ஏன், பெட்ரோல், டீசல் விலை மட்டும்தான் ஏறவேண்டுமா...… நாங்களெல்லாம் ஏறக்கூடாதா என போட்டி போட்டுக்கொண்டு கடந்த ஒரு வருடமாக சமையல் எண்ணெய் விலையும் ஏறிக்கொண்டிருக்கிறது. சமையல் எண்ணெய் விலை போகும் போக்கைப் பார்த்தால், வாணலியிலிருக்கும் எண்ணெய்க்குப் பதில் நம் ரத்தம் கொதிக்கத் தொடங்கிவிடும்போல.…
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சமையல் எண்ணெய் விலை 20 சதம் முதல் 65 சதம் வரை விலை ஏறியிருக்கிறது. நுகர்வோர் விவகாரத் துறையின் விலை கண்காணிப்புப் பிரிவு காட்டும் தரவின்படியே பார்த்தால்கூட கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் 120 ரூபாய் இருந்த கடலை எண்ணெய் 170 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடுகு எண்ணெய் 113-லிருந்து 140 ரூபாயாகவும் பாமாயில் 85-லிருந்து 122 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது.
இந்த அமைப்பு காட்டும் விலைக்கும் சில்லறைக் கடைகளில் வாங்கும் விலைக்கும் கணிசமான வித்தியாசமிருக்கும். சில்லறைக் கடையில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் 100 மிலி கிட்டத்தட்ட 27 ரூபாய். மொத்தமாக ஒரு லிட்டர் வாங்கினால்கூட 200 ரூபாய் ஆகிறது. இதே சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய் கடந்த வருடத்தில் 100 ரூபாய் அளவில்தான் விற்பனையானது. எண்ணெய் விலையேற்றத்தைத் தடுக்க மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் இறக்குமதி வரியில் 10 சதவிகி தத்தைக் குறைத்து அறிவித்தது. ஆனால், அது விலை உயர்வைத் தடுத்து நிறுத்தப் போதுமானதாய் இருக்கவில்லை.
ஏனிந்த விலை உயர்வு?
"இந்தியாவுக்கு கிட்டத்தட்ட ஆண்டுக்கு 14.5 மில்லியன் டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது. இதில் 65 சதவிகிதம் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. இந்த 65 சதவிகிதத்தில் பெரும்பகுதியை இந்தோ னேசியா, மலேசியா, ரஷ்யா, அர்ஜென்டினா, உக்ரைன் போன்ற நாடுகளே ஏற்றுமதி செய்கின்றன.
“பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் இந்தோனேசியாவும், இரண்டாமிடத்தில் மலேசியாவும் இருக்கின்றன. மலேசியாவில் தொழி லாளர் பற்றாக்குறையால் பாமாயில் உற்பத்தி சரிந்துள்ளது. தவிரவும் இவ்விரண்டு நாடுகளில் வாகனங்களுக்கான எரிபொருளுடன் பயோப்யூல் எனும் சமையல் எண்ணெயைக் கலப்பதற்கான வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் எரிபொருளில் தற்போது கூடுதலாக பயோப்யூல் கலப்பது அதிகரித்துள்ளதால், இவ்விரு நாடுகளின் பாமாயில் உள்நாட்டுத் தேவை அதிகரித்துள்ளது. அதன்காரணமாக இவ்விரு நாடுகளிடமிருந்து எண்ணெய் பெறும் இந்தியா, சீனா போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன''’ என்கிறார் கிரிசில் (ஈதஒநஒக) ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநரான ஹெடல் காந்தி.
இதேபோல இந்தியாவின் சோயா எண்ணெயின் தேவை அர் ஜென்டினாவாலும், சூரியகாந்தி எண்ணெய் தேவை ரஷ்யா, உக்ரைனாலும் தீர்த்துவைக்கப்படுகின்றன. இந்த மூன்று நாடுகளிலுமே சமீபமாக வறட்சியான சூழல் நிலவுவதால் சோயா, சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் சேர்ந்துதான் இந்தியாவில் எண்ணெய் விலை உற்பத்தி அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது.
தவிரவும், இந்தியாவில் இறக்குமதியாகும் சமையல் எண்ணெய்க்கு 32.5 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. சுங்க வரி, தயாரிப்பு முடிந்தவுடன் ஜி.எஸ்.டி. என தொடர் வரிகளின் காரணமாகவும் சமையல் எண்ணெய் விலை ஏறிவிடுகிறது. "மத்திய அரசு மனது வைத்தால் ஓரளவு இந்த விலைஉயர்வைக் குறைக்கலாம்' என்கிறார்கள் சூழலை அறிந்தவர்கள்.
சமீபத்திய எண்ணெய் விலை உயர்வு குறித்துக் கூறும் தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா, "எண்ணெய் வித்துக் களின் உற்பத்திக் குறைவே இந்த விலை உயர்வுக்குக் காரணம். தவிரவும், பிளாஸ்டிக்கில் ரிலையன்ஸ் ஆதிக்கம் செலுத்துவது போல, எண்ணெய் உற்பத்தியில் அதானியின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கப்படுகிறது. எண்ணெய் ஆலைகள், எண்ணெய்ச் சந்தைகள் ஒன்மேன் ஷோவை நோக்கி நகர்த்தப்படுகின்றன. எண்ணெய் விலையேற்றம் பற்றி அரசு கவலைப்படவில்லை. முன்பெல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் விலையேறினால், துறைசார் அதிகாரிகளைக் கூட்டி பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர ஆலோசனை நடத்தப்படும். இப்போதெல்லாம் அதுபோல நடப்பதில்லை.
தவிரவும், ஒருகட்டத்தில் கடலை எண்ணெய், எள் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை உடல்நலக் குறைவுகளுக்கு காரணமாவதாக திட்டமிட்டே கருத்து பரப்பப்பட்டது. அதனால் அவற்றின் விற்பனை குறைந்தது. அந்த வித்துகளின் உற்பத்தி குறைக்கப்பட்டது. பாமாயில் சந்தைக்குள் நுழைந்தது. உண்மையில் பாரம்பரிய எண்ணெய்க்கு மாற்றான எண்ணெய்களின் வரவுக்குப் பின்பே இந்தியாவில் நோய்கள் அதிகரித்தன''’என்கிறார்.
"இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகையை உடைய நாட்டில், அதன் தேவைக்கு 65 சதவிகிதம் வெளிநாடுகளை நம்பி யிருப்பதே சிக்கலான விஷயம். தவிரவும், இந்தியா வில் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை நம்பி யிருந்தும், சமையல் எண்ணெய் தேவைக்கு இத்தனை தூரம் வெளிநாடுகளை நம்பியிருப்பது முறையல்ல.
இந்தியாவில் கடுகு, எள், கடலை, தேங்காய் வித்துகள் தாராளமாக விளைபவை. அரசு முறையான திட்டத்தை வகுத்து, மானியங்களை அளித்து எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரித்தால் நமது எண்ணெய் தேவை இலக்கை உள்நாட்டிலேயே எதிர்கொள்ளலாம். இத்தகைய எதிர்பாராத சூழல்களில் அரசும் மக்களும் கையறுநிலையில் நிற்பதைத் தவிர்க்கலாம்''’ என்கிறார்கள் தற்சார்பு பொருளாதாரத்தில் நம்பிக்கையுடைய நிபுணர்கள்.