(87)
வெறும் சூரியனா? உதய சூரியனா?
நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்களின் நிறுவன தயாரிப்பில், சகோதரர் அமீர்ஜான் அவர்கள் இயக்கிய படம் "நட்பு'.
செந்தோழன் என்கிற கேரக்டரில் நானும், வாஞ்சிநாதன் என்கிற கேரக்டரில் பார்ட்னர் கார்த்திக்கும் நடித்திருந்த இந்த இரண்டு ஹீரோ படத்தின் கதை, வசனம், பாடல்களை அண்ணன் வைரமுத்து எழுதியிருந்தார்.
பார்ட்னர் கார்த்திக்கிற்கு ஜோடியாக புதுமுகம் ஸ்ரீபாரதியும், எனக்கு ஜோடியாக ஸ்ரீப்ரியாவும் நடித் திருந்தனர்.
கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள வெற்றிவேல் மன்றம் ஹோட்டலில் இரண்டு ஏ.சி.ரூம்கள் மட்டுமே இருந்தன. ஒன்றில் கார்த்திக்கும், இன்னொன்றில் ஸ்ரீப்ரியாவும் தங்கவைக்கப்பட்டனர். நாங்கள் நான்-ஏ.சி. அறைகளில் தங்கியிருந்தோம்.
பொதுவாக கோபிசெட்டிப்பாளையம் ஷூட்டிங் என்றால் எல்லாருக்குமே பிடிக்கும். பச்சைப் பசேல் என எங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
படப்பிடிப்பின்போது... "ரெஸ்ட் எடுத்தா தேவலையே' என்கிற மூடு வந்துவிட்டால் கார்த்திக்கும், நானும் ஒரு காரியம் செய்வோம்.
வெய்யில் வெளுத்துக்கொண்டிருக்கும்போதே... "என்ன பார்ட்னர்... மழை வரும்போல தெரியுதே' என்பார் கார்த்திக்.
நானும்... "ஆமா பார்ட்னர். மேகமெல்லாம் கருகருனு திரண்டு நிக்குது. அடி பிய்ச்சு ஊத்தப் போகுது மழை' என்பேன்.
டைரக்டர் அமீர்ஜான் காதில் விழுகிறமாதிரி இப்படிச் சொல்வோம். அவரும் அதைப் புரிந்துகொண்டு... "கார்த்திக்கிற்கும், ராதாரவிக்கும் ஸீன் முடிஞ்சது. அவங்க ரெண்டுபேரும் மட்டும் ஹோட்டலுக்குப் போகலாம்' எனச் சொல்லுவார்.
நாங்களும் கிளம்பிவிடுவோம்.
ஸ்ரீப்ரியாவும், நானும் சகோதர-சகோதரியாகத்தான் பழகிவந்தோம். எங்கள் இருவரையும் ஜோடியாக நடிக்கவைத்ததால்.. ஸீனில் நடிப்பதற்கு முன்பும், நடித்த பின்பும்... இருவரும் விழுந்துவிழுந்து சிரித்துக்கொள்வோம்.
கதைப்படி கார்த்திக் பணக்காரப் பெண்ணான ஸ்ரீபாரதியை காதலிப்பார். நண்பர்களான கார்த்திக்கும், நானும் ஊரில் நடக்கிற அநியாயங்களை தட்டிக் கேட்பதால்... எங்களை பிரிக்க திட்டமிடுவார்கள். க்ளைமாக்ஸில்... "அந்தப் பொண்ண வாஞ்சிநாதன் கல் யாணம் பண்ணிக்கணும்னா... செந்தோழன் இந்த ஊரை விட்டே போகணும்' என ஊர் பஞ்சாயத்தில் முடிவெடுப்பார் கள்.
"உதயசூரியனை கையால மறைக்க முடியுமா?' என நான் டயலாக் பேசிவிட்டு... ஊரைவிட்டு கிளம்பிப் போய்க் கொண்டிருப்பேன். "நட்புதான் முக்கியம்' என நிரூபிக்கும் விதமாக... காதலியின் கழுத்தில் கட்டவேண்டிய தாலியை தூக்கி வீசிவிட்டு... கார்த்திக்கும் என்னுடன் வருவார்.
படப்பிடிப்பு முடிந்து... டப்பிங் பணிகள் நடந்தன. தயாரிப் பாளர் டி.ராமாநாயுடு அவர்களுக்குச் சொந்த மான "சுரேஷ் மஹால்' டப்பிங் தியேட்டரில்... நான் எனது காட்சிகளுக்காக டப்பிங் பேசினேன்.
அந்த க்ளைமாக்ஸ் காட்சியில்... "உதயசூரியனை கையால் மறைக்க முடியுமா?' என நான் டப்பிங் பேசி முடித்தேன்.
""ரவி... "உதயசூரியன்'னு சொல்ல வேணாம். "சூரியன்'னு மட்டும் சொல்லுங்க'' என்றார் டைரக்டர் அமீர்ஜான்.
""சார்... நான் ஷூட்டிங்ல "உதய சூரியன்'னு தானே பேசினேன். அந்த லிப் மூவ்மெண்ட்படிதானே பேசீருக்கேன் இப்ப'' என்றேன்.
படத்தின் வசனகர்த்தாவான வைரமுத்து அண்ணன் அந்த இடத்திற்கு "சூரியன்' என்று மட்டும்தான் எழுதியிருந்தார். நான் தி.மு.க.வில் ஊறியவன் என்பதால் "உதயசூரியன்' என சேர்த்துச் சொன்னேன்.
ஆனால் அமீர்ஜான் அப்படி பேச வேண்டாம் என்றார்.
""ஏன் சார்?''’
