ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 25-ந் தேதியோடு முடிவடையும் நிலையில், புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் களத்தில் ஆளும் பா.ஜ.க. அரசின் பலம் சற்றுக் குறைவாக இருப்பதால் யார் முன்னிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளில் உள்ள எம்.பி.க்களும், மாநில சட்டமன்றங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பர். தற்போது நாடாளுமன்றத்தில் 776 எம்.பி.க்களும் (இரு அவைகளையும் சேர்த்து), இந்தியா முழுவதும் 4,120 எம்.எல்.ஏ.க்களும் இருக்கின்றனர்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளின் மதிப் பைக் கணக்கிட்டே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படு வார். ஒவ்வொரு மாநிலத்தின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். அந்த வகையில், ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு என்பது, அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கிறாரோ அந்த மாநிலத் தின் மக்கள் தொகையை அந்த மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுப்பதால் கிடைக்கும் மதிப்பாகும்.
எம்.பி.யின் வாக்குமதிப்பு என்பது, அனைத்து மாநிலங்களிலுமுள்ள எம்.எல்.ஏ.க்களும் சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை யால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பாகும். இதனடிப்படையில் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
2017-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத்கோவிந்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்று மொத்தம் 2,930 வாக்குகள் கிடைத்தன. இது, 65.65 சதவீதம். எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட மீரா குமாருக்கு கிடைத்த வாக்குகள் 1,844. இது, 34.35 சதவீதம். இப்படிப்பட்ட சட்டவழிமுறைகளின்படி தான் இந்திய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ராம்நாத்கோவிந்த் மீண்டும் ஒரு வாய்ப்புக் காக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் ஆதரவை நாடியிருக்கிறார். ஆனால், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோர், புதிதாக ஒருவரை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து விசாரித்தபோது,” ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.சின் உயர்மட்டக் குழு ஒரு ஆலோசனையை நடத்தியது. அதில் பல்வேறு கணக்குகள் ஆராயப்பட்டதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறுத்தும் வேட்பாளருக்கு 48.2 சதவீத வாக்குகள் மட்டுமே ஆதரவாக இருந்தன. வெற்றிக்கு கூடுதல் ஆதரவு தேவை.
பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தெலங்கானா கவர்னர் தமிழிசையை வேட்பாளராக நிறுத்தினால் தி.மு.க.வின் ஆதரவை பெறலாம் என்றும், கேரள கவர்னர் ஆரிஃப் முகமதுகானை நிறுத்தினால் முஸ்லீம்களின் ஆதரவை பெறலாம் என்றும், இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தியை நிறுத்தினால் தொழிலதிபர் களின் முயற்சியில் பா.ஜ.க. கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகளின் ஆதரவைப் பெறமுடியும் என் றும், இஸ்ரோ விஞ்ஞானி சிவனை நிறுத்தினால் பொதுவானவர் என்ற முறையில் மாநில கட்சி களின் ஆதரவைப் பெறலாம் என்றும் கணக்கிட்டு அவர்களின் பெயர்கள் அலசப்பட்டன. ஆனால், ஆரிஃப் முகமதுகானை தவிர மற்றவர்களுக்கு எதி ராக உளவுத்துறை கொடுத்த தகவல்களால் அவர் களது பெயர்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜனாதிபதியாகும் விருப்பத்தை மோடி யிடம் தெரிவித்திருக்கிறார். பிரதமரின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வெங்கையா விவாதிக்க, தற்போதைய சூழலில் பா.ஜ.க. கூட்டணிக்கான வெற்றிவாய்ப்பு உறுதியாகவில்லை என்பதைத் தெரிவித்த அமித்ஷா, தி.மு.க, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகளின் ஆதரவை உங்களால் பெற முடியு மெனில் பிரதமரிடம் சிபாரிசு செய் கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்தே, தனக்கான ஆதரவைப் பெற தென்னிந்தியாவில் ரவுண்ட் அடித்தபடி இருக்கிறார் வெங்கையா.
சமீபத்தில் தி.மு.க. தலை வர் ஸ்டாலினையும் சந்தித் தார். தமிழக நலனுக்கு ஒத்துழைப்பேன் என ஸ்டா லினிடம் சொல்லியிருக்கிறார் வெங்கையா. பா.ஜ.க. ஆட்சி யில் எப்படி சாத்தியம் என ஸ்டாலின் யோசிக்கிறாராம். கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தில் ஆலோசித்து சொல்கிறோம் என வெங் கையாவிடம் தெரிவித்து விட்டார் ஸ்டாலின்.
உத்தரப்பிரதேச மாநில கவர்னரும் குஜராத் முன்னாள் முதல்வருமான ஆனந்திபென் படேல், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், கேரள கவர்னர் ஆரிஃப் முகமதுகான் ஆகிய 3 பெயர்கள் மட்டுமே இப்போதைக்கு பரிசீலனையில் இருக்கிறது. "விரைவில் நடக்கவிருக்கும் 20 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது உறுதியாக தெரியும்' ‘என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் டெல்லியில் உள்ள தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளருக்கு போதிய ஆதரவு பலம் இல்லாததால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒருவரை களமிறக்க தெலுங் கானா முதல்வர் சந்திரசேகரராவ் தீவிர முயற்சியில் இருக்கிறார். இதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பீகாரின் நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் ஆகியோரிடம் முதல் சுற்று பேச்சுவார்த்தை யை முடித்திருக்கும் சந்திரசேகரராவ், அடுத்தவாரம் ஒரிசாவின் நவீன் பட்நாயக்கை சந்திக்கவிருக்கிறார். ஜனாதிபதிக்கான பொதுவேட்பாளராக நவீன் பட்நாயக், சரத்பவார், முலாயம்சிங் யாதவ் ஆகிய மூவரில் ஒருவரை நிறுத்தலாம் என்பதே சந்திரசேகரராவின் விருப்பமாக இருக்கிறதாம்.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளிள் ஒருங்கிணைப்பே 2024 எம்.பி. தேர்தல் களத்திற்கான முன்னோட்டம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.