நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய "இந்தியா' கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் 31-ந் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் விவாதிக் கப்படும் விசயங்களால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைவதற் கான வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறது பா.ஜ.க. தலைமை.
இந்த நிலையில், "எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில் லாமல் பிரிந்து கிடப்பதால்தான் வலிமையாகத் தெரிகிறார் மோடி. பா.ஜ.க.வை வீழ்த்துவது பெரிய காரியம் இல்லை. மோடி-அமித்ஷா கூட்டணியை வீழ்த்த நாம் ஒற்றுமையாக நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொண்டாலே போதும்,… பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்துவிட முடியும் என்பதை வலியுறுத்தி இயங்கிய பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், அதற்கான முயற்சிகளில் வேகம் காட்டினார்.
இதன் பலனாக காங்கிரஸ், தி.மு.க., நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், லல்லுவின் ராஸ்ட்ரிய ஜனதா தளம், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து "இந்தியா' என்ற கூட்டணி உருவானது. வலிமையான எதிர்க்கட்சி கூட் டணி உருவானதில் தி.மு.க. வின் தலைவர் மு.க. ஸ்டாலினின் பங் களிப்பு பெரி தாக இருந்தது.
எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒற்றுமையாகத் திரளமாட்டார் கள் என்ற நம்பிக்கையினால் தெம்பாக இருந்த பிரதமர் மோடிக்கு, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சூட் டப்பட்ட இந்தியா என்ற பெயரும், மாநிலங்களின் வலிமையான தலைவர்கள் ஒன்றிணைந்ததும் பலத்த அதிர்ச்சியை தந்தது. இதற் கிடையே, நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான கருத்துக் கணிப்பு களும் வெளியானதால் பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் ஏக டென்சன் ஏற்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் வருகிற 31-ந்தேதி கூடுகிறது. இரண்டு நாள் நடக்கும் இந்த கூட்டத்தில் குறைந்தபட்ச செயல்திட்டங்கள் பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. இதில் தான் சிக்கல் கள் உருவாகக்கூடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ராகுல்காந்திக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் எம்.பி. ஒருவரிடம் நாம் விரிவாக விவாதித்தபோது, "மும்பையில் மூன்றாவது ஆலோ சனைக் கூட்டம் நடக்கவிருப்பதால், காங்கிரஸ் தரப்பில் முன்வைக் கும் விசயங்கள் குறித்து மூத்த தலைவர்களிடம் விவாதித்தார் ராகுல் காந்தி. அந்த விவா தத்தில், "இந்தியா' கூட்டணி வலிமையாக இருந்தா லும், யார் பிரதமர் என்பதை மக்களிடம் சொல்லாமல் ஓட்டுக் கேட்பது கூட்டணிக்கு பலவீனமாகத்தான் தேர்தல் களத்தில் தெரியும். இதை வைத்தே பா.ஜ.க. பிரச்சாரம் செய்யும்'' என ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் சொல்ல, அதனை அனைவரும் ஆமோதித்தனர்.
அதனால், "பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கச் செய்வது குறித்து ஒருமித்த கருத்தை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும்; மும்பை கூட்டத்தில் அதனை வலியுறுத்த வேண்டும்' என கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில், மும்பை கூட்டத்தில், தேர்தலை சந்திப்பதற்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்ட காங்கிரஸ் கோரிக்கை வைக்கும். இது தவிர, கருத்தியல் ரீதியாக சில பிரச்சினைகளைப் பேசவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது'‘என்று நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
காங்கிரசின் இந்த நிலைப்பாட்டில், இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் கருத்தினை பல்ஸ் பார்ப்பதற்காக அசோக் கெலாட்டை வைத்தே ஆழம் பார்த்திருக்கிறார் ராகுல்காந்தி.
அதாவது, பிரபலமான ஹிந்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அசோக் கெலாட், ‘’"லோக்சபா தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதில், கூட்டணிக் கட்சிகளுக்குள் மாறுபட்ட சொந்த கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், காங்கிரசின் முடிவு இதுதான்''’என்று பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார்.
அசோக்கெலாட்டின் இந்த கருத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், "காங்கிரஸின் கருத்து மட்டுமல்ல இது; கூட்டணியின் கருத்தாகவும் இருக்க வேண்டும். ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்''’என்கிறார் சத்தீஸ்கர் மாநில முதல்வரும் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பூபேஷ் பாகல்.
ராகுல்காந்தி எதிர்பார்த்தது போலவே, காங்கிரசின் இத்தகைய முடிவுக்கு உடனடியாக ரியாக்ஷன் காட்டியுள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், "பீகார் மட்டுமல்ல உத்தரப் பிரதேசம், சத்தீஷ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநில மக்கள், நிதிஷ்குமாரைத்தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என விரும்புகின்றனர். அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது. பா.ஜ.க.வின் ஆக்டோபஸ் பலத்துக்கு நிதிஷ்குமார்தான் பலமான போட்டியாக இருப்பார்' என்று எதிர்வினையாற்றியுள்ளது.
