ட்டமன்றத் தேர்தல் வரை ஆட்சிக் கப்பலை ஓட்டி கரை சேர்த்துவிடலாம் என நினைத்த புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு சொந்தக் கட்சியின் அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களே கட்சி தாவி வெடி வைக்க, அதன் திரியைப் பற்ற வைக்கும் வகையில், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் புதுவையின் பொறுப்பு துணை நிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்ற தமிழிசை சவுந்திரராசன். கிரண்பேடியை மாற்றி விட்டு, தமிழிசை சவுந்திரராசன் நியமிக்கப் பட்டதன் காரணம் ராகுல்தான் என்கிறது டெல்லி வட்டாரம்.

pondy

கிரண்பேடியை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டும் என கடந்த 11-ந்தேதி ஜனாதிபதியை சந்தித்து புகார் தெரிவித்த நாராயணசாமி, அதுபற்றி ராகுல்காந்தியிடமும் விவாதித்து, ஆதங் கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, ""புதுவைக்கு நான் வருகிறேன். புதுவை அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேரணியாகச் சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தை என் தலைமையில் நான் நடத்துகிறேன். என் விசிட் ரகசியமாக இருக்கட்டும். புதுவைக்கு நான் வந்த பிறகு தெரியப்படுத்திக் கொள்ளலாம்'' என சொல்லியிருக்கிறார் ராகுல்காந்தி. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் புதுவை யில் ராகுல் சுற்றுப்பயணம் செய்வதெனவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் கிரண்பேடி, நிதி அதிகாரங் களில் தலையிடுவது, கொரோனா பணியிலிருந்த டாக்டர்களை தூக்கிலிடுவேன் என மிரட்டியது, அரசின் கொள்கை முடிவுகளுக்கு அனுமதி மறுத் தல், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் கோப்புகளை தடுத்து வைத்திருப்பது, கவர்னர் மாளிகையைச் சுற்றி தடுப்புகள் ஏற்படுத்தி தர்பார் நடத்துவது உள்ளிட்ட அனைத்தையும் அம்பலப் படுத்தி ராகுல் தலைமையில் தர்ணா என்பதுதான் காங்கிரஸ் மேலிடத்தின் திட்டம். இதை மோப்பம் பிடித்துவிட்ட மத்திய மோடி அரசு, புதுவைக்கு ராகுல்காந்தி வருவதற்கு முதல்நாள் (16-ந்தேதி) கிரண்பேடியை திடீரென்று நீக்கிவிட்டு தமிழிசை சௌந்திரராஜனை பொறுப்பு ஆளுநராக நியமித்து ராகுலின் வியூகத்துக்கு செக் வைத்து அப்செட்டாக்கி விட்டது என்று பின்னணிகளை சுட்டிக்காட்டினார்கள்.

அதுமட்டுமின்றி, புதுவையின் சபாநாயகர் சிவக்கொழுந்து நினைத்திருந்தால், காங்கிரஸ் அமைச் சர்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்து கிடப்பில் வைத்திருக்க முடியும். நாராயண சாமிக்கு எதிரான மனநிலையுடன் ராஜினாமாக்களை உடனடியாக ஏற்றுக்கொண்டார். அதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் ரெங்கசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்கள், பொறுப்பு ஆளுநர் தமிழிசை யை சந்தித்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். 22ந் தேதி என கெடு விதித்தார் தமிழிசை. ராகுல்காந்தி புதுவையில் மையம் கொண்டிருந்த நாட்களிலேயே இந்த அதிரடியை டெல்லி நடத்த, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுடன் ஒரு அவசர ஆலோசனையை நடத்தினார் ராகுல்.

Advertisment

pondy

ஆட்சியை அவர்கள் கவிழ்ப்பதற்கு இடம் தராமல், மொத்த அமைச்சரவையையும் ராஜினாமா செய்வது பற்றி ராகுல் ஐடியா தர, ஆட்சி கவிழ்க்கப் பட்டால்தான் மக்களிடம் நீதி கேட்க முடியும் என்றிருக்கிறார் நாராயணசாமி. அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட சிலர், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வழிகளை ஆராய்ந்துவிட்டு, அதன்பின், ஆளுநரை வைத்து மத்திய பாஜக அரசு ஆடிய ஆட்டங்களை சட்டப்பேரவையில் அம்பலப்படுத்தும் வகையில் முதல்வர் (நாராயணசாமி) உருக்கமாக பேசிவிட்டு, ராஜினாமா செய்யட்டும் என சொல்லியிருக்கிறார்கள். பா.ஜ.கவின் நியமன எம்.எல்.ஏக்களின் ஓட்டு போடும் உரிமையில், சபாநாயகர் சிவக்கொழுந்து நினைத்தால் சில அரசியல்களை செய்ய முடியும். ஆனால், அவரோ பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறார் என அமைச்சர்கள் தெரிவித்தனர். பேரவை கூடும் வரை எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து வையுங்கள் என சொல்லிவிட்டு டெல்லிக்கு பறந்தார் ராகுல்காந்தி.

raghulஇதற்கிடையே காங்கிரசிலிருந்து லட்சுமி நாராயணன், தி.மு.க.விலிருந்து வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்யும் செய்திகள் ஞாயிறு அன்று வெளியாயின. என்.ஆர். காங்கிரஸ் மற்றும் புதுவை பாஜக தரப்பில் நாம் விசாரித்தபோது,’’ முதலமைச்சர் பதவியிலிருந்து நாராயணசாமியை அகற்றிவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டுமென்பது தான் டெல்லியின் அஜெண்டா. பேரவையில் நாராயணசாமி என்ன செய்யப்போகிறார் என்பதை கவனிக்கிறோம். ஆட்சி கவிழும்பட்சத்தில் ரெங்கசாமியை முதல்வராகவும், நமச்சிவாயத்தை துணை முதல்வராகவும் கொண்டு புதிய ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் திட்டம் இருக்கிறது. அதே சமயம், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி தேர்தலை 3 மாதத்திற்கு தள்ளிப்போடும் ஒரு யோசனையை டெல்லி முன்னெடுக்கிறது. ஆனால், தமிழகத்தோடு இணைந்து புதுவைக்கும் தேர்தலை நடத்தினால்தான் சரியாக இருக்கும். தனியாக நடத்தினால் தமிழகத்திலிருக்கும் ஒட்டுமொத்த திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புதுவையில் இறங்கிவிடும். அதனை சமாளிப்பது கஷ்டம். அதனால் தேர்தலை தள்ளிப்போடும் முடிவை எடுக்காதீர்கள் என ரெங்கசாமியும் பாஜக தலைவர்களும் டெல்லியை வலியுறுத்தியுள்ளனர். டெல்லியிலிருந்து என்ன மாதிரி உத்தரவு வருகிறது என்பதை பொறுத்தே எங்களின் இறுதிகட்ட அரசியல் முடிவுகளை தீர்மானிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றனர் மிக அழுத்தமாக.

Advertisment

பேரவை வாக்கெடுப்புக்குப் பிறகும் புதுவை அரசியலில் பரபரப்புக்கு பஞ்ச மிருக்காது.