(91) தலைகீழாகத் தொங்கிய டைரக்டர்!
என் நண்பர் டைரக்டர் அமீர்ஜான் இயக்கத்தில், நடிகர் பி.எஸ்.வீரப்பா சாரின் நிறுவனமான ‘பி.எஸ்.வி. பிக்சர்ஸ்’ தயாரிப்பில் புதுமுகங்கள் சஞ்சய்குமார், நவீனா ஜோடியுடன் செந் தாமரை அண்ணன், மனோரமா அம்மா, நான் உட்பட பலரும் நடித்த படம் ‘"ஓடங்கள்'. பாடல்களையும், வசனத்தையும் கவிஞர் வைரமுத்து அண்ணன் எழுதியிருந்தார். மந்திரியின் மகளை, எதிர்க்கட்சி பிரமுகரின் மகன் காதலித்து திருமணம் செய்துகொள்ள... இந்த ஜோடியை கொலை செய்ய மந்திரி திட்டமிட... அவ ரால் பாதிக்கப்பட்ட கல்லூ ரிப் பேராசிரியரான நான் அந்த ஜோடிக்கு ஆதரவாக இருந்து... அவர்கள் வாழ்வதற்கு குறுக்கே இருந்த தடைகளை உடைக்கிற கதை.
மந்திரிக்குப் பயந்து ஊர் ஊராக ஓடும் அந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிடும். பொய் குற்றச்சாட்டில் பல வருடங்களாக சிறையில் இருக்கும் நான், மந்திரியை பழிவாங்க சிறையிலிருந்து தப்பித்து ஒரு பாழடைந்த மண்டபத்தில் தங்குவேன். அங்கு குழந்தையுடன் அந்த ஜோடியும் இருக்கும்.
அது மந்திரியின் மகளும், பேத்தியும் என்பது தெரிந்ததும்... முதலில் அவர்களைக் கொல்ல நினைப்பேன். அந்தச் சமயம் போலீஸ்படை என்னைத் தேடிவர... குழந்தை அழாமல் இருக்க... வாயைப் பொத்துவேன். குழந்தை மூர்ச்சையாகிவிடும். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக... அந்த இளம் தாய் கதறுவதைப் பார்த்து, மனம் மாறி... அவர்களுக்கு உதவுவதாக உறுதியளிப்பேன். இதற்குள் அந்த இளம் ஜோடிக்குள் மனக்கசப்பு ஏற்பட... அந்தச் சூழ்நிலை... ஒரு தாலாட்டுப் பாடலாக இடம்பெறும்.
தரங்கம்பாடி கோட்டையில் மாலை ஆறுமணி முதல் அதிகாலை வரை என பத்து நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டு, இந்தக் காட்சியும், பாடல்களும் எடுக்கப்பட்டன.
குழந்தையை தூங்கவைத்து... மூர்ச்சை யாகும் காட்சியை எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் மூன்று நாட்களாக எடுக்க முடிய வில்லை. குழந்தை அழுதபடியும், விளையாடியபடியும் இருந்ததால்... திட்டமிட்டபடி அந்தக் காட்சிகளை எடுக்க முடியவில்லை.
அடுத்த நாள் ஷூட்டிங்.
யாருக்கும் தெரியாமல் ஒரு ஸ்பூனில் துளியூண்டு பிராந்தியை... தேன் சொட்டுகளைப்போல எடுத்து குழந்தைக்கு கொடுத்தேன். சிறிது நேரத்தில் குழந்தை அயர்ந்து தூங்கிவிட்டது. அதன்பிறகு அந்த காட்சி எடுக்கப்பட்டது. ‘குழந்தை சாகவில்லை’ என்பதை காட்டும் காட்சியில்... குழந்தை கை, காலை ஆட்டி சிணுங்க வேண்டும். குழந்தையோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது.
நான் அப்போது அடிக்கடி சிகரெட் பிடிக்கும் பழக்கம் வைத்திருந்ததால்... கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை குழந்தையின் பாதத்தின் அருகே கொண்டு சென்றேன். அந்த வெப்பத்தை உணர்ந்த குழந்தை... கை, காலை ஆட்டி... சிணுங்க... அதன்பிறகு அந்தக் காட்சியும் எடுக்கப்பட்டது.
