டந்த இதழ்களில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்து பின்னணி குறித்தும், தொழிலாளர்களின் உயிர் மீது அக்கறையில்லாமல் கொள்ளை லாபம் ஈட்டும் பட்டாசு உற்பத்தியாளர்களிடம் அரசுத்துறையினர் அதிக அளவில் லஞ்சம் வாங்கிக் குவிப்பது பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சி..

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு அதிகாரிகள் தரும் நெருக்கடி குறித்து நம்மிடம் பேசிய பட்டாசு ஆலை அதிபர் ஒருவர் “"சரவெடிகள் பின்னுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிச்சிருக்கு. ஆனா சிவகாசில.. நீயென்ன உத்தரவு போடுறது? நான் என்ன கேட்கிறதுன்னு பெரும்பாலான ஃபேக்டரிகள்ல சரவெடி உற்பத்தி பண்ணுறாங்க. அதனால, பட்டாசுக் கடைகள்லயும் சரவெடி விற்பனை தாராளமா நடக்குது. ஏன்னா.. பப்ளிக் விரும்பி வாங்குற அயிட்டம்னா, அது சரவெடிதான். சட்டத்தோட இந்த நெருக்கடியவும், பட்டாசு உற்பத்தியாளர்களோட நெலமையவும் துல்லியமா தெரிஞ்சிகிட்ட அதிகாரிகள், ஆய்வு நடத்தும்போது சரவெடி தயாரிக்கிறது குற்றம்னு சொல்லி லட்சக்கணக்குல பணம் பிடுங்குறாங்க. இங்கே பாறைப்பட்டில ஃபேக்டரி வச்சிருக்கிறவருக்கு வயசு 60 இருக்கும். எனக்கு நல்லா தெரிஞ்சவரு. சரவெடிய காரணம் காட்டி கேஸ் போட்டு ஜெயில்ல வச்சிட்டாங்க. குடோனுக்கு சீல் வச்சிட்டாங்க. ஒரு வாரம் உள்ள இருந்தவரு அழுது புலம்பிட்டு, போலீஸ் லெவல்ல ரூ.5 லட்சம் அழுதுட்டு வெளிய வந்தாரு. இதுல கொடுமை என்னன்னா.. அந்த ஏரியாவுல பத்து முப்பது பேர் ஒண்ணு சேர்ந்து பட்டாசுக்கடை போட்டு ஆன்லைன்ல அடிதண்ட ரேட்டுக்கு விக்கிறாங்க. வாலா 100 ரூபாய்தான். ஷாட் அயிட்டம் 150 ரூபாய்தான். இதெல்லாம் எந்த லைசன்சும் இல்லாம, கள்ளத்தனமா வீடுகள்லயும் மரத்தடிலயும், அதிகாரிகள் பிக்கல் பிடுங்கல் இல்லாம தயாரிக்கிற அயிட்டம். இவங்கள அந்த ஃபேக் டரி ஓனர் போட்டுக் கொடுத்துட்டாரு. அந்த இல்லீகல் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வேண்டி யவர் போல. அந்த போலீஸ் அதிகாரி பண்ணுன வேலைல ஃபேக்டரி ஓனருக்கு ரூ.5 லட்சம் போயிருச்சு. ஒரு சாம்பிளுக் குத்தான் இந்த சம்பவத்த சொல்லுறேன். இதுமாதிரி நெறய நடக்குது.

fr

Advertisment

இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்லியாகணும். கள்ளப் பட்டாசுகள் பலவும் சரியா வெடிக்காது. கள்ளப் பட்டாசு தயாரிக்கிறவங்க அளவுக்கு மிகக்குறைந்த விலைக்கு கொடுக்க முடியலைன்னாலும், எம்.ஆர்.பி. தில்லுமுல்லு பண்ணாமல், நியாயமான விலையில் பெரிய பட்டாசு நிறுவனங்களாலும் சப்ளை பண்ண முடியும். மத்திய, மாநில அரசாங்க அதிகாரிகள் நேர்மையாக நடந்துகொண்டால், விதிமீறலோ, விபத்தோ நடக்காமல், பல மடங்கு குறைந்த விலையில், மக்களுக்கு பட்டாசு வாங்கமுடியும்.

இங்கே டீம்-னு சொன்னா தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள்தான். போன வருஷம் தீபாவளி முடிஞ்ச பத்தாவது நாளே, இந்த அதிகாரிங்க ரெய்டு வந் துட்டாங்க. எங்க ஃபேக்டரிக்கு இந்த வருஷத்துல 14 தடவை ரெய்டு வந்திருக்காங்க. அவங்ககிட்ட நான் நேர்மையா தொழில் பண்ணுறேன்னு ரூல்ஸ் எல்லாம் பேச முடியாது. அதனால ஏழெட்டு தடவை நானே என் கையால லஞ்சம் கொடுத்திருக்கேன். ரூ.12000-த்துல ஆரம்பிச்சு ரூ.60 ஆயிரம் வரை பேரம் பேசி வாங்கிட்டாங்க.

