ர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருவண்ணாமலை நகருக்கு வந்து, ஒருவரை பக்தியுடன் தேடிக்கொண்டு இருந்தனர். சேஷாத்திரி ஆஸ்ரமம் அருகில் ஐஸ்கிரீம் கடையில், ஒரு நண்பருக்காகக் காத்திருந்த நம்மிடம்...

"சார், தொப்பி சாமியாரை எங்கே பார்க்கலாம்?'' என்று ஆர்வமாகக் கேட்டார் அவர்களில் ஒருவர்.

sam

Advertisment

தொப்பி சாமியாரா? என நாம் யோசித்ததும், செல்போனில் இருந்த ஒரு யூடியூப் காட்சியைக் காட்டினார். அதில்... ஒரு பெண்மணி நடந்துசெல்ல, அவர் பின்னால் 15, 20 பேர் அவரைப் பக்தியுடன் பின்தொடரும் காட்சி ஓடியது. முன்னால் நடந்து சென்ற அழுக்கு உடையணிந்த அந்த பெண்மணியைச் சுட்டிக்காட்டி "இவுங்கதான் தொப்பி சாமியார்'' என்றார் பரவசமாக.

"இந்தம்மாவா சாமியார்?''’-என நாம் அதிர்ச்சியாகிக் கேட்க, நம்மை எரிச்சலாகப் பார்த்துவிட்டு, அந்தக் குடும்பம் கிரிவலப்பாதை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது.

மனநோயாளியான 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணி கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதை, அண்ணா மலையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருகிறார். அவர் யார், அவர் பெயர் என்ன? எந்த ஊர் என்று தெரியாது. அழுக்கு மயமாகவே இருக்கும் அவர், கிரிவலப்பாதையில் கொடுக்கப்படும் அன்னதானத்தை வாங்கிச் சாப்பிட்டு, அந்தப்பகுதியில் திரிந்துகொண்டு இருக் கிறார். அவரைத்தான் சிலர் தொப்பி சாமியார் என்றும், தொப்பி சித்தர் என்றும் பட்டப் பெயரைச் சூட்டி, அவருக்கு ஒளிவட்டத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

Advertisment

இவரைப் பற்றி சிலரிடம் நாம் விசாரித்தோம். இயற்கை ஆர்வலரான ராகவனோ "திருவண்ணாமலை மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான முயற்சியில், அவர்களை நேரில் வரவைத்து தகவல்களைச் சேகரித்து வருகிறோம். அந்த வகையில் இங்குள்ள காவியுடை ஆசாமி களைப் பற்றி நன்றாகவே தெரியும். இந்த அம்மா, ஒரு மனநோயாளி. மருத்துவ மனையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட வேண்டியர். இதேபோல் இன்னொரு மனநோயாளியை விபூதிச் சித்தர்னு சிலர் கிளப்பிவிட, அவருக்கும் இப்ப மார்க்கெட் அதிகமாயிடிச்சி. அவரைக் காட்டி சிலர் வசூல்வேட்டை நடத்துகிறார்கள். தொப்பி சாமியார் பெயரில் ஆஸ்ரமம் அமைக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதை எல்லாம் தடுக்காவிட்டால் ஆன்மிக நகரம், ஃபிராடுகளின் நகரமாக மாறிவிடும்'' என்றார் எச்சரிக்கும் குரலில்.

