திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரை அடுத்துள்ள சேவூர் கிராமம். அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் முரளி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பள்ளி விட்டுப் போகும்போது மாணவி ஒருவர் மீது சிகரெட் பிடித்து புகை ஊதியதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர் களிடம் புகாரளிக்க, அதனை விசாரித்த ஆசிரியர்களில் இருவர் சஸ்பெண்ட், இருவர் பணியிட மாற்றம் என்பதுதான் தமிழ்நாடு முழுக்க ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரித்தபோது, "ராட்டினமங்களத்தை சேர்ந்த அந்த மாணவன், பள்ளியை விட்டுப் போகும் வழியில் மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மீது சிகரெட் புகையை ஊதுகிறான் என ஆசிரியர்களிடம் கூறினர். மறுநாள், ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர் ஆசிரியர் ஓய்வறைக்கு அம்மாண வனை அழைத்துவந்து விசாரிக்கும்போது ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்துள் ளான். இதனால் கோபமாகி, இரண்டு ஆசிரியர்கள் அவனை அடித்ததாகவும், இரண்டு ஆசிரியர்கள் "உங்கப்பாவை அழைச்சிக் கிட்டு வா'ன்னு எச்சரிச்சிருக்காங்க.
வீட்டுக்குப்போன பையன், பெற்றோரோடு மருத்துவமனைக்குச் சென்று உள்காயமெனக் கூறி அட்மிட்டாகி, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கான். காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் வந்து விசாரிச்சப்ப, "சாதிப்பெயரைச் சொல்லித் திட்டுனாங்க' என்று ஆசிரியர்கள் மீது புகாரளித்து, நடவடிக்கை எடுக்கலைன்னா சாலை மறியல் செய்வோமென வி.சி.க.வினர் சொன்னாங்க. உடனே, கல்வித்துறை அதிகாரிகள், இரண்டு ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ததோடு, இருவரை பணி மாறுதலும் செய்தார்கள்.
மாணவன் முரளிமீது ஏற்கெனவே அடிதடி, காம்பஸால் குத்தியது, சக மாணவர்களுக்கு போதை வஸ்துகள் விற்பனைன்னு ஏகப்பட்ட புகார் இருக்கு. அப்போதே அவனது அப்பா, "என் பையனை மட்டுமே குறை சொல்றீங்களே?' என, மகனுக்கு சப்போர்ட்டாகக் கேள்வி கேட்டார். தொடக்கத்திலேயே அவன் மீது மாணவிகள் புகாரளித்திருந்தால் போக்சோ சட்டத்தில் கைதாகியிருப்பான். அதைத் தடுத்தது ஆசிரியர்கள் தான். அதன்பலனாக, சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியதாக இப்போது பழிசுமக்கிறார் கள்'' என்றார்.
சேவூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தரணியிடம் கேட்டபோது, "மாணவிகள் புகார் சொன்னதாலேயே விசாரித்தோம் என்கிறார்கள் ஆசிரியர்கள். சாதியைச் சொல்லி திட்டினாங்கன்னு பையனோட அப்பா புகார் தந்துட்டார். என் பையனை தனியா அழைச்சு விசாரிச்சது தப்புன்னு அவனோட அப்பா சொல்றார். உண்மையில் என்ன நடந்ததுன்னு தெரியல'' என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் தமிழழகனிடம் கேட்டபோது, "கடந்த 21ஆம் தேதி, மாண வனை அந்த 4 ஆசிரியர்களும் சாதிப்பெய ரைச் சொல்லித் திட்டியுள்ளனர். சம்பந்தப் பட்ட மாணவனின் ஹேர்ஸ்டைல் டிஃபரன் டாக இருந்ததே அதற்குக் காரணம். அதுகுறித்து கேள்விகேட்ட பள்ளியின் உதவி தலைமையாசிரியரை எதிர்த்துப் பேசியதற் காக அவனை அடித்துள்ளார். அதனை மாணவனின் தந்தை தட்டிக்கேட்டுள்ளார். இந்த முன்விரோதத்தால், அந்த நான்கு ஆசிரியர்களை ஏவி, மாணவனின் பையை சோதனையிடச்செய்து, சாதிரீதியாகப் பேசி அவமானப்படுத்தியுள்ளார்கள். எனவே, காவல் நிலையத்தில் புகாரளித்தோம். அந்த பையன் கொஞ்சம் சேட்டை செய்பவன் தான். தற்போது அவனை பெரிய குற்றவாளி போல் சித்தரிக்கிறார்கள். எனவே நீதிமன் றத்தில் வழக்காடப் போகிறோம்'' என்றார்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுக்க ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர், "பள்ளிக்கு ஒழுங்காக வராமல், தவறான பழக்கவழக் கங்களைக் கற்றுக்கொண்டு, சக மாணவர்களைச் சீரழிக்கும்போது ஆசிரியர்கள் கேள்வி எழுப்பக்கூடாதா?, மாணவனை அடித்தது சட்டப்படி தவறு எனச்சொல்லும் அதிகாரிகள், பள்ளிக்குள் கஞ்சா, சிகரெட் போன்ற போதைப் பொருட்களை, பயன்படுத்துவதை வேடிக்கை பார்க்கச் சொல்கிறார்களா? என் பிள்ளையை எப்படி அடிக்கலாம்னு கேள்வி கேட்கும் பெற்றோர், ஏன்டா தப்பு செய்றேன்னு பிள்ளையைக் கேட்பதில்லை. மாணவன் மனரீதியாகப் பாதிக்கக்கூடாதென்று தனியறையில் வைத்து விசாரித்ததை, அதிகாரிகளும் குற்றம்னு சொன்னால் என்ன அர்த்தம்?'' என்று கேள்வியெழுப்பினார்கள்.
இச்சம்பவம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்குமாரிடம் கேட்டபோது, "மாணவன் மீது புகார் வந்தால் அதை ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணைக்கு அனுப்பியிருக்க வேண்டும். முதல்கட்ட விசாரணை அடிப்படையில் மாணவரை அடித்ததாகத் தெரியவந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது'' என்றார்.
சேவூர் சி.பி.எம். கட்சி நிர்வாகி சதிஷ்பாபுவிடம் கேட்டபோது, "தவறு செய்த மாணவனுக்குப் பதில், விசாரித்த ஆசிரியர்களைத் தண்டிப்பது எந்த விதத்தில் சரி யென மக்கள் நினைக்கிறார்கள். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி பிரச்சனை பெரிதாகாமல் தடுக்க வேண்டும்'' என்றார். மாணவனைக் கண்டித்த காரணத்துக் காக ஆசிரியர்கள்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையே கேள்விக்குறிக் குள் தள்ளியுள்ளது. இதில் அனைத்துத் தரப்பினருடனும் சுமுகமாகப் பேசித் தீர்ப்பதே சரியானதாக இருக்கும்.