ந்தாண்டுகளாக கூட்டணியும் ஆட்சியும் தொடரும் நிலையில், ஆட்சி முடியும் நேரத்தில், புதுச்சேரியில் புது வியூகத்தை தி.மு.க எடுத்திருப்பது, அங்கே மட்டுமல்ல.. தமிழகத்தில் உள்ள தி.மு.க. கூட்டணியிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கடந்த 6 மாதமாகவே தி.மு.க.வினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் ""தி.மு.க தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம்'' என்ற முழக்கத்தோடு கடந்த 18-ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் பேசிய பேச்சு புயலை கிளப்பியுள்ளது.

pondy

தமிழ்நாட்டிலிருந்து எம்.பி.யானவர் ஜெகத்ரட்சகன். தி.மு.கவின் முன்னாள் அமைச்சர். செல்வாக்கு உள்ளவர். பா.ஜ.க. அரசின் அமலாக்கத் துறையின் கிடுக்கிப்பிடிக்குள்ளாகி, நெருக்கடியை எதிர்கொண்டுவரும் அவர் மீது, "சட்டரீதியான நடவடிக்கைகள் பாயக்கூடும்' என டெல்லியிலிருந்து சிக்னல்கள் வரும் நிலையில், ஜெகத்ரட்சகனை முன்வைத்து தி.மு.க. மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் புருவத்தை உயரச் செய்கின்றன.

புதுச்சேரியில் இதற்கு முன், 1969, 1980, 1990, 1996 என நான்கு முறை தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.கவும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாகவே 1974-ஆம் ஆண்டு புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது. மேலும் 1977-ஆம் ஆண்டும் புதுச்சேரியை அ.தி.மு.க. தன் வசமாக்கியது. அதன்பின் அ.தி.மு.க. ஒற்றை இலக்க இடங்களையே பெற முடிந்தது. 2001-க்குப் பிறகு கழகங்களால் அங்கே நேரடியாக ஆட்சி அமைக்க முடியவில்லை. தற்போது காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை சாதகமாக்கி, ஜெகத்ரட்சகனை தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

Advertisment

புதுச்சேரி எல்லையையொட்டியுள்ள தமிழகப் பகுதியான வழுதாவூர் அருகேயுள்ள கலிங்கமலையில் பிறந்தவர் ஜெகத், இளமைக் காலத்தின் பெரும்பகுதியை புதுச்சேரி பகுதியில் கழித்தவர். மேலும் தற்போது புதுவையின் மையப்பகுதியில் ஸ்டார் ஹோட்டலும், மருத்துவ கல்லூரியும், புதுவையை சுற்றி ஏகப்பட்ட நில புலன்களும் உள்ளன. அவருடைய சமுதாய வாக்குகளும் புதுச்சேரியில் உள்ளன. எல்லாமுமாக சேர்ந்து, கட்சிக்காரர்கள் போட்ட தூபத்தால், தலைமையின் ஆசியுடன் தடாலடியாக களமிறங்கியுள்ளார்.

pondy

இதற்கு முன்பாகவே 2015-ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல் வந்தது. அப்போது ஜெகத்ரட்சகன் தி.மு.க, காங்கிரஸ், என்.ஆர்.காங் கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து ராஜ்யசபா எம்.பி. யாக வெற்றி பெறக்கூடிய நிலைக்குச் சென்றுவிட்டார். இதனை அறிந்த ரங்கசாமி அந்த ஒரு ராஜ்யசபா சீட்டை அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்து விட்டார். இதனால் அப்செட்டான ஜெகத், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடாமல் திரும்பிவிட்டார். அதனால் அன்றிலிருந்து புதுச்சேரி அரசியல் மீது ஒரு கண் இருந்துகொண்டே இருந்தது.

Advertisment

நான்கு முறை ஆட்சியில் இருந்த தி.மு.க., ஐந்தாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனும் நிர்வாகிகளின் எண்ணமும், ஜெகத்தின் ஆசையும் ஒருசேர... கடந்த 18-ஆம் தேதி காலை புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர்கள் இரா.சிவா எம்.எல்.ஏ, எஸ்.பி.சிவக்குமார், எம்.ஏ.ஹச்.நாஜிம் ஆகியோர் முன்னிலையில் புதுவை மாநில தெற்கு -வடக்கு பகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் புதுவையிலும், மதியம் காரைக்காலிலும் நடைப்பெற்றது.

ஜெகத், புதுச்சேரி எல்லைக்கு வருவதற்கு முன்பாகவே, "புதுச்சேரி முதலமைச்சர் ஜெகத் அய்யா...' என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கூட்டத்தில் வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் பேசும்போது, “""ஜெகத்ரட்சகன் இங்கே தேர்தல் பொறுப்பாளராக மட்டும் வரவில்லை. முதல்வர் வேட்பாளர் மட்டுமல்ல, 2021-ஆம் ஆண்டு புதுச்சேரியின் முதல்வரும் அவர்தான்''’ என்றார்.

தெற்கு மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், “"புதுச்சேரியில் தற்போது நடக்கும் ஆட்சியில் நமது சுயமரியாதையும், தன்மானமும் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியால் யாருக்கும் நன்மை இல்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. எதன் மீதும் முடிவெடுக்க முடியாத அரசாகவும், துணை நிலை ஆளுநர்மீது குறைசொல்லி காலம் கடத்தும் அரசாகவும் உள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும்''“ என்றார். சிவா கடந்த சில மாதங்க ளாகவே, புதுவையில் தி.மு.க. தலைமையில் கூட்டணி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.

