(93) முதல்வர் ஆபீசிலிருந்து கதாநாயகிக்கு போன்!
நான் ஹீரோவாகவும், சரிதா அவர்கள் எனக்குச் ஜோடியாகவும் நடித்த படம் "வாழ்க வளர்க'.’தயாரிப்பாளர் பாண்டியன். இயக்கம் விஜய்கிருஷ்ணராஜ்.
இந்தப் படத்திற்காக என்னை அணுகிய சமயம்.. சரிதா அவர்கள் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார்.
"தண்ணீர் தண்ணீர்'’படத்தில் கான்ஸ்டபிள் வேஷத்துக்கு கே.பி.சாரிடம் என்னை ரெகமெண்ட் செய்தவர் சரிதா. அந்த நன்றிக்காக... "வாழ்க வளர்க'’படத்திற்கு கதாநாயகியாக சரிதா பெயரை நான் சிபாரிசு செய்தேன். அப்போது சைதாப்பேட்டையில் சைதை துரைசாமி அவர்களின் வீட்டுக்குப் பின்பகுதியில் சரிதாவின் வீடு இருந்தது. அவரிடம் கதை சொல்வதற்காக விஜய்கிருஷ்ணராஜ் போனபோது நானும் கூடப்போயிருந்தேன். அவரிடம் கதை சொல்லி, சம்பளம் பேசி முடிவு செய்தோம்.
படப்பிடிப்பிற்காக ஏற்காடு எக்ஸ்பிரஸில் போகும்போது... இந்தப் படத்தில் என்னுடன் நடிக்கும் செந்தாமரை அண்ணனும் வந்தார். ரயிலில் பயணிக்கையில் மார்வாடி ஒருவர் செந்தாமரை அண்ணனை ஏதோ சொல்ல... எனக்கு கோபம் வந்து... அந்த மார்வாடியை அடித்துவிட்டேன். ரயிலை நிறுத்துவதற்காக செயினைப் பிடித்து இழுக்கப்போவதாக மார்வாடி சொல்ல... ‘""நீ அந்தச் செயினை இழுத்தா நான் உன் செயினை இழுப்பேன்டா'' எனச் சொல்ல... நீண்டநேர தகராறுக்குப் பின் ஒருவழியாக சண்டை ஓய்ந்தது.
சங்ககிரி பகுதியில் படப்பிடிப்பு. அதனால் சங்ககிரியில் நாங்கள் இறங்கவேண்டும். நாங்கள் இறங்கியபின் மிக மெதுவாக வந்தார் செந்தாமரை அண்ணன். அதற்குள் ரயில் கிளம்ப... அவசரத்தில் குதித்ததில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
அன்றையதினம் அந்த ரயிலில் ஏற்பட்ட எனக்கும், செந்தாமரை அண்ணனுக்குமான நட்பு... அவர் இறக்கும்வரை எங்களிடையே நீடித்தது.
(செந்தாமரை அண்ணன் வீட்டில்தான், மறைந்த முன்னாள் சபாநாயகர் அண்ணன் தமிழ்க்குடிமகன் தங்கியிருந்தார். செந்தாமரை அண்ணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மிக தாமதமாக தமிழ்க்குடிமகன் வந்ததால், நான் அவரை கடிந்துகொண்டேன்.
"நான் இருக்கும்போது என்வீட்டு நாய் இறந்தால் வருகிற கூட்டம்கூட... நான் இறந்தால் வராது'’என அய்யா கண்ணதாசன் சொல்வார். ‘"கூத்தாடிப்பயலுக நன்றி கெட்ட பயலுக...'’என என் அப்பா சொல்வார்.
அந்த உண்மையான வார்த்தைகளை செந்தாமரை அண்ணன் மரணத்தில் பார்க்க முடிந்தது.
செந்தாமரை அண்ணனின் மறைவிற்குப் பிறகு அவரின் மகளுக்குத் திருமணம் நடந்தபோது, ரஜினி சார் என்னிடம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர்களிடம் கொடுக்கச் சொன்னார். செந்தாமரை அண்ணன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இன்றளவும் என் நட்பு தொடர்கிறது.)
