எத்தனை சட்டங்கள் இருந்தபோதும் இன்னும் முழுமையாக மன்மத வல்லூறுகளை ஒடுக்க முடியவில்லை என்பதற்குக் கண்முன் சாட்சியாக கதிகலங்க வைக்கிறது, புதுச்சேரியில் ஐந்து சிறுமிகள் சீரழிக்கப்பட்ட சம்பவம்.
புதுவைப் பகுதியைச் சேர்ந்த கீழ்சாத்தமங்கலத் தைச் சேர்ந்தவர்கள் கன்னியப்பன்-சுதா தம்பதியர். இவர்கள் வாத்து பண்ணை நடத்திவருகின்றனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த 6 வயது முதல் 14 வயது வரையிலான 5 சிறுமிகளைக் கொத்தடி மைகளாகத் தங்க வைத்து, கடந்த 2 வருடங்களாக வாத்து மேய்க்க அனுப்பிவந்தனர். இவர்கள் கொத்தடிமைகளாக சிக்கியிருக்கும் புகாரை அறிந்த புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவினர், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி அங்கு சென்று சோதனையிட்டு அந்த 5 சிறுமிகளையும் அதிரடியாக மீட்டு புதுச்சேரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
இந்த சிறுமிகளை விசாரணை செய்தபோதுதான் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்பட்டன.
அவர்களை அந்தப் பண்ணையைச் சேர்ந்தவர்களும், அவர்களின் நண்பர்களும், சக தொழிலாளர்களுமாக 10-க்கும் மேற்பட்டோர், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பாலியல் வல்லுறவு செய்த அதிர்ச்சி யூட்டும் தகவல் வெளியே வந்தி ருக்கிறது. இந்த விவகாரம் இப்போது புதுவை மாநிலத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து குழந்தை கள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் நம்மிடம், ""சிறுமிகளைக் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வாத்து மேய்க்க வைப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு விரைந்தோம். அப்போது 2 சிறுமிகளுக்கு ஆண் சிறுவர்களைப் போல கிராப் வெட்டி வாத்துகள் மேய்க்க விட்டிருந்தனர். அந்த பிள்ளைகளை மீட்டுப் படிக்க வைக்கும் எண்ணத்தில்தான், ஹாஸ்டலில் சேர்த்தோம். அதனைத் தொடர்ந்து மீண்டும் அங்குசென்று மேலும் 3 குழந்தைகளையும் மீட்டு அவர்களையும் ஹாஸ்டலில் சேர்த்தோம். ஆரம்பத்தில் சிறுமிகள் ஏதும் சொல்லவில்லை. குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் அவர்கள் உணரும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து தொண்டு நிறுவனத்தினர் மூலம் புது சட்டை, துணிமணிகள் கொடுத்து, நல்ல சாப்பாடு கொடுத்து, மனநல மருத்துவர்கள் மூலம் உடலுக்கும், மனதுக்கும் சிகிச்சைகள் கொடுத்த பிறகு அவர்கள் இங்கே நிரந்தரமாக தங்குவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார்கள். மற்ற பிள்ளைகளோடு இயல்பான நிலைக்கு மாறினர்.
அதன் பிறகே அங்கிருந்த மற்ற பிள்ளைகளிடம் வாத்து மேய்த்த இடத்தில் "தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டோம்' என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த தகவல் மற்ற பிள்ளைகள் மூலம் என் காதுக்கு வந்தது. உடனே எங்க டீமைச் சேர்ந்த மனநல ஆலோசகர்கள், அவர்களிடம் விசாரணை செய்தபோதுதான், அங்கே அவர்களுக்கு நடந்த பாலியல் ரீதியான சித்திரவதைகள் தெரியவர... எங்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. முதலில் அந்த குழந்தைகளுக்கு கூல்டிரிங்ஸில் பீர் கொடுத்தும் போதையூட்டும் ஹான்ஸ் கொடுத்தும் அவர்களைப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்துச் சொன்ன அந்தக் குழந்தைகள், தங்களைக் "கட்டிவைத்து பாலியல் கொடுமை செய்ததாக'ச் சொல்லியிருக் கிறார்கள். அவர்களில் 13 வயது சிறுமியை புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மெடிக்கல் செக்கப் செய்தபோது அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அந்த 5 பெண் பிள்ளைகளுக்கும் 6 வயது முதல் 13 வயது வரைதான் இருக்கும். அதில் 4 பிள்ளைகளிடம் தவறாக நடந்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் நாங்கள் காவல்துறையில் புகார் கொடுத்தோம்'' என்றார் கவலையோடு.
காவல்துறை தரப்போ, ""அந்த வாத்துப் பண்ணையை கன்னியப்பனும், அவரது மனைவி சுதா என்பவரும் நடத்திவருகின்றனர். அவர் களிடம் ஆறுமுகம் என்பவரின் குழந்தைகளான அந்த 5 சிறுமிகளையும் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் கூலி பேசி, அவர்களிடம் அனுப்பியிருக்கிறார். பகலில் வாத்துகள் மேய்க்கும் சிறுமிகள், இரவில் வாத்துகளை பட்டியில் பாதுகாப்பாக அடைத்துவிட்டு அங்குள்ள ஒரு கூரை கொட்டகையிலேயே தங்கி இருந்துள்ளனர் அவர்களுக்கு கன்னியப்பன் மனைவி சுதா அவ்வப்போது சாப்பாடு கொண்டுவந்து கொடுத் திருக்கிறார்.