பின்னர் மைக் பிடித்த ஜெகத்ரட்சகனோ, புதுச்சேரி-தமிழக அரசியலில் அனலை பற்ற வைத்தார். “""பாண்டிச்சேரி என் தாய் வீடு. இங்கே டவுசர் போட்ட காலங்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். இன்று எங்கு பார்த்தாலும் கருப்பு சிவப்பு வண்ணம் தெரிகிறது. கலைஞருக்கு அதிகம் பிடித்த ஊர் புதுச்சேரி. புதுச்சேரியில் யார் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். கடந்த 10 ஆண்டுகளாக இங்கு ஆட்சியா நடக்கிறது? சின்ன மாநிலம், எப்படியெல்லாம் செய்யலாம். சொர்க்கபுரியாக ஆக்கலாமே… இந்த ஊரை. உலகமே திரும்பி பார்க்க வைக்கலாமே… பாவிகளே...… நாசம் பண்ணியிருக்கீங்களே. டாடா, பிர்லா போன்ற தொழிலதிபர்களிடம் சென்று இங்கே தொழில் தொடங்குங்கள் என்று கேட்பேன். ஏன்... ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றால் அவர்களின் காலில் விழக்கூட நான் தயாராக இருக்கிறேன்.

நான் தலைவர் ஸ்டாலினின் தூதுவனாக, ஆஞ்சநேயனாக வந்திருக்கிறேன். புதுச்சேரி மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இங்குள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றிபெற வைப்பேன். இல்லையென்றால் நான் இதே மேடையில் தற்கொலை செய்துகொள்வேன்''“என்றார் உணர்ச்சிக் கொந்தளிப்புடன்.

ஜெகத்தின் பேச்சை கேட்ட தி.மு.க தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண் டோடிய அதேசமயம்... அன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டிய முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் கதிகலங்கிப் போயினர். செய்தியாளர்கள் நாராயணசாமியிடம் இதுகுறித்து கேட்க... பதிலேதும் சொல்லாமல் நழுவினார். அதேசமயம் நாராயணசாமி உடனடியாக ராகுல்காந்திக்கு விவரத்தை கொண்டு செல்ல... ராகுல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு போனைப் போட்டு விசாரிக்க, "கட்சியை ஸ்ட்ராங்க் பண்ணத்தான் ஜெகத்தை அனுப்பியிருக்கிறோம்'’என்றிருக்கிறார் ஸ்டாலின். அதன்பின், புதுச்சேரியின் மற்றொரு பகுதியான காரைக்கால் கூட்டத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த ஜெகத்ரட்சகனை ஸ்டாலின் தொடர்புகொண்டு பேச, ஜெகத் சைலன்ட்’ஆகியுள்ளார்.

காரைக்காலில் ஜெகத் பேசும்போது, ""நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைக்கும்'' என்று பேசி யுள்ளார். இதனிடையே ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த ஸ்டாலின், ""புதுவையில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு சிறப்பு கவனம் செலுத்து கிறோம். இது கட்சிப் பணி தான். தேர்தல் பணி அல்ல. இதனை கூட்டணியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்''’ என கூறியுள்ளார்.

இந்த நிலையில் "புதுவையில் தி.மு.க. ஆட்சி'’என்ற முழக்கத்திற்கு கட்சித் தலைவர் ஸ்டாலின் முழுமனதோடு ஒப்புதல் அளிக்காததால் அப்செட் ஆகியுள்ளனர் தி.மு.க. நிர்வாகிகள். மேலும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி யின் சீட்டுகளை குறைக்க தி.மு.க. மேற்கொண்டுள்ள மறைமுக அஸ்திரம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். புதுச்சேரி யில் வீரம் காட்டுவதன் மூலம், தமிழகத்தில் தி.மு.க. கொடுக்கும் சீட்டுகளில் காங்கிரசின் பேரம்படியும் என்றும் கருதுகின்றனர். அத்துடன், "புதுவையில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் பழைய பலத்தினை மீட்டாக வேண்டும். காங்கிரசும் வலு குறைந்துள்ள நிலையில், கூட்டணியில் ஏற்படும் சர்ச்சைகளும் சலசலப்புகளும், கண்கொத்திப் பாம்பாக இருக்கும் பா.ஜ.க.வுக்கே சாதகமாகும். அந்தத் தருணத்திற்காகத்தான் மோடியும் அமித்ஷாவும் கிரண்பேடியை களமிறக்கி காத்திருக்கிறார்கள்' என்ற கருத்தும் வெளிப்படுகிறது.

என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது.

_________

உண்மையல்ல!

2020, டிசம்பர் 23-25 நக்கீரன் இதழில் வெளியான, "போதை -ஊழல் -பெண்மோகம்! களமிறங்கிய சி.பி.ஐ.? அமெரிக்கன் கல்லூரி அவலம்'! கட்டுரையில், தன் மீது பேராசிரியர் அருள் இஸ்ரேல், பிரேம்சிங் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் உள்நோக்க முடையவை என கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மறுப்புத் தெரிவித்துள்ளார். புகழ்மிக்க அமெரிக்கன் கல்லூரியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் செய்தி இருப்பதாகவும், நிர்வாக விதிகளை மீறி தன்னுடைய தலையீடோ, தன்னைச் சார்ந்தவர்கள் தலையீடோ இல்லை என்றும், திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும் விரிவாக விளக்க மளித்துள்ளார் கல்லூரி முதல்வர்.

-ஆர்.