எடப்பாடியைத் தாண்டி... நெடுங்குளம் என்கிற ஊரில் ஒரு வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். சரிதா ஈரோட்டில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
நாங்கள் தங்கியிருந்த ஊர் மொத்தமும் அ.தி.மு.க.காரர்களாக இருந்தார்கள். நானும், செந்தாமரை அண்ணனும் மட்டும்தான் தி.மு.க.காரர்கள்.
இப்போது ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருக்கும் அண்ணன் முத்துச்சாமி... புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் மந்திரியாக இருந்தவர். தனது சொந்த ஊரான நெடுங்குளத்தில் உள்ள தனது வீட்டில்... புரட்சித்தலைவர் வந்தால் தங்குவதற்காக ஒரு அறையை நிரந்தரமாக ஏற்பாடு செய்து வைத்திருந்தார். நான் படப்பிடிப்பிற்காக அந்த ஊரில் இருக்கிற தகவல் தெரிந்ததும்... என்னை அந்த அறையில் தங்கிக்கொள்ளச் சொன்னார்.
நான் அந்த அறையைப் போய்ப் பார்த்து... கும்பிட்டுவிட்டு திரும்பினேன். கோயில் மாதிரி இருந்த அந்த அறையில் நான் தங்கவில்லை.
புரட்சித்தலைவர் மறைந்ததும் வீரப்பன்சத்திரம் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, தி.மு.க.வில் சேர முடிவெடுத்தபோது... நான் தி.மு.க.காரனாக இருந்தபோதும்... “""ஏன் அ.தி.மு.க.வுலருந்து விலகுறீங்க? முத்துச்சாமி அண்ணனுக்கு பக்கபலமா அவர்கூட இருங்க''’என்றேன். இதைக் கேள்விப்பட்ட முத்துச்சாமி அண்ணன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
(இப்போதும் அந்தப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க.காரர்களான கராத்தே’நாவலன், பாரி, ஜெயபால் ஆகியோர் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.)
காவேரி கிராஸ் என்கிற இடத்தில் மூணு பாலம் உள்ளது. அங்கே ஒரு சின்ன மலை. அந்த மலையில் என் வீடு இருப்பதுபோல செட் போடப்பட்டது.
""கல்யாணம் செய்துக்கமாட்டேன்... ஆனா கூட வச்சுக்குவேன். மூணு வேளை சோறு போடுவேன்... மூணு மாசத்துக்கு ஒரு சேலை வாங்கித்தருவேன். குழந்தை பெத்துக்கக்கூடாது. மகாராணி மாதிரி வச்சுக்குவேன்... பிடிக்கலேன்னா உடனே விலகிப்போகலாம்...''’
-இப்படிப்பட்ட பாலிஸி கொண்டது நான் ஏற்ற கள்ளுவாயன் கேரக்டர்.
அப்போது சென்னை -போரூர் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜூக்கு பர்னிச்சர் ஒர்க் செய்யும் காண்ட்ராக்ட்டை செய்து வந்த ஒருவர்... ராமசாமி உடையார் அவர்கள் மூலம் புரட்சித்தலைவருக்கு பழக்கமான அவர்... ஒரு படம் தயாரிக்க ஏற்பாடு செய்து, அதில் சரிதா நடிப்பதாக இருந்தது. அதில் என்ன பிரச்சினையோ? சரிதா கால்ஷீட் கொடுக்கவில்லை. இதனால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, நஷ்டக் கணக்கு காட்டி சரிதாவின் வீட்டை ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டார் அந்த நபர். "வாழ்க வளர்க' படப்பிடிப்பின்போது சரிதா என்னிடம் இதைச்சொல்லி வருத்தப்பட்டார். அந்தச் சமயம் மலையாள நடிகர் முகேஷ் அவர்களை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளிலும் இருந்தார் சரிதா.