""இல்ல... வைரமுத்து "உதயசூரியன்'னு டயலாக் பேசுறத விரும்பல.''’’
""கவிஞரண்ணன் தலைவர் கலைஞர்மேல அபிமானமாத்தானே இருக்கார்?''’’
""இருந்தாலும்.. இப்ப எம்.ஜி.ஆர். கூடவும் நெருங்குகிற வாய்ப்பு கிடைச்சிருக்காம். அதனால் எதுக்கு சங்கடம்னு சொல்றார்''.
""சார்... நான் தி.மு.க.காரன். "உதயசூரியன்'னு சொல்றதுதான் எனக்குப் பிடிக்கும். நான் அப்படி சொல்றது பிடிக்கலேன்னா... வேற யாரையாவது வச்சு என் கேரக்டருக்கு டப்பிங் பேசவச்சுக்கங்க சார்'' என்றேன்.
இறுதியில்... நான் விரும்பியபடி... "உதயசூரியன்' என நான் பேசியதே இறுதி செய்யப்பட்டு... படத்தில் அப்படியே இடம் பெற்றது.
"நட்பு' படத்தின் விமரிசனங்களில் அந்த இடத்துக்கு பொருத்தமாக "உதயசூரியன்' என டயலாக் எழுதியிருப்பதாக வைரமுத்து அண்ணனை குறிப்பிட்டுப் பாராட்டி எழுதின பத்திரிகைகள்.
ஜூன்-3 தலைவர் கலைஞரின் பிறந்தநாள்...
தலைவரை பார்த்துவிட்டுப் போனார் வைரமுத்து அண்ணன். "உதயசூரியனை கையால மறைக்க முடியாது' என தலைவரிடம் கவிஞர் சொல்லிவிட்டுப் போகிறாரோ... என நான் நினைத்துக்கொண்டேன்.
பிறகு நான் கலைஞரைப் பார்த்தபோது... ""என்னங்க தலைவரே... அவரு தன்னை எம்.ஜி.ஆர். ஆள்னு சொன்னார். இங்கயும் வந்துட்டுப்போறாரே?'' எனக் கேட்டேன்.
"நட்பு' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. என்னைப் பார்க்கிற ரசிகர்கள் ‘நட்பு’ படம்பற்றி இப்போதும் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள்.
பிரபுமா-நான், விஜிமா-நான், பார்ட்னர் கார்த்திக்-நான் சேர்ந்து நடித்தாலே படம் ஹிட்தான்.
(பெரிய ஆக்ஷன் ஹீரோவான விஜிமாவின் பெருந்தன்மை)
________________
ஜமீன் மனசு!
எனக்கு ஜென்மத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆனாலும்... சிங்கம்பட்டி ஜமீன் தாயப்பராஜாவுடன் எனக்கு போன ஜென்ம பந்தம் இப்போதும் தொடருதா? என நினைத்ததுண்டு.
ஜமீன் தாயப்பராஜாவை என் நட்பு வட்டத்தில் இருக்கிற எல்லோருக்கும் தெரியும். நடிகர் சங்க உறுப்பின ராகவும் இருந்திருக்கிறார். நடிகர் சங்க தேர்தல் சமயங் களில் எனக்கு பெரிய பலமாக இருந்தவர் தாயப்பராஜா.
மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு நண்பர்களுடன் டூர் போயிருந்தேன். அப்போது... எல்லா ஏற்பாடுகளையும் செய்து அசத்தினார் தாயப்பராஜா. அவரின் செல்வாக்கை அன்று நான் உணர்ந்தேன். குற்றாலம் முதல் நெல்லை வரை உள்ள ஜமீந்தார்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். தனது இரு பெண்பிள்ளைகளுக்கும் சொரிமுத்து நாயனார் கோவிலில் காதணி விழா வைத்த தாயப்பராஜா... அந்தக் குழந்தைகளின் தாய்மாமனாக எனக்கு கௌரவம் கொடுத்து என் மடியில் உட்கார வைத்து காதுகுத்த வைத்தார்.
என் அம்மா இறந்ததும்... நான் அவருக்கு தெரியப்படுத்தினேன். உடனடியாக கிளம்பி வந்தார். என் சகோதரிகள் வெளிநாட்டில் இருந்து வரவேண்டியிருந்த தால்... மூன்றாம்நாள்தான் அம்மாவின் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவரை என் கூடவே எனக்கு ஆறுதலாக இருந்தார். அம்மாவின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும்... மெல்ல என்னிடம்... "என் அப்பா ரொம்ப சீரியஸா இருக்கார். நான் ஊருக்கு கிளம்புறேன்...'’ என காரில் கிளம்பினார்.
தன் தந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்... எனக்கு ஆறுதலாக இருந்தது என்னை கண்கலங்க வைத்தது. செங்கற்பட்டு தூரம்தான் தாயப்பராஜா காரில் போயிருப்பார். என் வீட்டுக்கு போன் வந்தது... "பெரிய ஜமீன் இறந்துட்டார்'’ எனச் சொன்னார்கள். நான் தாயப்பராஜாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன்.
தாயப்பராஜா உடல்நலமில்லாமல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது... என் குடும்பமே போய்நின்று அவரை கவனித்தது. அவர் இறந்ததும் உடலை சொந்த ஊரான வி.கே.புரம் எடுத்துச் சென்றனர். தர்மபுரியில் முக்கிய வேலையாக இருந்த நான்... அப்படியே... வி.கே.புரம் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். நண்பர் தாயப்பராஜா பேரில் அவரின் அக்கா சின்னதாக சமூகநலக்கூடம் கட்டியிருக்கிறார்கள். விரைவில்... கண்டிப்பாக... அந்த இடத்தில் என் பங்கையும் சிறப்பாகச் செய்வேன்.