பொதுவா ரெய்டுக்கு தாசில்தாரும் ஃபேக்டரி ஆக்ட் இன்ஸ்பெக்டரும் சேர்ந்து வருவாங்க. அதுதான் ஸ்குவாட். அதுல போலீஸும் வரும். எல்லாரும் தனித்தனியா அவங்கவங்க பங்கை வாங்குவாங்க. போலீஸ்ல இன்ஸ்பெக்டர் கேட்டகிரில வரமாட்டாங்க. ஏட்டையா லெவல்ல வருவாங்க. ரூ.3000-ல இருந்து ரூ.4000 வரைக்கும் வாங்கிட்டு போவாங்க. எந்தெந்த ஃபேக்டரிக்கு ரெய்டு வருவோம்னு தாசில்தார் டிரைவர் முன்கூட்டியே தகவல் கொடுத்திருவாரு. தகவல் கொடுக்கிற தாசில்தார் டிரைவர் குறைஞ்சது ரூ.2000.. அதிகம்னா ரூ.5000 கேட்டு வாங்கிருவாரு. பார்க்கிறது டிரைவர் வேலைன்னாலும்.. ஃபேக்டரிக்குள்ள வந்து, அந்த பேப்பர கொடுங்க.. இந்த பேப்பர கொடுங்கன்னு அதிகாரம் பண்ணுவாரு. இங்கே கருமருந்து ரூம்ல ஒரு ஆள் எண்ணிக்கை அதிகமா இருக்கே?ன்னு கேள்வி கேட்பாரு. சில நேரங்கள்ல போலீசும் ஃபயர் சர்வீஸும் சேர்ந்து வருவாங்க. ரெண்டு பேருக்கும் சேர்த்து ரூ.5000 கொடுங்கன்னு பவ்யமா சல்யூட் அடிச்சு வாங்கிட்டு போயிருவாங்க. அதோட அவங்க சோலி முடிஞ்சிரும். லஞ்சம் வாங்காத நல்ல தாசில்தார் அம்மா ஒருத்தங்க இருந்தாங்க. பேயா பணம் பிடுங்குற தாசில்தாரும் இருக்காரு. அவரு.. கடந்த 8 வருஷமா இந்த ஏரியாவுலயே மாறி மாறி டிரான்ஸ்பர் வாங்கி, பண வேட்டை நடத்திக்கிட்டே இருக்காரு. ரூ.10000-ல இருந்து ரூ.15000 வரைக்கும் ஒவ்வொரு ரெய்டுலயும் தாசில்தாருக்கு மாமூல் போயிரும். ஃபேக்டரி ஆக்ட்காரங்க வாங்குற லஞ்சம் எந்த -மிட்டுலயும் அடங்காது. ரூ.5000-ல ஆரம்பிச்சு ரூ.50000 வரை எகிறும்.

fr

அதிகாரிங்க எப்பவும் ரெய்டுக்கு வருவாங்க. குற்றம் குறைய கண்டுபிடிப்பாங்க. அதுக்கு ஏத்த மாதிரி லஞ்ச பணத்தை கூடுதலா வாங்கிருவாங்க. இதுனால பட்டாசு ஃபேக்டரி சைடுல எந்த மாதிரி எண்ணம் உருவாயிருச்சுன்னா.. அதிகாரிங்க வர்ற நேரத்துல எல்லா ரூல்ஸயும் ஃபாலோ பண்ணுற மாதிரி சுத்தமா வச்சிக்கிட்டு.. பேசி முடிச்சு அனுப்பி வச்சிடலாம்கிறது மனசுல பதிவாயிருச்சு. இதுல ஃபேக்டரி ஆக்ட்காரங்க ரொம்ப மோசம். வௌக்குமாறு இல்ல.. முன்னாடி கால்மிதியடி இல்ல. இப்படி ஆரம்பிச்சு 20 கம்ப் ளைன்ட் வரைக்கும் எழுதிருவாங்க. இந்த 20 கம்ப்ளைன்டும் கோர்ட் டுக்கு போச்சுன்னா.. அபராதம் 80000 ரூபாய் கட்டணும். ஃபேக் டரிய சஸ்பென்ட் பண்ணுற சூழ் நிலைக்கு கொண்டுவந்திருவாங்க. இதுக்கு பயந்துதான், மூச்சு காட்டாம கேட்கிற பணத்தை கொடுத்துத் தொலைக்கிறோம்.