sa

தலையில் அடித்துக்கொண்டு நம்மிடம் பேச ஆரம்பித்த உள்ளூர்க்காரர்கள் சிலர் "தொப்பி சாமியார் என பிரபலப் படுத்தப்படும் அந்தப் பெண்மணியைப் பார்க்க ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து வார இறுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு நிரந்த வசிப்பிடம் எதுவும் இல்லாததால், எங்கே அவரைத் தேடுவது என பக்தர்கள் தவிக்கிறார்கள். அவரைப் பார்க்க அழைத்து செல்கிறோம் எனச்சொல்லி வெளிமாநில பக்தர்களிடம் ஆயிரம் ஆயிரமாக சிலர் சம்பாதிக்கிறார்கள். அந்த மன நோயாளியை, யார் நெருங்கிச் சென்றாலும்... காறித்துப்பி, வாயில் வந்த சொற்களால் திட்டுவார். இதைப்பார்த்த மோசடிக் கும்பல், பக்தர்கள் மீது அந்த தொப்பி சாமியார் துப்பினால் துன்பங்கள் போய்விடும், நல்லகாலம் பிறந்துவிடும், வாழ்க்கையில் துன்பமே இருக்காது என்று மேலும் ஒரு உபரிக் கதையைப் பரப்பிவிட்டார்கள். இதற்கும் தனியாக வசூலிக்கிறார்கள்'' என்கிறார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தராக்கி இந்து பக்தர்களை ஏமாற்றும் போக்கு திருவண்ணாமலையில் மட்டுமல்ல வேறு சில இடங்களிலும் நடக்கிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் என்கிற கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியையும் சாமியாராய் ஆக்கிவிட்டார்கள். சமீபத்தில் அவரைச் சிலர் அழைத்துவந்து, அவரது உடலில் விபூதி பூசி, ஒரு குடிசையில் தங்க வைத்து, அவருக்கு அரளிச் சித்தர் என்றும், நெடுஞ்சாலைச் சித்தர் என்றும் நாமகரணம் சூட்டிவிட்டனர். அங்கே பெரிய உண்டியல் வைத்தும் வசூல் வேட்டை நடத்துகின்றனர். கரூர் பகுதியைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர் என்றும், வேலை போனதால் மனநோயாளியாகிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.

ss

இதுகுறித்தெல்லாம் திராவிடர் கழக வேலூர் மண்டலச் செயலாளர் பட்டாபிராமனிடம் கேட்டபோது "இப்படிப்பட்ட மோசடிகள் பல காலமாகவே நடக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ரயிலில் வழிதவறி வந்தார். திருவண்ணாமலை கிரிவலம் பெரியதாக பிரபலமாகாத சமயம். தமிழ்மொழி தெரியாத அவர் பேசுவது நம்மாட்களுக்கு புரியாது, நாம் பேசுவதும் அவருக்குப் புரியாது. இதனால் யாரிடமும் பேசமாட்டார். குளிக்காமல், தாடி வளர்த்துக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனில் படுத்துக் கிடப்பார். பக்தர்களிடம் யாசகம் பெற்றுக்கொண்டு இருந்தார். காலப் போக்கில் இவரைக் கொட்டாங்குச்சி சாமியார் என்று முதலில் கிளப்பி விட்டார்கள். அதனால் அவருக்கு விளம்பரம் அதிகமானது. அதனால் அவருக்கு பணமாக வந்து கொட்டி யது. அவர் கையில் விசிறியைக் கொடுத்து அவரை பின்னர் விசிறி சாமியார் என்றும் ஆக்கிவிட்டார்கள். இவரை வைத்து அவர்கள் ஏகபோக மாகச் சம்பாதித்தார்கள். அவர் இறந்த பிறகும் கோடிக்கணக்கில் அந்த ஆஸ்ரமத்துக்கு வருமானம் வருகிறது. இதுபோல் உருவாக்கப்பட்ட ஒருவர் மூக்குப்பொடி சாமியார் என்று ஆக்கப்பட்டார். டி.டி.வி. தினகரன் முதல் சினிமா பிரபலங்கள் வரை அவரிடம் தடியடி வாங்கவும், திட்டு வாங்கவும் க்யூவில் காத்திருந்தார்கள். அவர் இறந்ததும் கிரிவலப்பாதையில் அடக்கம் செய்து அவர் சமாதியைக் கோவிலாக்கி சம்பாதிக்கிறார்கள். பக்தியின் பேரால் நடத்தப்படும் இது போன்ற மோசடிகளைத் தடுக்க, முடிந்தவரை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்'' என்றார் புன்னகையோடு.

மனநோயாளிகளை சாமியார் எனப் பிரபலப்படுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பல்களை நம்பும், பக்தர்களைப் பார்க்கும்போது, யார் மனநோயாளி என்கிற கேள்வி எழுகிறது.

இப்படி மன நோயாளிகளை வைத்து பிழைப்பு நடத்தும் மோசடி ஆசிரமங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள் ஏரியா வாசிகள்.

-து. ராஜா