சுதாவால் வர முடியாத சமயங்களில் அவர்களின் மகன் ராஜ்குமார் சாப்பாடு கொண்டு சென்று கொடுப்பாராம். அப்போது சிறுமி களுக்கு விளையாட்டாக சாக்லெட், ஐஸ்கிரீம் போன்ற ஸ்வீட்களை வாங்கி கொடுத்து, சிறுமிகளிடம் நைசாக பேச்சுக் கொடுப்பாராம். அந்த சமயங்களில் சிறுமிகளின் இடுப்பை கிள்ளுவது, கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற சில்மிஷங் களைச் செய்து வந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் 13 வய துடைய பெண் சிறுமியை தனியாக அழைத்து சென்று ஒரு இடத்தில் 2 கைகளையும் கம்பியில் கட்டி, கால்களையும் கட்டி, வாயில் துணி வைத்து அடைத்து பாலியல் வல்லுறவு செய்திருக்கிறான். அப்படிச் செய்யும் போதெல்லாம், "வெளியில் சொன் னால் கொலை செய்து கடலில் போட்டுடுவோம்' என்று ராஜ்குமார் மிரட்டியிருக்கிறான். இது குறித்து சிறுமிகள், சுதாவிடம் சொல்லியும் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிறுமிகளைச் சமாதானம் செய்துள்ளார். ஆனால் ராஜ்குமார் தொடர்ந்து பிரியாணி, பீர் கொடுத்தும், கூல்டிரிங்ஸில் போதை கலந்து கொடுத்தும் மற்ற சிறுமிகளையும் மயக்கமாக்கி, அவர்களுக்கே தெரியாமல் பலமுறை பாலியல் வல்லுறவு செய்திருக்கிறான்.
கடந்த ஒரு வருடமாக இப்படி பலமுறை நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கு தொடங்கிய திலிருந்து ராஜ்குமாரின் பாலியல் தொல்லை அதிகமாகியிருக்கிறது.. அதோடு மட்டுமல்லாமல் சுதாவின் கணவர் கன்னியப்பன், அவர்களது இரண்டாவது மகன் சரத்குமார், சிறுமிகளின் வளர்ப்பு தந்தையான ஆறுமுகம், வாத்து பண்ணையில் வேலை செய்த அய்யனார், பசுபதி, சிவா மற்றும் ராஜ்குமாரின் நண்பர்கள் சிலர் என 10-க்கும் மேற்பட்டவர்கள் அந்த சிறுமிகளை சீரழித்துள்ளனர். இந்த நிலையில்தான் 13 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமாக, அது தொடர்பாக சிறுமியின் தாய் சாந்தி, கன்னியப்பனிடமும், ராஜ்குமாரிடமும் நியாயம் கேட்டு சண்டை போட்டிருக்கிறார். அதைப் பார்த்த சிலர் கொடுத்த தகவலால்தான், அந்த சிறுமிகளை மீட்க முடிந்தது''’என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடுக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக பண்ணை உரிமை யாளர் கன்னியப்பன், அவரது மகன்கள் ராஜ்குமார், சரத்குமார், மற்றும் ஆறுமுகம், அய்யனார் பசுபதி, சிவா, மூர்த்தி, பாலாஜி ஆகி யோர் மீது "மோசமான பாலியல் தாக்குதலில் ஈடுபட்டது, பாலியல் துன்புறுத்தல், சட்டவிரோத மாக அடைத்து வைத்திருந்தது, குழந்தைகளை சித்திரவதை செய்தது மற்றும் போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் இருவர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ரெங்கநாதனிடம் விளக்கம் கேட்டோம், "குற்ற வாளிகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக இருப்பவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளி களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவோம்''’’ என்றார் அழுத்தமாக.
இதற்கிடையே இன்னொரு அதிர வைக்கும் சம்பவமும் நடந்திருக்கிறது. சிறுமியின் தாய் சாந்தியை கடந்த 1-ஆம் தேதி, மூன்றாவது கணவரான பூபாலன் கொலை செய்ய, இதில் பூபாலன் கைது செய்யப்பட்டிருக்கிறார். "இந்தக் கொலையும் சிறுமியின் கர்ப்பம் தொடர்பான தகராறில் நடந்திருக்கலாம்' என்றும் கூறப்படுகிறது.
புதுவை சிந்தனையாளர் பேரவைத் தலைவர் செல்வம், "உத்தரப்பிரதேச பாலியல் வன்முறைக்குக் குரல் கொடுத்த வர்கள், இந்தச் சிறுமிகளுக்கு நேர்ந்த கூட்டு வன்புணர்வுக் கொடு மையை பார்த்தும், கள்ளமௌனம் காப்பது ஏன்? இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக் குழுவை அரசு அமைக்க வேண்டும். அதேபோல் புதுவையில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிய, மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்கிறார்.
தந்தை, மகன், சகோதரன்... என வயது, உறவு பற்றிய வித்தியாசமில்லாமல் சிறுமிகளைச் சீரழித்திருக்கிறார்கள் வாத்துப் பண்ணை கொடூரர்கள். காமவெறி தலைக்கேறிய மனித மிருகங்கள் செய்த இந்த கொடூரச்செயல் மன்னிக்க முடியாதது.
புதுவை அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்குமா?
-சுந்தரபாண்டியன்