைத் தந்திருந்தார் ராதிகா.
ராதிகா என் தங்கை என்பதற்காக நான் பாராட்டவில்லை. ராதிகா மிகச்சிறந்த நடிகை என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.
"தென்றல் சுடும்'’ படத்தினால் நல்ல நண்பனாக மனோபாலா என்னுடன் இணைந்தார்.
இன்றுவரை எங்கள் இருவருக்கும் இடையேயான ஃப்ரெண்ட்ஷிப் நன்றாக இருப்பதாகத்தான்.... நான் நினைக்கிறேன்.
(நானும் ரஜினி சாரும் காரில் போனோம்... பிரேக் டவுன். டாக்ஸியில் போனோம்... பிரேக் டவுன். ஆட்டோவில் போனோம்... அந்த அனுபவங்கள்...)
படம் உதவி: ஞானம்.
---------------------------------------------------
தேடி வந்த விஷால் அப்பா!
ஊட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது... நான் வேறொரு படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையத்தில் இருந்தேன். அப்போது தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி அவர்கள் கண்டஸா காரில் அங்கு வந்தார். (விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி)
""ராதிகா நடிப்பில் ஒரு படம் தயாரிக்கணும். ராதிகாவோட டேட்ஸ் வேணும். நீங்க உதவணும்'' என்றார்.
உடனே நான் அவரை ஊட்டிக்கு அழைத்துக் கொண்டுபோய், ராதிகாவிடம் ரெகமெண்ட் செய்தேன்.
அதன்படி.. ‘"இது உங்க குடும்பம்'’ என்கிற படத்தை ரகுவரன், ராதிகா, ஊர்வசி ஆகியோரை வைத்து தயாரித்தார். இதில் நானும் ஒரு சின்ன ரோல் செய்தேன்.
சென்னை அண்ணா நகரில் அப்போது வீடு கட்டிக்கொண்டிருந்தார் ஜி.கே.ரெட்டி. அந்த வீட்டிலும் ஷூட்டிங் நடந்தது. ஜி.கே.ரெட்டியின் மகன்களான கிருஷ்ணா, விஷால் இருவரும் அப்போது சிறுவர்கள்.