புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கிலும், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கிலும் வரும் பக்தர்களை முதலில் வரவேற்பது நகரத்தின் அசுத்தமான சாலைகள்தான். குப்பைகள், சாலையில் செல்லும் சாக்கடைக் கழிவுகள், கிரிவலப்பாதையில் கொட்டப்படும் கழிவுகளால் வீசும் துர்நாற்றம் போன்றவை பக்தர்களை மட்டுமல்ல, நகர மக்களையும் வெறுப்படையச் செய்கிறது. அதனால் நகரைத் தூய்மையாக்கிட அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகத் "தூய்மை அருணை' என்கிற அமைப்பை 2017 அக்டோபர் மாதம் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை வைத்துத் தொடங்கினார், தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராகவுள்ள திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ. எ.வ.வேலு.

cc

தூய்மை அருணை அமைப்பின் சார்பில் நகரத்திலுள்ள 39 வார்டுகளிலும் 39 ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 15 முதல் 20 களப்பணியாளர்கள் என 750 தி.மு.க. தொண்டர்களை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை களமிறக்கி, நகரத்தின் கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வாருவது, தெருக்களிலுள்ள குப்பை களை சுத்தம்செய்து அள்ளிப்போடுவது, தெருக்களில் குப்பை கொட்டாமலிருக்க மக்களிடம், வியாபாரிகளிடம் விழிப் புணர்வு ஏற்படுத்துவது, மரம் நடும் பணிகளில் ஈடுபடுத்துவது என ஊக்குவிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, தி.மு.க. மாநில மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் கம்பன், ந.செ. கார்த்திவேல்மாறன், செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மேற்பார்வையில் இவை நடைபெற்றன. தொடக்கத்தில் வேலுவும் இதில் கலந்துகொண்டு வாராவாரம் குப்பை வாரினார். வாரம் ஒருநாள் என்பது பின்னர் வாரத்தில் 3 நாட்களானது, சில வார்டுகளில் தினமும் அந்தப் பணியைச் செய்தனர். இது மக்களிடம் பெரும் பாராட்டைப்பெற்றது. இப்போது இந்தத் திட்டம் நகர தி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

c

அதுகுறித்து தூய்மை அருணை அமைப்பின் ஒருங்கிணைப் பாளரான தி.மு.க. நிர்வாகியொருவர் நம்மிடம், "கடந்த ஆட்சிக்காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்ததால் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ளச்சொல்லி எம்.எல்.ஏ.வாக இருந்த எ.வ.வேலு கேட்டுக்கொண்டதை கலெக்டர், நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள தூய்மை அருணை அமைப்பை கட்சிகடந்து பொதுச் சேவை அமைப்பாகத் தொடங்கி னார். தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர் கள் இதில் இணைந்து தூய்மைப் பணி செய்யத்தொடங்கினோம். இந்த திட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றிய சிலருக்கு நகர்மன்றத் தேர்தலில் கவுன்சிலர் சீட் தரப்பட்டு அவர்களும் வெற்றிபெற்றனர்.

ccதிட்டம் தொடங்கியபோது தீவிரமாகப் பணியாற்றியவர்கள், இப்போது சுணக்கமாகி விட்டார்கள். காரணம், ஆளும்கட்சியான பின்பு அதிகாரிகள் மூலமாக வேலை வாங்காமல் இப்போதும் கட்சியினரை வைத்து வேலைவாங்குவது, மற் றொன்று, கடந்த 4 ஆண்டுகளாக வாரம் 2 ஆயிரம் என மாதம் 10 ஆயிரம் சொந்தப்பணத்தை செலவு செய்து அந்தந்த பகுதி ஒருங் கிணைப்பாளர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்தச் செலவால் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள்கூட இதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள். அமைச்சர் தொடங்கிய திட்டம் என்பதால் கட்சியினரான நாங்கள் ஒதுங்க முடியாமல் தவிக்கிறோம். தூய்மை அருணை இயக்கத்தின் மூலம் தொடர்ந்து பணிகள் செய்வதைப் பார்ப்பவர்கள் உங்க ஆட்சியில் உங்களாலேயே அதிகாரிகளை வேலை வாங்க முடியலையா என கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நகர தி.மு.க. நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பலரும் தூய்மைப் பணியைச் செய்வதில்லை''’என்றார்.

ஆளும் தி.மு.க.வின் நகர்மன்ற உறுப்பினர் ஒருவரிடம் பேசியபோது, "நகராட்சியில் 70 நேரடி துப்புரவுப் பணியாளர்கள் உள்ளார்கள். அதோடு கிரீன் வாரியர் நிறுவனம் 250 பணியாளர்களை வைத்து குப்பைகளை அள்ளுகிறது, இதற்காக மாதம் 40 லட்சம் வரை அந்த நிறுவனத்துக்கு நகராட்சி சார்பில் தரப்படுகிறது. நகராட்சி சார்பில் இப்போதும் இந்த 320 பேர் தினமும் தூய்மைப் பணியில் ஈடுபடுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அவர்கள் சரியாகப் பணியாற்றவில்லை. தூய்மை அருணை இயக்கத்தினர் செய்த வேலைகளை அவர்கள் செய்ததுபோல் காட்டிக்கொண்டார்கள். இப்போது நடப்பது தி.மு.க. ஆட்சி, நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சரியாக வேலை செய்தாலே இந்த நகரம் சுத்தமாகயிருக்கும். திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவராக இருப்பவர் தி.மு.க.வின் நிர்மலா கார்த்திவேல்மாறன். நகர்மன்ற தலைவர், ஆணையாளரிடம் நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டாலே போதும் எல்லாம் சரியாக நடக்கும்''’என்றார்.

Advertisment

cc

கட்சியினரின் குமுறல்கள் குறித்து தூய்மை அருணை மேற்பார்வையாளரும், தி.மு.க. மருத்துவரணி மாநில துணைத்தலைவருமான டாக்டர் கம்பனிடம் கேட்டபோது, "இது அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கம். ஆளும்கட்சி யாகிவிட்டோம் என, பணிகள் நிறுத்தப்பட்டால் அரசியலுக்காக துவங்கப்பட்டதாகிவிடும். இப்போது பணிகள் தொய்வாக உள்ளது தெரியக்கூடிய வார்டுகளில் புதிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள். அடுத்ததாக, பசுமை நகராக்கும் பணியில் தூய்மை அருணை இயக்கத்தை செயல்படவைக்க முடிவுசெய்துள்ளார் அமைச்சர்''’என்றார்.

நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தினமும் 65 மெட்ரிக் டன் குப்பை நகரத்தில் எடுக்கப்படுகிறது. அவர்கள் வேலை செய்கிறார்கள். அதற்காக நகராட்சிப் பணியாளர்கள் பணியாற்ற வில்லை எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வளவே இதில் சொல்ல முடியும்''’என்றார்.

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்