இதற்கிடையே, காங்கிரசின் இந்த முடிவினை அறிந்து, தனது கட்சியின் சீனியர் லீடர்களிடம் விவாதித்துள்ள மேற்குவங்க முதல்வரும், "இந்தியா' கூட்டணி உருவானதில் பக்கபலமாக இருந்தவரு மான மம்தா பானர்ஜி, "லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. பிறகேன், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என திடீரென முழக்கமிடுகிறார்கள்? கூட்டணியை உடைக்க காங்கிரசே திட்டமிடுகிறதா?'' என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மம்தாவை போலவே இந்தியாவின் மூத்த தலைவர்கள் லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால், உமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன் உள்ளிட்டவர்களும் அசோக் கெலாட்டின் பேட்டியை கண்டு ஆலோசித் திருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் காங்கிரசின் நிலைப்பாட்டை ஆராய்ந்து கொண்டிருப்பதும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எதிர்வினையாற்றியதையும் அறிந்த காங் கிரஸ் தலைமை, இந்தியா கூட்டணி கட்சிகளிடம் காங்கிரசின் கருத்தினை ஏற்க வைக்கும் மறைமுக முயற்சியை எடுத்து வருகிறது. இதற்காக, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் பேசிவருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
இப்படிப்பட்ட சூழலில்தான், மும்பையில் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறது இந்தியா கூட்டணி. இந்த கூட்டத்தில் பல முக்கிய விவாதங்கள் நடக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, கூட்டணிக்கான குறைந்தபட்ச செயல்திட்டம், தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, தொகுதிகள் பங்கீடு, கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவது, தேர்தல் வியூகம், கூட்டணிக்கான பொது அலுவலகம் ஒன்றை டெல்லியில் உருவாக்குவது, பொதுப் பிரச்சனைகளுக்காக தனி குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன.
இதற்கிடையே, இந்த பிரச்சனை களோடு வேறு சில பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் எனவும் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், அந்த தேர்தலை "இந்தியா' கூட்டணியாக எதிர்கொள்ளுமா? அல்லது "இந்தியா' கூட்டணி லோக்சபா தேர்தலுக்காக மட்டும்தானா? என்பதை பல்வேறு கட்சிகள் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளன.
அதேபோல, குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கும்போது, நீட் தேர்வுக்கு விலக்களிப்பதை கூட்டணியின் பொதுத்தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும், நீட் தேர்வினை எதிர்த்து டெல்லியில் தி.மு.க. நடத்தவிருக்கும் போராட்டத்தில் கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட மாநில பிரச்சனைகளை முன்னிறுத்தி விவாதிக்க தி.மு.க. தலைமை திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது.
ஆக, "இந்தியா' கூட்டணியின் மும்பை கூட்டத்தில் மாநில கட்சிகள் ஒவ்வொரு பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்கத் திட்டமிட்டிருக்கும் நிலையில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்வைக்கத் திட்டமிட்டிருப்பதால், பிரதமர் வேட்பாளர் விவகாரம் சிக்கலை உருவாக்கும். காரணம், காங்கிரசுக்கு அந்த வாய்ப்பைத் தரக்கூடாது என கூட்டணியில் உள்ள முக்கியமான சில மாநில கட்சிகள் விரும்புவதுதான்.
இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் அழுத்தமாக வலியுறுத்தினால் கூட்டணி உடைந்து போகலாம் என கவலைப் படும் கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள்,”"இந்தக் கூட்டணி உடைய வேண்டும் என்றுதான் பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் விரும்புகிறது; அதற்கு காங்கிரசே விதை போட்டு விடக்கூடாது. அதனால் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தை இப்போதைக்கு எடுக்க வேண்டாமே'' என சோனியா காந்தியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், "இதில் ராகுல்காந்தி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்கிற கேள்வி எதிரொலித்தபடியே இருப்பதால் மும்பையில் நடக்கவிருக்கும் "இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டி ருக்கும் நிலையில்... இந்த கூட்டணி உடையவேண்டும் என்கிற பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பினை முறியடித்து மும்பையில் சாதிக்குமா, இந்தியா?' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
______________
இறுதிச் சுற்று!
நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன், ஆகஸ்ட் 28, திங்களன்று காலையில் காலமானார். நடிகர் வடிவேலுவைப் போல் இவரும் திரையுலகில் நுழைந்து "காதல் அழிவ தில்லை' உட்பட 3 படங்களில் நடித்த தோடு, அதிலிருந்து விலகிவிட்டார். கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியும், நடிகர் வடிவேலு வும் விமானம் மூலம் மதுரைக்கு விரைந்தனர்.
-கீரன்