ஈரோடு ஆக்ஸ்போர்டு ஹோட்டலில் எனக்கு ஒரு ரூம் எடுத்துக்கொண்டு, அடுத்த ரூமிலேயே சரிதாவை தங்கவைத்தேன். என் அம்பாஸிடர் காரை சென்னையிலிருந்து வரவழைத்து தினமும் படப்பிடிப்பிற்கு என் காரில் சரிதாவை ஏற்றிக்கொண்டு நானே ஓட்டிச்செல்வேன். நெடுங்குளத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் பவானி வழியாக ஈரோடு வந்து ஹோட்டலில் இறக்கிவிடுவேன். இப்படியே அவருக்கு பாதுகாப்பாக இருந்தேன். ஒருநாள்.... ஹோட்டலில் நாங்கள் இருந்தபோது முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து சரிதாவுக்கு போன் வந்திருப்பதாகச் சொன்னார்கள். போனை வாங்கிய சரிதா, பயந்துபோய் என்னிடம் கொடுக்க... நான் வாங்கி ""ஐயா, நான் ராதாரவி'' என்றேன். அடுத்த நொடியே... தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சி.எம். ஆபீஸிலிருந்து பேசியது யார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
(சரிதாவுக்கு பிரச்சினை கொடுத்த நபருக்கும் சரிதாவுக்கும் இடையே சமாதானம் உண்டாக்க புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முயற்சி எடுத்தது பிறகு எனக்குத் தெரியவந்தது.)
"வாழ்க வளர்க' படப்பிடிப்பு முடிந்ததும் எனது காரிலேயே சரிதாவை கேரளாவுக்கு அனுப்பி வைத்தேன்.
படம் தயாராகி எல்லோரும் பார்த்தோம். தயாரிப்பாளர் பாண்டியனுக்கு என்ன தோணியதோ...? அப்போது பிரபலமாக இருந்த பாண்டியராஜனையும், தீபாவையும் புதுசாக படத்துக்குள் நுழைத்தார். போதையில் சரிதாவுடன் நான் செக்ஸ் வைப்பதாகவும்... இதனால் சரிதா கர்ப்பமடைந்து அதை என்னிடம் மறைப்பதாகவும் காட்சிகளை மாற்றினார்கள். இது படத்தில் சொல்லப்பட்ட என் கேரக்டருக்கு எதிராக இருந்தது. தீபாவை நான் வைத்திருப்பதாகவும்; தீபாவுக்கும், வில்லனாக நடித்த டைரக்டர் விஜய்கிருஷ்ணராஜுக்கும் தொடர்பு ஏற்படுவதாகவும்... இதனால் என்னைக் கொல்ல கள்ளில் விஷம் வைத்து எனக்கு கை, கால் விளங்காமல் போகும்படியும் ஸீன்களை மாற்றினார்கள். நான் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதற்கேற்ப நடித்தேன்.
எங்களுக்கு சென்னையை அடுத்த ஈச்சங்காடு புதுப்பாக்கத்தில் நிலம் உண்டு. அதில் வேலை செய்த விவசாயி ஒருவர் கை, கால் சரியாக வராமல் அதற்கான சிகிச்சையை அவரே செய்துகொண்டார். அதாவது... கைகளில் உள்ள பத்து விரல்களிலும், கால்களிலும் கற்களைக் கட்டி தொங்கவிட்டுக்கொண்டு நடமாடுவார். அதை நான் பார்த்திருக்கிறேன். அதேபோல் இந்த கேரக்டருக்கு கற்களைக் கட்டிக்கொண்டு நடித்தேன்.
(ஏகப்பட்ட அனுபவங்களைத் தந்த "உழவன் மகன்')
___________________________
"வாழ்க வளர்க' படத்தில் நானும் சரிதாவும் டிபன் நியூமராலஜி!
செந்தாமரை அண்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா இல்லாமல் ஜோசியம் சொல்லிக் கொண்டேயிருப்பார். அதிலும் நியூமராலஜி ரொம்பவே பார்ப்பார். எதற்கெடுத்தாலும் நம்பர் பார்ப்பதால் அவரை கிண்டல் பண்ணுவதுபோல் நான் காபிக்கும், இட்லிக்கும், தோசைக்கும் ஒவ்வொரு நம்பர் வைத்து... டிபன் தருபவரிடம் "2-ஆம் நம்பர் 2 (இட்லி), 7-ஆம் நம்பர் 1 (தோசை), 10-ஆம் நம்பர் கொஞ்சம் (காபி)' என கிண்டலடிப்பேன்.
ஒருமுறை ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம்தர்மா புதிதாக ஒரு கார் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். அதைப் பார்த்துவிட்டு ""ரவி, இவன் காரு நம்பர் சரியில்லையேப்பா.... இது அவனுக்கு சினிமாவுல உயர்வைத் தராதே'' எனச் சொன்னார்.
ஆனால்... அதன்பிறகுதான் விக்ரம்தர்மா பெரிய ஸ்டண்ட் மாஸ்டர் ஆனார்.