மிசாவில் சிறையில் இருந்தவர்... மாணவர் காங்கிரஸ் பிரமுகர்... வயதில் ஜூனியராக இருந்தாலும், சீனியரான என் அப்பாவுக்கு நன்கு பழக்கமானவர்... அதனால் எனக்கும் அவருடன் அறிமுகம் உண்டு. அவர்... டைரக்டர் நேதாஜி.
நேதாஜி இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாகவும், ரேகா ஹீரோயினாகவும், பத்திரிகை ஆசிரியராக ஜெய்சங்கர் சாரும், நான் போலி டாக்டராக... வில்லனாக வும் நடித்த படம் ‘"சொல்வதெல்லாம் உண்மை'. வித்தியாசமான கதை. வெற்றிகரமாக ஓடிய படம் இது.
படத்தில் விஜிமாவை நான் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்கிற காட்சி. இதற்கான படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.
பிஸியான... பெரிய ஆக்ஷன் ஹீரோவாக ஆன பிறகும்கூட டூப் போடாமல்... இப்படி தலைகீழாக தொங்கி நடிக்க விஜிமா முன்வந்தார். அப்படி தொங்கும்போது... இரண்டு, மூன்று டேக் எடுத்ததும்... சிறிது நேரம்... விஜிமாவை கீழே இறக்கி... ரெஸ்ட் எடுக்க வைத்துவிட்டு... மீண்டும் தலைகீழாக தொங்கவிட்டு காட்சிகள் எடுக்கப்பட்டன.
பிஸியாக இருந்த காரணத்தால் ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு விஜிமா வர முடியவில்லை.
உடனே டைரக்டர் நேதாஜி... விஜிமாவுக்கு டூப்பாக, தானே தலைகீழாக தொங்கினார்.
""நீங்க ஏன் இதையெல்லாம் செய்றீங்க?''’எனச் சொல்லியும் விடாப்பிடியாக தொங்கினார். தொடர்ந்து அரைநாள் இப்படி தொங்கியபடி... கேமராமேன் அசோக்குமார் சாருக்கும், எனக்கும் "எப்படி எடுக்கணும்? எப்படி நடிக்கணும்?' என டைரக்ட்டும் செய்துகொண்டிருந்தார்.
""இப்படி தொடர்ந்து தொங்கிக்கிட்டே இருக்காதீங்க. கொஞ்சம் கேப் விடுங்க''’’ எனச் சொன்னதையும் நேதாஜி கேட்கவில்லை.
""ஹீரோ ரெஸ்ட் எடுப்பார். நான் ரெஸ்ட் எடுக்க மாட்டேன்''’என காண்பிப்பதற்காகத்தான் இப்படிச் செய்கிறார்போல என நினைத்துக் கொண் டேன். இப்படிச் செய்ததால் நேதாஜி மீது விஜிமாவுக்கும், எனக்கும் மனவருத்தம்.
இதே படத்திற்காக இரவுக் காட்சி ஒன்று சாந்தோமில் உள்ள கல்பனா ஹவுஸில் எடுக்கப் பட்டது. (கல்பனா ஷூட்டிங் ஹவுஸ் என் நண்பர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு. ஜெயம் ரவியின் மாமனார் வீடு)
உள்புறம் பூட்டப்பட்ட அந்த வீட்டின் பைப் வழியாக ஏறி மாடியறைக்குள் பால்கனி வழியாக நான் நுழையவேண்டும்.
""சார்... ஸீனை வேற மாதிரி மாத்துங்க. பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவர்ல ஏறி... மாடியில் குதிப்பது மாதிரி வச்சுக்கலாம். எதுக்கு பைப்பை பிடிச்சு ஏறணும்?''’என்றேன். உடனே... விறுவிறு வென பைப்பைப் பிடித்து ஏறிக்காட்டி... ’’""இதுபோல ஏறுங்க''’என்றார் நேதாஜி.
விஜிமா தலைகீழாக தொங்கும் காட்சியில் நேதாஜியே விஜிமாவுக்கு டூப்பாக தொங்கியதால் ஏற்பட்ட கோபத்தில் இருந்த நான்... “""நீங்களே எனக்கும் டூப் போட்டு ஏறிடுங்க''’என்றேன்.
நானும், பார்ட்னர் கார்த்திக்கும் நடித்த ‘"நட்பு'’படப்பிடிப்பின்போது இதே கல்பனா ஹவுஸில்... இதுபோல பைப் வழியாக கார்த்திக் ஏறவேண்டியது வந்தபோது... “""இப்படி ஏறுங்க பார்ட்னர்''’என நான் பைப் வழியாக ஏறிக் காண்பித்தேன். அதை ஞாபகப்படுத்தி... ""அப்ப மட்டும் ஏறிக் காண்பிச்சீங்களே?''’என கேட்டார் நேதாஜி.