ரெய்டு வர்றப்ப என்ன நடக் கும்கிறத லைவா சொல்றேன். 20 கம்ப்ளைன்ட் வரைக்கும் எழுதிட் டாங்கன்னா.. அதிகாரிங்க பின் னாடியே ஓடுவோம். அவங்களும் இதைத்தான் எதிர்பார்ப்பாங்க. நம்மள பிடிச்சு உட்காரவச்சு பேரம் பேசுவாங்க. கேஸ் போட்டு ஃபேக்டரிய சீல் வச்சிருவோம்னு மிரட்டுவாங்க. வேற வழி? ஏதாச்சும் பார்த்து பண்ணுங்க சார்னு கெஞ்சு வோம். முன்னமாதிரி இப்ப போன்ல ரேட் பேசமாட்டாங்க. பேரம்கிறது பெரும்பாலும் வெளியிடத்துல நடக்கும். ஃபேக்டரி ஆபீஸ் ரூம்லயும் பேசி முடிப்பாங்க. இந்தமாதிரி நேரத்துல கறாரா பேசி ரூ.1 லட்சமாவது வாங்கிருவாங்க. அப்புறம் ரெண்டு மூணு கம்ப்ளைன்ட் பேருக்கு எழுதி கோர்ட்ல ரூ.12000 ஃபைன் கட்ட வைப்பாங்க. பேரத்துக்கு மடங்கலைன்னா ஃபேக்டரிய மூடிருவாங்க. இங்கே அந்தமாதிரி ரெண்டு மூணு ஃபேக்டரி ஏழெட்டு மாசமா பூட்டியே கிடக்கு''’என்றார்.

சிவகாசி தாசில்தார் வடிவேலிடம், "லஞ்சப் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கிறதே?''’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.

"சிவகாசிக்கு நான் மாற்றலாகி வந்து ஒருவாரம்தான் ஆகுது. இங்கே தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குகிறார்களா என்பது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. எனக்கு முன்பாக சிவகாசியில் தாசில்தாராக இருந்தவர் லோகநாதன்''’என்றார்.

தற்போது சாத்தூரில் தாசில்தாராகப் பணி புரியும் லோகநாதனைத் தொடர்புகொண்டோம். “"எனக்கு லஞ்சம் கொடுத்ததாக உங்களிடம் புகார் கூறியவர் நிச்சயம் நேர்மையானவராக இருக்கமாட்டார். லஞ்சம் வாங்குவதாக என்னைக் குற்றம்சாட்டுவது சரியல்ல''’என்று ஒரே போடாகப் போட்டார்.

விருதுநகர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ரவிகுமாரை தொடர்பு கொண்டோம். "பட்டாசுக் கடைக் கான புதிய உரிமமோ, புதுப்பித்தலோ, எந்த விண்ணப்பமும் நிலுவையில் இல்லை. நீங்க சொல்லுற மாதிரி பார்ட்டி இருந்தா சொல்லுங்க. வி.ஏ.ஓ., தாசில்தார்கிட்ட சொல்லி அதை சரிபண்ணச் சொல்லுவோம். உங்களுக்கு தெரிஞ்சு இந்தமாதிரி ஏதாவது கேஸ் இருந்ததுன்னா வர சொல்லுங்க''’என்றார். யாரோ ஒரு பட்டாசு கடைக்காரருக்கு லஞ்சம் தராமல் உரிமம் பெற நாம் சிபாரிசு செய்வதாக நினைத்தோ என்னவோ... "அதை சரிபண்ணச் சொல்லு வோம்..''’என்று கூறியவரிடம், "புதிதாக உரிமம் பெறவும், உரி மம் புதுப்பிக்கவும் ரூ.40,000 வரை லஞ்சம் வாங்குவதாகச் சொல்கிறார்களே?''’என்று இடைமறித்தபோது, “"என்கிட்ட போய் இதை கேட்கிறீங்க? நாங்க என்ன சொல்ல? அதெல்லாம் இல்லைங்க சார். அதெல்லாம் இல்ல சார்...''’என்று பதற்றத்துடன் மறுத்தார்.

நம்மிடம் லஞ்சப் புகார் கூறியவர்களிடம் "தாசில்தாரும் டி.ஆர்.ஓ.வும் லஞ்சம் வாங்கவில்லை என்கிறார்களே?''’என்று தெரிவித்தபோது...

"லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் எப்படி ஒத்துக்கொள்வார்கள்?''” எனத் திருப்பிக் கேட்டு, அதிரடியான தகவல்களைக் கொட்டினார்கள்.

லஞ்ச சரவெடி தொடர்ந்து வெடிக்கும்...

Advertisment