ss

(59) நாங்கள் கிரிமினல் அல்ல!

Advertisment

சேலம் சிறையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு எல்லா சிறைகளிலும் நடப்பதற்கான வாய்ப்புகள் கூடுதலாகவே இருந்தது. சிறைகள் தோறும் கொந்தளிப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. இந்தக் கொந்தளிப்பின் தீவிரம், மதுரை சிறையில் அனல்காற்றாக வீசத் தொடங்கியிருந்தது. சிறை என்பது மனிதரை பூட்டி வைக்கும் ஒரு இடம் என்பதாகத்தான் நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் அதற்குள் நிகழும் ஒவ்வொன்றும் சமூக வரலாறு என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. அந்த சமூக வரலாற்றை நேரில் பயின்றவர் தோழர் நல்லகண்ணு.

மதுரை சிறைச்சாலையில் கைதிகளை ஒருங்கிணைத்து அவர்களை ஒரு குறிக்கோளை நோக்கி நகர வைப்பதிலிருந்து, இவர் இந்த சமூக வரலாற்றை பயிலத் தொடங்கினார். சேலம் சிறையைப் போல மதுரை சிறை இல்லை. இந்த கைதிகளின் சமூகப் பொரு ளாதார பின்னணி முற்றிலும் வேறுபட்டிருந்தது. ஒரு புவியியல் நிலம் சார்ந்த மக்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களை மற்றவர்கள் பின்பற்றுவதில்லை. இதிலும் தென் தமிழ் நாடு முற்றிலும் வேறுபட்டிருந்தது. தென் தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு உள்பகுதிகள் இருந்தன. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயல்பு இருந்தன. இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டபோது நல்லகண்ணு, சமூக யதார்த்தங்களை ஆய்வுசெய்து பார்க்கும் ஆய்வாளராகவே மாறிப்போனார். இதில் புதுப்புது கண்ணோட் டங்களையும், புதுப்புது பார்வைகளையும் இவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. பிற்காலத்தில் பக்குவப்பட்ட நல்லகண்ணுவாக மாறுவதற்கு இது சிறந்த அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

கைதிகளில் உண்ணாவிரதம் இருப்பவர்கள், உண்ணாவிரதத் திற்கு ஆதரவு தருபவர்கள் என்று இரண்டு பிரிவுகள் இருப்பதை இவர் நன்கறிவார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் சமரசமற்ற போர்க்குணம் இருப்பதை இவர் அறிந்துகொண்டார். வர்க்கம் என்ற சொல்லை, அவர் பலமுறை பயின்றிருக்கிறார். இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்களிடம் அடிப்படையாக அமைந்த சமரசமற்ற போர்க்குணத்தை அவரால் இங்குதான் முழுமையாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

Advertisment

தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இன்றைய கார்ப்பரேட் உலகம் இவ்வாறான போராட்டத்திற்கு, அர்த்தமே இல்லாமல் செய்துவிட்டது. ஆனால் அன்றைய அவர்களின் வைராக்கியம் இரும்புக் கதவுகளை உடைத்து திறக்க வைத்தது. கருங்கல் பாறையிலும் சுனைநீரை பெருக்கெடுக்க வைத்தது. காலமாறுதலின் புதிய விதைகளாக மாறிக்கொண்டிருந்தார்கள். அந்த வீரியம் பின்னர் அமைந்த அரசியல் வாழ்க்கை முறையில் ஏன் இல்லாமல் போய்விட்டது என்ற வருத்தம் நம்மை போன்றவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. அது அமைந்திருந்தால் வீரியம் கொண்ட புதிய அரசியல் ஒன்று தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கும் என்பதை என்னால் நம்பமுடிகிறது.

ss

அதேசமயம், சிறையில் இப்படி போராடி இவர்கள் எதைத்தான் கண்டார்கள்’ என்ற கேள்வியை அந்தக் காலத்தில் எழுப்பியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இது குறித்து நான் ஆழமாக யோசித்துப் பார்க்கிறேன். சுதந்திரத்திற்குப் பின்னர் சிறைச்சாலைகளில் இன்று எத்தனையோ சீர்திருத்தங்கள் நிகழந்திருக்கின்றன. இவை அனைத்தும் அரசின் கருணை மிகுந்த ஆட்சியாளர்களின் சாதனைகளாக வெளியிடபட்டு வருகிறது. ஆனால் அதை பெறுவதற்கு சிறையிலிருந்த அன்றைய கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை எல்லோரும் மறந்துவிட்டார்கள். பல நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள், சிறைக்காவலர்களால் அவர்களை உண்ணவைக்கும் வன்முறையில் பல் உடைந்துபோனவர்கள், உதடு கிழிந்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