""சம்பளம் ஏறும்னு நினைச்சு... அப்படியெல்லாம் ஏறினேன். ஆனா... சம்பளம் ஏறலியே... நான் சொன்ன மாதிரி மாத்துங்க. இல்லேன்னா... டூப் போட்டிருங்க''’என நான் உறுதியாகச் சொல்லிவிட... நான் சொல்லியது போலவே காட்சியை மாற்றினார்.
சிவாஜி அப்பா, சத்யராஜ் மாப்ள, பாண்டியராஜன் சார் ஆகியோருடன் நளினமாக ஒரு கேரக்டரும், முரட்டுத்தனமாக ஒரு கேரக்டருமாக இரட்டை வேடங்களில் நான் நடித்த படம் ‘"முத்துக்கள் மூன்று'. இதில் சிவாஜி அப்பா பாதிரியாராக நடித்தார். கோயம்புத்தூர் பகுதியில் ஷூட்டிங் நடந்தபோது... சிவாஜி அப்பாவுக்கு திடீரென உடல்நலமில்லாமல் போனது. இதைப் பார்த்ததும் சத்யராஜ் மாப்ள பதறிப்போய்விட்டார். ஓடிப்போய் சிவாஜி அப்பாவை தூக்கிக் கொண்டு காரில் உட்காரவைத்து... அவரே காரை ஓட்டிக்கொண்டுபோய் கோவை கே.ஜி. ஹாஸ்பிடலில் சேர்த்தார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டியராஜன்... “"அந்த சொக்கா கொண்டா... இந்த சொக்கா கொண்டா'’என காஸ்ட்யூமரிடம் சொல்வார். இதைக் கவனித்த சிவாஜி அப்பா... “""டேய்... அதென்னடா சொக்கா? சட்டைனு சொல்லுடா''’என்றார்.
துரை சார் கதை-வசனம் எழுதி தயாரிக்க... கார்த்திக் ரகுநாத் டைரக்ஷனில் சிவாஜி அப்பா, விஜிமா, நான், சகோதரி ராதிகா, சுமித்ரா மற்றும் வில்லனாக இந்தி நடிகர் ரஞ்சித் நடித்த படம் "வீரபாண்டியன்'.’
(பின்னாளில் நான் ரஜினி சாருடன் ஒரு படப்பிடிப் பிற்காக மும்பை சென்றபோது... ரஞ்சித் சார் வீட்டுக்குப் போனேன். ஞாபகம் வைத்திருந்து பேசினார்.)
எவர்கிரீன் லொகேஷனான பொள்ளாச்சி பகுதியில்தான் படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள ரமேஷ் லாட்ஜில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டோம்.
சிவாஜி அப்பா நடிக்கிற படத்தில் நடிக்கும்போது... வாய்க்கு ருசியான தீனிக்கு பஞ்சமே இருக்காது. (பிரபுமாவுடன் நடிக்கும்போதும் செமத்தியாக தீனி கிடைக்கும்)
""அப்பா ஏதாவது அசைவம் வேணும்ப்பா''’எனச் சொன் னால் போதும்... மறுநாள் நாம் கேட்ட உணவை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்வார். சிவாஜி அப்பா வுக்கு எல்லா ஊர்களிலும் நண்பர்கள் உண்டு. அவர்களும் விதம்விதமாக உணவுகளை தயார் செய்து அனுப்புவார்கள்.
"வீரபாண்டியன்'’பட ஷூட்டிங் முடிந்து நான் குன்னூருக்கு கிளம்பினேன் வேறொரு படப்பிடிப்பிற்காக. சிவாஜி அப்பா சென்னைக்கு கிளம்பினார். “""அப்பா... ஆட்டுக்கால் பாயா வேணும்ப்பா''’என்றேன்.
அடுத்த சில நாட்களில் கோவை வந்த அவர்... பாயா செய்து, கமலா அம்மாவுடன் ரயிலில் வந்து கொடுத்தார். இதுபற்றி ஏற்கெனவே விரிவாக சொல்லியிருக்கிறேன்.
இந்தப் படத்தில் ராதிகாவுக்கு முறைமாமன் போல எனது கேரக்டர் இருந்தது. இந்தப் படத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்... என நான் நினைக்கிறேன்.