கம்யூனிஸ்டுகளின் சிறைக்கோரிக்கைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் கோரிக்கையாக மட்டும் இல்லை. அது நீண்ட தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தது. சிறையில் கைதிகளாக இருப்பவர்களும் மனிதர்களே என்பதை அதிகார வர்க்கத்திற்கு எச்சரிக்கையாக விடுத்திருந்தது. நேர்மையான அதிகாரிகள் சிலர் இதை மனிதநேய அடிப்படையில் யோசித்துப் பார்த்தார்கள். இது ஒருவிதத்தில் இவர்களுக்கு ஒரு மனித உரிமையை அறிந்துகொள்ளும் கல்வியாகவும் அமைந்தது. இந்த பார்வை அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கைதிகளின் மீது அளவு கடந்த மரியாதையை உருவாக்கியது. இதுதான் உண்மையான சமூக மாற்றம் என்பதை நல்லகண்ணுவால் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

தோழர்களோடு இணைந்து உருவாக்கிய உண்ணாவிரதக் கோரிக்கைகள், பல நாட்கள் படித்துப் படித்து, பலரின் ஆலோசனைகளைக் கேட்டுக் கேட்டு திருத்தப்பட்டிருந்தது. கிரிமினல் கைதிகளாக நடத்தக்கூடாது, அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்பது முதன்மை கோரிக்கை. இந்த கோரிக்கையின் உண்மை அர்த்தத்தைக்கூட உயர் சிறை அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை விளக்கிச் சொல்லவேண்டிய அவசியமும் இவர்களுக்கு இருந்தது.

கோரிக்கைகளில் மற்றவை கைதிகளின் உரிமை சார்ந்தவை. கைதிகளுக்கு அவர்களும் மனிதர் என்ற முறையில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள்கூட தெரிந்திருக்கவில்லை. கோரிக்கைகளைத் தெரிந்துகொண்ட பின்னர் இத்தனை உரிமைகள் தங்களுக்கு இருக்கிறதா? என்று கைதிகள் கண்களை அகல திறந்து பார்க்கத் தொடங்கினர். கோரிக்கைகள் சிறை நிர்வாகத்துக்கு வைக்கப்பட்டது. அது, கைதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக இருந்தது. அதை அவர்கள் உணர்வுப்பூர்வமாக உணர்ந்துகொண்ட பின்னர், கைதிகள் அனைவரிடமும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒருவிதமான எழுச்சியை உருவாக்கியிருந்தது.

தெளிவாகப் புரிந்துகொள்ள, இதை தோழர் நல்லகண்ணு உள்ளிட்டோர் மதுரை சிறையில் வைத்த உண்ணவிரதப் போராட்டங்களின் கோரிக்கைகளை உற்றுக் கவனிக்கவேண் டும். அந்த கோரிக்கைகளின் மையம் கம்யூனிஸ்டுகளை அரசியல் கைதிகளாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். அதைத்தவிர கைதிகளுக்கான பொதுவான அடக்குமுறை எதிர்ப்பு, மருத்துவ உதவி, ஊழல் இல்லாமல் உணவளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன.

சதி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தோழர்கள் சிறையில் முன்வைத்திருந்த கோரிக்கைகள் பல்வேறு தகவல்களை கொண்டிருந்தன. இந்தக் கோரிக்கைகளின் வடிவமைப்பைப் பார்த்து அதிகாரிகளில் பலர் ஆச்சரியப்பட்டார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உயிரைப் பணயம் வைத்து கம்யூனிஸ்டுகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார் கள். என்றாலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தோழர்கள் சிலருக்கு சந்தேகமும் இருந்தது. நல்லகண்ணு உள்ளிட்ட தலைமைத் தோழர்கள், இதில் முழு நம்பிக்கைகொண்டிருந்தார்கள்.

கோரிக்கைகள் அனைவருக்கும் ஒரு தெளிவைத் தந்தது. தண்டனை பெற்று சிறைக்கு அழைத்துவரப்படும் கைதிகளை சிறைக்கு வெளியேயும் உள்ளேயும் அடித்து அழைத்து வரப்படும் நடைமுறையை உடன் நிறுத்தவேண்டும். கம்யூனிஸ்டுகள் அரசியல் கைதிகள். அவர்களுக்கு அரசியல் கைதிகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். பத்திரிகைகள் வாசிக்கும் உரிமை, நூல்கள் வாசிக்கும் உரிமை ஆகியவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதை கோரிக்கைகள் வலியுறுத்தின..

இதுதவிர இதில் முன்வைக்கப்பட்ட வேறொரு கோரிக்கைக்கு அதிகாரிகள் கிண்டலாக பதிலளித்தார்கள். கோரிக்கைகளில் ஒன்று, கம்யூனிஸ்டுகள் அனைவரையும் ஒரே பிளாக்கில் வைக்க வேண்டும் என்பது. அதிகாரிகளுக்கு இந்த கோரிக்கையில் சந்தேகம் வந்துவிட்டது. ஏன் இதைக் கேட்கிறார்கள் என்று ஆராயத் தொடங்கிவிட் டார்கள். ஜெர்மனியின் ஹிட்லர் அமைத்த நாஜி சிறைகளி லிருந்து சிலர் தப்பிச்சென்ற தகவல்களை அவர்கள் அறிவார் கள். அவ்வாறு ஏதாவது நடக்கப்போகிறதா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் நடக்கவில்லை. மற்றொரு செய்தி...

(தொடரும்)